Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகை அமைதித் தோட்டமாக மாற்றுவோம் : உலக சூஃபி மாநாட்டில் பிரதமர்

உலகை அமைதித் தோட்டமாக மாற்றுவோம் : உலக சூஃபி மாநாட்டில் பிரதமர்


மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை பரப்புவது மதவிரோதம் பெயரால் தீவிரவாதத்தை பரப்புவது மதவிரோதம் : பிரதமர் திரு மோடி

மதத்திற்கும் தீவிரவாதத்துக்கும் உள்ள தொடர்பை நிராகரிக்க வேண்டும் : பிரதமர் திரு மோடி

உலக சூஃபிக்கள் அமைப்பு தங்கள் வாழ்வையே அமைதி, சகிப்புத் தன்மை மற்றும் அன்புக்கான செய்தியாக மாற்றிய ஒரு அமைப்பு : பிரதமர் திரு மோடி

கடவுளுக்கான சேவையும் மனித குலத்துக்கான சேவையும் ஒன்று என்று சூஃபிக்கள் கூறுகின்றனர் : பிரதமர் திரு மோடி

அல்லாவின் 99 பெயர்களில் ஒன்று கூட வன்முறையை ஆதரிப்பதில்லை : பிரதமர் திரு மோடி

சூஃபியிசம் அமைதி, சேர்ந்து வாழ்தல், கருணை, சமத்துவம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை போதிக்கிறது : பிரதமர் திரு மோடி

தீவிரவாதமும் வகுப்புவாதமும் நமது காலங்களில் அழிவு சக்திகளாக உருவாகியுள்ள நிலையில் சூஃபியிசம் உலகத்துக்கு முக்கியமானது : பிரதமர் திரு மோடி

சூஃபியிசத்தின் செய்தி தீவிரவாத எதிர்ப்பு மட்டுமல்ல, “சப் கா சாத், சப் கா விகாஸ்” என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல : பிரதமர் திரு மோடி

தீவிரவாதத்துக்கு எதிரான போர், நமது மதிப்பீடுகள் மற்றும் மதத்தின் செய்திகள் மூலமாக எடுத்துச் செல்லப் பட வேண்டும் : பிரதமர் திரு மோடி

17 மார்ச் 2016 அன்று மாலை புது தில்லி விக்யான் பவனில் பிரதமர் உலக சூஃபிக்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். நான்கு நாட்கள் நடைபெற்ற அகில இந்திய உலேமாக்கள் மற்றும் மாஷாய்க் வாரியம் நடத்திய நிகழ்ச்சியில் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்து கொண்டனர். எகிப்து, ஜோர்டான், துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து மதத் தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், மற்றும் மத நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி அவர்கள் தன் உரையில், சூஃபியிசத்தின் செழிப்பான வரலாறு, சகிப்புத் தன்மை மற்றும் கருணையின் முக்கியத்துவம், தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பின் அவசியம் ஆகியவை குறித்து பேசினார். தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் இருப்பதாக கூறப்படும் தொடர்பை மறுத்த பிரதமர், மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை பரப்புபவர்கள் மத விரோதிகள் என்றார். பிரதமரின் உரை, அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது.

தங்கள் வாழ்வையே அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அன்பாக மாற்றியவர்களின் சங்கமம்தான் உலக சூஃபிக்கள் மாநாடு என்று பிரதமர் குறிப்பிட்டார். உலகில் வன்முறையின் நிழல் படிந்து கொண்டிருக்கையில் நீங்கள்தான் நம்பிக்கை ஒளி என்று குறிப்பிட்டார் பிரதமர். துப்பாக்கிகளால் வீதிகளில் தவழும் இளம் புன்னகை மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அதற்கான அருமருந்தாக சூஃபியிசம் திகழ்கிறது என்றார் பிரதமர்.

வெளிப்படைத் தன்மை, சகிப்புத் தன்மை, மாறுதலை ஏற்கும் தன்மை, பல்வேறு கருத்துக்களுக்கு மதிப்பு ஆகிய குணங்களின் மூலம் உலகத்துக்கே சூஃபியிசம் பாடமாக விளங்குகிறது என்று கூறிய பிரதமர், இதன் அடிப்படையில், இந்தியாவும் உலகமும் வளமாகும் என்றார்.

