Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள், சேவைகள் மற்றும் மருத்துவ சுகாதாரக் கல்வியை தரப்படுத்தி, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள், சேவைகள் மற்றும் மருத்துவ சுகாதாரக் கல்வியை தரப்படுத்தி, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018-க்கு இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவின்படி, தேசிய அளவில் இந்திய மருத்துவப் பணிகள் கவுன்சிலும், மாநில அளவில், மாநில மருத்துவப் பணிகள் கவுன்சிலும் ஏற்படுத்தப்படும். இந்த கவுன்சில்கள் மருத்துவ, சுகாதாரப் பணிகள் மற்றும் அவைசார்ந்த பிற பணிகளின் தரத்தை கண்காணித்து, வரைமுறைப்படுத்தும்.

விவரம்

  1. இந்திய மருத்துவப் பணிகள் கவுன்சில் மற்றும் மாநில மருத்துவ கவுன்சில்கள் உருவாக்கப்படும். இதில் 15 முக்கிய தொழில் வகைகள் உட்பட 53 மருத்துவப் பணி தொழில்கள் இடம்பெறும்.
  2. மத்திய மற்றும் மாநில கவுன்சில்களின் கட்டமைப்பு மற்றும் பணிகள் இந்த மசோதாவில் விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கொள்கைகளை வகுப்பது, தரத்தை நிர்ணயிப்பது, தொழில் நியதிகளை வரைமுறைப்படுத்துவது, ஆவணங்களை உருவாக்கிப் பராமரிப்பது, தேர்வுகளை நடத்த வகை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இந்த கவுன்சில்களிடம் இருக்கும்.
  3. மத்திய கவுன்சிலில் 47 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இவர்களில், அலுவல் சார்ந்த 14 உறுப்பினர்கள் மாறுபட்ட மற்றும் துறைசார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களும், அலுவல்சாராத 33 உறுப்பினர்கள், 15 முக்கிய மருத்துவ தொழில் சார்ந்த நிபுணர்களாகவும் இருப்பார்கள்.
  4. மாநில கவுன்சிலும், மத்திய கவுன்சில் போல் இருக்கும் இதில் அலுவல் சார்ந்த 7 உறுப்பினர்கள் மாறுபட்ட மற்றும் துறைசார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களும், அலுவல் சாராத 21 உறுப்பினர்கள் முக்கிய மருத்துவ தொழில் சார்ந்த நிபுணர்களாகவும் இருப்பார்கள். இந்த கவுன்சிலின் தலைவர் அலுவல் சாராத உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்.
  5. மத்திய மற்றும் மாநில கவுன்சிலில் இடம்பெறும் தொழில் சார்ந்த ஆலோசனை அமைப்புகள் குறிப்பிட்ட பிரிவு தொடர்பான பிரச்சினைகள் குறித்து, ஆராய்ந்து தனிப்பட்ட முறையில்  பரிந்துரைகளை அளிக்கும்.
  6. மருத்துவப் பணிகள் தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களை,  இந்த மசோதா கட்டுப்படுத்தும்.
  7. மாநில கவுன்சில்கள், மருத்துவப் பராமரிப்புப் பணிகள் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்.
  8. தவறுகள் நடைபெறுவதை தடுக்க, குற்றங்கள் மற்றும் அதற்கான அபராதங்கள் பிரிவு மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
  9. மத்திய-மாநில அரசுகள் விதிமுறைகளை வகுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  10. மத்திய கவுன்சில் ஒழுங்குமுறைகளை வகுக்க அல்லது திருத்த, மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கவும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.

இலக்குகள்:

  1. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 6 மாதத்திற்குள் இடைக்கால கவுன்சில் ஒன்று அமைக்கப்படும். இது, மத்திய கவுன்சில் உருவாக்கப்படும்வரை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
  2. மத்திய, மாநில கவுன்சில்கள் நிறுவனங்கள்போல் அமைக்கப்பட்டு, பலவழியில் நிதி பெற சட்டத்தில் வகை செய்யப்படும்.
  3. தேவைப்படும்பட்சத்தில் மத்திய, மாநில கவுன்சில்களுக்கு சம்மந்தப்பட்ட அரசுகள் நிதியுதவி அளிக்கும். இருப்பினும் மாநில அரசு, மாநில கவுன்சிலுக்கு நிதியுதவி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டால், மத்திய அரசு துவக்க காலகட்டத்தில் நிதியுதவி அளிக்கும்.

