பி.எம்.இந்தியா
எனதருமை நாட்டு மக்களே,
இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.
எனதருமை நாட்டு மக்களே,
1947 ஆம் ஆண்டில், எல்லையில்லா சாத்தியக்கூறுகள் மற்றும் மில்லியன் கணக்கான கரங்களின் வலிமையுடன், நமது நாடு சுதந்திரமடைந்தது. நாட்டின் விருப்பங்கள் நிறைய இருந்தன, ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன. மதிப்பிற்குரிய பாபுவின் கொள்கைகளைப் பின்பற்றி, அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்கள் மிக முக்கியமான பொறுப்பை நிறைவேற்றினர். 75 ஆண்டுகளாக, பாரத அரசியலமைப்பு ஒரு கலங்கரை விளக்கம் போல நம்மை வழிநடத்தி வருகிறது. நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் – டாக்டர் ராஜேந்திர பிரசாத், பாபாசாகேப் அம்பேத்கர், பண்டிட் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற பல கற்றறிந்த மற்றும் சிறந்த தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். நமது பெண்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தனர். ஹன்சா மேத்தா மற்றும் தாக்ஷாயணி வேலாயுதன் போன்ற அறிஞர்கள் பாரத அரசியலமைப்பை வலுப்படுத்துவதில் தங்கள் பங்கை கொடுத்தனர். இன்று, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டிற்கு வழிகாட்டும் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
எனதருமை நாட்டு மக்களே,
இப்போது, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த ஆண்டையும் நாம் கொண்டாடுகிறோம். இந்திய அரசியலமைப்பிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த நாட்டின் சிறந்த ஆளுமை டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆவார். அரசியலமைப்பிற்காக அவர் செய்த தியாகம் மகத்தானது. பிரிவு 370-ஐ அகற்றியது. “ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு” என்ற மந்திரத்தை நிறைவேற்றியது ஆகியவை டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். இன்று செங்கோட்டையில் பல சிறப்பு விருந்தினர்கள், தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்துகளின் உறுப்பினர்கள், “ட்ரோன் சகோதரிகள்”, “லட்சாதிபதி சகோதரிகள்”, விளையாட்டு வீரர்கள், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்த பிற புகழ்பெற்ற நபர்கள் உள்ளனர். ஒரு வகையில், என் கண்களுக்கு முன்பாக ஒரு மினி பாரதத்தை நான் காண்கிறேன். பரந்த பாரதம் தொழில்நுட்பத்தின் மூலம் செங்கோட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திரப் பெருவிழாவில், எனது சக நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் பரவியுள்ள பாரதத்தை நேசிப்பவர்களுக்கும், எல்லா இடங்களிலும் உள்ள நமது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இயற்கை நம் அனைவரையும் சோதித்து வருகிறது. கடந்த சில நாட்களில், நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள், எண்ணற்ற பிற பேரழிவுகள் போன்ற பல இயற்கை பேரழிவுகளை நாம் சந்தித்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபங்கள். மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகள், நாடவடிக்கைகள், மறுவாழ்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளன.
நண்பர்களே,
இந்த ஆகஸ்ட் 15-ம் தேதியில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை நான் காண்கிறேன். செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆபரேஷன் சிந்தூரின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது துணிச்சலான வீரர்கள் எதிரிகளை அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தண்டித்தார்கள். ஏப்ரல் 22-ம் தேதி, பயங்கரவாதிகள் எல்லையைத் தாண்டி பஹல்காமில் படுகொலைகளைச் செய்தனர். மதத்தைக் கேட்ட பிறகு மக்களைக் கொன்றனர். மனைவிகள் முன்னிலையில் கணவர்களைச் சுட்டுக் கொன்றனர். குழந்தைகள் முன்னிலையில் தந்தையர்களைக் கொன்றனர். முழு தேசமும் சீற்றத்தால் பொங்கி எழுந்தது. அத்தகைய படுகொலையால் முழு உலகமும் அதிர்ச்சியடைந்தது.
