பி.எம்.இந்தியா
மத்திய அரசின் ஆணை எஸ்.ஓ.2559 (இ) நாள் 30.9.2014இன் கால வரையறை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆணை 10.10.2015 முதல் 30.09.2016 வரை பருப்பு, சமையல் எண்ணெய் வகைகள், மற்றும் சமையல் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும். இந்த காலவரையறை நீட்டிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் மாநிலங்கள் அத்தியாவசியப் பண்டங்களின் வர்த்தகத்தை வழி நடத்தி அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955ன் கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். முறையற்ற வர்த்தகம் பதுக்கல், கொள்ளை லாபம் ஆகியவற்றை தடுப்பதற்காக உரிமங்களை அளிப்பது மற்றும் பொருள்களை கிடங்குகளில் சேமித்து வைப்பது ஆகியவற்றிற்கு வரைமுறைகளை கொண்டு வரலாம். இந்த ஆணையின் மூலம் மாநிலங்கள் அத்தியாவசியப் பண்டங்கள் உள்ளூர் சந்தையில் தேவையான அளவு கிடைப்பதற்கும் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் ஏற்படும் பிரச்சினைகளை மாநிலங்கள் தீர்க்க இந்த ஆணை உதவும்.
அத்தியாவசியப் பொருட்கள் குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் வெங்காயம் ஆகியவை நியாயமான விலையில் கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றிற்கான முன்பேர வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கு தீர்வை விதிக்கப்படவில்லை. விலை நிலையானதாக இருப்பதற்கான திட்டத்திற்கு அளிக்கப்படும் நிதியுதவிக்கு பருப்பு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் பருப்பு வகைகள் சுலபமாக கிடைப்பதற்காக 5000 டன் உளுந்து மற்றும் 5000 டன் துவரம் பருப்பு ஆகியவை இறக்குமதி செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. அவை விரைவில் இறக்குமதி செய்யப்படும். இதனால் மலிவான விலையில் இப்பொருட்கள் கிடைக்கும்.