Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கென்யா அதிபருடன் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி அளித்த அறிக்கை

கென்யா அதிபருடன் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி அளித்த அறிக்கை

கென்யா அதிபருடன் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி அளித்த அறிக்கை


மாண்புமிகு அதிபர் உஹ்ரு கென்யட்டா அவர்களே,

மதிப்புமிக்க பிரதிநிதிகளே,

பத்திரிகையாளர்களே,

நண்பர்களே,

சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு, கென்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிபர் கென்யட்டாவும், கென்ய மக்களும் என்னை அன்புடன் வரவேற்றனர். இன்றைக்கு அதிபர் கென்யட்டாவையும் அவருடைய பிரதிநிதிகள் குழுவினரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நம் இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான உறவு மிகவும் பழமையானது. காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்தியாவும் கென்யாவும் ஒன்றாகப் போராடின. கென்யாவில்  காலனி ஆதிக்கத்தைத் தூக்கி எறிவதற்கு கென்ய சகோதரர்களுடன் கைகோர்த்த, இந்தியாவில் பிறந்தவரான தொழிற்சங்கத் தலைவர் மக்கான் சிங்கின் பங்களிப்புக்கு கடந்த மாதம் தான் அதிபர் கென்யட்டா அங்கீகாரம் அளித்தார். ஜனநாயக மாண்புகளில் உள்ள பொதுவான நம்பிக்கை, வளர்ச்சி அம்சங்களில் நமக்கு உள்ள சமமான முன்னுரிமைகள், இந்தியப் பெருங்கடலின் நீரோட்டம் ஆகியவை நமது சமூகங்களைப் பிணைக்கின்றன.

நண்பர்களே,

இன்று நம்முடைய கலந்துரையாடல்களில், அதிபரும் நானும், நம்முடைய உறவுகள் குறித்து முழுமையாக பரிசீலனை செய்தோம். கடந்த ஆண்டு கென்யாவுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது, நமது முயற்சிகளில் முக்கியமான கவனத்துக்குரிய ஓர் அம்சமாக பொருளாதார ஒத்துழைப்பை  வலுப்படுத்த வேண்டும் என அடையாளம் கண்டோம். இந்தச் சூழ்நிலையில், இரு தரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது, இரு பொருளாதாரங்களுக்கு இடையில் பெருமளவு மூலதனம் செய்வது, வலுவான வளர்ச்சி பங்களிப்புகள் ஆகியவை முன்னுரிமை பெறுகின்றன. நேற்று எட்டாவது துடிப்புமிக்க உலகளாவிய குஜராத் மாநாட்டுக்கு வலுவான உயர்நிலை பிரதிநிதிகள் குழுவினரை அதிபர் அழைத்துச் சென்றார். துடிப்புமிக்க குஜராத் நிகழ்வில் நீங்கள் பங்கேற்ற நிகழ்வு, கென்யாவில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இந்திய தொழில் நிறுவனங்கள் தொடர்பு கொள்வதற்கு வலுவான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுகாதாரம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்வளத்தை மேம்படுத்தும் நீலப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் தொழில் மற்றும் வணிகத் துறையினர் முன்னேடுத்துச் செல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், அதை நாங்கள் ஊக்குவிப்போம். நாளை நடைபெறவிருக்கும் கூட்டு தொழில் கவுன்சில் கூட்டத்தில், இந்தத் துறைகளில் குறிப்பிட்ட திட்டங்களில் பங்கேற்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கு, தரநிலைப்படுத்தல் மற்றும் தொடர்புடைய துறைகள் உள்பட வர்த்தக செயல்பாடுகளில் ஒத்துழைப்புக்கு ஏற்பாடு செய்கிறோம். வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையில் விரிவான ஒத்துழைப்பு ஏற்படுத்துவதும் எங்களின் முக்கியத்துவமாக உள்ளது. கென்யாவில் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்குவதில் நாங்கள் கூட்டாக செயல்படுகிறோம். வேளாண்மை பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்காக இன்று கையெழுத்தான 100 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம், இந்த முயற்சியில் புதிய பரிமாணத்தை ஆரம்பித்து வைக்கும். தானியங்கள் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதற்கு கென்யாவுடன் நீண்டகால ஒப்பந்தம் செய்வதற்கான நீண்டகால ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து விவாதிக்கப் படுகின்றன. இயற்கை வேளாண்மையில் சிறந்த நடைமுறைகளை கென்யா விவசாயிகளிடம் இருந்து அறிந்து கொள்வதிலும் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். சுகாதாரத் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்காக கென்யட்டா தேசிய மருத்துவமனைக்கு பாபத்ரான் கருவி அளிக்கப் பட்டுள்ளது. இந்தியா ஆப்பிரிக்கா மாநாட்டு அமைப்பு முயற்சியின் கீழ், இதுதொடர்பாக கென்யா டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடுசெய்யப்படுகிறது. கல்வித் துறையில் பங்கேற்பு மூலம் நமது மக்களுக்கு இடையே புதிய தொடர்புகள் உருவாக்கப் படுகின்றன. ICCR சார்பில் இந்தியக் கல்விகளுக்கான அமர்வு ஏற்படுத்தப்பட்ட நைரோபி பல்கலைக்கழகத்துடன் நமக்கு வலுவான உறவு உள்ளது. இந்திய உதவியுடன் நூலகத்தைப் புதுப்பிக்கும் பணியும் அங்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது. எரிசக்தித் துறையில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு கென்யாவின் ஆதரவை நாங்கள் மதிக்கிறோம். நமது பொருளாதார வளர்ச்சிக்கு பலம் சேர்ப்பதற்கு, சூரியசக்தியை செம்மையாகப் பயன்படுத்த நமது கூட்டு முயற்சிக்கும் மதிப்பளிக்கிறோம்.

