Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நபார்டு சட்டம் -1981-ல் திருத்தங்களை கொண்டுவரும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்க்காணும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

 

அ. வரைவு மசோதாவில் பரிந்துரைத்துள்ளபடி, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு) சட்டம், 1981-ல் திருத்தங்களைக் கொண்டுவருவது. இந்த மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சட்டத் துறை பரிசீலனை செய்யலாம். இந்தத் திருத்தங்களில், நபார்டின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக அதிகரிக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கிறது. மேலும், தேவைப்பட்டால் ரூ.30,000 கோடிக்கும் மேல் அதிகரிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, ஒவ்வொரு காலகட்டத்திலும் முடிவுசெய்யலாம்.

 

ஆ. நபார்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் 0.4% பங்கை, அதாவது ரூ.20 கோடியை  இந்திய அரசுக்கு மாற்றுவது.

 

நபார்டு சட்டத்தில் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ள மேலும் சில திருத்தங்களாக, நீண்டகால உரிமையில் மாற்றம், நபார்டு வரையறைக்குள் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கைத்தறித் துறையை கொண்டுவருவது உள்ளிட்டவையும் அடங்கும்.

 

நபார்டின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை அதிகரிக்கும் பரிந்துரையின் மூலம், நபார்டு அமைப்பு அளித்துள்ள வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும். குறிப்பாக, நீண்டகால நீர்ப்பாசன நிதி, கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்கும் வகையில் அண்மையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு உள்ளிட்டவற்றை நிறைவேற்ற முடியும். மேலும், தனது வர்த்தகத்தையும், செயல்பாடுகளையும் நபார்டு அமைப்பால் மேம்படுத்த முடியும். இதன்மூலம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகை ஏற்படும். மேலும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால், கிராமப்புறப் பகுதி வளம்பெறுவதை உறுதிப்படுத்தப்படும்.

 

நபார்டு வங்கியில் ரிசர்வ் வங்கி வைத்துள்ள ஒட்டுமொத்த பங்குத்தொகையை, மத்திய அரசுக்கு மாற்றுவதன் மூலம், வங்கி ஒழுங்குமுறையாளராகவும், நபார்டு வங்கியில் பங்குதாரராகவும் ரிசர்வ் வங்கி இருப்பதால் ஏற்படும் முரண்பாடுகள் நீக்கப்படும்.

****