Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோகா-தஜெஹ் ரொ-ரொ பயணப்படகு சேவையை துவக்கி வைத்தபின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.

கோகா-தஜெஹ் ரொ-ரொ பயணப்படகு சேவையை துவக்கி வைத்தபின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.


எமதருமை சகோதர, சகோதரிகளே,

நண்பர்களே,

அறுவடை காலத்தில் விவசாயி அடையும் உணர்வைப் போல, கலைவடிவமான மண்பானையை செய்துமுடித்த பின் குயவன் பெறும் உணர்வைப் போல, அழகான தரைவிரிப்பை நெய்தபின் நெசவாளிக்கு கிடைக்கும் மகிழ்ச்சியான பெருமிதத்தைப் போலவே இப்போது நானும் உணர்கிறேன்.  1.25 பில்லியன் மக்களின் எண்ணங்கள், கனவுகள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக அறிந்துகொண்டவனாகவே இப்போது உங்களின் முன் நான் நிற்கிறேன்.

கடல் வழியாக கோகாவில் இருந்து தஹெஜ் வரையில் பயணிக்கும்போது, ஒவ்வொரு நொடியும் அப்பயணம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதைப் போலவும், வருங்காலத்திற்கான புதிய கதவுகளை திறப்பது போலவும் எனக்குத் தோன்றியது.  புதிய இந்தியாவை படைக்க நாம் கனவு கொண்டிருக்கும் சூழலில், இக்கதவைத் தாண்டியே நாம் அங்கு செல்ல வேண்டியிருக்கும்.  சர்தார் படேலில் இருந்து அண்ணல் அம்பேத்கர் வரையில் இம்மண்ணின் மக்கள் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து சிந்தித்திருக்கிறார்கள்.  இன்று அவர்களின் கனவில் ஒரு மைல்கல்லை நாம் எட்டியிருக்கிறோம்.

கோகாவில் இருந்து தஹெஜ் வரையில் செல்லும் இந்த பயணப்படகு சேவை, சவுராஷ்டிரத்தில் இருந்து தெற்கு குஜராத் வரை பல லட்சம் மக்களை இணைக்கும் அதே நேரத்தில், அவர்களை நெருக்கமாகவும் கொண்டுவரும்.

புதியதொரு சமூக, பொருளாதார முன்னேற்றத்தை இந்தப் படகு சேவை துவக்கிவைக்கும்.  புதிய  வேலைவாய்ப்புகளும் இளைஞர்களுக்கு கிடைக்கும்.  கடற்கரை படகுசவாரி மற்றும் கடற்கரை சுற்றுலாவில் இது ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும்.  வருங்காலத்தில் ஹஜிரா, பிபவாவோ, ஜஃப்ராபாத், டாமன் டையூ ஆகிய இடங்களையும் இந்த படகுச்சேவையுடன் நம்மால் இணைக்க முடியும்.

இந்த படகுச்சேவையை சூரத்தை தாண்டி ஹஜிரா வரை எடுத்துச் சென்று பின்னர் அங்கிருந்து மும்பை வரை கொண்டு செல்ல இருப்பதாகவும் அறிகிறேன்.  இதே போன்ற ஒரு சேவையை குச்சில் அமைக்க நீண்டநாட்களாக விவாதிக்கப்பட்டு, அதன்பொருட்டு நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.  மாநில அரசுக்கு என் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, அவர்கள் எடுக்கும் இம்மாதிரியான முயற்சிகள் அனைத்திற்கும் மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் இந்த முன்னெடுப்பு தஹெஜ் உள்ளிட்ட தெற்கு குஜராத் பகுதியின் முன்னேற்றத்தில் அரசு எவ்வளவு முனைப்பாக உள்ளது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.  தொழில்வளர்ச்சிக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் பாருச் பகுதி மட்டுமல்லாமல், தஹெஜ், ஹஜிரா போன்ற பகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறோம்.  இப்போது அங்கு நடைபெறும் ரயில் மற்றும் சாலை வசதி வேலைகளை முன்பெல்லாம் யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.  இதோடு பெட்ரோலியம் மற்றும் ரசாயனம் சார்ந்த முதலீடுகளும் அங்கே செய்யப்பட்டு வருகின்றன.

