Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோயம்புத்தூரில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரை.

கோயம்புத்தூரில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து  பிரதமர் ஆற்றிய உரை.


வணக்கம்,

தமிழ்நாட்டின் வர்த்தக மையமாகவும் தென் இந்தியாவின் ஜவுளித் தலைநகரமாகவும் விளங்கவும் கோயம்புத்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைத் திறந்து வைப்பதற்காக இங்கே உங்களுடன் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தச் சமயத்தில் மத்திய அரசு தற்போதுள்ள மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் அது தொடர்பான கட்டிடங்களை தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது. இந்த நடவடிக்கை எனது அரசின் கூட்டுறவு சமஷ்ட்டி கொள்கையில் உள்ள உறுதித் தன்மையை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசு விரைவாக செயல்பட்டு கல்லூரியைத் தொடங்கும் என நம்புகிறேன்.

ரூ. 580 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள ஈ.எஸ்.ஐ.சி. பயனாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரிய வரப் பிரசாதமாக அமையும். இந்த கல்லூரியில் உத்தேசிக்கப்பட்டுள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் 20 இடங்கள் ஈ.எஸ்.ஐ. திட்டங்களில் சேர்ந்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உயர் தர மருத்துவக் கல்லூரிக்கும் மாநிலத்தின் ஊழியர்கள் சிகிச்சைக்கும் முன் மாதிரியாக அமைக்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் தாராளமான மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதில் எனது அரசு உறுதியுடன் இருக்கிறது. 45 கோடிக்கும் அதிகமாக உள்ள அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு வழங்க பிரதம மந்திரி ஜீவன் ஜோதி காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி சுரக்ஷா, காப்பீட்டுத் திட்டம், அதல் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. இதை ஆர்.எஸ்.பி.ஒய். சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்துக்கும் கூடுதலாக அமைகின்றன. நவீன இந்தியாவை உருவாக்குகின்றவர்களாக உள்ளவர்களுக்கான இந்த உறுதி மொழி ஆரோக்கியமான தொழிலாளர், ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குகிறார்கள் என்ற உறுதியான நம்பிக்கை பிறந்ததாகும்.

அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் நலனுக்காக செயல்படும் ஈ.பி.எப்., ஈ.எஸ்.ஐ. திட்டங்களில் பெரிய சீர்திருத்தங்கள் தொடங்கியுள்ளன. ஈ.பி.எப். கணக்குகளை தங்களுடன் எடுத்துச் செல்வதற்கான யுனிவர்சல் கணக்கு எண் 6 கோடிக்கும் கூடுதலான தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ.எஸ்.ஐ. திட்டத்தின் மூலம் கூடுதல்வசதிகளையும் சேவைகளையும் வழங்கி அதன் தாக்கத்தை விரிவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஈ.எஸ்.ஐ. திட்டம் திறனுக்கு ஏற்ற பங்களிப்பு, தேவைக்கு ஏற்ற நன்மைகள் என்ற காந்தியக் கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை காரணமாக காப்பீடு செய்து கொண்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் அந்த நபரது ஊதியத்துக்கு ஏற்ற பங்களிப்பை செலுத்தினாலும் ஒரே சீரான பலன்களை பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதி தவிர ஈ.எஸ்.ஐ. திட்டம் நோய், உடல் ஊனம், தம்மைச் சார்ந்திருப்போர், குழந்தைப் பேறு காலம், வேலையின்மை சந்தர்ப்பங்களில் படிகளைப் பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்துகிறது. செலவினத்தில் வரம்பு முறை ஏதும் இல்லாத, எத்தனை முறை என்கிற வரம்பும் இல்லாத 30 முதல் 40 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான மருத்துவ செலவுகளைச் சந்திக்கும் இந்தத் தனித் தன்மைப் பண்பு ஈ.எஸ்.ஐ. சுகாதாரத் திட்டத்தை பல லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வரப் பிரசாதமாக மாற்றியுள்ளது.

நண்பர்களே, 1952 – ம் ஆண்டில் கான்பூர் மற்றும் தில்லி ஆகிய 2 மையங்களில் எளிமையாகத் தொடங்கிய ஈ.எஸ்.ஐ. திட்டம் இன்றைக்கு 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 830 மையங்களில் செயல்படுத்தப்படுகிறது. நாடெங்கிலும் உள்ள 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை இத் திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. 2 கோடி தொழிலாளர்களுக்கும் சுமார் 8 கோடி பயனாளிகளுக்கும் இத்திட்டம் பயனளித்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 85,000 வேலை வழங்குபவர்கள் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 28 லட்சம் பேர் காப்பீடு பெற்றுள்ளனர். கோயம்புத்தூரில் மற்றும் சுமார் 27,000 ஊழியர்கள் இத் திட்டத்தில் உள்ளனர். இத்திட்டம் தமிழ்நாட்டில் அனைத்து 31 மாவட்டங்களிலும் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் 10 ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனையை மாற்றிக் கொடுத்த பிறகு மாநில அரசின் கீழ் செயல்படும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் 8 ஆக உயரும். திருநெல்வேலியிலுள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை 50 படுக்கைகளிலிருந்து 100 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 210 ஈ.எஸ்.ஐ. மருந்தகங்களைக் கொண்ட கட்டமைப்பு வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. கோயம்புத்தூரில் மட்டும் இத்தகைய 50 மருந்தகங்கள் செயல்படுகின்றன.

