Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்களின் முறைசாராக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்


 

மதிப்பிற்குரிய அதிபர் சிரில் ராமபோசா,

மதிப்பிற்குரிய அதிபர் மைக்கேல் டெமர்,

மதிப்பிற்குரிய அதிபர் விளாடிமிர் புடின்,

மதிப்பிற்குரிய அதிபர் ஸி ஜின்பிங்,

ஜூலை மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காகவும் அதிபர் ராமபோசாவை நான் பாராட்டுகிறேன்.

உலக மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் பிரிக்ஸ் நாடுகளில்தான் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பு உலக வளர்ச்சிக்கான எந்திரமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (23%) மற்றும் வர்த்தகத்தில் (16%) நாம் இன்னும் நிறைய பங்களிப்பை வழங்க வாய்ப்புள்ளது. நமது பங்களிப்பு நமது மக்கள் தொகைக்கு ஏற்றதாக இல்லை.

மதிப்பிற்குரியவர்களே,

உலகமயமாக்கல் பல கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. இருப்பினும், உலகமயமாக்கலின் பயனை அனைவருக்கும் சரிசமாக பிரித்து அளிக்க வேண்டிய பெரும் சவால் நம் முன் உள்ளது. 

பன்முகத்தன்மையின் பாதை மற்றும் விதிகள் சார்ந்த உலக நடைமுறை பாதுகாப்பு போன்றவற்றில் நிலவும் தொடர் இடையூறுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பணமதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட பெரும் உயர்வு போன்றவை கடந்த சில ஆண்டுகளில் ஈட்டிய லாபத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.

    உலகின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. உலகின் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பை வடிவமைப்பதில் நாம் முக்கிய பங்கு வகித்து வருகிறோம்.

     உலகப் பொருளாதார ஆளுகையை கூடுதல் பிரதிநிதித்துவம் மற்றும் ஜனநாயகத்துடன் வடிவமைப்பதில், நாம் கணிசமான பங்களிப்பை வழங்கியிருப்பதோடு, இதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.

     ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் இதர பன்னாட்டு அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்குவதில் நாம் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காகத்தான் பிரிக்ஸ் அமைப்பில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தோம்.

     விதிமுறைகள் சார்ந்த உலக நடைமுறையை உறுதி செய்ய, ஐ.நா., உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புகளில் நாம் அனைவரும், ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், அந்த அமைப்புகள் இருப்பதை உறுதி செய்வதோடு, தற்கால யதார்த்தங்களை பிரதிபலிக்க வைக்கவும் முடியும். இதற்காக, “மாற்றியமைக்கப்பட்ட பன்னாட்டு அமைப்பு” அவசியம் என்பதை ஜோக்கனஸ்பர்க் கூட்டத்தில் நான் வலியுறுத்தினேன்.

    புதிய தொழில் புரட்சி, பணியின் எதிர்காலம் போன்ற அம்சங்களை ஜி-20 செயல்திட்டத்தில் சேர்த்திருப்பது உலக வளர்ச்சிக்கான ஆலோசனைகளை செழுமைப்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான நாம், புதிய தொழிற்புரட்சிக்கு ஒத்துழைப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.

    அந்த வகையில், உலக மயமாக்கல் மற்றும் இடப்பெயர்ச்சி, போன்ற பிரச்சினைகளுக்கு மேம்பட்ட பன்னாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு மூலம் தீர்வு காணவேண்டும். ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியில் தரமான பணியை உறுதி செய்ய, சர்வதேச விநியோக சங்கிலியில் தொழிலாளர் பிரச்சினைகளை கையாள்வது மிகவும் அவசியம்.  தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களை, கடைப்பிடிப்பதோடு, தொழிலாளர்கள் உலக நாடுகளுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதும் மிகவும் அவசியம்.

   மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் நீடித்த உணவு எதிர்காலம் போன்ற சமூக – பொருளாதார பிரச்சினைகளை ஜி-20 உச்சிமாநாட்டில் எழுப்ப வேண்டும். நீடித்த வளர்ச்சி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பாக,  பேரழிவுகளைத் தாங்கக் கூடிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நான் ஏற்கனவே  ஆலோசனை தெரிவித்திருக்கிறேன்.  அதனை முன்னெடுத்துச் செல்ல நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மதிப்பிற்குரியவர்களே,

   பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே அரசியல் ரீதியான பரிமாற்றங்களை அதிகரிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தியா மதித்துப் போற்றுகிறது. அந்த வகையில், நமது வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சிறப்புத் தூதுவர்கள்,  குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

    பயங்கரவாதமும், மதவாதமும், ஒட்டுமொத்த உலகமும் தற்போது எதிர்கொண்டு வரும் மிகப் பெரும் அச்சுறுத்தல் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம்.  இந்த அச்சுறுத்தல் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக திகழ்கிறது.

    சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகளை தடுப்பதற்கான நடவடிக்கைக் குழுவின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்படி, அனைத்து நாடுகளையும் நாம் வலியுறுத்தியிருக்கிறோம். பிரிக்ஸ் மற்றும் ஜி-20 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பயங்கரவாத எதிர்ப்புக்கான ஐ.நா. கட்டமைப்பை வலுப்படுத்தினால்தான், தீவிரவாதிகளின் கட்டமைப்பு, அவர்களுக்கு நிதி உதவி கிடைப்பதையும், அவர்களது செயல்பாடுகளையும் முடக்க முடியும்.

மதிப்பிற்குரியவர்களே,

     ஜி-20 அமைப்பில் நமது ஆதரவு கட்டமைப்பு வலிமையானதாக மாறத்தொடங்கியுள்ளது. ஜி-20 செயல்பாடுகளில் நமது பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் ஆலோசித்து ஒத்துழைத்துப் பணியாற்றுகின்றனர்.

ஜி-20 உச்சிமாநாட்டுக்கு வளரும் நாடு ஒன்று தலைமை ஏற்க வேண்டும். ஜி-20 செயல்திட்டத்தின் கவனமும், அதன் விளைவுகளும், வளரும் நாடுகளின் முன்னுரிமை பிரச்சினையாக வலியுறுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

 நிறைவாக, ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டையும் இந்தக் கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தியதற்காக, அதிபர் ராமபோசாவிற்கு நான் மீண்டும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

பிரிக்ஸ் அமைப்பின் அடுத்த தலைமைப் பொறுப்பை பிரேசிலிடம்  ஒப்படைப்பதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். பிரேசில் நாட்டின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மதிப்பிற்குரியவர்களே,

    கடந்த ஆறு முறை உங்களது வழிகாட்டுதலைப் பெற்று, உங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தமைக்காக பிரேசில் அதிபருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

எனது நல்வாழ்த்துக்கள்,

அநேக நன்றிகள்

———-

எம் எம் – கீதா