Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு – பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு – பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் “சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம்” குறித்த சர்வதேச மாநாட்டை இன்று (19.09.2026) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இயற்கையுடனான தேசத்தின் ஆழமான வரலாற்றுத் தொடர்பை எடுத்துரைத்தார். பண்டைய கலாச்சார ஞானம், நவீன பருவநிலைத் தீர்வுகளை எவ்வாறு தீவிரமாக வடிவமைத்து, உலகளாவிய கூட்டு நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த முக்கியப் பணியை உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தைப் பாராட்டிய அவர், நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நவீன பருவநிலை சவால்களுக்கு இந்தியா இப்போது தீர்வுகளை வழங்கி வருகிறது என்று திரு நரேந்திர மோடி உறுதியாகக் கூறினார்.

கார்பன் வெளியேற்றம் குறித்த தவறான உலகளாவிய கண்ணோட்டத்தைக் குறிப்பிட்ட பிரதமர், வளர்ந்த நாடுகள் இந்தியாவை விட தனிநபர் அடிப்படையில் ஆறு மடங்கு அதிக கார்பனை வெளியிடுகின்றன என்ற போதிலும், வளரும் நாடுகள் மீது அநியாயமாகப் பழி சுமத்தப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார். இந்த வரலாற்று உண்மையை நிலைநாட்டவும், தனது பாரம்பரிய சுற்றுச்சூழல் பலங்களை வெளிப்படுத்தவும் நாடு எவ்வாறு சர்வதேச தளங்களைப் பயன்படுத்துகிறது என்பதை அவர் விவரித்தார்.

21-வது பருவ நிலை மாநாட்டின் இலக்குகளை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே எட்டியதன் மூலமும், புதைபடிவமற்ற எரிபொருட்கள் திறனில் உலகளாவிய அளவுகோல்களை அமைத்ததன் மூலமும், ஜி-20 அமைப்பிற்குள் இந்தியா ஒரு தனித்துவமான இடத்தைப் பெருமையுடன் வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சூரியசக்திப் புரட்சிக்கு வலுவான சான்றுகளை முன்வைத்த பிரதமர், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2 ஜிகாவாட்டாக இருந்த திறன், இப்போது 160 ஜிகாவாட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு வீட்டிற்கும் 80,000 ரூபாய் வரையிலான நிதியுதவியுடன் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சூரியசக்தியை நிறுவும் பிரதமரின் சூரிய சக்தி வீடு இலவச மின்சார திட்டத்தை அவர் எடுத்துரைத்தார்.

காற்றாலைத் திறன் மும்மடங்கு அதிகரித்துள்ளதையும், நீர்மின்சக்தி விரிவாக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒருங்கிணைந்த முயற்சிகள், நிலக்கரி வாயுவாக்கம் போன்ற தூய்மையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதோடு, நாட்டின் புதைபடிவமற்ற எரிசக்தித் திறனை ஏறக்குறைய நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சமீபத்தில் தொடங்கப்பட்டதை பிரதமர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். பசுமை வாகனங்கள் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை விவரித்த பிரதமர், மின்சார வாகனங்களின் விற்பனை பல மடங்கு வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் போக்குவரத்து முறைகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு முழுவதும் சுமார் 5,000 கிலோமீட்டர் நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதைக் குறிப்பிட்டார். இவை, நாட்டின் சமச்சீரான வளர்ச்சிப் பாதைக்கு மறுக்க முடியாத சான்றாக அமைகின்றன என்று அவர் கூறினார்.

சூழலியல் வேளாண்மை குறித்துப் பேசிய பிரதமர், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் கீழ் 12.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 24,000 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் நிறுவப்பட்டிருப்பதை விவரித்தார். மேலும், பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய 3,000 பயிர் ரகங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதையும், நாட்டின் கார்பன் தடத்தைக் குறைப்பதற்காக வேளாண்-வனவியல் ஊக்குவிக்கப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் மிகவும் அடர்ந்த வனப்பகுதி 22 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.  கழிவிலிருந்து செல்வம் என்ற மாதிரியின் மூலம் கிராமப்புற கரிமக் கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்றுவதற்கு கோபர்தன் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.

பூமிக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் இடையிலான ஆழமான உறவை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த மாநாட்டின் கலந்துரையாடல்கள் புதுமையான தீர்வுகளை வழங்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி, தமது உரையை நிறைவுசெய்த பிரதமர், பொறுப்பான, நிலையான எதிர்காலத்தைக் கட்டமைக்க இந்தியா செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312353&reg=48&lang=1

****

SS/PLM/RJ