Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சபஹார் துறைமுகத்துடனான தொடர்பு குறித்து பிரதம மந்திரியின் குறிப்புகள்

சபஹார் துறைமுகத்துடனான தொடர்பு குறித்து பிரதம மந்திரியின் குறிப்புகள்


இஸ்லாமிய ஈரான் குடியரசு அதிபர் மேன்மைமிகு டாக்டர் ரவுஹானி அவர்களே,

ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் டாக்டர் அஷ்ரஃப் கனி அவர்களே,

மாண்புமிகு அமைச்சர்களே,

பெரியோர்களே, தாய்மார்களே,

புகழ்பெற்ற பாரசீக கவிஞர் ஹஃபீஸ் ஒரு முறை குறிப்பிட்டார்:

“பிரிவினை நாட்கள் கடந்துவிட்டன, காத்திருந்த இரவுகள் முடிவுக்கு வருகின்றன. நமது நட்பு என்றும் நீடிக்கும்” என்பது அந்த வரிகள்.

இன்று வரலாறு படைக்கப்படுகிறது. அதன் பார்வையாளர்களாக நாம் இருக்கிறோம். இது நமது மூன்று நாடுகளில் மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் நடைபெறுகிறது. உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதே மனிதகுலத்தின் அடிப்படைத் தாகம். அந்த உறவுகளை இணைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தமைக்காக மேன்மைமிகு ரவுஹானி அவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம். அதிபர் திரு. அஷ்ரஃப் கனி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெருமைக்குரியது. மேன்மைமிகு ரவுஹானி அவர்களுடனும் அதிபர் கனி அவர்களுடனும் பல்வேறு அம்சங்கள் குறித்து நான் விரிவாக விவாதித்தேன். பொருளாதார விஷயங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இதில் மூவரும் ஒரே நோக்கத்தைக் கொண்டுள்ளோம். அமைதிக்கான மார்க்கத்தை வகுப்பது வளம் நோக்கிச் செல்வது என்பதற்கான புதிய பாதைகளை வகுப்பதே எங்களின் பொதுவான லட்சியம். உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கிடையே உறவை மேம்படுத்திக் கொள்வதற்கும் முன்னுரிமை அளிக்கிறோம். இந்த மண்டலத்தில் இது புதிய உதயமாகும்.

மேன்மை மிக்கவர்களே,

நமது தொன்மையான உறவுகளின் வளம் குறித்தும் எதார்த்த நிலை குறித்தும் ஈரானும் ஆப்கானிஸ்தானும் இந்தியாவும் முழுமையாக உணர்ந்துள்ளன. பல நூற்றாண்டுகளாக கலை, கலாச்சாரம், சிந்தனைகள் மற்றும் அறிவாற்றல், மொழி மற்றும் பாரம்பரியம் ஆகியவை நம்மிடையே பொதுவான இணைப்பாக உள்ளது. வரலாற்றின் கொந்தளிப்பான காலக் கட்டங்களிலும் கூட நமது சமுதாயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பை இழந்ததில்லை. இன்று நாம் நமது தொடர்புகளில் புதிய அத்தியாயம் படைப்பதற்காக கூடியிருக்கிறோம்.

மேன்மை மிக்கவர்களே,

போக்குவரத்து, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மார்க்கத்தை ஏற்படுத்துவதற்காக சற்று நேரத்துக்கு முன் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தம் இந்த மண்டலத்தின் வரலாற்றுப் போக்கை மாற்றக் கூடியது. இந்த மண்டலத்தில் தங்கு தடையற்ற வர்த்தகம் நடை பெறுவதை அது ஊக்குவிக்கும். நமது மூன்று நாடுகளுக்குமிடையிலான சங்கமத்துக்கு அது அடிகோலும். முதலீடும் தொழில்நுட்பமும் தாராளமாக வருவதன் மூலம் சாபஹாரில் புதிய தொழில் கட்டமைப்பு உருவாகும். எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட உரம் தயாரிப்பு, பெட்ரோலிய ரசாயனத் தொழில், மருந்து உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அடங்கும். இந்த தொழில் குழும மார்க்கத்துக்கு பிரதான பாதையாக ஈரானின் சாபஹார் துறைமுகமாக அமையும். ஓமன் வளைகுடாவின் முகத்துவாரத்தில் இந்தத் துறைமுகம் அமைந்திருப்பதால் அது நீண்டகாலத் திட்டத்துக்கு உதவிகரமாக இருக்கும். உலகின் இதரப் பகுதிகளுடன் ஆப்கானிஸ்தான் வர்த்தக மேற்கொள்ள இது சுமுகமான, திறம்பட்ட மார்க்கமாக அமையும். இந்த ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் பொருளாதாரப் பலன் நம் மூன்று நாடுகளுக்கு அப்பாலும். மத்திய ஆசிய நாடுகளுக்கும் விரிவடையும். சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து மார்க்கத்துடன் இணைக்கப்படும்போது ஒருபுறம் தெற்காசியாவையும் மறுபுறம் ஐரோப்பாவையும் இணைப்பதாக அது இருக்கும். பாரம்பரியமான கடல் மார்க்கத்துடன் ஒப்பிட்டால் இந்த புதிய மார்க்கம் மூலம் ஐரோப்பாவுக்கும் சரக்குப் போக்குவரத்தில் 50 சதவீத நேரமும் செலவும் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இந்தியா பெற்றுள்ள வலுவான கடல் மற்றும் நில மார்க்கத்துடன் காலப் போக்கில் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மேன்மை மிக்கவர்களே,

