Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018)

இந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018)

இந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018)


மேதகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ அவர்களே,

இந்தியா மற்றும் இஸ்ரேலின் வர்த்தகத் தலைவர்களே, ஆடவர்களே மற்றும் மகளிரே

 

பிரதமர் நேதன்யாஹூ  மற்றும் இஸ்ரேல் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களை எனது நாட்டு மக்கள் அனைவரின் சார்பில் நான் வரவேற்கிறேன். இரு நாடுகளின் தலைமை செயல் அதிகாரிகளுடன் இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இருதரப்பு தலைமை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு மூலம், இந்தியா மற்றும் இஸ்ரேல் வர்த்தகத் தலைவர்களுடன் பிரதமர் நேதன்யாஹூவும், நானும் தற்போது பயனுள்ள கலந்துரையாடலை முடித்துள்ளோம். கடந்த ஆண்டில் தொடங்கிய தலைமை செயல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் இந்த கலந்துரையாடல் மூலம் எனக்கு அதிக அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன.

நண்பர்களே!

இஸ்ரேல் நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் எனக்கு எப்போதுமே ஆழ்ந்த மதிப்பு உண்டு. குஜராத் முதலமைச்சராக கடந்த 2006-ம் ஆண்டில் இஸ்ரேலுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். மீண்டும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், இந்தியா சார்பில் முதலாவதாக நான் பயணம் மேற்கொண்டேன்.

இது மிகவும் சிறப்புவாய்ந்த பயணமாக இருந்தது. இஸ்ரேலின் வெற்றிக்கு காரணமான புத்தாக்கம், துணிவு மற்றும் விடாமுயற்சி உணர்வுகளை நேரில் கண்டறிந்தேன். கடந்த சில ஆண்டுகளாக நமது நட்புறவை புதிய சக்தி மற்றும் நோக்கம் ஊக்குவித்து வருகிறது. நமது ஒத்துழைப்பை மிகுந்த உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்ல இது உதவும். இந்தியா-இஸ்ரேல் நல்லுறவின் பிரகாசமான புதிய பரிமாணத்தின் முனையில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். இதனை நமது மக்களும், அவர்களின் சிறந்த வாழ்க்கைக்கான பரஸ்பர வாய்ப்புகளும்  இயக்குகின்றன.

நமது ஒத்துழைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வர்த்தகம் மற்றும் தொழில் துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது கலந்துரையாடலில் உங்களது ஒருங்கிணைந்த முயற்சிகள், கூடுதல் மதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், உறுதியான வெற்றிகளை உருவாக்குகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் தன்மை மற்றும் நமக்கு பொருத்தமான இஸ்ரேலின் அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம், நாம் ஒருங்கிணைந்து சாதிப்பதற்கு வானம் கூட எல்லை கிடையாது!

 

நண்பர்களே!

கடந்த ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட “இந்தியா-இஸ்ரேல் தொழில் துறை ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க நிதிய”த்தின் கீழ், (India-Israel Industrial R&D and Technological Innovation Fund -i4F) கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இன்று அழைப்பு விடுத்து தொடங்கியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிதி, 5 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. இது இரு நாடுகளின் திறன் தொகுப்பை ஒருங்கிணைத்து புதுவிதமான தொழில்நுட்பத் தீர்வுகளை ஏற்படுத்துவதற்கு வரவேற்கத்தக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை வர்த்தக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தத் தளத்தை இரு நாடுகளையும் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் வலிமையாக ஊக்குவிக்கிறேன். அதோடு, “தரவு பகுப்பாய்வு” (“Data Analytics”) மற்றும் “இணைய தள பாதுகாப்பு” போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் அதிகரிக்கும் என்பது மிகுந்த ஆவலை ஏற்படுத்துகிறது.

