பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, சுவீடன் நாட்டின் பட்டத்து இளவரசி விக்டோரியா மற்றும் சுவீடன் பிரதமர் திரு.உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோருடன் இணைந்து 2026, மே 17 அன்று சுவீடனின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் திரு மோடி, இந்தியாவும் சுவீடனும் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய பொதுவான விழுமியங்களால் பிணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இந்த பொதுவான கொள்கைகளே இரு நாடுகளுக்கும் இடையே ஒரு லட்சியமான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட பொருளாதாரக் கூட்டுறவுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன என்றும் அவர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய சூழலில் இந்தியா – சுவீடன் இடையிலான உறவு என்பது வெறும் பொருளாதார ரீதியிலானது மட்டுமல்ல, அது புதிய யோசனைகள், தொழில்நுட்பங்கள், புதுமைகள் மற்றும் இணைந்து உருவாக்குவதற்கான ஒரு பலமான கூட்டுறவாகும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாக சுவீடன் நிறுவனங்கள் வழங்கி வரும் பங்களிப்பை வரவேற்ற பிரதமர் திரு மோடி, ஆராய்ச்சி, புதுமை, பசுமை மாற்றம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இரு நாடுகளும் தங்களது கூட்டுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள், பலமான உள்நாட்டுத் தேவை, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு, உற்பத்தித் துறையின் விரிவாக்கம் மற்றும் அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் மிக அதிவேகமாக மாறி வருவதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, மேக் இன் இந்தியா, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் , மற்றும் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம் போன்ற இந்தியாவின் முக்கியத் திட்டங்களின் கீழ் முதலீடு செய்யுமாறு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், தூய்மையான எரிசக்தி, பாதுகாப்புத் துறை, செமிகண்டக்டர்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறை ஆகிய துறைகளில் விரிவடைந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவில் தங்களது பங்களிப்பை அதிகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, தடையற்ற விநியோகச் சங்கிலி , பசுமை மாற்றம், நிலையான போக்குவரத்து, உயிர் அறிவியல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 21-ம் நூற்றாண்டின் சவால்களுக்குத் தேவையான தீர்வுகளை இணைந்து உருவாக்குவதற்கு, புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியில் சுவீடனுக்கு இருக்கும் பலத்தையும், இந்தியாவின் பிரம்மாண்ட சந்தை, திறமையான மனிதவளம் மற்றும் வளர்ச்சி வேகத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் திரு.மோடி உறுதியாக எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2262092)
SS/VR/SH
Prime Minister Ulf Kristersson and I met business leaders of Sweden in Gothenburg last evening. Her Royal Highness Crown Princess Victoria also took part in this interaction. We had wide ranging conversations with the business leaders on how economic linkages between India and… pic.twitter.com/pOzRAD4Yys
— Narendra Modi (@narendramodi) May 18, 2026