எனதருமை நாட்டு மக்களே,
அந்த கோபத்தின் வெளிப்பாடே ஆபரேஷன் சிந்தூர். ஏப்ரல் 22-ம் தேதி நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தோம். அவர்கள் உத்தியைத் தீர்மானிக்கட்டும், இலக்குகளைத் தேர்ந்தெடுக்கட்டும், நேரத்தைத் தேர்ந்தெடுக்கட்டும் என சுதந்திரம் கொடுத்தோம். மேலும் பல ஆண்டுகளாக நடக்காத ஒன்றை பிரதேசத்திற்குள் ஊடுருவி, பயங்கரவாத தலைமையகத்தை தூசியாகக் குறைத்து, பயங்கரவாத தலைமையகத்தை இடிபாடுகளாக மாற்றியது. பாகிஸ்தான் இன்னும் தூக்கமில்லாமல் இருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவு மிகப் பெரியதாக இருப்பதால், ஒவ்வொரு நாளும் புதிய வெளிப்பாடுகளையும் புதிய தகவல்களையும் கொண்டு வருகிறது.
எனதருமை நாட்டு மக்களே,
நமது நாடு பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தைத் தாங்கி வந்துள்ளது. நாட்டின் இதயம் மீண்டும் மீண்டும் துளைக்கப்பட்டுள்ளது. இப்போது, நாம் ஒரு புதிய இயல்பை நிலைநாட்டியுள்ளோம். பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் இனி தனித்தனியாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்கள் அனைவரும் மனிதகுலத்தின் சம எதிரிகள். அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடும் இல்லை. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பாரதம் இப்போது முடிவு செய்துள்ளது. நமது எதிரிகள் எதிர்காலத்தில் இந்த முயற்சியைத் தொடர்ந்தால், நமது ராணுவம் அதன் சொந்த விதிமுறைகளின்படி, அது தேர்ந்தெடுக்கும் நேரத்தில், அது பொருத்தமானதாகக் கருதும் விதத்தில் முடிவெடுக்கும். அது தேர்ந்தெடுக்கும் இலக்குகளை குறிவைத்து, அதற்கேற்ப செயல்படுவோம். நாங்கள் பொருத்தமான பதிலடி கொடுப்போம்.
எனதருமை நாட்டு மக்களே,
பாரதம் இப்போது முடிவு செய்துள்ளது. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் எவ்வளவு அநீதியானது, ஒருதலைப்பட்சமானது என்பதை நாட்டு மக்கள் இப்போது முழுமையாகப் புரிந்துகொள்கிறார்கள். பாரதத்திலிருந்து உருவாகும் நதிகளின் நீர் நமது எதிரிகளின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறது. அதே நேரத்தில் நமது சொந்த நாட்டின் விவசாயிகளும் மண்ணும் தாகமாகவே இருக்கின்றன. கடந்த 70 ஆண்டுகளாக நமது விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்திய ஒரு ஒப்பந்தம் இது. இப்போது, பாரதத்திற்குச் சொந்தமான நீர் பாரதத்திற்கு மட்டுமே, பாரத விவசாயிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். பல ஆண்டுகளாக பாரதம் தாங்கி வந்த சிந்து ஒப்பந்தத்தின் வடிவத்தை இனி ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனதருமை நாட்டு மக்களே,
எண்ணற்ற மக்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். தங்கள் இளமை முழுவதையும் அர்ப்பணித்தனர். தங்கள் வாழ்க்கையை சிறைகளில் கழித்தனர், தூக்கு மேடையைத் தழுவினர். இவை தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல. பாரத அன்னையின் மரியாதைக்காக. கோடிக்கணக்கான மக்களின் சுதந்திரத்திற்காக. அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைக்க. அவர்களின் இதயங்களில் ஒரே உணர்ச்சியுடன் கண்ணியம் இருந்தது.