இந்தியா-இஸ்ரேல் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மாநாடு, இந்தியாவில், ஜூலை 2018-ல் நடைபெற உள்ளது என்பதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாடு, புதிய தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்க வழிவகை செய்யும் என்று நான் நம்புகிறேன். உண்மையில், இதற்கான தொடக்கப்பணி, ஐகிரியேட்-டிலிருந்து (iCREATE) நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இந்த வளாகத்தை தொடங்கிவைப்பதற்காக நாம் குஜராத்துக்கு செல்ல உள்ளோம். இது முன்னணி புத்தாக்க முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே!

குஜராத் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளுக்கு பிரதமர் நேதன்யாஹூவை அழைத்துச் செல்ல உள்ளேன். ஏனெனில், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் உண்மையான பலம், இது சாதாரண மனிதனுக்கு அளிக்கும் பலனைப் பொருத்தே அமைகிறது. புத்தாக்கம் மற்றும் புதியவற்றை உருவாக்குவதற்கான தனிப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புடன் தொழில் தொடங்குவதற்கான நாடாக இஸ்ரேல் இருக்கிறது என்பதை உலகமே அறியும்.

இதற்கான பாராட்டுகள், இஸ்ரேலிய தொழில்முனைவோருக்கே சேரும். இஸ்ரேலை வலிமையான, நிலையான மற்றும் புத்தாக்க பொருளாதாரமாக நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். 80 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டை, தொழில்நுட்ப அளவில் சர்வதேச சக்தி மையமாக ஜொலிக்க வைத்துள்ளீர்கள்.

நீர் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி; அல்லது வேளாண் தொழில்நுட்பம்; உணவு உற்பத்தியாக இருந்தாலும், அதன் பதப்படுத்துதல் அல்லது பாதுகாப்பாக இருந்தாலும்; புதிய சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் சிறந்த உதாரணமாக இஸ்ரேல் திகழ்கிறது. இது நேரடியான அல்லது நகல் பாதுகாப்பாக இருந்தாலும்; நிலம், நீர் அல்லது விண்வெளியாக இருந்தாலும்; உங்களது தொழில்நுட்பம் வியப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்தியாவில் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலத்திலிருந்து வந்தவன் என்ற முறையில், நான், குறிப்பாக, இஸ்ரேலின் நீர் சேமிப்பைப் பார்த்து வியப்படைகிறேன்.

நண்பர்களே!

இந்தியாவில், பேரியல் அளவிலும், நுண்ணியல் அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக நிலையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்பதே எங்களது தாரக மந்திரம்.

இதன் முடிவுகள், இரண்டு வழிகளில் உள்ளன. ஒரு முனையில், நமது வழிமுறைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்புகள் ஆகியவை உலகில் உள்ள தலைசிறந்தவற்றுடன் இணைந்து வருகின்றன. இரண்டாவதாக, எங்களால் வேகமான வளர்ச்சியை பேணிக்காக்க முடிகிறது.

கட்டமைப்பில் தீவிர சீர்திருத்தங்களை செய்துள்ள போதிலும், நாங்கள் வேகமாக வளரும் மிகப்பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளோம். நேரடி அந்நிய முதலீடு வரத்து அளவு 40 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இளைஞர்களுக்கு திறனை வளர்த்து, வேலைவாய்ப்பு வழங்க தீவிரமாக பணியாற்றி வருகிறோம். எங்களது மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இதுவே எங்களது மிகப்பெரும் வாய்ப்பாகவும், சவாலாகவும் உள்ளது. இந்த நோக்கத்துக்காக, இந்தியாவில் தொழில் தொடங்குவோம் என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த விவகாரத்தில், இந்தியா-இஸ்ரேல் நட்புறவுக்கு மிகப்பெரும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா-இஸ்ரேல் புத்தாக்க பாலம் என்பது, இரண்டு நாடுகளிலும் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை இணைக்கும் வகையில் செயல்படும். இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள், புதிதாக தொடங்கப்பட்ட தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதன்மூலம், இஸ்ரேலின் மிகப்பெரும் அறிவுசார் புலமையை பெற வேண்டும் என்று நான் கூறிவருகிறேன்.

