Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மலையாள மனோரமா நாளிதழின் 2019-ம் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்


கொச்சியில் நடைபெற்ற மலையாள மனோரமா நாளிதழின் 2019-ம் ஆண்டிற்கான கூட்டத்தில் காணொலி வழியாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

கேரள மாநில மக்களை விஷயமறிந்தவர்களாக மாற்றுவதிலும் இந்தியாவின் விடுதலை இயக்கத்தினை ஆதரிப்பதில் அதன் பங்கிற்காகவும் பிரதமர் மலையாள மனோரமா நாளிதழிற்குப் பாராட்டு தெரிவித்தார்.

‘புதிய இந்தியா’ என்ற தலைப்பின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இந்த சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தனிப்பட்ட விருப்பங்கள், கூட்டான முயற்சிகள், நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றும் உணர்வு ஆகியவையே புதிய இந்தியாவின் அடித்தளமாகத் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். புதிய இந்தியா என்பது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம், மக்களை மையமாகக் கொண்ட அரசு, செயலூக்கம் மிக்க குடிமக்கள் ஆகியவையே புதிய இந்தியா என்பதையும் அவர் வலியுறுத்தினார். பொறுப்புள்ள குடிமக்கள், உடனடியாக செயல்படும் அரசு ஆகியவை அடங்கிய காலமாக புதிய இந்தியா திகழும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அது விளையாட்டாக இருந்தாலும் சரி அல்லது புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு ஆதரவான சூழலாக இருந்தாலும் சரி, பல்வேறு துறைகளிலும் புதிய இந்தியாவிற்கான உணர்வு தென்படுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் சிறிய நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் துணிவுமிக்க இளைஞர்கள் தங்களது ஆர்வத்தை தனித்திறமையாக மாற்றுவதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை தேடித் தருகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தப் பின்னணியில் “ என்னைப் பொறுத்தவரையில் இதுதான் புதிய இந்தியாவிற்கான உணர்வு. இங்கே இளைஞர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள குடும்பப் பெயர் முக்கியமல்ல. தங்களுக்கேயான பெயரை உருவாக்கிக் கொள்ளும்படியான அவர்களது திறமைதான் இங்கே முக்கியமானது. இத்தகைய இந்தியாவில் அது யாராக இருந்தாலும் சரி, ஊழல் என்பது ஒரு வழிமுறையாக இருக்காது. திறமை மட்டுமே வழிமுறையாக இருக்கும்.” என்றும் பிரதமர் குறிப்பிட்டார். புதிய இந்தியா என்பது 130 கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரின் குரலாக இருக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய மக்களின் குரலை கேட்பதற்கான மேடையாக ஊடகங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் இதுவரை செய்துள்ள வேலைகளைப் பற்றிப் பேசும்போது, வசதியான வாழ்க்கைக்கான ஏற்பாடு, விலைவாசியை கட்டுக்குள் வைப்பது, ஐந்து ஆண்டுகளில் 1.25 கோடி வீடுகளைக் கட்டி முடிப்பது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியை வழங்குவது, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதியை செய்து தருவது, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகிய துறைகளில் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை அவர் விரிவாக விளக்கினார். 36 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதையும், சிறிய வணிக நிறுவனங்களுக்கு என 20 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதையும், புகையற்ற சமையலறைகளை உறுதிப்படுத்தும் வகையில் 8 கோடிக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும், சாலை உருவாக்கப்படும் வேகம் அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“இந்தியாவில் உணர்வு எப்படி மாறிவிட்டது என்பதை இரண்டே வார்த்தைகளில் கூறி விடலாம். ஐந்து ஆண்டுகளுக்கு  முன்னால் மக்கள் தங்களையே கேட்டுக் கொண்டார்கள்: “நம்மால் முடியுமா? தூசியில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியுமா? எதற்கு அசையாத செயலற்ற கொள்கையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியுமா? ஊழலை நம்மால் அகற்றி விட முடியுமா?” ஆனால், இன்று அதே மக்கள் சொல்கிறார்கள்: நம்மால் முடியும். தூய்மையான இந்தியாவாக நம்மால் இருக்க முடியும். ஊழலில் இருந்து விடுபட்ட இந்தியாவாக இருக்க முடியும். சிறந்த நிர்வாகத்தை பெரும் இயக்கமாக நம்மால் நடத்த முடியும். நம்மால் முடியுமா? என்று நம்பிக்கையற்றதாக இருந்த கேள்வி இப்போது இளைஞர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டின் நம்பிக்கை நிரம்பிய உணர்வைப் பிரதிபலிப்பதாக மாறியிருக்கிறது.” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