நண்பர்களே,
அடிமைத்தனம் நம்மை ஏழைகளாக்கியது. அது நம்மைச் சார்ந்திருக்கவும் வைத்தது. மற்றவர்களைச் சார்ந்திருப்பது அதிகரித்துக்கொண்டே இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கடுமையாக உழைத்து, நாட்டின் தானியக் கிடங்குகளை நிரப்பியது வேறு யாருமல்ல, நம் நாட்டின் விவசாயிகள்தான். அவர்கள் உணவு தானிய உற்பத்தியில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்தனர். ஒரு தேசத்திற்கு, இன்றும் கூட சுயமரியாதையின் மிகப்பெரிய அளவுகோல் அதன் சுயசார்புதான்.
எனதருமை நாட்டு மக்களே,
வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமும் ஒரு சுயசார்புதான். ஒரு நாடு மற்றவர்களை எவ்வளவு அதிகமாக நம்பியிருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதன் சுதந்திரம் கேள்விக்குறியாகிறது. நாம் சுயசார்பை கைவிட்டு மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறோம் என்றால் அப்போது துரதிர்ஷ்டம் எழுகிறது. இந்தப் பழக்கம் ஆபத்து நிறைந்தது. எனவே ஒருவர் தன்னம்பிக்கையுடன் இருக்க ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே,
சுயசார்பு என்பது வெறும் இறக்குமதி, ஏற்றுமதியுடனோ அல்லது ரூபாய், பவுண்டுகள், டாலர்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அதன் அர்த்தம் ஆழமானது. சுயசார்பு என்பது நமது திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறையத் தொடங்கும் போது, திறனும் தொடர்ந்து குறைகிறது. எனவே, நமது திறனைப் பாதுகாக்க, பராமரிக்க, மேம்படுத்த, சுயசார்புடன் இருப்பது அவசியம்.
நண்பர்களே,
‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற அற்புதத்தை நாம் ஆபரேஷன் சிந்தூரில் கண்டோம். நம்மிடம் என்ன ஆயுதங்கள், திறன்கள் உள்ளன என்பது எதிரிக்கு தெரியாது. நாம் சுயசார்பு இல்லாதிருந்தால், இவ்வளவு விரைவாக ஆபரேஷன் சிந்தூரை நிறைவேற்றியிருக்க முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்? யார் நமக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவார்கள்? நமக்குக் கிடைக்குமா? இல்லையா? போன்ற கவலைகளால் நாம் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என்பதால், ஆயுதப் படைகளின் கைகளில் அவை இருந்ததால், அவர்கள் தங்கள் வீரத்தை எந்த கவலையும் இல்லாமல், இடையூறும் இல்லாமல், தயக்கமும் இல்லாமல் நிறைவேற்றினர். இன்று நாம் காணும் முடிவுகள், பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையை நோக்கி கடந்த பத்து ஆண்டுகளாக நமது நிலையான பணியின் விளைவாகும்.
நண்பர்களே,
இன்னொரு விஷயத்தில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நூற்றாண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அது தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் போது, வரலாற்றைப் பார்த்தால், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு நாடும் வளர்ச்சியின் உச்சத்தை அடைந்து, பொருளாதார சக்தியின் புதிய பரிமாணங்களை அடைந்தது என்று நமக்குச் சொல்கிறது. தொழில்நுட்பத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி நாம் பேசும்போது, செமிகண்டக்டர் துறையில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நான் இங்கே செங்கோட்டையின் கொத்தளத்தில் எந்த நபரையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிக்க நிற்கவில்லை. அதை நான் விரும்பவில்லை. ஆனால் நம் நாட்டின் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். நம் நாட்டில், செமிகண்டக்டர் தொடர்பான கோப்புகள் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு நகரத் தொடங்கின. செமிகண்டக்டர் தொழிற்சாலை என்ற யோசனை அப்போது தொடங்கியது. இன்று, செமிகண்டக்டர்கள் ஒரு உலகளாவிய சக்தியாக மாறிவிட்டன. ஆனால் 50-60 ஆண்டுகளுக்கு முன்பே, அந்த யோசனை நிறுத்தப்பட்டு, தாமதப்படுத்தப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது. செமிகண்டக்டர் என்ற கருத்தாக்கமே கைவிடப்பட்டது. நாம் 50-60 ஆண்டுகளை வாய்ப்பை இழந்தோம். இதற்கிடையில், பல நாடுகள் செமிகண்டக்டர்களில் தேர்ச்சி பெற்று உலகில் தங்கள் பலத்தை நிலைநாட்டின.
