Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மாநாட்டில் பிரதமர் உரை


புதுதில்லியில் இன்று (09.04.2018) பிரதமர் திரு.நரேந்திர மோடி, மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

கம்பெனி ஆளுகை, மனிதவள மேலாண்மை, நிதி மறுஅமைப்பு, புதுமைப் படைப்புக்கள், தொழில்நுட்பம், புதிய இந்தியாவுக்கான 2022 நெடுநோக்கு ஆகிய பொருள் குறித்துப் பிரதமருக்கு விளக்கவுரை வழங்கப்பட்டது.

மாநாட்டில் பேசிய பிரதமர், பொதுத் துறை அரங்கில் இந்த மாநாடு ஒரு புதிய தொடக்கம் என்றார்.

பொருள்சார்ந்த விளக்கவுரைகள் சிறப்பாக அமைந்திருந்தன என்று பாராட்டிய பிரதமர், மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்குச் செயல்பாட்டுச் சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும், அதனால் அவற்றின் செயல்பாடுகள், மேம்பாடு அடையும் என்றும் கூறினார். நாட்டு நிர்மாணத்திற்கும், தேசிய பொருளாதாரத்திற்கும், பொதுத் துறை நிறுவனங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு பெரும் பங்காற்றியுள்ளன என்றார்.

பொதுத் துறை நிறுவனங்களைப் பொருத்தவரை லாபம் மற்றும் சமூக பயன்களை உருவாக்குதல் ஆகிய இரண்டும் முக்கியமானவை என்று பிரதமர் கூறினார். சிறப்பாகப் பங்களித்தமைக்குப் பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமர், மின்சார வசதியற்ற கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குதல், ஏழை மக்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல் போன்ற அரசின் முக்கிய நோக்கங்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்களின் கடுமையான உழைப்பின்றி நிறைவேறி இருக்காது என்றார்.

பழைய வெற்றிகளை நினைத்து ஓய்திருப்பது கூடாது என்று கூறிய பிரதமர், புதிதாக ஏற்பட்டு வரும் சவால்களுக்குத்தக்க மாற்றியமைத்துக் கொள்ளவேண்டியது மிக முக்கியம் என்றார். 21ம் நூற்றாண்டில் தொழில் முனைவும் புதுமைப் படைப்புமே வழிகாட்டும் கொள்கைகளாக இருக்கவேண்டும் என்றார். வெற்றிக்கு ஊக்குவிப்புகள், கற்பனையாற்றல், நிறுவன உருவாக்கம் ஆகியன மூன்று முக்கிய படிகள் என்று அவர் கூறினார்.

புதிய இந்தியாவை உருவாக்குவதில் உதவவேண்டும் எனப் பொதுத் துறை நிறுவனங்களைக் கேட்டுக்கொண்ட பிரதமர், இதனைத் தொழில்நுட்ப மாற்றங்கள் நடைமுறை மாற்றங்கள், ஆகியவற்றின் மூலம் செய்ய இயலும் என்றார். இதனைச் செய்வதற்குப் பொதுத் துறை நிறுவனங்களுக்குச் செயல்திறன் எனப் பொருள்படும் Performance, நடைமுறை என்று பொருள்படும் Process, பணியாளர்கள் எனப் பொருள்படும் Persona, கொள்முதல் எனப் பொருள்படும் Procurement, தயாரித்தல் எனப் பொருள்படும் Prepare என்கிற 5-P உபாயம் அவசியம் என்றார் பிரதமர்.

இது குறித்து விவரித்த பிரதமர், செயல்பாட்டு நிலையை மேம்படுத்துதல், நிதிச் செயல்பாடு, வெளிப்படைத் தன்மை, நடைமுறையில் பொறுப்பேற்கும் தன்மை, GeM எனப்படும் அரசு மின்னணுச் சந்தை மேடை மூலமான கொள்முதல், சிறு, குறு, நடுத்தர தொழில்களிடமிருந்து கொள்முதல், செயற்கை அறிவு, குவாண்டம் கணினி முறை, ரோபோவியல் ஆகியவற்றினால் தொழில்நுட்பத்தில் ஏற்படும் தாக்கத்திற்குத் தயாராய் இருத்தல் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார்.

புதிய இந்தியாவுக்கான ஐந்து சவால்களாகப் பொதுத் துறை நிறுவனங்களின் முன்நிற்பவை என்பது பற்றிப் பிரதமர் கூறினார். அவை வருமாறு:

• 2022-ல் இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது புவி அணுகுமுறை சென்றடைதலை எவ்வாறு அதிகபட்சமாக்கும்?

• 2022-ல் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் இறக்குமதிச் செலவினத்தைக் குறைக்குமா?

• 2022-ல் இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் புதுமைப் படைப்பையும், ஆராய்ச்சியையும் ஒருங்கிணைக்குமா?

• 2022-ல் இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது பெரு நிறுவனச் சமூக பொறுப்பு நிதியத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த காலக்கெடு திட்டம் என்ன?

• 2022-ல் இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டிற்கு எந்தப் புதிய மேம்பாட்டு மாதிரியை வழங்கும்?

உலகின் 500 மிகப்பெரிய நிறுவனங்களில் நான்கில் ஒரு பங்கு, ஏதாவது ஒரு நாட்டின் பொதுத் துறையைச் சேர்ந்ததாக உள்ளன. இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் இதர நாடுகளின் பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைப்பு மேற்கொண்டு,

வெளிநாடுகளில் முதலீட்டுக்கான விரிவான அணுகுமுறையை மேம்படுத்தவேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். இந்தியாவின் இறக்குமதிச் செலவினத்தைக் குறைக்க பொதுத் துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றமுடியும் என்றார் அவர். மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் விஞ்ஞான தொழிலியல் ஆராய்ச்சி சபை மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி சபை ஆகிவற்றில் உள்ள வசதிகள் தவிர, நவீன ஆராய்ச்சி மேம்பாட்டு அடிப்படை வசதிகள் உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், புதுமைப் படைப்பையும், ஆராய்ச்சியையும் ஒருங்கிணைக்க வேண்டியது இப்போதைய அவசியம் என்றார். இந்த வகையில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் இடையே அதிகளவு தகவல் பரிமாற்றம் இருக்கவேண்டும் என்றார்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பெருநிறுவனச் சமூக பொறுப்பு செலவினம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்து அடிப்படையில் கவனம் செலுத்துவதாக அமையவேண்டும் என்று பிரதமர் யோசனை கூறினார். இந்த வகையில் இந்த நிதியம் பள்ளிகளில் கழிவறை கட்டுவதில் பயன்படுத்த செலவிட்டபோது, ஏற்பட்ட சாதனை வெற்றிகளை அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற மற்றொரு முக்கிய செலவினத்திற்குரிய பொருளாக ஆர்வம்கொண்ட மாவட்டங்கள் மேம்பாடு திட்டம் அமையும் என்றார். மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பெருநிறுவனச் சமூக பொறுப்பின் ஒரு பகுதியாகத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் மேற்கொள்ளலாம் என்றார் அவர்.

காகிதமில்லாத பணிப் பண்பாடு, ரொக்கமில்லாத பரிவர்த்தனைகள், கழிவு மேலாண்மை போன்றவற்றில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் பிற தொழிற்சாலைகளுக்கு முன்மாதிரியாகச் செயல்படலாம் என்று பிரதமர் கூறினார்.
புதிய இந்தியா என்ற தீர்மானத்தை உண்மையாக்குவதில், மத்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் பெரிய அளவில் பங்கேற்கும் என்று நம்புவதாகவும் பிரதமர் கூறினார்.