நமது தேசிய நிர்மாணஸ்தர்களாக உள்ள நமது சகோதர சகோதரிகளின் நலனுக்கென எனது அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. ஈ.எஸ்.ஐ. திட்டத்தின் விரிவாக்கத்திற்கான அவசியம் கருதி நான் 2 – ம் தலைமுறை சீர்திருத்த அலுவல் பட்டியலை ஈ.எஸ்.ஐ.சி. 2.0 என்ற பெயரில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் புதுதில்லியில் இந்திய தொழிலாளர் நல மாநாடு நடைபெற்றபோது அறிவித்தேன்.

எஞ்சியுள்ள வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், மிசோராம், மணிப்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு ஈ.எஸ்.ஐ. திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31 – ந் தேதி முதல் தொழிற்சாலைகள், வர்த்தகப் பகுதிகளில் இருந்து மாவட்டம் முழுமைக்கும் ஈ.எஸ்.ஐ. திட்டத்தை விரிவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி முதல் இத் திட்டம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவை வழங்கல் முறைகளில் தரத்தை மேம்படுத்துவதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. இதன் அடிப்படையில் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் சேவை வழங்கும் தரத்தை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஈ.எஸ்.ஐ. பயனாளிகளின் மருத்துவ மின்னணு ஆவணங்களை ஆன்லைனில் கிடைக்கச் செய்வது, அவசரகால மருத்துவ உதவி தொலைபேசி சேவையை உருவாக்குவது, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு புறநோயாளி சேவைகளை உருவாக்குவது போன்றவை இதில் அடங்கும். தூய்மையை மேம்படுத்த இந்திரதனுஷ் இயக்கத்தின் 7 வண்ணங்களின் அடிப்படையில் வாரத்தின் 7 நாட்களில் 7 வண்ணப் படுக்கை விரிப்புகளை மாற்றிப் பயன்படுத்தப்படும். தடுப்பு முறை மருத்துவத்தில் தூய்மைக்கு முக்கிய இடம் உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தூய்மை கடைபிடிக்கப்படும் போது ஏழ்மை நிலையிலுள்ள குடும்பம் ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு ரூ. 7000 வரை சேமிக்கப்படுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தாய்சேய் பராமரிப்பு மருத்துவமனை தவிர 2 மாதிரி மருத்துவமனைகளைத் தத்தெடுக்க ஈ.எஸ்.ஐ.சி. தீர்மானித்துள்ளது, மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். தனது சேவைகளை முழுமைப்படுத்தும் வகையில் ஈ.எஸ்.ஐ.சி. பொதுத்துறை தனியார்துறை பங்களிப்புடன் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். புற்றுநோய் கண்டுபிடிப்பு, இதயநோய் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை, ஆகியவை தவிர ஈ.எஸ்.ஐ.சி. தனது அனைத்து மருந்தகங்களிலும் கட்டம் கட்டமாக ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே வசதிகள் ஆகியவற்றை பொதுத்துறை தனியார்துறை பங்களிப்பு மூலம் வழங்கவுள்ளது. அலோபதி சிகிச்சை தவிர ஈ.எஸ்.ஐ.சி. மருத்துவமனைகளில் கட்டம் கட்டமாக ஆயுஷ் சேவைகளும் வழங்கப்படவுள்ளன.

நண்பர்களே நாட்டின் தொழிலாளர் நலனில் பல்வேறு முன் உதாரணமான நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொண்டுள்ளது. 2014 செப்டம்பர் முதல் ஈ.பி.எப். ஓய்வூதியத்தை குறைந்த பட்சம் மாதம் ரூ. 1000 ஆக மாற்றி அமைத்துள்ளோம். ஈ.பி.எப். திட்டங்களில் சேர்ந்து பலன் பெறுவதற்கான ஊதிய வரம்பு ரூ. 6500 – ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கும் வேலை வழங்குவோருக்கும் ஈ.பி.எப். சேவைகள் குறித்து எளிதாகத் தெரிந்து கொள்ள ஈ.பி.எப்.ஓ கைபேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. போனஸ் பெறுவதற்கான தகுதி உச்சவரம்பு ரூ. 21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வழங்கப்படும் போனஸ் உச்சவரம்பு ரூ. 7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆட்சிமுறை என்ற நமது உறுதிப்பாட்டை மனதில் கொண்டு மத்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் எளிமையாக்கப்படுகின்றன. தற்போதுள்ள 44 சட்டங்கள் ஊதியம், தொழிலியல் தொடர்புகள், பத்திரம் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய 4 தொழிலாளர் நல சட்டங்களாக மாற்றப்படுகின்றன. இதனால் வர்த்தகம் புரிதலில் எளிமைத் தன்மை குறிப்படத்தக்க அளவு உயருகிறது, வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது. அதே சமயம் தொழிலாளர்களின் உண்மையான பாதுகாப்பும் உரிமைகளும் விட்டுக் கொடுக்கப்படவில்லை. இத்தகைய சீர்சிருத்தப் பாதைகளில் அனைவரின் உடன்பாட்டினையும் எட்டி விரிவான அக்கறையுள்ளோர் கலந்தாய்வுகள் மூலம் உருவாக்கி நாம் முன்னேறி வருகிறோம். ஆலோசனை வழங்குவதில் வேலை அளிப்போர், தொழிலாளர் பிரதிநிதிகள், மாநில அரசுகள் முக்கிய இடம் பெறுகின்றன.

