Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காந்திநகர் கிப்ட் சிட்டியில் நடைபெற்ற இந்திய சர்வதேச பங்குச்சந்தை துவக்க விழாவில் பிரதமர் மோடியின் உரை

காந்திநகர் கிப்ட் சிட்டியில் நடைபெற்ற இந்திய சர்வதேச பங்குச்சந்தை துவக்க விழாவில் பிரதமர் மோடியின் உரை

காந்திநகர் கிப்ட் சிட்டியில் நடைபெற்ற இந்திய சர்வதேச பங்குச்சந்தை துவக்க விழாவில் பிரதமர் மோடியின் உரை

காந்திநகர் கிப்ட் சிட்டியில் நடைபெற்ற இந்திய சர்வதேச பங்குச்சந்தை துவக்க விழாவில் பிரதமர் மோடியின் உரை


இந்தியாவின் முதலாவது சர்வதேச பங்குச்சந்தையை கிப்ட் சிட்டியில் துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சி, இந்திய பொருளாதாரத் துறைக்கு வரலாற்றுப் பூர்வமானது.

2007ஆம் ஆண்டில் இந்த திட்டம் துவக்கப்பட்டது.  இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே சேவை அளிக்கும் வகையில் உலகத்தரத்தில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையத்தை இந்தியாவில் திறப்பதுதான் நோக்கமாக இருந்தது.

அந்த நாட்களில் நான் நியூயார்க், லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங், அபுதாபி என எந்த நாட்டுக்கு சென்று அந்நாட்டின் பொருளாதார மேதைகளை சந்தித்தாலும் அவர்கள் பெரும்பாலும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருப்பதை அறிந்தேன்.  அவர்களின் பொருளாதார அறிவும், அவர்கள் வசிக்கும் நாட்டிற்கு அவர்கள் பங்காற்றும் விதமும் என்னை வெகுவாக கவர்ந்தது. 

 “இந்த திறமைசாலிகளை நம் நாட்டிற்கு கொண்டுவந்து, உலக பொருளாதாரத்திற்கே தலைமை ஏற்கச் செய்தால் என்ன?” எனத் தோன்றியது.

கணிதத்தைப் பொறுத்தவரை இந்தியர்களுக்கு மிக நீண்ட பாரம்பரியம் உண்டு.  பூஜ்ஜியத்தையும், பதின்ம முறையையும் கண்டறிந்தவர்கள் இந்தியர்கள். எனவே உலக பொருளாதாரத்திலும், தகவல் தொழில்நுட்பத்திலும் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.

கிப்ட் சிட்டி என்ற எண்ணம் உருவான போது நான் குஜராத்தின் முதல்வராக இருந்தேன். தொழில்நுட்ப வளர்ச்சி நான்குகால் பாய்ச்சலில் முன்னேறியது.  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்த உலகத்தரமான ஆட்களை நாம் கொண்டிருந்தோம்.  பொருளாதாரம் தொழில்நுட்பத்துடன் வெகுவாக தொடர்புகொள்ள ஆரம்பித்திருந்தது.  இந்தியாவின் வளர்ச்சிக்கு சில சமயங்களில் ‘ஃபின்டெக்’ எனப்படும், தொழில்நுட்பத்துடன் கூடிய பொருளாதாரம் பெரிதாக உதவி செய்யும் என நமக்கு புரியத் தொடங்கியது.

பொருளாதாரத்தில் இந்தியாவை எப்படி உலகின் முன்னோடி ஆக்குவது என கலந்தாலோசித்தேன்.  அதற்காக உலக சந்தைகளோடு பரிமாற்றம் செய்யும் வகையில் சிறந்த மையங்களை உருவாக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது.  அந்த நோக்கத்தில் இருந்துதான் கிப்ட் சிட்டி பிறந்தது.  இந்தியாவின் உலகத்தரமான பொருளாதார நிபுணர்களுக்கு உலகத்தர வசதிகளை செய்துதர நினைத்தோம்.  இன்று அது சாத்தியப்பட்டிருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையை ஜூன் 2013ல் பார்த்திருக்கிறேன்.  அப்போது சர்வதேச பங்குச்சந்தை அமைக்க BSEயை நான் அழைத்தேன்.  பின்னர் 2015ல் துடிப்பான குஜராத் நிகழ்வில் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இன்று புதிய இந்திய சர்வதேச பங்குச்சந்ததை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  கிப்ட்சிட்டிக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே இது ஒரு மைல்கல்.    

இந்தப் பங்குச்சந்தையில் ஈக்விட்டி, பொருட்கள், கரன்சிகள் மற்றும் வட்டிவிகித கிளைகள் சார்ந்த வணிகங்கள் முதல் கட்டமாக மேற்கொள்ளப்படும்.  பின்னர் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஈக்விட்டி சார்ந்த வணிகங்களிலும் பங்குபெறும்.  மசாலா கடன் பத்திர வணிகமும் இங்கு நடக்கும் என தெரிவித்திருக்கிறார்கள்.  மேலும ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனங்களும் இந்த பொருளாதார மையத்தின் மூலம் நிதி திரட்ட முடியும்.