ஹஜிராவின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் முக்கியத்துவமளிக்கப்படுகிறது.  டில்லி-மும்பை தொழிற்பேட்டையின் மூலம் இப்பகுதிகளும் வருங்காலத்தில் பலனடையப் போகின்றன.  குஜராத்தின் கடல்சார் வளர்ச்சி நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.  ரொ-ரொ படகு சேவை பிற மாநிலங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது,

இது போன்ற திட்டங்களில் உள்ள சவால்களை இத்தனை ஆண்டுகளாக புரிந்து, விவாதித்து, தீர்வுகண்டு அந்த சவால்களை எல்லாம் மீறி செய்து முடித்திருக்கிறோம். எனவே இனிமேல் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்றால் இவ்வளவு காலம் எடுக்காது.  விரைவாகவே முடித்துவிடலாம்.  இதில் குஜராத்தின் பங்கு அளப்பரியது.

நண்பர்களே இன்று மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாகவே நீர் போக்குவரத்தை பொறுத்தவரை இந்தியா பிற நாடுகளுக்கு முன்னோடியாகவே திகழ்ந்துள்ளது.  நம் தொழில்நுட்பங்கள் பிற நாட்டினரின் தொழில்நுட்பங்களைவிட சிறந்தவை.  எனினும் அடிமைத்தனம் அதிகமிருந்த காலத்தில் நாம் நம் வரலாற்றில் இருந்து கற்பதை நிறுத்தி, அதை படிப்படியாக மறந்தும் விட்டோம் என்பது கசப்பான உண்மை.  புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பது குறைந்த அதே சமயம், நடைமுறையில் இருந்த தொழில்நுட்பங்களும் மறக்கடிக்கப்பட்டு வந்தது.  இல்லையென்றால் ஒரு காலத்தில் பல நாடுகளால் வியந்து பார்க்கப்பட்ட ஒரு நாட்டின் நீர் போக்குவரத்து சுதந்திரத்திற்குப் பின் இப்படி முற்றிலும் முடங்கி இருக்காது.

நண்பர்களே இப்போதும் கூட போக்குவரத்தைப் பொறுத்தவரை சாலைகளின் பங்கு 55%. ரயிலின் பங்கு 35%.  அதே நேரத்தில் இருப்பதிலேயே மலிவான நீர் போக்குவரத்தின் பங்கு வெறும் 5ல் இருந்து 6% மட்டுமே!  ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் நீர்போக்குவரத்தின் பங்கு ஏறத்தாழ 30%.  இது தான் நம் கண்முன் இருக்கும் நிதர்சனமும், சவாலும் ஆகும்.  இதை நாம் நிச்சயம் உறுதியுடன் கடக்க வேண்டும்.

நம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் போக்குவரத்தின் பங்கு 18% என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.  ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு பிற நாடுகளைவிட நம் நாட்டில் செலவு அதிகமாகிறது என்பதையே இது காட்டுகிறது.  இந்த போக்குவரத்து செலவினால்தான் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய பொருட்களின் விலை கூட அதிகமாக இருக்கிறது.  நீர் போக்குவரத்தை ஊக்குவிப்பதன்மூலம் போக்குவரத்து செலவை நம்மால் பாதியாக குறைக்க முடியும்.  அதற்கு தேவையான அத்தனை வளமும், வசதியும், திறனும் நம்மிடம் இருக்கிறது.

நம் கடற்கரைகளின் ஒட்டுமொத்த நீளம் 7500கிமீ.  நதிகள் உட்பட உள்நாட்டு நீர்போக்குவரத்தின் நீளம் 14500கிமீ. ஒருவகையில் இந்தியத்தாய் 21,000கிமீ நீள நீர்போக்குவரத்து வாய்ப்புகளை நமக்களித்து ஆசிர்வதித்திருக்கிறாள்.  இப்படியொரு வாய்ப்பை பயன்படுத்தாமல், எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாமல் இத்தனை ஆண்டுகளாக நாம் வீணடித்திருக்கிறோம். 

நம் நாட்டில் முதன்முறையாக துறைமுக விதிகள் நடைமுறைக்கு வந்தது 1995ல் தான் என்பதையறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.  1947ல் சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டின் துறைமுக விதிகள் 1995ல் தான் உருவாக்கப்படுகிறது என்றால் எவ்வளவு தாமதம் என்பதை எண்ணிப்பாருங்கள்.  அதற்கு முன்பு துறைமுகம் சார்ந்த பணிகள் எதுவும் தொலைநோக்குப் பார்வையோடு செய்யப்படவில்லை என்றாலும் துறைமுகங்கள் இயங்கிக்கொண்டுதான் இருந்தன. அதனால் நாட்டுக்கு பல கோடிகள் நட்டம் என்பதும் உண்மை. 