வர்த்தகத்தை வெளிப்படையான அவ்வப்போது நடைபெறும் ஆய்வுகள் மூலம் நிர்வகிப்பது உள்ளிட்ட 16 தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பான ஆன்லைன் சேவைகளுக்கென ஷ்ரம் சுவிதா வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் வேலை அளிப்போருக்கு எல்.ஐ.என். எண் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி 8 தொழிலாளர் நல சட்டங்கள் தொடர்பான விவரங்களை ஒரே முறை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈ.எஸ்.ஐ.சி. மற்றும் ஈ.பி.எப்.ஓ. வழங்கும் சேவைகள் தொழிலியல் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் ஈ – பிஸ் (e-Biz) வலைதளத்துடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இதனால் வர்த்தகம் புரிதல் எளிமையாக்கப்பட்டு செயல் இனச் செலவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் கூடுதலான வசதிகளை வழங்கவும், திட்டங்களின் கீழ் வரும் பணியாளர்கள் வேலையளிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு சிறந்த விரிவாக்கப்பட்ட சேவைகளை வழங்கவும் புதிய ஈ.பி.எப்.ஓ., ஈ.எஸ்.ஐ.சி. சட்டங்கள் பிறப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஈ.எஸ்.ஐ.சி. சேவைகளை விரிவாக்குவது, இந்த மருத்துவக் கல்லூரியைப் போன்ற நிறுவனங்களை உருவாக்குவது ஆகிய நமது திட்டங்கள் மருத்துவக் கல்வி வசதிகளையும், மூன்றாம் நிலை சிறப்பு மருத்துவ வசதிகளையும் மேம்படுத்துவதற்கான பெரிய திட்டத்தின் பகுதிகளாகும்.

தற்போது மாநில, மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை உயர்த்தி மேம்படுத்தும் திட்டத்திற்கு நாம் ஒப்புதல் அளித்துள்ளோம். இதன் மூலம் 10,000 எம்பிபிஎஸ் இடங்களை புதிதாக ஏற்படுத்தி, மருத்துவக் கல்லூரிகளுக்கு கருவிகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கென நிதி வழங்கப்படும். இதுவரை 23 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,700 இடங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 345 எம்.பி.பி.எஸ். இடங்களைச் சேர்த்து மேம்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நோக்கத்திற்காக எய்ம்ஸ் போன்ற மருத்தவ நிறுவனங்களை நாடெங்கும் ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் இத்தகைய மருத்துவ நிறுவனம் ஒன்று அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் தீவிர ஆதரவுடன் இந்த நிறுவனம் விரைவில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்.

நண்பர்களே, நமது அரசியல் சட்டத்தின் தந்தை பாரத ரத்னா டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தொழிலாளர் நல சட்டங்களை உருவாக்குவதில் பாபாசாஹேப் ஆற்றியுள்ள மாபெரும் பங்கு பற்றி பலருக்கு தெரியாது. தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு அமைச்சகம் தில்லியில் சென்ற மாதம் டாக்டர் அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டு விழாகொண்டாடும் போது வெளியிடப்பட்ட ” டாக்டர் அம்பேத்கர் – தொழிலாளர் நலன் மற்றும் அதிகாரம் அளித்தல் – அவரது நெடுநோக்கை உண்மையாக்குவதற்கான முயற்சிகள் என்ற நூலை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தொழிலாளர் நலத்துக்கான டாக்டர் அம்பேத்கரின் நெடுநோக்கை உண்மையாக்கி நிலைநிறுத்த நாம் அனைவரும் ஒன்றாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ”

நண்பர்களே வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புத் திறன் இலக்குகள் தொழிற்துறை மேம்பாடு மற்றும் வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப் போகும் போதுதான் தொழில்துறையில் அமைதியும் நல்லிணக்கமும் அடையப்பெறும். நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவது நமது அனைவரின் பகிர்ந்து கொள்ளப்பட்ட நெடுநோக்கு ஆகும். இந்த வகையில் மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளிக்கிறேன்.

இந்தியாவின் தொழிலாளர் நலத்திற்காக மேலும் உழைக்கவும் இந்தியாவை அனைவருக்கும் சிறந்த பணியிடமாக மாற்றுவதற்கு உழைக்கவும் நான் ஊக்கம் பெற்றுள்ளேன்.

வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் செய்யவும், வாழவும் மிகச் சிறந்த இடமாக நமது நாட்டை மாற்றுவதில் நாமெல்லோரும் ஒன்றுபடுவோமாக.

ஜெய் ஹிந்த் !

*****