Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கு இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்


மாண்புமிகு அதிபர் கோத்தபய ராஜபக்சா அவர்களே,

இலங்கை மற்றும் இந்தியாவின் மூத்த அதிகாரிகளே,

நண்பர்களே,

வணக்கம்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சாவையும், அவரது குழுவினரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தலில் தீர்மானகரமான வெற்றி பெற்றதற்காக அதிபரை நான் மனமார பாராட்டுகிறேன். அமைதியான தேர்தல் நடைமுறைக்காக இலங்கை மக்களையும் நான் பாராட்டுகிறேன். இலங்கையின் வலுவான, பக்குவப்பட்ட ஜனநாயகம் பெருமைக்குரிய விஷயமாகும். அதிபர் ராஜபக்சா தமது முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருப்பதும், பதவி ஏற்ற இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவில் அவரை வரவேற்பதற்கு வாய்ப்பு அளித்திருப்பதும் எங்களுக்கு கவுரவமாகும். இந்தியா- இலங்கை இடையேயான நல்லுறவில் பலம் மற்றும் சக்தியின் அடையாளமாக இது உள்ளது. இந்த உறவுகளுக்கு இருநாடுகளும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதையும் இது காட்டுகிறது. இருநாடுகளின் வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்கும் அதிபர் ராஜபக்சாவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்.

நண்பர்களே,

இந்தியா, இலங்கையின் மிக நெருக்கமான கடல்சூழ்ந்த அண்டை நாடாகவும், நம்பகமான நட்பு நாடாகவும் உள்ளது. இருநாடுகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளுக்கு நமது வரலாறு, இன, மொழி, கலாச்சார, நாகரீகத் தொடர்புகள் வலுவான அடித்தளமாக உள்ளன.

அதிபரும், நானும் இன்று இருதரப்பு உறவுகள் பற்றியும், பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச விஷயங்கள் பற்றியும் பயனுள்ள விவாதத்தை நடத்தினோம். இருநாடுகளுக்கு இடையே பன்முகப் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை இணைந்து வலுப்படுத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். இலங்கையுடனான வளர்ச்சிப் பங்களிப்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவரிடம் நான் உத்தரவாதம் செய்திருக்கிறேன். இலங்கை மக்களின் முன்னுரிமைகளின்படி, இந்த ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். இலங்கையின் வளர்ச்சிக்கும், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் புதிதாக 400 மில்லியன் டாலர் கடன் வழங்கப்படும். இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரம் பயனடையும். அதேநேரம், இந்தக் கடன் உதவி இருநாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நலன் தரும் திட்ட ஒத்துழைப்பையும் துரிதப்படுத்தும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இந்திய வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 46,000 வீடுகள் கட்டப்பட்டதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மலையகப் பகுதியில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான 14,000 வீடுகள் கட்டும் திட்டத்திலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஏற்கனவே, இலங்கையின் சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு 100 மில்லியன் டாலர் கடனுதவி வழங்க நாங்கள் ஒப்புக் கொண்டு இருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நண்பர்களே,

பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இந்தியா எப்போதும் எதிர்க்கிறது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பிற வடிவிலான பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமூகத்திடம் இருந்து நடவடிக்கையை இந்தியா எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று மனித குலத்தின் பன்முகத் தன்மையையும், மதிப்புமிக்க பாரம்பரியத்தின் மீதும் இலங்கையில் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்தியாவில் தேர்தல் முடிந்தவுடன் நான் இலங்கைக்கு சென்றிருந்தேன். பயங்கரவாதத்திற்கு எதிரான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அதிபர் ராஜபக்சாவுடன் விரிவாக நான் விவாதித்திருக்கிறேன். இலங்கையின் காவல்துறை அதிகாரிகள் இந்தியாவில் உள்ள பெரிய பயிற்சி நிறுவனங்களில் பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சியை ஏற்கனவே பெற்று வருகிறார்கள். பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் சிறப்புக் கடனுதவியை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான, மனிதாபிமானமுள்ள அணுகுமுறையைத் தொடர்வது என்று நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

நண்பர்களே,

இலங்கையில் சமரசத் திட்டங்கள் குறித்தும் நாங்கள் வெளிப்படையாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். இன நல்லிணக்கம் குறித்த தமது அரசியல் பார்வைப் பற்றி அதிபர் ராஜபக்சா என்னிடம் எடுத்துரைத்தார். சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மதிப்புக்கான தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற சமரச நடைமுறைகளை இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். இதில் 13-ஆவது சட்டதிருத்த அமலாக்கமும் அடங்கும். வடக்கு-கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சிக்கும் இந்தியா நம்பகமான பங்குதாரராக இருக்கும்.

நண்பர்களே,

இந்தியாவுக்கு அதிபர் ராஜபக்சாவை நான் மீண்டும் ஒருமுறை வரவேற்கிறேன். அவரது வருகை நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும். நமது ஒத்துழைப்பு இருநாடுகளின் வளர்ச்சியையும், இந்தப் பிராந்தியத்தின் வளம், அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றையும் மேம்படுத்தும்.