ஒரு டன் நிலக்கரியை ஒரு கிமீ தூரம் நீர்வழியாக கொண்டு செல்ல 20பைசாதான் செலவாகிறது.  அதே நேரம் ரயில் வழியாக கொண்டு சென்றால் 1.25 ரூபாய் ஆகிறது!  அதாவது 20 பைசா என்பது 1.25ரூ ஆகிவிடுகிறது.  ரயிலே இப்படி என்றால் சாலையில் கொண்டு சென்றால் எவ்வளவு ஆகும் என எண்ணிப் பாருங்கள்! இப்போது சொல்லுங்கள், நிலக்கரியை போக்குவரத்து செலவு குறைவான வழியில் கொண்டு செல்வதுதானே சிறந்த வழிமுறை? ஆனால் இன்றும் 90% நிலக்கரி ரயில் போக்குவரத்தின் மூலம்தான் கொண்டு செல்லப்படுகிறது.  பல்லாண்டுகளாக இருக்கும் இந்த சூழலை மாற்ற உறுதி பூண்டுள்ளோம்.  அது தொடர்பான பல முன்னெடுப்புகளையும் இந்த அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.  நண்பர்களே, நாம் ஒரு வீட்டை வாங்கும் போது, அந்த வீடு ஏனைய இடங்களில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அந்த வீட்டுக்கு போக்குவரத்து வசதிகள் எப்படி உள்ளது என்பதை எல்லாம் நாம் அலசுகிறோம் அல்லவா?  அதேபோல வியாபாரம் ஒன்றை துவங்குகிறோம் என்றாலும் அந்த இடத்திற்கு போக்குவரத்து வசதிகள் எப்படி உள்ளது, சரக்கை கொண்டுசெல்ல, கொண்டுவர போதுமான வசதிகள் உள்ளதா என்றெல்லாம் பார்ப்போம்.

பிறகு ஏன் நம் தொழிற்சாலைகளை கடலில் இருந்து தள்ளி அமைக்க வேண்டும்? மூலப்பொருட்களையும், தயாரான பொருட்களையும் கொண்டு செல்ல நீர்போக்குவரத்தை நம்பி இருக்கும் சூழலில், கடற்கரையை ஒட்டி தொழிற்சாலைகளை அமைப்பதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்? போக்குவரத்து செலவுகளை குறைப்பதோடு வணிகத்தையும் இதன்மூலம் எளிமைப்படுத்த முடியும்.

ஒரு தொழிற்சாலைக்கு தேவையான எல்லாமே நம் நாட்டுக்குள் இருக்கிறது எனும்போது அந்த மாதிரியான தொழிற்சாலைகளை நாட்டுக்குள் நாம் எங்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.  ஆனால் பிற நாட்டில் இருந்து மூலப்பொருள் வரவேண்டும் என்றாலோ, வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும் என்றாலே அப்படியான தொழிற்சாலைகளை நாம் கடற்கரையில் அமைப்பதே நல்லது.  இதன்மூலம் லாபமும் உயரும்.

நண்பர்களே, போக்குவரத்து துறையை பொறுத்தவரை நாளை வரும் பிரச்சினைகளுக்கான தீர்வை நாம் இன்றே செய்தாலும் அதுவே கூட தாமதம் தான்.  போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் ஒரு மேம்பாலம் கட்ட முடிவு செய்கிறோம் என்றால், அதை கட்டிமுடிப்பதற்குள் அந்தப் பகுதியில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவிடுகிறது.  இதுதான் நம் நாட்டின் நிலைமை.  அதனால்தான் சமகால சூழலையும், எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  நம் அரசைப் பொறுத்தவரை வளத்தை பெருக்க துறைமுகங்கள் அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறது.  வளம் நாட்டுக்குள் நுழையும் கதவுகளாக துறைமுகங்களே விளங்குகின்றன.  சாகர்மாலா போன்ற திட்டங்கள் அரசின் தொலைநோக்கை காட்டும் திட்டங்கள்.  2025, 2035 காலகட்டங்களின் தேவைகளை மனதில் வைத்தே அரசு இந்தத் திட்டத்தில் முனைப்பு காட்டுகிறது.  மேலும் இத்திட்டத்தின் கீழ் மேலும் 400 திட்டங்களில் அரசு முதலீடு செய்துள்ளது.  எல்லாமே சமகாலத்தில் இருந்து 2035 வரையிலான தேவைகளை மனதில் வைத்து முன்னெடுக்கப்படும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டங்களில் ஏறத்தாழ 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  சாகர்மாலா திட்டம் புதிய இந்தியாவில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கப் போகிறது.