நண்பர்களே,
இன்று நாம் அந்தச் சுமையிலிருந்து நம்மை விடுவித்து, செமிகண்டக்டர்கள் (குறைக்கடத்திகள்) மீதான பணிகளை தீவிர இயக்க முறையில் தொடங்கியுள்ளோம். ஆறு வெவ்வேறு குறைக்கடத்தி ஆலைகள் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் நான்கு புதிய ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.
என் சக நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பாரதத்தின் தொழில்நுட்பத்தின் வலிமையைப் புரிந்துகொள்பவர்களுக்கு, நான் இதைச் சொல்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள், இந்திய மக்களால் பாரதத்தில் தயாரிக்கப்பட்ட சிப் சந்தையில் கிடைக்கும். இன்னொரு உதாரணம் தருகிறேன். எரிசக்தித் துறையில், பெட்ரோல், டீசல், எரிவாயுவுக்கு நாம் பல நாடுகளைச் சார்ந்து இருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றை வாங்குவதற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுகிறோம். நாடு எரிசக்தியில் தன்னிறைவு பெறுவது அவசியம். இந்த உறுதியை நாங்கள் எடுத்தோம். கடந்த 11 ஆண்டுகளில், சூரிய சக்தி முப்பது மடங்கு அதிகரிப்பைக் கண்டுள்ளது. தூய ஆற்றலைப் பெறுவதற்காக நீர் மின்சாரத்தை விரிவுபடுத்துவதற்காக புதிய அணைகளைக் கட்டி வருகிறோம். பசுமை ஹைட்ரஜன் இயக்கத்துடன், பாரதம் இப்போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது. எரிசக்தியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, அணுசக்தியிலும் பாரதம் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அணுசக்தித் துறையில், 10 புதிய அணு உலைகள் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. 2047-ம் ஆண்டு, நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது – அந்த ஆண்டில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம். நமது அணுசக்தி திறனை பத்து மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும் உறுதியுடன் நாம் முன்னேறி வருகிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியான செயல்முறை. காலத்தின் தேவைகள் மற்றும் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அணுசக்தித் துறையில், நாம் பெரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்போது தனியார் துறைக்கும் அணுசக்தியின் கதவுகளைத் திறந்துள்ளோம். நமது வலிமைகளை இணைக்க விரும்புகிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
உலக நாடுகள் இன்று புவி வெப்பமடைதல் குறித்து கவலை தெரிவிக்கும் வேளையில், 2030-ம் ஆண்டுக்குள் 50% தூய எரிசக்தியை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதை நான் உலகிற்குச் சொல்ல விரும்புகிறேன். அதுதான் 2030-ம் ஆண்டிற்கான நமது இலக்காக இருந்தது. ஆனால் நமது மக்களின் திறனைப் பாருங்கள், இந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும் உறுதியை நிறைவேற்றுவதற்கான உறுதியைப் பாருங்கள். 2025-ம் ஆண்டிலேயே 50% சுத்தமான எரிசக்தி இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டோம். ஏனென்றால், இயற்கையின் மீது நாம் எவ்வளவு பொறுப்புடன் இருக்கிறோமோ, அதே அளவுக்கு உலகத்தின் மீதும் நாம் உணர்திறன் உடையவர்களாக இருக்கிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
