பி.எம்.இந்தியா
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏராளமான மாற்றகரமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திருச்சி மாநகருக்கு வந்திருந்தார். தூய்மையான எரிசக்தி, பெட்ரோலியம் சார்ந்த உற்பத்தி மற்றும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, கிராமப்புற சாலைகளின் வாயிலாக மேம்படுத்தப்பட்ட பன்முக இணைப்பு போன்ற துறைகளில் 5650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இதில் அடங்கும். “இந்தத் திட்டங்கள் எரிசக்தி அணுகல் மற்றும் இணைப்பை ஊக்குவிப்பதுடன், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்”, என்று நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் கூறினார்.
நிலையான எரிசக்தியில் கவனம் செலுத்தும் வகையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 3700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கும், ஏராளமான வணிக நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கி புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், “எட்டு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நேர்மறையான சுற்றுச்சூழல் சார்ந்த தாக்கம், நான்கு கோடி மரங்களை நடுவதற்குச் சமமாக இருக்கும்”, என்று குறிப்பிட்டார்.
சென்னையில் இன்று அர்ப்பணிக்கப்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலவை ஆலையை, ‘இந்தியாவில் உற்பத்தி செய்தல்’ முன்முயற்சிக்கு வலிமை சேர்க்கும் குறிப்பிடத்தக்க முயற்சி என்று பிரதமர் வர்ணித்தார். உலக அளவில் மிகப் பெரிய ஆலைகளுள் ஒன்றாக விளங்கும் இது, தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார். “மசகு எண்ணெயின் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, இறக்குமதிகள் மீதான சார்பையும், பொருட்செலவையும் குறைக்கிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 370 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளைத் திறந்து வைத்த பிரதமர், அவற்றின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த சாலைகளின் மூலம் கிராம மக்களுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் சந்தைகளுக்கான அணுகல் மேம்படுத்தப்படுவதுடன், ஊரகப் பொருளாதாரம், நாட்டின் பிரதான பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்படும். “ஒவ்வொரு சாலையும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி, எளிதான வாழ்க்கைக்கு வழிவகை செய்கிறது”, என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பிராந்தியத்தின் கலாச்சார முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்த பிரதமர், கங்கைகொண்ட சோழபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை திட்டத்தையும் அறிவித்தார். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பேரரசர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரமாண்டமான கோயிலைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். புனிதத் தலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு மாற்றியமைத்து, புராதன சின்னம் மற்றும் அதன் பார்வையாளர்களின் பாதுகாப்பையும் இந்தத் திட்டம் உறுதி செய்யும். “இதன் மூலம் அனைவருக்கும் மேம்பட்ட பாதுகாப்பு கிடைக்கும்”, என்று திரு மோடி தெரிவித்தார்.
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் 8 ரயில் நிலையங்கள் சமீபத்தில் நவீனமயமாக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, துரிதமாக நவீனமயமாக்கப்பட்டு வரும் மாநிலத்தின் போக்குவரத்துத் துறை பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். சுற்றுலா மற்றும் உள்ளூர் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் நாகர்கோயில், கோயம்புத்தூர், ராமேஸ்வரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, காரைக்குடி போன்ற முக்கிய இடங்களை மாநிலத்தின் இதர பகுதிகளுடன் இணைக்கும் புதிய ரயில் சேவைகளையும் இன்று அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். “மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நாங்கள் இரவும் பகலும் அயராது பாடுபடுகிறோம், எங்கள் முயற்சி வரும் காலங்களிலும் தொடரும்”, என்று கூறி, மாநிலத்தின் எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்தி, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
(Release ID: 2238469)
****
TV/BR/SH
Speaking at the launch of various development initiatives in Tiruchirappalli. These will add momentum to Tamil Nadu’s progress. https://t.co/TCVfIoAxmi
— Narendra Modi (@narendramodi) March 11, 2026