பி.எம்.இந்தியா
பாலஸ்தீன அதிபர் மேதகு திரு. மகமூத் அப்பாஸ் அவர்களே,
பாலஸ்தீன மற்றும் இந்திய குழுக்களின் உறுப்பினர்களே,
ஊடகத் துறையினரே,
இருபாலோரே,
இந்தியாவின் பழைய நண்பரான அதிபர் மகமூத் அப்பாஸ் அவர்களை, இந்தியாவுக்கான அரசுமுறை பயணத்துக்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய சுதந்திரப் போராட்ட காலங்களில் இருந்து நீண்டகாலமாக நீடித்து வரும் ஒற்றுமை மற்றும் நட்புணர்வின் அடிப்படையில் இந்தியாவுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் நலனுக்காக தயக்கமற்ற ஆதரவை இந்தியா அளித்து வருகிறது. இஸ்ரேலுடன் அமைதியாக இயைந்து செயல்படக் கூடிய இறையாண்மையுள்ள, சுதந்திரமான, ஒன்றுபட்ட மற்றும் வாழ்க்கைக்கு உகந்த பாலஸ்தீனம் உருவாக்கப்படுவதைக் காண முடியும் என்று நாம் நம்புகிறோம். இன்றைய எங்களது கலந்துரையாடலின்போது இந்த நிலைப்பாட்டை அதிபர் அப்பாசிடம் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.
நண்பர்களே,
நமது பங்களிப்புக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் பயனுள்ள மற்றும் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை நானும் அதிபர் அப்பாசும் இப்போது முடித்திருக்கிறோம். மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு அமைதி செயல்பாட்டின் நிலைமை குறித்து நாங்கள் ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டோம். மேற்கு ஆசியாவின் சவால்களுக்கு நீடித்த அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிமுறைகளின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். முழுமையான ஒரு தீர்வை உருவாக்கும் வகையில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கு இடையில் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று இந்தியா நம்புகிறது. இருதரப்பு நிலையில், பாலஸ்தீனத்தின் வளர்ச்சியில் பயனுள்ள பங்காளராக இருப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. பாலஸ்தீன பொருளாதாரத்தை கட்டமைக்கவும் அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பங்களிப்பு செய்யவும் நடைமுறை ஒத்துழைப்பு மூலம் இரு நாடுகளும் ஒன்றுபட்டு பாடுபடுவது என்று அதிபர் அப்பாசும் நானும் ஒப்புக்கொண்டோம். பாலஸ்தீனத்தின் வளர்ச்சி மற்றும் திறன் கட்டமைப்பு முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். இன்று முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், இந்த நோக்கத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எங்களது எண்ணத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும். இந்தியா அளிக்கும் உதவியுடன் தகவல் தொழில்நுட்பம், இளைஞர் மற்றும் தொழில் திறன் மேம்பாடு ஆகிய அம்சங்களுக்கு குறிப்பான முக்கியத்துவம் அளிப்பது பற்றியும் நாங்கள் பேசினோம். ரமல்லாவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் முன்னோடி திட்டத்துக்கு இந்தியா உதவி அளித்து வருகிறது. அது நிறைவேற்றப்பட்டால் பாலஸ்தீனத்தின் தகவல் தொழில்நுட்ப மையமாக அது செயல்பட்டு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி மற்றும் சேவைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் மையமாக அமையும். யோகா பரிமாற்றங்கள் உள்பட புதிய அம்சங்களை சேர்ப்பதன் மூலம் நமது கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசித்தோம். அடுத்த மாதம் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பாலஸ்தீன மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நிறைவாக, அதிபர் மகமூத் அப்பாசும் அவருடைய குழுவினரும் மேற்கொண்டுள்ள இந்தியப் பயணம் மகிழ்வானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமைய வாழ்த்துகிறேன். நமது இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அதிபர் அப்பாசுடன் இணைந்து செயல்பட நான் காத்திருக்கிறேன்.
நன்றி.
மிக்க நன்றி.
Held extensive talks with Mr. Mahmoud Abbas, President of State of Palestine. Sharing my remarks at the press meet. https://t.co/VYvGc99WNi
— Narendra Modi (@narendramodi) May 16, 2017