பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அளவிலான முதலாவது ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகத்தை வதோதராவில் அமைக்கும் ரயில்வே அமைச்சகத்தின் மாற்றத்துக்கான முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், ரயில்வே அமைச்சகத்தில் உள்ள பணியாளர்களுக்கு திறனை வளர்ப்பதுடன், திறன் மேம்படுத்தப்படும். பிரதமரின் எண்ணத்தால் உருவான இந்த புத்தாக்க யோசனையின் மூலம், புதிய இந்தியாவை நோக்கி ரயில் மற்றும் போக்குவரத்து துறையை மாற்றம்பெறச் செய்யும்.
இந்தப் பல்கலைக் கழகம், பல்கலைக் கழக மானியக் குழு (நிகர்நிலைப் பல்கலைக் கழக கல்வி நிறுவனங்கள்) விதிமுறைகள், 2016-ன் பழைய பிரிவின்படி, நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக அமைக்கப்படும். இதற்கான அனைத்து அனுமதிகளையும் பெறும் பணிகளை ஏப்ரல் 2018-க்குள் மத்திய அரசு பெற்று, முதல் கல்வி ஆண்டு ஜூலை 2018-ல் தொடங்கும்.
புதிதாக தொடங்கப்பட உள்ள இந்தப் பல்கலைக் கழகத்தை நிர்வகிப்பதற்காக, நிறுவனங்கள் சட்டம் 2013-ன் 8-வது பிரிவின்கீழ், ஆதாய நோக்கில் இல்லாத நிறுவனத்தை ரயில்வே அமைச்சகம் உருவாக்கும். இந்தப் பல்கலைக் கழகத்துக்கு நிதி மற்றும் கட்டமைப்பு ஆதரவை இந்த நிறுவனம் வழங்கும். மேலும், பல்கலைக் கழகத்தின் வேந்தரையும், இணை வேந்தரையும் நியமிக்கும். இந்த பல்கலைக் கழகத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தின் சார்பில் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய மேலாண்மை வாரியம் உருவாக்கப்படும். இது கல்வி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை முழு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுத்தும்.
குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில் உள்ள இந்திய ரயில்வே-க்கு சொந்தமான தேசிய கல்வி நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டமைப்பு வசதிகள், பயன்படுத்திக் கொள்ளப்படும். இவற்றில் பல்கலைக் கழகத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்வதுடன், நவீனமயமாக்கப்படும். முழு அளவில் மாணவர்களை சேர்க்கும்போது, 3 ஆயிரம் மாணவர்கள் முழு நேர அளவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்துக்கு தேவையான நிதியை முழுவதுமாக ரயில்வே அமைச்சகமே வழங்கும்.
இந்தப் பல்கலைக் கழகம், இந்திய ரயில்வே-யை நவீனமய பாதைக்கு அழைத்துச் செல்லும். மேலும், உற்பத்தியை அதிகரிப்பதுடன், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவித்து போக்குவரத்து துறையில் இந்தியாவை உலகத் தலைவராக மாற்றும். இந்திய ரயில்வே-வுக்கு தேவையான திறன்வாய்ந்த பணியாளர்கள் தளத்தை உருவாக்கும். மேலும், இந்திய ரயில்வே-வுக்கு பாதுகாப்பு, வேகம் மற்றும் சேவையை அளிப்பதற்காக அதிநவீன தொழில்நுட்பங்களை அளிக்கும். தொழில்நுட்பங்களை கொண்டுவருதல் மற்றும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளச் செய்வது மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவித்தல், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், “இந்தியாவில் தொழில் தொடங்குவோம்” மற்றும் “திறன்வாய்ந்த இந்தியா” ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும். இது ரயில்வே மற்றும் போக்குவரத்து துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களும், சரக்குகளும் வேகமாக இடம்பெயர்வதற்கு வழிவகை செய்யும். சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பெறுதல் ஆகியவற்றின் மூலம், நிபுணத்துவத்தில் சர்வதேச மையமாக இந்தியா உருவாகும்.
இந்தப் பல்கலைக் கழகம், அதிநவீன கற்பிப்பு முறை, தொழில்நுட்ப முறைகளை (செயற்கைக்கோள் அடிப்படையில் கண்காணித்தல், ரேடியோ அதிர்வலை கண்காணிப்பு மற்றும் செயற்கை புலனாய்வு) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வே-வுடன் நெருங்கிய தொடர்புகொண்டு செயல்பட உள்ளதால், ரயில்வே துறையின் வசதிகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது நேரடி ஆய்வகங்களாகவும், உண்மையான பிரச்சினைகளை தீர்க்கவும் வழிவகை செய்யும். பல்கலைக் கழகத்தில் அதிநவீன, அதிவேக ரயில் போன்ற உயர் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் “உயர் திறன் மையம்” இருக்கும்.
பின்னணி:
இந்திய அரசு மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன் பலன், அடுத்த நூற்றாண்டில் தெரியவரும். நாட்டின் முதலாவது ரயில்வே பல்கலைக் கழகத்தை வதோதராவில் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது – வதோதராவில் ரயில்வே பல்கலைக் கழகம் குறித்து அக்டோபர் 2016-ல் பிரதமர் பேசியது.
அதிவேக ரயில்கள் (புல்லட் என்று பிரபலமாக அழைக்கப்படுவது), மாபெரும் கட்டமைப்பு நவீனமயமாக்குதல், முழுமையான சரக்கு முனையங்கள் (Dedicated Freight Corridors – DFCs), பாதுகாப்பில் அதிக கவனம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை இந்திய ரயில்வே மேற்கொள்ள உள்ளது. இந்திய ரயில்வே-வுக்கு உயர்ந்த திறன் மற்றும் திறமை தேவைப்படுகிறது. மேலும், இந்தியாவில் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றம், திறன்வாய்ந்த பணியாளர்களின் தேவை அதிகரிப்பு, திறன் மேம்பாடு போன்ற காரணிகளால், இந்திய ரயில்வே-வை மாற்றியமைக்க உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மையம் அவசியமாகிறது.