 

தாக்கம்

  1. இந்தக் கவுன்சில் அமைக்கப்பட்ட சில வருடங்களுக்குள்ளாகவே ஏற்கனவே இருக்கும் அனைத்து மருத்துவ, சுகாதாரப் பணிகள் இந்த கவுன்சிலின்கீழ் கொண்டுவரப்படும்.
  2. மருத்துவ சுகாதாரப் பணிகளில் தொழில் திறமைவாய்ந்தவர்களை பணியமர்த்துவதற்கு வசதியாக, இவை சார்ந்த பணியாளர்கள் திறன்வாய்ந்தவர்களாக உருவாக வழியேற்படும்.
  3. ஆயுஷ்மான் பாரத் – மருத்துவ காப்பீட்டுத் திட்ட நோக்கத்தின்படி, சிறந்த, தரமான பலதரப்பு மருத்துவ சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்படும். தற்போதுள்ள மருத்துவர் தலைமையிலான சேவை மாதிரி அல்லாமல், குழு வகையிலான மருத்துவ சேவை மாதிரி ஏற்படுத்தப்படும்.
  4. உலக அளவில் மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண, இதுவொரு வாய்ப்பை அளிக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த முதல் நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 95 கோடி ரூபாய் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 5-ல் ஒருபகுதி தொகை மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். எஞ்சியுள்ள நிதி மத்திய கவுன்சில் செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

பயனாளிகள்

     இந்த மசோதா மூலம் 8-லிருந்து 9 லட்சம் ஏற்கனவே உள்ள சுகாதார மருத்துவப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.  புதிதாக சுகாதார மருத்துவப் பணி தொடர்பான பட்டப் படிப்பு பயின்று வருபவர்களும் பயன்பெறுவார்கள். நாட்டில் ஒட்டுமொத்த மருத்துவ சுகாதாரத்தை அளிப்பதற்கு இந்த மசோதா வகை செய்வதோடு, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி

  1. நாட்டில் தற்போதுள்ள மருத்துவ சுகாதார அமைப்பில், பல்வேறு மருத்துவம் மற்றும் அவை சார்ந்த பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்படாமல், வரைமுறைப்படுத்தாமல் மற்றும்  போதுமான அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளனர். தற்போதுள்ள மருத்துவ அமைப்பில், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்கள்மீதே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 
  2. ஆனால், மருத்துவ சுகாதாரப் பணியில் தொடர்புடைய பல பிரிவு திறன்வாய்ந்த பணியாளர்கள் மருத்துவ சேவை அளிப்பதில் மிகவும் முக்கியமான அங்கமாக உள்ளனர். இந்த திறன் வாய்ந்த பணியாளர்கள் வரைமுறைப்படுத்தப்பட்டு, பணியாற்றும் நிலையில் மருத்துவ சேவைக்கான செலவு குறைவதோடு, தரமான மருத்துவ சேவையும் கிடைக்கும்.
  3. உலக அளவில் மருத்துவ சேவை மற்றும் அவை சார்ந்த தொழில் பணியாளர்கள், இளநிலை பட்டப் படிப்பினை 3 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகள் வரை மேற்கொள்வதோடு, சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டத்தையும்கூட பெறக்கூடும். எப்படி இருப்பினும், இந்தியாவில் உள்ள சுகாதார, மருத்துவப் பணி சார்ந்த கல்வியில் தரம் குறைவாகவே காணப்படுகிறது.
  4. உலக அளவில் இதுபோன்ற தொழில்களில் பணிபுரிபவர்களின் தகுதி மற்றும் திறமை குறித்து  உரிமம் வழங்க ஒழுங்குமுறை அமைப்பு உள்ளது.
  5. ஆனால், இதுபோன்ற பணியாளர்கள் இந்தியாவில் சுகாதார சேவை அமைப்பில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்தாலும்,  அவை ஒழுங்குமுறைப்படுத்தப்படாததும், கல்வி மற்றும் பயிற்சியில் தரம் இல்லாததும் ஒரு குறையாகவே உள்ளது.
  6. எனவே, இந்த மருத்துவ சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018 வலுவான ஒழுங்குமுறைகளை வகுத்து, இந்தப் பிரிவை துடிப்புடன் செயல்பட வழிவகுக்கும்.

 

*****

 

ஈஎம்/க.