நண்பர்களே,

கடல்வள துறையில் உள்ள சவால்களும் பரஸ்பர அக்கறையான அம்சங்களாக இருக்கின்றன. ஆனால், கடல்வள பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான  வாய்ப்புகளையும் நாம் பரிசீலனை செய்வோம். நமது பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை விரைவாக செயல்படுத்துவதில் நாம் கவனம் கொண்டிருக்கிறோம். நீர்வழி போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகள், கடல் கொள்ளை தடுப்பு, திறன் மேம்பாடு, பரிமாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு மருத்துவ ஒத்துழைப்பு போன்ற குறிப்பிட்ட சில துறைகள் முன்னுரிமை பெற்றவையாக உள்ளன. நமது பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதிலும் நாம் பங்களிப்பு செய்கிறோம். இந்தச் சூழ்நிலையில், கூட்டு பணிக் குழு விரைவில் கூடுவதற்கு நாங்கள் அறிவுறுத்தி இருக்கிறோம். சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, போதை மருந்து கடத்தலைத் தடுத்தல், போதை மருந்துகள், மனிதர்களை சட்டவிரோதமாக அழைத்துச் செல்வது மற்றும் பண மோசடி தடுப்பு போன்றவற்றில் அந்தக் கூட்டம் கவனம் செலுத்தும்.

நண்பர்களே,

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கென்ய சமுதாய மக்கள் நமக்கு இடையே வலுவான தொடர்புக்கு முக்கியமானவர்களாக இருக்கின்றனர். நமது வர்த்தகம், முதலீடுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களில் அவர்களையும் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அதிபர் கென்யட்டாவுடன் நான் கலந்துரையாடி இருக்கிறேன். கடந்த ஆண்டு நாங்கள் சந்தித்தபோது, எங்களுடைய முடிவுகள் அமல் செய்யப்படுவதை நேரடியாகவும், தொடர்ந்தும் மேற்பார்வை செய்வது என அதிபரும் நானும் ஒப்புக்கொண்டோம். அவை கவனமாகவும் சிறப்பாகவும் அமல் செய்யப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

மாண்புமிகு அதிபர் அவர்களே,

எங்கள் அழைப்பை ஏற்று, இங்கு வந்து குஜராத் மற்றும் டெல்லியில் எங்களை கவுரவப்படுத்தியதற்காக, இந்திய மக்கள் சார்பிலும், என் சார்பிலும்,  மீண்டும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

மிக்க நன்றி.

******