  • இந்தியாவிடம் மிகப்பெரும் நிலப்பரப்பு மற்றும் அளவுகோல் உண்டு
  • இஸ்ரேலிடம் துல்லியம் மற்றும் நவீனம் உண்டு

பல்வேறு யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு பயனளிக்கும் அல்லது வர்த்தக அளவை அதிகரிக்கும்.

 

நண்பர்களே!

 

இன்று, நாம் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளோம். ஆனால், இன்னும் நாம் முழுமையாக செயல்படவில்லை. நாம் நமது இளைஞர்களின் சக்திக்கு இணையாக உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளோம்.

 

இந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற முயற்சியை வடிவமைத்துள்ளோம். இந்த முயற்சியுடன், முறையான பொருளாதாரத்தின் புதிய சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த வரி அமைப்பு ஆகியற்றை இணைத்து புதிய இந்தியாவை உருவாக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

 

இந்தியாவை புலமை அடிப்படையிலும், திறன் ஆதரவுடனும், தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையிலுமான சமூகமாக  உருவாக்குவதில் நாங்கள் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். டிஜிட்டல் இந்தியா மற்றும் திறன் இந்தியா மூலம், இதற்கான மாபெரும் தொடக்கத்தை ஏற்கனவே கொண்டுவந்துள்ளோம். இந்த மாற்றங்களை மேற்கொள்வதற்காக, கடந்த சில ஆண்டுகளாக, எனது அரசு குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

 

வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொண்ட பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் கொள்கை ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுள்ளோம். இந்தியாவில் “தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில்” நாங்கள் தீவிரமாக பணியாற்றியுள்ளோம்.

 

இதன்மூலம், கண்ணுக்குப் புலனாகும் பலன்கள் கிடைத்துள்ளன:

  • கடந்த மூன்று ஆண்டுகளில், எளிதாக தொழில் செய்வதற்கான நாடுகள் குறித்த உலக வங்கியின் மதிப்பீட்டில், இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது.
  • 2 ஆண்டுகளில், விபோ (WIPO)-வின் உலக புத்தாக்க குறியீட்டில் நாங்கள் 21 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
  • உலக பொருளாதார கூட்டமைப்பின் சர்வதேச போட்டிக்கான குறியீட்டில், இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 32 இடங்கள் முன்னேறியுள்ளோம். இது எந்த நாட்டைவிடவும் மிகப்பெரிய முன்னேற்றம்.
  • சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ள நாடுகள் குறித்து உலக வங்கி, கடந்த 2016-ம் ஆண்டில் வெளியிட்ட பட்டியலில் நாங்கள் 19 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
  • நேரடி அந்நிய முதலீட்டு வாய்ப்புக்கான நாடுகள் குறித்து வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐநா அமைப்பு (UNCTAD) பட்டியலிட்டுள்ள முன்னணி 10 நாடுகளில் ஒன்றாக நாங்கள் உள்ளோம்.

இன்னும் அதிக அளவிலும், சிறப்பான முறையிலும் செய்ய நாங்கள் விரும்புகிறோம்.

மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளோம். 90 சதவீதத்துக்கும் அதிகமான நேரடி அந்நிய முதலீட்டுக்கான அனுமதிகள், தானியங்கி முறையில் வழங்கப்படுகின்றன.

தற்போது நாங்கள், அதிக அளவில் திறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரே வணிகக்குறியீட்டுடன் கூடிய சில்லரை வர்த்தகம் (single brand retail) மற்றும் கட்டுமான மேம்பாட்டுப் பணிகளில் தானியங்கி முறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளோம். நமது தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்.

