Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தை நாளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘வளர்சசியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தை நாளை (2026 ஆகஸ்ட் 2) காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை விடுவிப்பதையும்,  நேர்மறையான சமூக மாற்றத்திற்கான தூதுவர்களாக அவர்களை ஊக்குவிப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் தொடக்க விழா, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான 100 வார கால நாடு தழுவிய மக்கள் பங்கேற்பு இயக்கத்தின் தொடக்கமாக அமையும். இந்த இயக்கத்தின் கீழ், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும், நாடு முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த நிகழ்வுகளில் விளையாட்டுப் போட்டிகள், நடைப்பயணங்கள், தியான அமர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தெருநாடகங்கள், கலந்துரையாடல்கள், கலைப் போட்டிகள், சமூக ஈடுபாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும்.

கல்வி நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள்,  சமூகக் குழுக்கள், தொழில் நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புகள் ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைத்து, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு கூட்டு இயக்கத்தை உருவாக்குவதன் மூலம், சமூகப் பங்கேற்பை மேலும் வலுப்படுத்த இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து இளைஞர்கள் பங்கேற்பார்கள். மை பாரத் தன்னார்வலர்கள், மை பாரத் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், இளைஞர் மன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் இணையவழியாகப் பங்கேற்கும்.

****

(Release ID: 2292984)

TV/PLM/RJ