Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“சந்திரசேகர் – கொள்கை சார்ந்த அரசியலின் கடைசி மனிதர்” நூல் வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரை


குடியரசு துணைத் தலைவர் அவர்களே; மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களே; குலாம்நபி அவர்களே; இன்றைய நிகழ்ச்சியில் கவனத்திற்குரிய திரு. ஹரிவன்ஷ் அவர்களே, சந்திரசேகர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களே, அவரது சிந்தனைகளை பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பர்களே. . .

 

அரசியல் களத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், இரண்டாண்டு காலம் கூட நீடித்திருப்பது மிகவும் சிரமம் என்பதுதான் இன்றைய காலகட்டம். மக்கள் மறந்துவிடுவார்கள். நண்பர்களும்கூட மறந்துவிடுவார்கள். இத்தகைய ஆளுமைகள் சிலநேரங்களில் வரலாற்றின் பக்கத்திலிருந்துகூட காணாமல் போய்விடுவார்கள்.

 

சந்திரசேகர் அவர்கள் மறைந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே உணர்வோடு இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பெரும் பணியில் ஈடுபட்டது மட்டுமின்றி, அதனை செயல்படுத்தியும் காட்டுகின்ற ஹர்வன்ஷ் அவர்களின் துணிவை நான் பாராட்ட விரும்புகிறேன். “துணிவு” என்ற சொல்லை நான் பயன்படுத்துவது ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் இத்தகைய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் விளையாட்டு என்பது மிகவும் தீவிரமாகியுள்ளது. ஹரிவன்ஷ் அவர்கள் பத்திரிகை உலகத்திலிருந்து வந்திருப்பவர். நடுநிலையான ஆளுமை கொண்டவர்.  மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருப்பவர். இருப்பினும், இந்த நூல் வெளியிட்ட பிறகு, அவருக்கு ஒரு குறிப்பிட்ட முத்திரை பதிந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

 

சந்திரசேகர் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பை நான் பெற்றதில்லை. 1977-ஆம் ஆண்டு ஒருமுறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.  ஒருசில நிகழ்வுகளை நான் பகிர்ந்து கொள்கிறேன். ஒருமுறை, நானும் பைரோன்சிங் ஷெகாவத் அவர்களும் கட்சிப் பணிக்காக சென்றபோது, தில்லி விமான நிலையத்தில் இருந்தோம். சந்திரசேகர் அவர்களும் தனிப்பட்ட வேலைக்காக சென்று கொண்டிருந்தார். தொலைதூரத்திலிருந்து சந்திரசேகர் அவர்கள் எங்களை நோக்கி வருவதைப் பார்த்தோம். அப்போது,  பைரோன்சிங் அவர்கள், என்னை அவரது பக்கத்தில் இழுத்து அவரின் சட்டைப் பையில் இருந்த எல்லாப் பொருட்களையும் எனது பைக்குள் திணித்தார். இவையெல்லாம் வெகுவேகமாக நடந்தது.  அந்தப் பொருட்களையெல்லாம் எனது பையில் திணிப்பதற்கான காரணத்தை அப்போது என்னால் கேட்க முடியவில்லை. சந்திரசேகர் அவர்கள் நெருங்கி வந்துவிட்டார். முதல் வேலையாக, சந்திரசேகர் அவர்கள் பைரோன்சிங் அவர்களின் பாக்கெட்டுகளில் தமது கைகளை விட்டு ஆராய்ந்தார். பிறகு நான் புரிந்து கொண்டேன். பைரோன்சிங் அவர்கள் பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். சந்திசேகர் அவர்கள் இதனை முற்றிலுமாக எதிர்த்தார். சந்திரசேகர் அவர்களை பைரோன்சிங் அவரகள் சந்திக்கும்போதெல்லாம் இந்தப் பொருட்களை எடுத்து, குப்பைக் கூடையில் போட்டுவிடுவது வழக்கம். இதனைத் தவிர்க்க பைரோன்சிங் அவர்கள் அவற்றை எனது சட்டைப் பைகளில் வைத்தார்.