 உலகின் அதிவேகமான பங்குச்சந்தைகளில் ஒன்றாக இது திகழும்.   மேற்கு மற்றும் கிழக்குக்கு இடையிலான இந்தியாவின் புவியமைப்பு இரவு பகலாக உலகம் முழுவதிற்கும் இங்கிருந்து பொருளாதார சேவைகள் சென்று சேர உறுதுணையாக இருக்கிறது.  ஜப்பானிய பங்குச்சந்தை துவங்கும் நேரத்தில் துவங்கி, அமெரிக்க பங்குச்சந்தைகள் மூடப்படும் வரை, அதாவது 24மணி நேரமும் இந்த பங்குச்சந்தை செயல்படும்.  சேவை தரத்திலும், பரிவர்த்தனைகளின் வேகத்திலும் இந்த பங்குச்சந்தை புதிய வரலாற்றைப் படைக்கும்.    

கிப்ட் சிட்டியில் உள்ள சர்வதேச பொருளாதார சேவை மையத்தின் (IFSC) ஒரு அங்கமாக இந்த பங்குச்சந்தை திகழ்கிறது.  வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டு திறமைகளை வைத்து சேவை அளிப்பதே இம்மையத்தின் நோக்கம்.  வெளிநாட்டு பொருளாதார நிறுவனுங்களுடன் இந்திய நிறுவனங்கள் சம பலத்துடன் மோத இது உதவும். கிப்ட் சிட்டியில் உள்ள IFSC உலகத்தின் வேறு எந்த ஒரு பொருளாதார மையத்துடனும் போட்டி போட்டு சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  

வெளிநாடுகளில் உள்ளதைப் போன்ற ஒரு மையத்தை மிகப்பெரிய உள்நாட்டு சந்தை உள்ள இந்தியா போன்ற நாட்டில் அமைப்பது சுலபமான காரியமல்ல. சிறிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது.  சிறிய நாடுகளில் சந்தையின் அளவும் சிறியது என்பதால் தனித்தனியான வரி விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பெரிய நாடுகளால் அது முடியாது.  நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் SEBI ஆகியவை இணைந்து இந்த இடர்பாடுகளை நீக்க வழிகளைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி. 

பல வணிகங்கள், இந்திய பொருளாதார கருவிகள் உள்ளிட்டு, வெளிநாடுகளில் நடைபெறுவது குறித்த குற்றச்சாட்டு நிறைய உண்டு.  இந்திய பொருளாதார கருவிகளுக்கே கூட விலை நிர்ணயிக்கும் உரிமையை இந்தியா இழந்துவருகிறது எனவும் சொல்லப்படுகிறது.  இப்படியான பல குற்றச்சாட்டுக்களை கிப்ட் சிட்டி இல்லாமல் போகச் செய்யும்.  ஆனால் கிப்ட் சிட்டியை பொறுத்தவரை என் கனவு இன்னும் பிரம்மாண்டமானது.  இன்னும் பத்தாண்டுகளில் கரன்சி, ஈக்விட்டி, கமாடிட்டி, வட்டி விகிதங்கள் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார வணிக கருவிகள் பலவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யும் இடமாக இந்தியா திகழ வேண்டும் என்பதே.

அடுத்த இரண்டாண்டுகளில் இந்தியா முப்பது கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.  இது ஒரு சவாலான பணி.  சேவை நிறுவனங்களில் திறன் மற்றும் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைளும் கூட இந்த வேலைவாய்ப்பு புரட்சியில் பங்காற்ற வேண்டும்.  கிப்ட் சிட்டியின் மூலம் நம் இளைஞர்களுக்கு கிடைக்கும் சர்வதேச அனுபவம் அவர்களில் பலரை இந்தத் துறைக்கு ஈர்க்கும்.  பல உலகத்தரமிக்க பொருளாதார மேதைகளை உருவாக்க வேண்டும் என நிறுவனங்களையும், பங்குச்சந்தைகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.  இந்த கிப்ட் சிட்டியில் அவர்கள் பணியாற்றி உலகத்திற்கே சேவை ஆற்றலாம்.  அடுத்த பத்தாண்டுகளில் இந்த கிப்ட் சிட்டி பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

ஸ்மார்ட் நகரங்கள் மீது நான் காட்டும் ஆர்வம் தாங்கள் அறிந்ததே.  கிப்ட் சிட்டிதான் இந்தியாவின் உண்மையான முதல் ஸ்மார்ட் நகரம்.  மற்ற ஸ்மார்ட் நகரங்கள் எப்படி உட்கட்டமைப்பில் உலகத்தோடு போட்டி போட வேண்டும் என்பதை கிப்ட் சிட்டியை உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளும்.  நான் முன்னரே சொன்னதைப் போல இந்தியா ஒரே தலைமுறையில் முன்னேறிய நாடாக மாற முடியும்.  நம் கனவை நனவாக்க புதிய நகரங்களால் தான் முடியும்.

–தன்னம்பிக்கையுள்ள இந்தியா

–வளமான இந்தியா

–உள்ளடக்கிய இந்தியா

–. நமது இந்தியா.

இன்றுமுதல் இந்திய சர்வதேச பங்குச்சந்தை செயல்படும் என அறிவிக்கிறேன்.  கிப்ட் சிட்டிக்கும் இந்திய சர்வதேச பங்குச்சந்தைக்கும் என் வாழ்த்துகள்.

நன்றி

***