பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30.01.2019) சூரத்துக்கு வருகை தந்தார். சூரத் விமான நிலைய முனையக் கட்டிட விரிவாக்கத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, சூரத்திலும் தெற்கு குஜராத் மண்டலத்திலும் விமான இணைப்பு விரிவாக்கப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், எளிதாக வர்த்தகம் புரிவதற்கு நாட்டின் அடிப்படை வசதிகள் மேம்பட வேண்டும் என்றும், சூரத் விமான நிலைய விரிவாக்கம் இந்த வகையில் எடுக்கப்பட்ட முயற்சி என்றும் கூறினார். சூரத் விமான நிலைய முனையக் கட்டிடம் ரூ.354 கோடி செலவில் 25,500 சதுரமீட்டர் பரப்பளவுக்கு விரிவாக்கப்படுகிறது. இந்தக் கட்டிடம் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருக்கும். இதில் சூரிய சக்தி மின்சாரம் மற்றும் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்படும். புதிய முனைய கட்டிடப் பணிகள் நிறைவடையும்போது, இந்த முனையம் தற்போதுள்ள ஆண்டுக்கு 6 லட்சம் பயணிகள் என்பதைப் போல, ஆறரை மடங்கு உயர்ந்து 26 லட்சம் பயணிகளை கையாளும் திறன் பெற்றதாக இருக்கும். ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமான சேவை விரைவில் சூரத்தையும், ஷார்ஜாவையும் இணைக்கும் என்று பிரதமர் கூறினார். தொடக்கத்தில் வாரம் இரண்டுமுறை இயக்கப்படும் இந்த விமான சேவை பின்னர் வாரம் நான்குமுறை என உயர்த்தப்படும்.
உடான் திட்டத்தின்கீழ் விமானப் போக்குவரத்தை விரிவாக்க மேலும் அதிக எண்ணிக்கையில் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். மக்கள் தங்கள் இடங்களிலிருந்து நீண்ட தூரம் செல்லாமலேயே விமான சேவையைப் பயன்படுத்தலாம் என்றார் அவர். “விமானப் பயணத்தை அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்ற விரும்புகிறோம். இந்தியாவில் விமானப் போக்குவரத்தை விரிவாக்க உடான் திட்டம் பெரிதும் உதவுகிறது. இந்தத் திட்டம் இந்தியாவின் விமான வரைபடத்தில் 40 விமான நிலையங்களை சேர்த்துள்ளது. இத்தகைய விமான நிலையங்களை நாடெங்கும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது” என்று பிரதமர் கூறினார்.
அரசு மேற்கொண்டுள்ள மேம்பாட்டுப் பணிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், மொத்த பெரும்பான்மையுள்ள அரசு தைரியமான முடிவுகளை எடுக்க இயலும் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்கு சுயேட்சையாக செயல்பட முடியும் என்றும் கூறினார். “எங்களுக்கு நீங்கள் பெரும்பான்மையை அளித்துள்ள காரணத்தால் நாங்கள் கடுமையான முடிவுகளை மேற்கொள்ள இயல்கிறது” என்று பிரதமர் கூறினார்.
3
முந்தைய அரசுகளைப் போலன்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடுத்தர மக்கள் நலன்களுக்காக பாடுபடுகிறது என்று கூறினார்.
தமது அரசின் செயல்பாடுகளை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பாடுகளுடன் ஒப்பிட்ட பிரதமர், “எமது ஆட்சியின் நான்காண்டுகளில் 1.30 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்தோம், ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டன” என்றார். “தற்போது நாங்கள் 400-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களைத் திறந்துள்ளோம். ஆனால் 2014-ல் 80 பாஸ்போர்ட் அலுவலகங்களே இருந்தன” என்றும் பிரதமர் கூறினார்.
சூரத்தில் பிரதமர் வீட்டுவசதித் திட்ட பயனாளிகள் சிலருக்கு வீட்டுச் சாவிகளை பிரதமர் வழங்கினார். நாட்டின் ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவு மக்களுக்கு வாழுதலில் எளிமை அணுகுமுறையின்கீழ் அரசு இயக்க நோக்கு அடிப்படையில் செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். “நகர்ப்புற ஏழை மக்களுக்கு 13 லட்சம் வீடுகளுக்கும் கூடுதலாக கடந்த 4 ஆண்டுகளில் அரசு கட்டிக் கொடுத்திருப்பதாகவும், மேலும் 37 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தில் சூரத் ஆற்றிய பங்கினை நினைவுகூர்ந்த திரு. மோடி, இன்னும் 10 ஆண்டுகளில் இந்த நகரம் விரைவாக வளரும் உலக நகரங்களில் ஒன்றாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நகரின் முதலீடுகள் பெருகி வருவது இதற்கு கட்டியம் கூறுகிறது என்றார் அவர்.
பின்னர், பிரதமர் சூரத்தில் அதிநவீன, ரசிலாபென் செவந்திலால் ஷா வீனஸ் பன்நோக்கு மருத்துவமனையை தொடங்கி வைத்தார். மருத்துவமனையின் பல்வேறு வசதிகளை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சி தொடர்பான பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், நாட்டு மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவை வழங்குவதில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் முக்கியப் பங்காற்றியிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது மக்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் அடிப்படை மருந்துகள் கிடைப்பதாகவும், இதனால் மருத்துவச் செலவினம் வெகுவாக குறைந்து, மக்களின் உயிர் காக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பின்னர், அன்று மாலை பிரதமர், தண்டியில் தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவிடத்தை திறந்து வைத்தபின், சூரத் உள்அரங்கில் புதிய இந்தியா இளைஞர் மாநாட்டில் உரையாற்றுகிறார். இந்த நினைவிடத்தில் மகாத்மா காந்தி மற்றும் 80 சத்தியாக்கிரகிகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வரலாற்றுப் புகழ்வாய்ந்த தண்டி உப்பு யாத்திரையை இவர்கள் மேற்கொண்டனர். 1930ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உப்பு யாத்திரை தொடர்பான காட்சிகள் 24 சுவர் ஓவியங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தண்டி உப்பு சத்தியாக்கிரக போராட்டம் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வாகும்.
***
விகீ/சிஜே/மாகசா