பி.எம்.இந்தியா
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்து வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெறும், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பிரதமரின் சிறந்த ஆளுகைக்கும், தென்பகுதி நாடுகளின் மக்களுக்காக அவர் குரல் கொடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய, பொருளாதார ரீதியாக ஆற்றல்மிக்க இந்தியாவை உருவாக்கும் அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் உலகத் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயக்க, 2026 ஜூன் 8-ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் , இலங்கை அரசின் சார்பிலும் மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். “இந்த மைல்கல் சாதனை, நீங்கள் பதவியில் இருந்த ஆண்டுகளின் சான்றாக மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைச் சேர்ந்த மக்கள், உங்கள் தலைமை மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார, சமூக மாற்றத்தையும் இலங்கை அதிபர் எடுத்துரைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, இலங்கை உட்பட இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள பல நாடுகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். இது அந்த நாட்டிற்கு அவர் மேற்கொண்ட நான்காவது பயணமாகும். அப்பயணத்தின் போது, ஒரு வெளிநாட்டு பிரமுகருக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயர்ந்த விருதான மித்ரா விபூஷணம் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பயணம், இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது. 2022-ம் ஆண்டில் இலங்கை சந்தித்த பொருளாதார நெருக்கடிகளின்போது இந்தியா வழங்கிய முக்கிய ஆதரவு உட்பட, இந்தியாவின் உறுதியான ஒத்துழைப்பால் மிக நெருக்கமாகப் பயனடையும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
பப்புவா நியூ கினியாவின் பிரதமர் திரு ஜேம்ஸ் மாரபே , ஒரு தனிப்பட்ட காணொலிச் செய்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடியை “ஒரு முன்மாதிரியான தலைமைத்துவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “இப்போது 25 கோடிக்கும் அதிகமான மக்களை திரு நரேந்திர மோடி வறுமையிலிருந்து நல்ல வாழ்க்கைக்கு உயர்த்தியிருப்பது ஒரு அற்புதமான சாதனை” என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மாரபே, பப்புவா நியூ கினியாவின் ஆழ்ந்த நட்பையும், இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மூன்றாவது மன்றத்தின் உச்சி மாநாட்டிற்காக, ஒரு இந்தியப் பிரதமர் முதன்முறையாக மே 2023-ல் பப்புவா நியூ கினியாவிற்கு மேற்கொண்ட பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் பயணம் அமைந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், பசிபிக் தீவு நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் ஆகும். இந்தப் பயணம், உலகளாவிய தென் பகுதி நாடுகளின் அர்ப்பணிப்புள்ள ஒத்துழைப்பு நாடாக இந்தியாவின் பங்கை எடுத்துக் காட்டியது.
டிரினிடாட் – டொபாகோவின் பிரதமர் திரு கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர் , பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், உலக விவகாரங்களில் இந்தியா ஒரு முன்னணி குரலாக உருவெடுத்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார். எளிமையான தொடக்கத்திலிருந்து மூன்று பதவிக் காலங்களில் 140 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசத்தை வழிநடத்தி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பயணத்தை அவர் எடுத்துரைத்துள்ளதோடு, வெளியுறவுக் கொள்கை, பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
டிரினிடாட் – டொபாகோவிற்கு இந்தியர்கள் சென்றதன் 180-வது ஆண்டு நிறைவை ஒட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 3 முதல் 4 வரை டிரினிடாட் – டொபாகோவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டார். இது 26 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணமாக அமைந்தது.
(Release ID : 2270866)
****
TV/PLM/SH