Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சத்தீஸ்கர் மாநிலத்தில் நயா ராய்ப்பூர் நவீன நகரின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்; நவீனமயமாக்கப்பட்ட பிலாய் உருக்காலையின் விரிவாக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நயா ராய்ப்பூர் நவீன நகரத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த நகரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் பிலாய் உருக்காலையின் 8-ஆவது பிரிவுக்கு சென்றார். அங்கு உருக்காலையின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமருக்கு விளக்கிக் கூறப்பட்டது. பிலாய் நகரின் சாலைகளில் இருமருங்கிலும் மக்கள் அணிவகுத்து நின்று பிரதமரை வாழ்த்தி வரவேற்றனர்.

அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட பிலாய் உருக்காலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிலாய் ஐஐடி-க்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். பாரத் நெட்-டின் 2-ஆவது கட்ட தொடக்கத்தைக் குறிக்கும் தகவல் பலகையை அவர் திறந்து வைத்தார். ஜக்தால்பூர் மற்றும் ராய்ப்பூர் இடையே விமான சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்கள், காசோலைகளை அவர் வழங்கினார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், அனைத்து விதமான வன்முறைக்கும் வளர்ச்சிதான் மிகச்சிறந்த விடை என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தேச நிர்மாணத்தில் பிலாய் உருக்காலை மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளது என்றும் அவர் கூறினார். புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதில் இந்த விரிவாக்கப்பட்ட நவீன உருக்காலை உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்ட இதர வளர்ச்சித்திட்டங்களும் மக்களுக்கு பெரும் பயன் அளிக்கும் என்று அவர் கூறினார்.

கடந்த 2 மாதங்களில் கிராம சுயராஜ்ய இயக்கம் ஆக்கப்பூர்வமான பயனை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த இயக்கம் 115 விருப்பமுள்ள மாவட்டங்களில் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது என்று கூறிய அவர், இதில் 12 மாவட்டங்கள் சத்தீஸ்கரில் உள்ளதாகத் தெரிவித்தார். ஜன்தன் யோஜனா, முத்ரா யோஜனா, உஜ்வாலா யோஜனா, பயிர்க் காப்பீட்டுத் திட்டம், சவுபாக்யா ஆகிய பலனளிக்கும் திட்டங்கள் பல இந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

பழங்குடியினரின் நலனைக் கருத்தில் கொண்டு வன உரிமைச் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். பழங்குடியினர் நலனுக்காக அரசு பாடுபட்டு வருகிறது என்று தெரிவித்த பிரதமர், நாடு முழுவதும் ஏகலவ்யா பள்ளிகள் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

***