நண்பர்களே, பிற நாடுகளுடன் கடல்தாண்டிய தொடர்பை பலப்படுத்த நமக்கு நவீனமான துறைமுகங்கள் அவசியம்.  நம் பொருளாதாரத்தை பொறுத்தவரை துறைமுகங்கள் நுரையீரல்களைப் போல செயல்படுகின்றன. துறைமுகங்கள் முடங்கினாலோ, முழுத்திறனுடன் இயங்கவில்லை என்றாலோ நம் வணிகமும் முடங்கிவிடும்.  நுரையீரலினால் உறிஞ்சப்படும் மூச்சுக்காற்றை எப்படி இதயத்தின் துணையுடன் உடல் எல்லா உறுப்புகளுக்கும் அனுப்புகிறதோ, அதேபோல ரயில்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, விமானப்போக்குவரத்து, நீர்போக்குவரத்து ஆகியவை துறைமுகங்களின் சேவையை நாடெங்கும் அனுப்புகின்றன.  ரத்தத்திற்கோ, மூச்சுக்காற்றுக்கோ பற்றாக்குறை ஏற்படும்போது  ஒட்டுமொத்த உடலும் பலவீனப்படும்.  அதேபோல சரியான போக்குவரத்து வசதிகள் இல்லையென்றால் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படும்.  எனவேதான் இந்த அரசு உட்கட்டமைப்பு, போக்குவரத்து ஆகிய இரு முக்கியமான துறைகளில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக துறைமுகத் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள் அனைத்தும் அரசின் கடும் முயற்சியை வெளிப்படுத்துவதாக உள்ளது.  துறைமுகங்களின் திறனில் பன்மடங்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதுதான்.  நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த துறைமுகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் பலவற்றின் நிலைமை மேம்பட்டுள்ளது.  கடற்கரை தொழில்கள் சார்ந்த திறன்வளர்ப்பிலும் அரசு அக்கறை காட்டிவருகிறது.

ஒரு கணக்கெடுப்பின்படி, சாகர்மாலா திட்டத்தினால் மட்டுமே ஏறத்தாழ ஒரு கோடி வேலைவாய்ப்புகள் நாடெங்கும் வருங்காலத்தில் உண்டாக வாய்ப்பிருக்கிறது.  இந்த தொலைநோக்கோடுதான் ஒட்டுமொத்த போக்குவரத்து துறையையும் நவீனமயமாக்க அரசு உழைத்துவருகிறது.

சமீபகாலமாக எல்லா இடங்களில் போக்குவரத்து நெரிசலை மக்கள் சந்திக்கிறார்கள்.  துறைமுகங்களும் கூட நெரிசலை சந்திக்கின்றன.  அதுமட்டுமல்லாமல் நெரிசலால் விலைவாசியும், காத்திருக்கும் காலமும் உயர்கிறது.  போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போது நம்மால் எந்த ஆக்கப்பூர்வமான வேலைகளிலும் ஈடுபட முடியாது.  காத்திருப்பது ஒன்றே கதி என இருப்போம்.  அதேபோல பெரிய கப்பல்கள் சரக்கு ஏற்றவும், இறக்கவும் காத்திருக்கும்போது அவற்றால் எந்தப் பயனும் இல்லை.  இதனால் பொருளாதாரமும் நெரிசலில் சிக்குகிறது.  எனவே துறைமுகங்களை நவீனமயமாக்கி இந்த நெரிசல்களை சரிசெய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.

சாகர்மாலா திட்டத்தினால் இன்னொரு பயனும் உண்டு. நீலப்பொருளாதாரம்தான் அது! முன்பெல்லாம் மக்கள் கடல் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்.  ஆனால் நாம் நீலப்பொருளாதாரத்தையும் பேசுகிறோம்.  நீலப்பொருளாதாரம் என்பது பொருளாதாரமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சந்திக்கும் இடம்.  கடல் பொருளாதாரத்தினால் லாபம் ஈட்டும் அதே நேரத்தில், கடலின் சுற்றுச்சூழலையும் காப்பதே நீலப் பொருளாதாரம். 