புதியதொரு இந்தியாவை உருவாக்குவதற்காக அரசு முழுமையாகச் செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் கூறினார். இந்தப் பின்னணியில், ஏழைகளுக்கென 1.5 கோடி வீடுகளைக் கட்டுவது என்ற அரசின் அணுகுமுறை குறித்து அவர் குறிப்பிட்டார். மேலும் அதிகமான வசதிகளை செய்து தருவது, மேலும் அதிக மதிப்பைத் தருவது, குறைந்த நேரத்திற்குள் கூடுதல் செலவில்லாமல் பொருட்களை வழங்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையானதொரு அணுகுமுறையை தாங்கள் பின்பற்றி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும் இந்தச் செயல்முறையில் மக்களிடம் காது கொடுத்துக் கேட்பது, உள்ளூர் கைவினைஞர்களையும் தொழில்நுட்பத்தையும் ஈடுபடுத்துவது ஆகியவை மிக முக்கியமான அம்சங்களாகத் திகழ்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டிற்குள் வாழ்பவர்கள் மட்டுமல்ல; வெளிநாட்டில் வாழ்வோர் மீதும் அக்கறை கொள்வது என்பதும் கூட இந்த புதிய இந்தியாவிற்கான தமது தொலைநோக்கில் அடங்கியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வெளிநாடுவாழ் இந்தியர்களும் கூட நமது பெருமைக்குரியவர்கள் என்பது மட்டுமின்றி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்கள் பங்களிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பஹ்ரைன் நாட்டிற்கு சமீபத்தில் தான் மேற்கொண்ட பயணம் பற்றிக் குறிப்பிட்ட அவர், அங்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றதாகவும் தெரிவித்தார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அங்கு பல்வேறு வகையில் தண்டனைகளை அனுபவித்து வரும் 250 இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது என்ற அரச குடும்பத்தின் கருணைமிக்க முடிவு ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய அரபு குடியரசில் ருபேவை அறிமுகம் செய்தது பற்றியும் அவர் குறிப்பிட்டதோடு, வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பல லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளுக்குப் பணம் அனுப்ப பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூய்மை இந்தியா, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக்கை முற்றிலுமாக அகற்றுவது, நீர்வளப் பாதுகாப்பு, நல்ல உடல் நலத்துடன் இருப்பது போன்ற பல்வேறு இயக்கங்களிலும் ஊடகங்களின் சாதகமான பங்களிப்பையும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார்.

இந்தியாவை ஒன்றுபடுத்துவதில் மொழிக்கு உள்ள வலிமையை சுட்டிக் காட்டிய பிரதமர், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களை நெருக்கமாக கொண்டுவரும் பாலமாக ஊடகம் செயல்பட முடியும் என்றும் கூறினார். ஒரே வார்த்தையை 10-12 மொழிகளில் ஊடகங்களால் வெளியிட முடியும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். இந்த வகையில் ஓராண்டிற்குள் ஒருவரால் பல்வேறு மொழிகளில் 300 புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மற்றொரு இந்திய மொழியை ஒருவர் கற்றுக் கொண்டால், பொதுவான தன்மைகளை அவரால் தெரிந்து கொள்ள முடியும் என்பதோடு, இந்திய கலாச்சாரத்தின் ஒருமைத் தன்மைமையை அவரால் பாராட்டவும் முடியும்.

நமது நாட்டிற்கு அடித்தளமிட்ட தலைவர்களின் கனவுகளை நிறைவேற்றி, அவர்களை பெருமை கொள்ளச் செய்யும் வகையிலான ஓர் இந்தியாவை உருவாக்குவதே நமது கடமை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

*****