Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முக்கிய கட்டமைப்புத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு

முக்கிய கட்டமைப்புத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு


பிரதமர் திரு. நரேந்திர மோடி, சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், டிஜிட்டல் துறை மற்றும் நிலக்கரி துறை உள்ளிட்ட முக்கியமான கட்டமைப்பு வசதிகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் இந்திய அரசின் அனைத்து கட்டமைப்பு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பகுதிகளிலும் கட்டமைப்புத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்தார். சாலைகள் மற்றும் ரயில்வேக்கள் துறைகளின் முன்னேற்றம் குறித்த பரந்த மேலோட்டமான பார்வையில், தற்போது நடைபெற்று வரும் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் கண்டிப்பாக முடிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் கிராம சடக் திட்டத்தின் கீழ் ஊரக சாலைகள் அமைப்பதில் ஒரு நாளுக்கு சராசரியாக 130 கிலோ மீட்டர் நீளத்துக்கான பணிகளை முடிப்பது என்ற உயர்ந்தபட்ச அளவு எட்டப்பட்டுள்ளது. இதனால் 2016 – 17ல் PMGSY சாலைகளில் 47,400 கிலோ மீட்டர் நீளத்துக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் 11,641 கூடுதல் குடியிருப்பு கிராமங்கள் சாலை வசதியால் இணைக்கப் பட்டுள்ளன.

பசுமை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி FY17-ல் 4000 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்துக்கு ஊரக சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. வழக்கில் இல்லாத வகையில் வீணாகும் பிளாஸ்டிக், கோல்ட் மிக்ஸ், ஜியோ-டெக்ஸ்டைல்ஸ், சாம்பல், இரும்பு மற்றும் தாமிர கசடு ஆகியவற்றை பயன்படுத்துவது தீவிரமாக செயல்படுத்தப் படுகிறது.

ஊரக சாலைகளின் தரத்தை உறுதிப்படுத்த செம்மையான மற்றும் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்தப்படும் “மேரி சடக்” (எனது சாலை) செயலி போன்ற தொழில்நுட்பங்களுடன் விண்வெளி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார். சாலை இணைப்பு வசதி இல்லாத மீதி குடியிருப்பு கிராமங்கள் அனைத்திற்கும் கூடிய விரைவில் சாலை இணைப்புகள் கிடைப்பதை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சாலைகள் அமைப்பதிலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார். கட்டமைப்பு உருவாக்குவதில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி உலக தர அளவுகளை நிதி ஆயோக் பரிசீலனை செய்து, இந்தியாவில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நெடுஞ்சாலைத் துறையில் FY17-ல் 4 அல்லது 6 வழி தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் 26,000 கிலோ மீட்டர் நீளத்துக்கான பணிகள் முடிந்துள்ளன. பணிகளை முடிக்கும் வேகம் அதிகரித்து வருகிறது.

ரயில்வே துறையில், 2016 – 17-ல் புதிதாக 400 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிதாக பாதை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 953 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2000 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டது, அதே காலக்கட்டத்தில் 1000 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாதை அகலமாக்கப்பட்டது. 2016 – 17-ல் 1500க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மாற்றப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளாக 115 ரயில் நிலையங்களில் வை-பை இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டது, 34,000 பயோ-டாய்லெட்கள் புதிதாக அமைக்கப் பட்டுள்ளன. ரயில் நிலையங்களை மறுமேம்பாடு செய்யும் பணிகளை வேகப்படுத்துமாறும், கட்டணம் அல்லாத வகைகளில் வருமானத்தைப் பெருக்குவதற்கு புதிய சிந்தனைகளை உருவாக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கிழக்கு எல்லையோர விரைவுப் பாதை, சார் தாம் திட்டம், குவாஜிகண்ட் – பனிஹல் சுரங்கம், செனாப் ரயில்வே பாலம், ஜிரிபம் – இம்பால் திட்டம் போன்ற முக்கியமான சாலைகள் மற்றும் ரயில்வே துறைகளின் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன. விமானப் போக்குவரத்துத் துறையில், இதுவரை சேவை இல்லாத 31 இடங்கள் உள்பட 43 இடங்களை பிராந்திய தொடர்பு ஏற்படுத்தும் திட்டம் இணைக்கவுள்ளது. ஆண்டுக்கு 282 மில்லியன் பேருக்கு சேவை அளிக்கும் அளவுக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் முந்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

துறைமுகத் துறையில், சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் கோடி முதலீட்டில் 415 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ரூ.1.37 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயலாக்கத்துக்காக எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன. வரக் கூடிய கப்பல்கள் சீக்கிரத்தில் திரும்பிச் செல்லும் வகையில், எக்சிம் கார்கோ அனுமதியை சிறப்பானதாக இருக்கும்படி செய்யவும் பிரதமர் வலியுறுத்தினார். பெரிய துறைமுகங்களில் அதிகபட்சமாக 100.4 MTPA திறன் சேர்க்கை 2016 – 17ல் எட்டப்பட்டுள்ளது. அனைத்து 193 கலங்கரை விளக்கங்களும் தற்போது சூரியமின்சக்தியால் இயங்குகின்றன. அனைத்து பெரிய துறைமுகங்களிலும் நிலப் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் கட்டமைப்புத் துறையில் இடதுசாரி தீவிரவாத செயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2016-17 -ல் 2187 செல்போன் உயர்கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேசிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் திட்டத்தின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளை இணைக்கக் கூடிய, வளர்ந்து வரும் டிஜிட்டல் இணைப்பு முறையானது, பொருத்தமான நிர்வாக முறைகளை பின்புலமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நல்ல தரமான வாழ்க்கையும் அதிக அதிகாரமும் கிடைக்க இதைச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நிலக்கரித் துறையில், நிலக்கரி இணைப்புகள் மற்றும் போக்குவரத்தை சீர் செய்ததால் 2016-17ல் ஆண்டுக்கான சேமிப்பாக ரூ.2500 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் நிலக்கரி இறக்குமதி குறைந்திருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், நிலக்கரி இறக்குமதியை தவிர்க்க மாற்று வழிகள் கண்டறியவும், எரிவாயு பயன்படுத்துவது உள்ளிட்ட புதிய நிலக்கரி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பற்றியும் இன்னும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.