Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக கர்நாடக முதல்வருடனான உயர்நிலை கூட்டத்தில், பிரதமர் சீராய்வு.

வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக கர்நாடக முதல்வருடனான உயர்நிலை கூட்டத்தில், பிரதமர் சீராய்வு.


கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலை தொடர்பாக இன்று நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கர்நாடகா முதல்வர் திரு. சித்தராமையா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அரசு மற்றும் கர்நாடக மாநில அரசின் உயரதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், வறட்சியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களையவும், நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பாகவும், வறட்சி பாதித்த 11 மாநில முதல்வர்களுடன் தனித்தனியாக பேசி வருவதாகவும் கூறினார்.

காரீப் பருவத்திற்காக மத்திய அரசு ரூ.1,540.20 கோடியை மத்திய அரசு ஒதுக்கியதற்காக, கர்நாடக முதல்வர் நன்றி தெரிவித்து கொண்டார். விவசாயிகளுக்கு உதவி செய்ய இது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அவர் கூறினார். நிகழ்நேர ஒட்டுமொத்த தீர்வை (ஆர்.டி.ஜி.எஸ்.) முறை மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக இத்தொகை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ராபி பருவத்திற்கு, ரூ.723.23 கோடி வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை விரைவாக வழங்க வேண்டும் என்றார்.

2015&16ம் நிதியாண்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (எஸ்.டி.ஆர்.எப்.) மத்திய அரசின் பங்காக கூடுதலாக ரூ.207 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எஸ்.டி.ஆர்.எப்.புக்கு 2016&17ம் நிதியாண்டிற்கு மத்திய அரசின் முதல்கட்ட ஒதுக்கீடாக ரூ.108.75 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கர்நாடகா மாநிலத்துக்கு நீர் பாதுகாப்பு மற்றும் வறட்சி பாதிப்பு பணிகளுக்காக ரூ.603 கோடி கிடைக்கும் என்றும் இதில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், பல்வேறு விவசாய திட்டங்களின் கீழ் ரூ.830 கோடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடும் வறட்சியால் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து முதல்வர் விளக்கினார். மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தூர்வாருதல், பண்ணைக் குட்டைகளை அமைத்தல், சொட்டுநீர் பாசனத்தை நோக்கிய நடவடிக்கைகள் மற்றும் போதுமான அளவுக் குடிநீர் சப்ளையை உறுதிசெய்தல் உட்பட மாநில அரசால் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

தூர்வாருதல், நீர் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீரை செறிவூட்டல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வருடன் பிரதமர் ஆலோசித்தார். வரும் பருவ மழைக்கு முன்னதாக 30 முதல் 40 நாட்களுக்குள் நீர் மேலாண்மைக்காக தூர்வாருதல், பண்ணை குட்டைகள், தடுப்பு அணைகள் ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில அரசை அவர் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகளை பாராட்டிய பிரதமர், நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களில் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி, முதல்வர் திரு.சித்தராமையா பிரதமரிடம் விளக்கினார். பயிர் காப்பீடு திட்டம் தொடர்பாக சில ஆலோசனைகளையும் மாநில அரசு வழங்கியது.

பிரதமரிடம் முதல்வர் தீர்மானம் ஒன்றை அளித்தார். அதை பெற்றுக் கொண்ட பிரதமர், முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக அவரிடம் உறுதி அளித்தார்.

வறட்சியை எதிர்க்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், இது நமது பிரச்சனை என்றும் கூறினார். பிரச்சனைக்கான தீர்வை இணைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் மாநிலங்கள் தங்களிடையே பேசும் ஆரோக்கியமான போட்டி சூழல் உருவாகும் காலம் ஏற்படும் என்றும், ஜிஎஸ்டிபியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் முதலீடு தொடர்பான பேச்சுகள் ஏற்படும் என்றும் பிரதமர் கூறினார். நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான அளவீடுகளுக்காக நிதி ஆயோக் புள்ளிவிவரத்தை தயாரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.