பி.எம்.இந்தியா
இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன் 2026 மே 20 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, ரோம் நகரில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.
உயர்மட்டப் பரிமாற்றங்களின் வலுவான உத்வேகத்தையும், இருதரப்பு ஒத்துழைப்பின் சிறப்பான வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மையையும் இரு பிரதமர்களும் வரவேற்றனர். இந்தியா-இத்தாலி உத்திசார் கூட்டாண்மையை, சிறப்பு உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்த இருவரும் முடிவு செய்தனர். மேலும், பலதரப்பு நிகழ்வுகளின் இடையே நடைபெறும் கூட்டங்கள் உட்பட, தலைவர்களின் வருடாந்திரக் கூட்டங்களையும், வழக்கமான அமைச்சர் மற்றும் நிறுவன அளவிலான கூட்டங்களையும் நடத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்திய-இத்தாலி கூட்டாண்மையின் முழு அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடல்களில் இரு பிரதமர்களும் ஈடுபட்டனர். 2025-2029 ஆம் ஆண்டுக்கான கூட்டு உத்திசார் செயல் திட்டத்தின் அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், விண்வெளி, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக்கிய தொழில்நுட்பங்கள், கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சி, அதிகரித்து வரும் முதலீடுகள் மற்றும் நீண்டகால ஒத்துழைப்புகளைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் பற்றி தலைவர்கள் ஆலோசித்தனர். இந்தச் சூழலில், கடந்த ஆண்டு நடைபெற்ற மூன்று வர்த்தக மன்றங்களின் பரிமாற்றத்தை அவர்கள் வரவேற்றனர். மேலும், பாதுகாப்பு, டிஜிட்டல், எரிசக்தி மாற்றம், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தாலிய மற்றும் இந்திய தலைமைச் செயல் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்தனர். 2029-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோவாக விரிவுபடுத்தும் பொதுவான இலக்கை வலியுறுத்திய இரு தலைவர்களும், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டதுடன், அதனை விரைவாகச் செயல்படுத்தவும் அழைப்பு விடுத்தனர்.
பயங்கரவாதம் எனும் கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதற்கான தங்களது வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர்கள், இருதரப்பு மற்றும் பலதரப்பு மட்டங்களில் ஒத்துழைப்பைத் தொடர இசைவு தெரிவித்தனர். பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்க்கும் நோக்கத்துடன் நவம்பர் 2025-இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சி செயல்படுத்தப்பட்டதில் அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
இரு தலைவர்களும் உறுதியான திட்டங்கள் மூலம் இணைப்பு சார்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதில் தங்களின் தீவிர விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன், இந்திய- மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (ஐஎம்இசி) செயல்படுத்துவதற்கான தங்களின் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் மோதல்கள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். நடைபெற்று வரும் மோதல்களுக்கு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் திரு மோடி வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263395®=3&lang=1
(Release ID: 2263395)
****
TV/BR/SH