Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி பிரதமரின் செய்தி


`சிகிச்சை அளிக்கப்படக் கூடிய நோயான’ தொழுநோயை இந்தியாவில் இருந்து முழுமையாக ஒழிக்க அனைவரும் கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தொழுநோய் ஒழிப்பு தினத்தை ஒட்டி பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், தொழுநோயில் இருந்து குணம் அடைந்தவர்கள் சமூக – பொருளாதார ரீதியாக வாழ்வில் மேலே வருவதற்கும், நாட்டை உருவாக்குவதில் அவர்களின் பங்களிப்பு இடம் பெறுவதற்கும் நாம் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில், நாட்டின் இந்தக் குடிமக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்ய நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மகாத்மா காந்தி தொடர்ந்து அக்கறை காட்டி வந்தார் என்பதை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார். அவர்களுக்கு சிகிச்சை தருவது மட்டும் காந்தியின் நோக்கமாக இருக்கவில்லை. நமது சமூகத்தில் பிரதான இயக்கத்தில் அவர்களையும் கொண்டு வர வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பினார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், இந்த நாட்டில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி, மகாத்மா காந்தியின் லட்சியத்துக்கு நாம் ஆற்றும் கடமையாக இருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். இந்தத் திட்டம் 1955-ல் தொடங்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொது சுகாதார பிரச்சினையில் இருந்து தொழுநோயை ஒழிப்பது, அதாவது தேசிய அளவில் 10,000 மக்கள் தொகையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1-ஐவிட குறைவாக இருக்க வேண்டும் என்ற இலக்கு 2005ல் எட்டப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொழுநோய் கண்டறியப்பட்ட நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துவிட்டது என்றாலும், நோயைக் கண்டறியும் போது தெரிய வரும் உடல் உறுப்பு பாதிப்புகள் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கடைசி நிலை வரையில் சிகிச்சை வசதி சென்று சேருவதை உறுதி செய்வதற்கு, எல்லா முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும் என்பது மட்டுமின்றி, இந்த நோய் தொடர்பாக சமூகத்தில் உள்ள தவறான எண்ணங்களை நீக்குவதற்கும் ஒன்றாக நாம் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

தொழுநோய் பாதித்தவர்களைக் கண்டறிய தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2016-ல் மூன்று வழிகளிலான அணுகுமுறை அறிமுகம் செய்யப்பட்டது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2016-ல் சிறப்பு தொழுநோய் கண்டறியும் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதன்விளைவாக 32000 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். மேலும், அந்த நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களுக்கும், இந்த நோய் பாதிப்பு வந்துவிடக் கூடிய வாய்ப்புகளைக் குறைப்பதற்காக மருந்து தரப்பட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

***