பட்ஜெட்டின் பெரும் பகுதி பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை வாங்குவதற்கு செலவிடப்பட்டது. லட்சக்கணக்கான கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டது. நாம் எரிசக்திக்குப் பிற நாடுகளைச் சார்ந்திருக்கவில்லை என்றால், அந்தப் பணம் என் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பணம் நம் நாட்டின் ஏழைகள் வறுமையை எதிர்த்துப் போராட உதவப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பணம் நம் நாட்டின் விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்தப் பணம் என் நாட்டின் கிராமங்களின் நிலைமைகளை மாற்றப் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதை வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது நாம் சுயசார்பு அடைய பாடுபடுகிறோம். நாட்டை வளர்ச்சியடையச் செய்ய, இப்போது கடல் சார் இயக்கம் நோக்கி நகர்கிறோம். நமது இந்த இயக்கத்தை முன்னோக்கி எடுத்துச் சென்று, எண்ணெய் இருப்புக்கள், கடலுக்கு அடியில் எரிவாயு இருப்புகளைக் கண்டுபிடிப்பதில் ஒரு இலக்குடன் செயல்பட விரும்புகிறோம். எனவே இந்தியா தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்கப் போகிறது. எரிசக்தி சுதந்திர நாடாக மாறுவதற்கான முக்கியமான அறிவிப்பு இது.
எனதருமை நாட்டு மக்களே,
இப்போது உலகம் முழுவதும் முக்கியமான கனிமங்கள் குறித்து மிகவும் ஆர்வம் உள்ளது. மக்கள் அவற்றின் திறனை நன்கு புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். நேற்று வரை அதிக கவனம் செலுத்தப்படாத விஷயம் இன்று மைய நிலைக்கு வந்துள்ளது. முக்கிய கனிமங்களில் தன்னிறைவு என்பது நமக்கு மிகவும் அவசியம். எரிசக்தித் துறையாக இருந்தாலும் சரி, தொழில் துறையாக இருந்தாலும் சரி, பாதுகாப்புத் துறையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும் சரி, இன்று அரிய கனிமங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே நாங்கள் தேசிய அரிய கனிமங்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம், 1200 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அரிய கனிமங்களிலும் சுயசார்பை நோக்கி நாம் நகர்கிறோம்.
எனதருமை நாட்டு மக்களே,
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் விண்வெளித் துறையின் அதிசயங்களைக் கண்டு பெருமை கொள்கிறார்கள். மேலும் நமது குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளி மையத்திலிருந்து திரும்பியுள்ளார். அவர் சில நாட்களில் இந்தியாவுக்கு வருகிறார். விண்வெளியில் சுயமாக ககன்யானுக்கும் நாம் தயாராகி வருகிறோம். நமது சொந்த விண்வெளி மையத்தை நாமே உருவாக்க பணியாற்றி வருகிறோம். சமீபத்தில் விண்வெளித் துறையில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாட்டில் 300-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இப்போது விண்வெளித் துறையில் மட்டுமே செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த 300 புத்தொழில் நிறுவனங்களில் முழு திறனுடன் பணியாற்றி வருகின்றனர். இதுவே என் நாட்டின் இளைஞர்களின் பலம். இதுவே நமது நாட்டின் இளைஞர்கள் மீதான எங்கள் நம்பிக்கை.