ஒவ்வொரு நாளும், இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வரிவிதிப்பு முறையில், ஏராளமான வரலாற்றுப்பூர்வ சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளோம். புத்தாக்கமான ஜிஎஸ்டி சீர்திருத்தம், வெற்றிகரமாகவும், சீராகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இவை அனைத்தும், இந்தியா இதுவரை மேற்கொண்டவற்றில் மிகப்பெரும் வர்த்தக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகும். ஜிஎஸ்டி, நிதி தொழில்நுட்பங்கள் மற்றும் ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம், நவீன வரிவிதிப்பு முறைக்கு உண்மையில் மாறியுள்ளோம். இது வெளிப்படையான, நிலையான மற்றும் யூகிக்க முடிந்த அளவில் உள்ளது.

நண்பர்களே!

 

இந்தியாவில் தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களுடன் பல்வேறு இஸ்ரேல் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள், குறிப்பாக நீர் தொழில்நுட்பங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றில் அதிநவீன நிலையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் விவகாரத்தில் புலமை பெற்ற நிறுவனங்கள், இந்தியாவில் தடம்பதித்துள்ளன. இதேபோல, தகவல் தொழில்நுட்பம், நீர்ப்பாசனம் மற்றும் மருந்துத் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய நிறுவனங்கள், இஸ்ரேலில் குறிப்பிடத்தகுந்த அளவில் செயல்பட்டு வருகின்றன.

நமது வர்த்தகத்தில் வலுவான இணைப்பாக வைரம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு முன்னதாக இருந்ததைவிட, இன்று பல்வேறு கூட்டு வர்த்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும், இது வெறும் தொடக்கம்தான். இஸ்ரேலுடனான நமது வர்த்தகம், 5 பில்லியன் டாலர்களைத் தாண்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

 

எனினும், இது உண்மையான திறனைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. நமது உறவில் முழு திறனையும் நாம் எட்ட வேண்டியது அவசியம். இது தூதரக அடிப்படையிலானது மட்டுமல்ல, பொருளாதார அடிப்படையிலான ஒன்றும்கூட. நமது ஒருங்கிணைந்த திறனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த உங்களது ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன். புத்தாக்கம், ஏற்றுக் கொள்தல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் சக்திகள், இரு நாடுகளிலும் உள்ளன.

 

இதற்கு உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்:

 

சேதங்களை சேமிக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மற்றும் நமது பழங்கள், காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்களுக்கு நம்மால் கூடுதல் மதிப்பு கொடுக்க முடிந்தால், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார அளவில் கிடைக்கும் ஆதாயங்களை யூகித்துப் பாருங்கள்! நீர் விவகாரத்திலும் இதே நிலை தான்.

 

நாம் நீரை அதிகமாகவும், பற்றாக்குறையாகவும் உள்ள சூழ்நிலைகளைக் கொண்டுள்ளோம். பலரும் பசியால் வாடும் நிலையில், உணவை வீசி வீணாக்கும் நிலையிலும் உள்ளோம்.

 

நண்பர்களே!

 

இந்தியாவின் வளர்ச்சி இலக்கு மிகப்பெரியது. இது இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு மிகப்பெரும் பொருளாதார வாய்ப்புகளை அளிக்கிறது. அதிக அளவிலான இஸ்ரேலிய மக்களும், வர்த்தகர்களும், நிறுவனங்களும் இந்தியாவுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.

 

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் மக்களுடன், வர்த்தக சமூகத்தினரும், கைகோர்த்து செயல்பட ஆர்வமாக உள்ளனர். உங்களது நிறுவனங்களும், கூட்டு முயற்சிகளும் முழு வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேவைப்படும் இடத்திலெல்லாம் எனது அரசும், நானும் ஆதரவு அளிப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன். அதிவேகமான இந்தியா-இஸ்ரேல் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பிரதமர் நேதன்யாஹூவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஒத்துழைப்பில் பல்வேறு வெற்றிகள் காத்திருக்கின்றன என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

 

நன்றி!