Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டின் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகளை மாணவர்கள் கண்டறிய பிரதமர் வலியுறுத்தினார்.


சென்னை ஐஐடி-யில் இன்று நிறைவடைந்த 36 மணிநேர சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தானில் வெற்றிபெற்றவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பரிசுகளை வழங்கினார்.

இந்த வகையில் இரண்டாவதான ஹேக்கத்தானுக்கு சிங்கப்பூர் அரசும், இந்திய அரசும், சென்னை ஐஐடி-யும், சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை அடிப்படையில் முதலாவது ஹேக்கத்தான் 2018-ல் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

மாணவர்கள் மற்றும் கல்விப்புலம் சார்ந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், ஹேக்கத்தான் வெற்றியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

“நண்பர்களே, ஹேக்கத்தான் வெற்றியாளர்களை நான் பாராட்டுகிறேன். மேலும், இங்கே கூடியிருக்கின்ற அனைத்து இளம் நண்பர்களை, குறிப்பாக எனது மாணவ நண்பர்களை நான் பாராட்டுகிறேன். சவால்களை எதிர்கொள்வதற்கும், நடைமுறை சாத்தியமான தீர்வுகளைக் காண்பதற்குமான உங்களின் விருப்பம், உங்களின் சக்தி, உங்களின் ஆர்வம் ஆகியவை போட்டியில் வெற்றி பெறுவதை விட, மிகவும் மகத்தானதாகும்”.

சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய தொழில் தொடங்கும் மூன்று முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று பிரதமர் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கான முயற்சிகளுக்கு இந்தியா மிகப்பெரும் முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது என்று அவர் கூறினார்.

“அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், பிரதமரின் ஆராய்ச்சி உதவி நிதி, தொடங்குக இந்தியா திட்டம் போன்றவை 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கான அடிப்படைத் திட்டங்களாகும். புதிய கண்டுபிடிப்பு என்பதை ஒரு கலாச்சாரமாக இந்தியா மேம்படுத்தி வருகிறது. எந்திர வழிக்கற்றல், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்களை 6 ஆம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு கற்றுத்தர நாம் இப்போது முயற்சி செய்கிறோம். பள்ளியிலிருந்து உயர்கல்வியில் ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்புக்கான சூழலாக உருவாக்கப்பட்டு வருகிறது”.

இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகளைக் கண்டறிவதற்கு மாணவர்களை வலியுறுத்திய பிரதமர், இந்தியா தனது தீர்வுகளை உலகத்திற்கு குறிப்பாக, பல நாடுகளில் உள்ள அதிஏழைகளுக்கு வழங்க விரும்புகிறது என்றார்.

“இரண்டு பெரிய காரணங்களுக்காகப் புதிய கண்டுபிடிப்புகளையும், அதற்கான முயற்சிகளையும் நாம் ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒன்று வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இந்தியாவின் பிரச்சினைகளுக்கு எளியத் தீர்வுகளைக் காண நாம் விரும்புகிறோம். மற்றொன்று ஒட்டுமொத்த உலகத்திற்கும் தீர்வுகளைக் காண இந்தியா விரும்புகிறது. உலக நிலைமைகளுக்கு இந்தியாவின் தீர்வுகள் என்பது நமது இலக்காகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது. அதிஏழ்மையான நாடுகளுக்குத் தேவைப்படும் சேவைகள் கிடைக்க குறைந்த செலவிலான தீர்வுகளையே நாம் விரும்புகிறோம். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் தேவைப்படுகின்றவர்களுக்கு – எங்கே வாழ்பவர்களாக இருந்தாலும், அதிஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்”.

சென்னை ஐஐடி வைரவிழா கொண்டாட்டங்களிலும், பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.