சூஃபியிசத்தில் கடவுளுக்கு செய்யும் சேவை, மனித குலத்துக்கு செய்யப்படும் சேவையாக கருதப்படுகிறது. க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி என்ற ஞானி “இருக்கும் வழிபாடுகளிலேயே கடவுளை கவரும் வழிபாடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் சேவையே” என்று கூறியதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

சூஃபிக்களின் மார்க்கம், இந்து மதத்தின் பக்தி மார்க்கத்தோடு இணக்கமானது என்று குறிப்பிட்ட பிரதமர் இந்து மதத்தில் கூறப்படும் “மலைகளின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வரும் நதிநீர் கடலில் கலக்கிறது” என்று கூறினார் பிரதமர்.

அல்லாவின் 99 பெயர்களில் ஒன்று கூட வன்முறையை ஆதரிக்கவில்லை என்றார். முதல் இரண்டு பெயர்கள் கருணையை குறிப்பதாக கூறினார் பிரதமர். அல்லாவே ரஹ்மான் மற்றும் ரஹீமாக இருக்கிறார் என்றார். சூஃபியிசம் அமைதி, சகிப்புத் தன்மை, கருணை, சமத்துவம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை பேணுவதாக கூறினார் பிரதமர்.

சூஃபியிசம் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்தி உலக கலாச்சாரத்தில் பங்களித்துள்ளது என்று பிரதமர் திரு மோடி அவர்கள் குறிப்பிட்டார்.

இந்தியா அதன் போராட்டங்கள், தியாகங்கள், வீரம், அறிவு, திறன், கலை மற்றும் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கையோடு வளர்ந்து வருவதாகவும், எத்தனையோ வேற்றுமைகள் இருந்தும், ஒற்றுமையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார் பிரதமர்..

தீவிரவாதத்தின் வன்முறைக்கு பதிலாக, சூஃபியிசத்தின் அன்பு எல்லைகளை கடந்து பரவினால், பூலோகத்தில் ஒரு சொர்க்கம் உருவாகும் என்று அமீர் குஸ்ரா கூறியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். தீவிரவாதமும் வகுப்புவாதமும் உலகையே அச்சுறுத்தக் கொண்டுள்ள நிலையில் சூஃபியிசத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றார் பிரதமர்.

உலகெங்கும் பரவி வரும் தீவிரவாதத்தை குறிப்பிட்ட பிரதமர், தீவிரவாதத்தின் தாக்கத்தை வெறும் புள்ளி விவரங்களால் புரிந்து கொள்ள முடியாது. சில தீவிரவாதக் குழுக்கள், சில அரசுகளின் ஆதரவோடு செயல்படுகின்றன. தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் சிலர் தீவிரவாதத்தை கையில் எடுக்கிறார்கள் என்றார் பிரதமர்.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் குறித்து குறிப்பிட்ட பிரதமர், அது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. அவ்வாறு இருக்க முடியாது. மனித விழுமியங்களை மதிக்கும் சக்திகளுக்கும், மனிதத்தை நம்பாத சக்திகளுக்கும் இடையை நடக்கும் மோதல் என்றார். இந்த போர், நமது மதிப்பீடுகளின் அடிப்படையிலும், மதங்களின் அன்பு செய்திகள் மூலமாகவும் வெல்லப்பட வேண்டும் என்றார் பிரதமர்.

சூஃபியிசத்தின் செய்தி தீவிரவாதத்தை எதிர்ப்பதோடு மட்டுமல்ல “சப் கா சாத், சப் கா விகாஸ்” என்ற வளர்ச்சி மந்திரத்தையும் உள்ளடக்கியது என்றார் பிரதமர்.

புராதான தத்துவங்கள் மற்றும் புனித நூல்களில் இருந்து மேற்கோள்களை காட்டிய பிரதமர், வன்முறை சக்திகளை மனித மதிப்பீடுகளின் அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக, அகில இந்தியா உலேமாக்கள் மற்றும் மாஷாய்க்குகள் வாரியத்தின் தலைவர் ஹஷ்ரத் சையது முகம்மது அஷ்ரப் அவர்கள், இந்தியாவின் முஸ்லீம்கள், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இந்திய எல்லைகளை காப்பதில் உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.