 

ஒரு பக்கம் ஜன சங்கம், பாரதீய ஜனதா கட்சி, அதன் கொள்கை, மறுபக்கம் சந்திரசேகர் அவர்கள், அவரது கொள்கை. இருப்பினும் தனிப்பட்ட முறையிலான உணர்வுகளும் வெளிப்படைத் தன்மையும் இருந்தன. சந்திரசேகர் அவர்கள் எப்போதும் பைரோன்சிங் அவர்களின் உடல்நலம் குறித்து கவலை கொண்டார். இது, தன்னளவிலேயே மிகவும் மகத்தானது. தனிப்பட்ட முறையிலும், பொது நிலையிலும் அடல் அவர்களை சந்திசேகர் அவர்கள் ‘குருஜி’ என்றுதான் அழைப்பார். ஏதாவது ஒன்றை சொல்லும்போது, வீடாக இருந்தாலும்கூட, “குருஜி, அன்புகூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள்; நான் உங்களை விமர்சனம் செய்யப்போகிறேன்” என்று சொல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பழைய ஆவணங்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவரின் இத்தகைய மாண்புகளைக் காணலாம். இது, அவரின் பெருமையைப் பிரதிபலித்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரங்கள் பிராகாசித்தபோது, கிளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுக்க எந்த உந்துதல் இந்த மனிதருக்கு தூண்டுகோலாக அமைந்தது? அநேகமாக பாகி பலியாவின் மாண்புகள், பாகி பலியா பிறந்த மண் ஆகியவை அவருக்கு உந்துதலாக அமைந்திருக்கக்கூடும். நான் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறேன். அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஒன்று – ஜெய்பிரகாஷ் நாராயண் – பீகார் மற்றும் மகாத்மா காந்தி – குஜராத். சுதந்திரத்திற்குப்பிறகு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க முற்பட்டபோது, குஜராத்தி இல்லாத ஒருவரை, குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்தார். அதேபோன்று, ஜனநாயகத்திற்கான போரில் வென்ற பிறகு, பிரதமரை தேர்வு செய்ய முற்பட்டபோது, அவர், பிகாரிக்குப் பதிலாக குஜராத்தியைத் தேர்வு செய்தார்.

 

அதேநேரத்தில், ஒரு குழப்பமான நிலைமை இருந்தது. சந்திரசேகர் அவர்களையோ அல்லது மொரார்ஜி தேசாய் அவர்களையோ தேர்வு செய்திருக்க வேண்டும். சந்திரசேகர் அவர்களின் சக நண்பர்கள் சிலரில், நான் மோகன்தாரியா அவர்களுடனும் மற்றும் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் அவர்களுடனும் நல்ல தொடர்பில் இருந்தேன். அவர்களது வார்த்தைகள் சந்திரசேகர் அவர்களின் நடத்தை மற்றும் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தன. அவை, அவருக்கு முழுமையான அளவில், மரியாதை அளிக்கும் வகையில் இருந்தன. மேலும் பலர் இருக்கலாம், ஆனால், அவர்களிடம் எனக்கு தொடர்பில்லை.

 

சந்திரசேகர் அவர்கள் சில நாட்கள் உடல்நலன் குன்றியிருந்தார். அவரது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு வந்தது. அப்போது நான் குஜராத் முதலமைச்சராக இருந்தேன். அவர் சொன்னார் – “சகோதரரே, நீங்கள் எப்போது தில்லிக்கு வருவீர்கள்?” ‘என்ன விஷயம்’ என்று நான் அவரிடம் வினவினேன். அவர் சொன்னார் – “நீங்கள் எனது இல்லத்திற்கு வருவீர்களானால், நான் மகிழ்வடைவேன். நாம் சந்திப்போம். எனது உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், நானே வந்திருப்பேன்” நான் சொன்னேன் – “என்னை தாங்கள் நினைவில் கொண்டு அழைத்திருப்பதை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்” எனவே, நான் அவரை சந்திக்கச் சென்றேன். அவரது மோசமான உடல்நிலையிலும்கூட என்னிடம் அவர் நீண்டநேரம் பேசியதும், குஜராத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முனைந்ததும், எனக்கு வியப்பாக இருந்தது. அரசு அளவில் குஜராத்தில் என்ன நடந்தது என்பதை அறிய அவர் முற்பட்டார். ஆனால், நாட்டில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான தமது கருத்துக்களை அவர் முன்வைத்தார். அவர் சொன்னார் – “நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள், அவற்றிற்கு நீங்கள்தான் தீர்வு காண வேண்டும்” அவர் தனது அபரிதமான உணர்வை வெளிப்படுத்தினார். அவரோடு நிகழ்ந்த எனது கடைசி சந்திப்பாகும் இது. ஆனால் இன்றும், அவரது அழியாத உருவம், அவரது எண்ணங்களின் தூய்மை, பொதுமக்களுக்கான அவரது கடமை உணர்வு, ஜனநாயக அமைப்புகள் மீது அவருக்கு இருந்த பக்தி ஆகியவை அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் தென்பட்டன.