18, 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி நிலத்தில் நடந்தால், 21ஆம் நூற்றாண்டின் பொருளாதாரப்புரட்சி கடலில் நடக்க இருக்கிறது. அதுவும் நீலப் பொருளாதாரத்தின் வாயிலாக நடக்க இருக்கிறது.

நண்பர்களே, நம் சமகாலத் தேவைகளையும், சவால்களையும் கணக்கில் கொண்டால், கடல்சார் ஆற்றலை எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவு அதிகமாக நாம் பயன்படுத்த வேண்டும் என்பது புரியும்.  நீலப் பொருளாதாரத்தின் பயன்பாடுகள் புதிய இந்தியாவில் மிக முக்கியமான, அடிப்படையான பங்கு வகிக்கும்.

உணவுப் பாதுகாப்பையும் நீலப்பொருளாதாரம் உறுதி செய்யும்.  உதாரணத்திற்கு நம் மீனவ சகோதரர்கள் கடல் படுக்கைகளை உருவாக்கும்போது, அதில் வணிகம் செய்யத்தக்க விஷயங்களை சேர்த்தார்கள் என்றால் அவர்களின் கூடுதல் வருமானத்திற்கும் அது வழி செய்யும்.  அதேபோல புதிய இந்தியாவில் நீலப் பொருளாதாரம், நிலக்கரித்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் முக்கியமான பங்காற்றும்.

நண்பர்களே, இந்த அரசு நாட்டில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது.  கணக்கிடத்தக்க, வெளிப்படையான பணிச்சூழல்தான் அது.  இந்த கலாச்சாரத்தால் திட்டங்கள் விரைந்து முடிக்கப்படுகின்றன.  சாலைகள் இரண்டு மடங்கு வேகத்தில் நிர்மாணிக்கப்படுகின்றன.  ரயில்பாதைகள் இரண்டு மடங்கு வேகத்தில் போடப்படுகின்றன.

ஆளில்லா விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் உதவியின் மூலம் திட்டங்களை, அவை குறித்த நேரத்தில் நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கடவுச்சீட்டுகளை நீங்கள் விரைவாகப் பெறுவதற்கும், எரிவாயு சிலிண்டர்களை நீங்கள் விரைவாகப் பெறுவதற்கும், வருமான வரி மீதத்தை திரும்பப்பெற நீங்கள் பல மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லாத நிலை உருவாகியிருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு.  அரசின் பணியாற்றும் சூழலில் பெரிய மாற்றத்தை இந்த அரசு கொண்டு வந்திருப்பதுதான் எல்லாவற்றுக்கும் காரணம்.  ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் அவர்களின் உரிமைகள் சரியான முறையில் சென்று சேர்வதை இந்த பணிக்கலாசாரமும், தொழில்நுட்பங்களின் பயன்பாடும் உறுதி செய்கிறது.

நீங்கள் எதையெல்லாம் எனக்கு குஜராத்தில் கற்றுத்தந்தீர்களோ அந்த அனுபவமெல்லாம் எனக்கு டெல்லியில் பயன்பட்டது.  கோப்புகளை தோண்டி எடுப்பதும், முடங்கிக் கிடந்த திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதும் நடைபெற்று வருகிறது.  பிரகதி என்கிற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.  9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அதன்மூலம் முடக்கிவிடப்பட்டுள்ளது.  நாற்பது ஆண்டுகளாக முடங்கி இருந்த திட்டங்கள் கூட பிரகதியின் மூலம் வேகமாக நடைபெற துவங்கி இருக்கிறது. நேர்மையான பொருளாதாரத்தை நாட்டில் ஏற்படுத்துவதின் மூலம், நேர்மையான சமூக பொருளாதாரத்தை நாட்டில் கொண்டுவர அரசு முயற்சிக்கிறது.  செல்லாக்காசு நடவடிக்கையின் மூலம் தேங்கி இருந்த கருப்புப் பணம் வங்கிகளுக்கு வந்ததோடு, நாட்டை சுத்தம் செய்வதில் வெற்றி பெற முடியும் என்கிற நல்ல செய்தியும் மக்களிடம் சேர்ந்திருக்கிறது. 