21 – ம் நூற்றாண்டு பிரத்யேக வாய்ப்புகளையும் தருகிறது. அதே சமயம் பல சவால்களையும் அது முன் வைக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் உலகளாவிய உறவு என்பது கடந்த நூற்றாண்டை ஒட்டியதாக அல்லாமல் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இன்றைய உலகின் தாரக மந்திரம் நம்பிக்கையேயன்றி சந்தேகமல்ல, ஒத்துழைப்பே அன்றி ஆதிக்கம் அல்ல, உள்ளடக்கமே தவிர வெளியேற்றுவதல்ல. சபஹார் ஒப்பந்தத்தின் அடிப்படை உணர்வாகவும் வழிகாட்டுதலாகவும் அது உள்ளது. இந்த தொழில் மார்க்கம் அமைதிக்கும் வளத்துக்கும் நமது மக்களை இட்டுச் செல்லும். பொருளாதார வளர்ச்சி, அதிகாரப்படுத்துதல் என்ற நோக்கங்களே அதன் உந்து சக்தியாக இருக்கும். மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் நமது பாதுகாப்பை அது நிர்மாணிக்கும். நமது நாடுகளிடையே உள்ள தடைகளை உடைத்து மக்களிடையே உறவை ஏற்படுத்த ஊக்குவிக்கும் புதிய சாதனமாக அது அமையும். நாம் விரும்பும் நமக்கு பொருத்தமானதோ நட்புறவுடன் கூடிய அண்டை அயலார்களை உருவாக்குவதற்கு அது உதவும்.

மேன்மை மிக்கவர்களே,

நம்மைச் சுற்றியுள்ள உலகம் அடிப்படை மாற்றங்களைக் கண்டு வருகிறது. நம்மிடையே நெருக்கமான பிணைப்பு ஏற்படாதது மட்டுமே தேசிய வளர்ச்சிக்கு குந்தகமானது என்று கூறமுடியாது. மேற்காசியாவில் அரசியல் கொந்தளிப்புகளும் உள் நீரோட்டங்களும் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படுத்தி பரவி வருகிறது. இந்திய பசிபிக் பகுதியில் தலைதூக்கியுள்ள அரசியல் போட்டிகளும் பொருளாதார வாய்ப்புகளும் தற்போதைய ஆசியாவின் முறைமை களில் நிர்பந்தங்களை ஏற்படுத்துகிறது. உலகப் பொருளாதாரம் ஸ்திரமற்ற பலவீனமான நிலையிலிருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை. தீவிரவாதக் கருத்துகள், பயங்கரவாத நடவடிக்கைகள் பரவி வருவதால் நமது வளர்ச்சியும் எதிர்கால வளமும் அபாயத்துக்கு உள்ளாகி உள்ளன. இந்த நிலப்பரப்பில் நமது மூன்று நாடுகளும் அளப்பரிய இளைஞர் சக்தியைக் கொண்டதாக விளங்குகின்றன. நமது மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். நமது நாடுகள் மற்றும் மண்டலத்தின் வளர்ச்சிக்கான சொத்து அவர்கள். அந்த இளைஞர் சக்தி அறிவாற்றலிலும் திறனிலும் நடைபோட வேண்டும், தொழில்களிலும் தொழில் முனைவிலும் முன்னேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். துப்பாக்கி மற்றும் வன்முறைப் பாதைக்கு அவர்கள் பலியாகி விடக்கூடாது என்பதும் எங்கள் விருப்பம். இந்த சாபஹார் ஒப்பந்தம் வர்த்தகத்தை விரிவுபடுத்தும், முதலீட்டை ஈர்க்கும், கட்டமைப்பை நிர்மாணிக்கும், தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்பாவிகளைக் கொலை செய்வது, ஊமைகளாக்குவது என்ற குறிக்கோளுடன் செயல்படும் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்த ஒப்பந்தம் பரஸ்பரம் உதவி, அவர்கள் கரத்தை வலுப்படுத்தும். அதன் வெற்றி அமைதிக்கான, இந்த மண்டலத்தின் ஸ்திரத்தன்மைக்கான வாக்காக அமையும்.

மேன்மை மிக்கவர்களே!

வர்த்தகமும் போக்குவரத்து, மற்றும் சரக்குகள் போக்குவரத்து மார்க்கம் விரிவான இணைப்பு நோக்கிய பயணத்துக்கு தொடக்கப் புள்ளியாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனது பார்வையில், ஈரான் – ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் இணைப்புக்கான செயல் திட்டம்,

• கலாச்சாரத்திலிருந்து வர்த்தகத்துக்கு

• பாரம்பரியத்திலிருந்து தொழில் நுட்பத்துக்கு

• முதலீட்டிலிருந்து தகவல் தொழில்நுட்பத்துக்கு

• வேலைகளிலிருந்து உத்திக்கு

• மக்களிலிருந்து அரசியலுக்கு

விரிவடைய வேண்டும்.

ஒருவகையில்,

• நெருக்கமான தொடர்பை நடைமுறைப்படுத்தவும்

• அமைதியை நிலைநாட்டி ஸ்திரத் தன்மையை உருவாக்கவும்

• பொருளாதார வளத்தை ஏற்படுத்தி புதிய வர்த்தக உறவுகளை உருவாக்கவும்

• தீவிரவாதத்துக்கு முடிவுகட்டி பயங்கரவாத அச்சுறுத்தலைப் போக்கிடவும்

• தடைகளைத் தளர்த்து மக்களிடையே இணக்கமான உறவை ஏற்படுத்தவும்

சூளுரையாக அமையட்டும்.

இந்த அற்புதமான முயற்சியை வரலாறு அதிசயத்துடன் திரும்பிப் பார்த்து தனது அங்கீகாரத்தை வழங்கும்

இந்த முயற்சிக்கு வழிகாட்டுதலாக விளங்கும் மேன்மைமிகு ரவுஹானி மற்றும் கனி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

அனைவருக்கும் நன்றி.