Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பின்லாந்து அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

பின்லாந்து அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்


பின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களே,

இரு நாடுகளின் மதிப்புமிக்க பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

 

வணக்கம்!

 

பின்லாந்து அதிபராக இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ள திரு ஸ்டப்பை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் ஸ்டப் ஒரு புகழ்பெற்ற உலகளாவிய தலைவர் மட்டுமல்ல. மரியாதைக்குரிய சிந்தனையாளரும் எழுத்தாளரும் கூட.

 

பின்லாந்து அதிபர் அவர்களே, இந்த ஆண்டு ரைசினா உரையாடலில் உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த, துடிப்பான தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மரியாதையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

 

நண்பர்களே,

 

இப்போது, உலகம் உறுதியற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை ஆகியவை நிறைந்த ஒரு கட்டத்தைக் கடந்து செல்கிறது. உக்ரைன் முதல் மேற்கு ஆசியா வரை, உலகின் பல பகுதிகள் தொடர்ந்து மோதல் சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றன. இத்தகைய உலகளாவிய சூழலில், உலகின் இரண்டு முக்கிய சக்திகளான இந்தியாவும் ஐரோப்பாவும் தங்கள் உறவில் ஒரு பொன்னான கட்டத்தில் நுழைந்துள்ளன. நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பு உலகளாவிய ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றுக்கு புதிய பலத்தை அளிக்கிறது.

 

நண்பர்களே,

 

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும். டிஜிட்டல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, நிலைத்தன்மை போன்ற துறைகளில், இந்தியாவும் பின்லாந்தும் முக்கியமான ஒத்துழைப்பு நாடுகள்.

 

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன்கள் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களை தகவல் தொடர்பு மூலம் இணைத்துள்ளன. பின்லாந்து கட்டடக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன், செனாப் நதியின் மீது உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை நாங்கள் கட்டியுள்ளோம். பின்லாந்தின் ஒத்துழைப்புடன், நுமாலிகரில் மூங்கிலில் இருந்து பயோஎத்தனால் சுத்திகரிப்பு நிலையத்தையும் நாங்கள் நிறுவியுள்ளோம்.

 

நண்பர்களே,

 

இதுபோன்று ஒத்துழைப்பில் முக்கியமான அம்சங்கள் ஏற்கெனவே உள்ள நிலையில் ஸ்டப்பின் இந்த வருகையின்போது, டிஜிட்டல்மயமாக்கல், நிலைத்தன்மை ஆகியவற்றில் இந்தியா-பின்லாந்து உறவுகளை ஒரு உத்திசார் ஒத்துழைப்பாக நாங்கள் உயர்த்துகிறோம். இந்த ஒத்துழைப்பு செயற்கை நுண்ணறிவு முதல் 6ஜி தொலைத்தொடர்பு வரை, தூய எரிசக்தி முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரை பல உயர் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு உத்வேகத்தையும் புதிய ஆற்றலையும் வழங்கும்.

 

அதே நேரத்தில், பாதுகாப்பு, விண்வெளி, செமி கண்டக்டர்கள், முக்கியக் கனிமங்கள் போன்ற முக்கிய துறைகளில் எங்கள் ஒத்துழைப்பு மேலும் ஆழமடையும். இந்தியா, பின்லாந்து போன்ற பொறுப்புள்ள ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான இந்த உத்திசார் ஒத்துழைப்பு, உலகம் முழுவதும் நம்பகமான தொழில்நுட்பங்களையும் மீட்சித் தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளையும் உறுதி செய்வதற்கு பங்களிக்கும்.

 

நண்பர்களே,

 

இந்திய மாணவர்களுக்கு விருப்பமான இடமாக பின்லாந்து மாறி வருகிறது. நமது இரு நாடுகளின் புதுமைக் கண்டுபிடிப்புச் சூழல் அமைப்புகளை இணைக்க, இன்று பின்லாந்துடன் ஒரு விரிவான இடப்பெயர்வு, போக்குவரத்து ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

 

இதனுடன், கூட்டு ஆராய்ச்சி, புத்தொழில் நிறுவன ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவோம். கல்வித் துறையில் பின்லாந்து ஒரு முன்மாதிரியாக உள்ளது. ஆசிரியர் பயிற்சி முதல் பலவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

 

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பள்ளிகள் முதல் தொழில் வரை, மனித வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் எங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

 

நண்பர்களே,

 

நோர்டிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு பின்லாந்து ஒரு முக்கிய நாடாகும். பின்லாந்துடன் சேர்ந்து, ஆர்க்டிக்கிலும் துருவ ஆராய்ச்சியிலும் எங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறோம்.

 

ஆரோக்கியமான பூமி எங்கள் பகிரப்பட்ட முன்னுரிமை. இந்த ஆண்டு, பின்லாந்துடன் சேர்ந்து, இந்தியாவில் உலக சுழற்சிப் பொருளாதார மன்றக் கூட்டத்தை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது நிலைத்தன்மையை நோக்கிய எங்கள் முயற்சிகளுக்கு புதிய உத்வேகத்தையும் புதிய யோசனைகளையும் அளிக்கும்.

 

நண்பர்களே,

 

இந்தியாவும் பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு பிரச்சினையையும் ராணுவ மோதலின் மூலம் மட்டுமே தீர்க்க முடியாது என்பதில் நாங்கள் உடன்பட்டுள்ளோம். உக்ரைனிலோ அல்லது மேற்கு ஆசியாவிலோ, மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும் அமைதியை மீட்டெடுப்பதற்கும் இலக்காகக் கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்.

 

வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தம் அவசியம் மட்டுமல்ல, அவசரமும் தேவை என்ற கருத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். மேலும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் ஒழிப்பது எங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாடாக உள்ளது.

 

மதிப்பிற்குரிய பின்லாந்து அதிபர் அவர்களே,

 

நீங்கள் அயன் மேன் டிரையத்லான் நிகழ்வை வெற்றிகரமாக முடித்துள்ளீர்கள். உங்களைப் போன்ற ஒரு துடிப்பான தலைவருடன் சேர்ந்து, இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையில் புதுமை, டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை ஆகியவற்றில் புதிய உச்சத்தை அடைவோம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையிலான இந்த எதிர்கால ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்.

 

மிக்க நன்றி.

 

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

(Release ID: 2235498)

****

TV/PLM/SH