அதேபோல GSTயின் மூலம் நாட்டுக்கு புது வகையான வணிக கலாச்சாரமும் கிடைத்துள்ளது.  முன்காலத்தில் மக்கள் லாரிகளில் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு மணிக்கணக்காக சோதனைச்சாவடிகளில் நிற்பார்கள்.  ஆனால் GST வந்தபின் சோதனைச்சாவடிகளுக்கு தேவையில்லாத நிலைமை உருவாகியுள்ளது.  இலக்கிற்கு செல்ல ஐந்து நாள் தேவைப்பட்டால் இப்போதெல்லாம் மூன்று நாட்களில் போய்விட முடிகிறது.  போக்குவரத்து செலவு குறைந்ததோடு, சோதனைச்சாவடிகளில் நடைபெற்ற பல்லாயிரம் கோடி ஊழலும் தடுக்கப்பட்டுள்ளது.  இப்போது சொல்லுங்கள்,  குத்தகைதாரர்கள் என்ற பெயரில் நாட்டை பல்லாண்டுகளாக சுரண்டியவர்கள் மோடியின் மீது கோபமாக இருப்பார்களா இல்லையா?  என்மேல் அவர்களுக்கு ஏமாற்றம் இருக்குமா இல்லையா?  அது முக்கியமா அல்லது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது முக்கியமா?  

இந்த புதிய வணிகக் கலாச்சாரத்தின் கீழ் அனைத்து வகையான வணிகங்களும் நேர்மையாக நடைபெறுவதோடு, லாபங்களும் நேர்மையான முறையில் ஈட்டப்படும் நிலைமை உருவாகியுள்ளது.  என் அனுபவத்தில் சொல்கிறேன், எந்த வணிகருமே நேர்மையற்ற முறையில் பணம் ஈட்ட விரும்புவதில்லை.  எனினும் சில விதிகளும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அவர்களின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.  அப்படியான நிலைமை இல்லாத சூழலை உருவாக்கவே முயற்சிக்கிறோம்.

GSTயில் இணையும் வணிகர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்வதை கண்முன் காண்கிறோம். GST அறிமுகம் செய்தபின் 27 லட்சம் மக்கள் வரி செலுத்துகிறவர்களாக மாறியிருக்கிறார்கள்.

புதிய வணிகக் கலாச்சாரத்தில் பங்கு கொண்டிருக்கும் சில வணிகர்களுக்கு தங்களின் பழைய வரலாறு தோண்டப்படுமோ என்கிற அச்சம் இருக்கிறது. நான் அவர்களிடம் உறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்.  நீங்கள் நாட்டின் வளர்ச்சியில் நேர்மையுடன் பங்குகொள்ளும் இச்சூழலில் உங்கள் பழைய வரலாற்றை தோண்டியெடுக்க எந்த அதிகாரியையும் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

நண்பர்களே பல புதிய மாற்றங்கள் மற்றும் துணிச்சலான முடிவுகளுக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் சீரான பாதைக்கு திரும்பியிருக்கிறது.  நிலக்கரி உற்பத்தி, மின்சாரம் மற்றும் இயற்கை வாயு உற்பத்தியின் சமீபத்திய கணக்கீடுகளைப் பார்த்தால் அவை அனைத்தும் உயர்ந்திருப்பது தெரியும்.  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் குவிந்துள்ளார்கள்.  இந்தியாவின் அந்நிய செலவாணி 30,000 கோடி ரூபாயில் இருந்து 40,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

பல நிபுணர்கள் நாட்டின் அடிப்படை பொருளாதாரம் பலமாக இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.  சீரமைப்பை பொறுத்தவரை பல முக்கிய முடிவுகளை நாம் எடுத்திருக்கிறோம்.  அது இன்னும் தொடரும்.  அதே நேரம் நாட்டின் பொருளாதார சூழலும் பாதுகாக்கப்படும்.  முதலீட்டைப் பெருக்குவதோடு, நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும் வகையில் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அனைத்து அமைப்புகளும் பரிணாம வளர்ச்சியடையும் காலம் இது.  உறுதிமொழிகளின் மூலம் வெற்றியை உணரும் காலம் இது.  புதிய இந்தியாவை படைப்போம் என்கிற உறுதியை நாம் அனைவரும் மனசார எடுக்கவேண்டும்.  அதை நாம் நனவாக்கவும் வேண்டும்.  இன்று புதிய இந்தியாவில் அங்கமாகும் வகையில் கோகா-தஹெஜ் படகு சேவை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மீண்டுமொருமுறை என் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, மக்கள் அனைவரும் கூடியவரை இந்த வசதியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியத் தாய் வாழ்க

இந்தியத் தாய் வாழ்க

இந்தியத் தாய் வாழ்க.

நன்றி.

***