Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராஞ்சியில் பிரதமர் தலைமையில் பிரம்மாண்டமான யோகா செயல்முறை நிகழ்ச்சி


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (21.06.2019) ராஞ்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான யோகா செயல்முறை நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

யோகா செயல்முறை துவங்குவதற்கு சற்று முன்னதாக இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “அமைதிக்கு, நல்லிணக்கத்திற்கு, முன்னேற்றத்திற்கு யோகா என்பது நமது பொன்மொழியாகட்டும்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், யோகா பற்றிய தகவல்களைப் பரவலாக கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றிய ஊடகவியலாளர்களையும், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களையும் பாராட்டினார்.

நவீன யோகா பற்றிய தகவல்களை நகரங்களிலிருந்து கிராமங்களுக்கும், ஏழை மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களின் இல்லங்களுக்கும் தான் கொண்டு சேர்க்க விரும்புவதாக பிரதமர் தெரிவித்தார். ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக யோகா மாற வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், ஏனென்றால் அவர்கள்தான் பெரும்பாலும் நோய் தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

தற்போது மாறி வரும் காலத்தில், நோய் தடுப்பு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உடல் நலத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். யோகா நமக்கு வலிமையைத் தரும் என்று தெரிவித்த அவர், இதுதான் யோகா மற்றும் பண்டைக்கால இந்திய தத்துவம் அளிக்கும் உத்வேகம் என்றார்.

யோகா என்பது வெறுமனே, தரையிலோ அல்லது பாயில் அமர்ந்தோ செய்யும் உடற்பயிற்சிகளால் எட்டப்படுவதில்லை என்ற அவர், யோகா ஒழுக்கத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கிறது என்றும், நமது வாழ்க்கை முழுக்க இதனைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

வயது, நிறம், ஜாதி, இனம், கருத்து, பிரிவு, பணக்காரர் அல்லது ஏழை, மாநிலம், எல்லைப்பகுதி போன்ற அனைத்தையும் கடந்தது யோகா என்றும், இது ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்றும் பிரதமர் உரைத்தார்.

இன்று வரவேற்பு அறைகளிலிருந்து நிர்வாகக் குழு அறைகள் வரை, பூங்காக்களிலிருந்து விளையாட்டு வளாகங்கள் வரை, வீதிகளிலிருந்து உடல்நல மையங்கள் வரை, யோகா, மக்களின் கற்பனையில் பரந்து விரிந்துள்ளது என்று அவர் கூறினார்.

யோகா, பாரம்பரியமானது மற்றும் நவீனமயமானது என்றும், இது நிலையானதும், பரிமாண வளர்ச்சியை அடைந்து வருவதுமாகும் என்றும் திரு. நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.

நூற்றாண்டுகளாக யோகாவின் உட்பொருள் ஒன்றுதான்: ஆரோக்கியமான உடல், நிலையான மனம், ஒன்றுபட்ட உணர்வு, இவைதான் என்று பிரதமர் கூறினார். அறிவு, பணி, ஈடுபாடு ஆகியவற்றின் கச்சிதமான கலவைதான் யோகா என்று அவர் தெரிவித்தார்.

உலகம் யோகாவை கடைபிடிக்கும் போது, இது தொடர்பான ஆய்வுக்கு நாம் அழுத்தம் தர வேண்டும் என்று கூறிய பிரதமர், மருத்துவம், உடற்பயிற்சி மருத்துவம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளுடன் யோகாவை நாம் இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.