Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் உரை


புதுதில்லியில் இன்று (30.10.2018) நடைபெற்ற இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இத்தாலி பிரதமர் திரு. கியூஸெப் கோண்டேவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா – இத்தாலி தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் அடுத்த கட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார். இத்திட்டம் இந்திய தொழில் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் புதிய பொருட்களை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் என்றார்.

தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் சமூகநீதி, அதிகாரமளித்தல், உள்ளார்ந்த மற்றும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு ஓர் ஊடகமாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார். அரசின் சேவைகள் கடைக்கோடி வரை சென்றடைவதை உறுதி செய்வதற்கும் தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

நாட்டு மக்களிடையே அறிவியல் ஆர்வத்தோடு தொழில்நுட்ப ஆர்வத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அந்த வகையில், அடல் புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்டம், யூமாங் செயலி மற்றும் நாடுமுழுவதும் 3 லட்சம் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற தொழில்நுட்பத் தீர்வுகள், அரசின் சேவைகள் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சேர்வதை உறுதி செய்ய முடிவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்திய விண்வெளித் திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், புதுமையான முயற்சிகளை தரமான வகையில் மேற்கொள்வதற்கு இவை ஒரு உதாரணமாக அமைந்துள்ளன என்றும் கூறினார். மேலும், இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளின் செயற்கைக் கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பி வருவதாகவும், புதுமையான தீர்வுகளை குறைந்த செலவில் உருவாக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதை இது பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.

வாழ்வியல் உபகரண வடிவமைப்புத்துறையில் இந்தியா – இத்தாலி இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்திருப்பது குறித்தும் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பாக, தோல் தொழில் மற்றும் போக்குவரத்து & வாகன வடிவமைப்பு துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.