 

சந்திரசேகர் அவர்களைப் பற்றி, திரு. ஹரிவன்ஷ் எழுதிய நூல், அவரைப் பற்றி  நாம் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கும். ஆனால், இந்த நூலில் உள்ள ஏராளமான அம்சங்கள், அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பங்கள் குறித்து, நமக்கு தெரிவித்ததற்கு நேர்மாறாக உள்ளன. எனவே, ஒருவேளை சிலர் அதனை முன்னோட்டமாகக் கொண்டு ஆய்வு செய்யலாம். நம்நாட்டில் ஒரு நடைமுறை உள்ளது. மக்களில் சிலருக்கே, ஆய்வு செய்ய சில உரிமைகள் உள்ளன.

 

இன்று சாதாரண ஒரு தலைவரும் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை பாதயாத்திரை மேற்கொள்கிறார். தொலைக்காட்சிகள் அதனை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்கின்றன. இந்த செய்திகள், பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திகளாகின்றன. ஆனால், சந்திரசேகர் அவர்கள், தேர்தலை கவனத்தில் கொள்ளாமல், கிராமங்களையும், ஏழை விவசாயிகளையும் கவனத்தில் கொண்டு பாதயாத்திரை மேற்கொண்டார்.  ஆனால், நாடு அவருக்குத் தர வேண்டிய மரியாதையை அளிப்பதில் நாம் தவறிவிட்டோம். இது உண்மையிலேயே வருத்தமாகவும், துரதிர்ஷ்டவசமாகவும் உள்ளது.

 

இன்றும் அவரது கொள்கைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஜனநாயகத்தின் தனி அம்சமே இதுதான்.  ஆனால், வேண்டுமென்றே, திட்டமிட்ட சதியாக, சந்திரசேகர் அவர்களின் சுற்றுப்பயணம், நன்கொடைகள் வசூலிப்பதற்காகவும், தொழில் அதிபர்களிடம் பணத்தை வாங்குவதற்காகவும் அமைந்தது என்றும் இது ஊழல்தானே என்றும் வர்ணிக்கப்படுகிறது. பொதுவாழ்வில் இதுபோன்ற ஒட்டுமொத்த அநீதி நிகழ்ந்திருக்கிறது. இதுகுறித்து திரு. ஹரிவன்ஷ்  தனது நூலில் கருத்து தெரிவித்திருக்கிறாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை நான் மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்ய முயன்றேன்.

 

நம் நாட்டில் மேலும் ஒரு அம்சம் உள்ளது. இதுவரையில், நம் நாட்டு  பிரதமர்களின் மொத்த எண்ணிக்கை குறித்து, புதிய தலைமுறையினரிடம் கேட்டால், அநேகமாக யாருக்கும் அது பற்றி தெரியவில்லை. யாரெல்லாம் பிரதமராக இருந்தார்கள்? என்பது குறித்து, ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவர்களை மறக்கடிக்கச் செய்துவிட்டனர். இந்தச் சூழலில், திரு ஹரிவன்ஷ், நீங்கள் தைரியமான ஒரு பணியை செய்திருக்கிறீர்கள்! நான் உங்களைப் பாராட்டுகிறேன். ஒவ்வொருவரும், இதில் பங்கேற்றுக் கொள்ளலாம். ஆனால், என்னை மன்னியுங்கள், பாபா சாகேப் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் குறித்து எதிர்மறையான கருத்தை ஒரு குழுவினர் உருவாக்க முயற்சி எடுத்துள்ளனர். – அவர்கள் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளவில்லை.

 

லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால், அந்தக் குழுவினரும் இதேபோன்ற கருத்தை தெரிவித்திருப்பார்கள். லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் வீர மரணம் பெரிதாக கருதப்பட்டதால், இந்த சர்ச்சையிலிருந்து விடுபட்டு விட்டார்.

 

இந்த விவாதங்களுக்குப் பிறகு, மொரார்ஜி பாய் அவர்கள் குடிகாரர்,   அல்லது, ஒரு பிரதமர் கூட்டம் முழுவதும் தூங்கி வழிந்தார், அல்லது, ஒரு பிரதமரை பின்னால் இருந்து குத்தி விட்டனர் என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற தலைப்புகள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகின்றன. இதனால், உலக மக்கள் அவர்களை மறந்து விடுகின்றனர்.

 

ஆனால், உங்களது ஆசிகளுடன், அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கான அதிநவீன அருங்காட்சியகம் ஒன்றை தில்லியில் அமைக்க நான் முடிவு செய்துள்ளேன். முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இதுதொடர்பான தகவல்களை ஒருங்கிணைத்து தயாராக வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான். எதிர்கால சந்ததியினர் அவர்களைக் குறித்து தெரிந்து கொள்ள முடியும். சந்திரசேகர் அவர்கள், நமது பிரதமராக இருந்தார். அவரது படைப்புகள், தனிச்சிறப்புகள் மற்றும் சரண் சிங் அவர்கள், திரு. தேவே கவுடா, ஐ.கே. குஜ்ரால் அவர்கள், டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோரின் படைப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.

 

நம் நாட்டிலேயே நமக்கு  புதிய அரசியல் கலாச்சாரம் தேவைப்படுகிறது. அதற்காக நாம் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சந்திரசேகர் அவர்களை சரியாக முன்நிறுத்தினால், அவர் இன்றும் மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்க முடியும். இன்றும் அவரது எண்ணங்கள் இளைஞர்களின் உள்ளத்தில் ஜனநாயக மாண்புகளை விதைக்க முடியும். ஜனநாயகத்திற்கு மாறான எதனையும் மேற்கொள்ளத் தேவையில்லை.

 

பிரதமர் பதவியிலிருந்து  அவர் எப்போது விலக முடிவு செய்தார் என்பதை நான் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒரு காவலர் தில்லியில், ஒரு பதற்றத்தை உருவாக்கினார். காவலர் ஒருவரின் இந்த சர்ச்சையால் அரசு கவிழும் என்று உலகம் தெரிந்து கொண்டது.

 

அன்று நான் நாக்பூரில் இருந்தேன். அடல் அவர்கள் மற்றும் அத்வானி  பற்றிய ஒரு நிகழ்வு நடைபெற்றது. ஆனால் அது பற்றிய தகவல் எனக்கு தாமதமாகக் கிடைத்தது. நான் அங்கு முன்கூட்டியே சென்று விட்டேன். அங்கு எனது இடத்தில், சந்திரசேகர் அவர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.- அவர் என்னிடம் கேட்டார்     “குருஜி எங்கே இருக்கிறார்,?” நான் சொன்னேன் – “அவரது விமானம் இன்னும் வந்து சேரவில்லை அநேகமாக ஒரு மணி நேரம் ஆகலாம்.” – அவர் சொன்னார் – “நான் காத்திருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவரிடம்  நான் பேச விரும்புகிறேன். நான் ராஜினமா செய்ய முடிவு செய்துவிட்டதாக அவரிடம் சொல்லுங்கள். ஆனால், நான் அவரிடம் பேச வேண்டும்”. அதே நேரத்தில், அடல் அவர்களும், நாக்பூருக்கு வரவேண்டும். ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நான் அங்கு சென்றேன். ஆனால், சந்திரசேகர், தனது இறுதி முடிவுக்கு முன், குருஜி என்று தான் அழைக்கும் அடல் அவர்களிடம் பேச பிரயத்தனப்பட்டார்.

 

இதுபோன்ற பல குணாதிசயங்கள் அவரிடம் இருந்தன. நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசேகர் அவர்கள், 40 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய அதே இடத்திலிருந்து, அவரை நாம் நினைவில் நிறுத்தி வருகிறோம். நாட்டு நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட, சலுகைகள் பறிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காக அவர் பாடுபட்டார். அவரிடமிருந்து உந்துதலைப் பெற்று, நாட்டின் சாமானிய மக்களுக்கு நாம் ஏதாவது செய்யும் தொண்டுதான் அவருக்கு நாம் உண்மையில் செய்ய வேண்டிய புகழஞ்சலியாகும்.

 

மீண்டும் திரு. ஹரிவன்ஷ் அவர்களுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொண்டு, எனது உரையை முடிக்கிறேன்.

நன்றி!