எனதருமை நாட்டு மக்களே,
2047-ம் ஆண்டில், 100-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்ற 140 கோடி இந்தியர்கள் முழு திறனுடன் பணியாற்றி வருகின்றனர். இந்த உறுதியை நிறைவேற்ற, இந்தியா இன்று ஒவ்வொரு துறையிலும் ஒரு நவீன சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது. நவீன சூழல் அமைப்பால் நமது நாடு ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவு பெறும். இன்று, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து, நாட்டின் இளம் விஞ்ஞானிகள், திறமையான இளைஞர்கள், பொறியாளர்கள், நிபுணர்கள் மற்றும் அரசின் ஒவ்வொரு துறையினருக்கும் எனது வேண்டுகோள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களுக்கான ஜெட் இயந்திரத்தை உருவாக்க வேண்டுமா இல்லையா? அதற்காகவும் நாம் பாடுபடுவோம். நாம் உலகின் மருந்தகமாகக் கருதப்படுகிறோம். தடுப்பூசிகள் துறையில் நாம் புதிய சாதனைகளை படைத்து வருகிறோம். ஆனால் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக ஆற்றலைச் செலுத்துவது காலத்தின் தேவையல்லவா? நமக்கு சொந்த காப்புரிமைகள் இருக்க வேண்டும். மனிதகுலத்தின் நலனுக்காக மலிவான விலையில் பயனுள்ள மருந்துகளை உருவாக்க வேண்டும். நெருக்கடி காலங்களில், இவை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் மனிதகுலத்தின் நலனுக்காக பயனுள்ளதாக இருக்க வேண்டும். மத்திய அரசு பயோஇ3 கொள்கையை வகுத்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் அனைவரும் பயோஇ3 கொள்கையைப் படித்து செயலில் இறங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் தலைவிதியை நாம் மாற்ற வேண்டும். உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவை.
எனதருமை நாட்டு மக்களே,
இது தகவல் தொழில்நுட்ப யுகம். நமக்கு தரவுகளின் சக்தி இருக்கிறது. அது காலத்தின் தேவையல்லவா? போக்குவரத்து முறைகள் முதல் இணைய பாதுகாப்பு வரை, ஆழமான தொழில்நுட்பம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை, அனைத்தும் நம்முடையதாக இருக்க வேண்டும். அதில் நமது சொந்த மக்களின் பலம் குவிந்துள்ளது. அவர்களின் திறன்களின் சக்தியை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
நண்பர்களே,
இன்று, அது சமூக ஊடகமாக இருந்தாலும் சரி, வேறு எந்த தளமாக இருந்தாலும் சரி, உலக தளங்களில் நாம் பணியாற்றி வருகிறோம். நமது சொந்த யுபிஐ தளத்தை உலகுக்குக் காட்டியுள்ளோம். நம்மிடம் திறன் உள்ளது. இந்தியா மட்டுமே உலகளவில் யுபிஐ மூலம் 50% பரிவர்த்தனைகளைச் செய்கிறது. இதன் பொருள் வலிமை. அது படைப்பு உலகமாக இருந்தாலும் சரி, சமூக ஊடகமாக இருந்தாலும் சரி, இந்த தளங்களில் ஏதேனும் ஒன்றாக இருந்தாலும் சரி, நம் நாட்டின் இளைஞர்களுக்கு நான் சவால் விடுகிறேன். வாருங்கள், நமக்கு ஏன் சொந்த சமூக ஊடக தளங்கள் இல்லை? நாம் ஏன் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டும்? இந்தியாவின் செல்வம் ஏன் வெளியேற வேண்டும்? உங்கள் திறமையில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
எனதருமை நாட்டு மக்களே,
நாம் எரிசக்திக்காக உலகையே சார்ந்திருப்பது போல, உரங்களுக்காக உலகைச் சார்ந்திருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம். நாட்டின் விவசாயிகள் உரங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பூமித் தாய்க்கு சேவை செய்ய முடியும். நாட்டின் இளைஞர்களுக்கும், நாட்டின் தொழில்துறைக்கும், நாட்டின் தனியார் துறைக்கும் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். உரங்களின் இருப்புக்களை நிரப்புவோம். புதிய வழிகளைக் கண்டுபிடித்து, இந்தியாவின் தேவைக்கேற்ப நமது சொந்த உரங்களைத் தயாரிப்போம். இதில் நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக்கூடாது.
நண்பர்களே,
வரவிருக்கும் சகாப்தம் மின்சார வாகனங்களின் சகாப்தம். இப்போது நாம் மின்சார வாகன பேட்டரிகளை உருவாக்கவில்லை என்றால், நாம் பிறரையே சார்ந்து இருப்போம். அது சூரிய மின்கலங்களாக இருந்தாலும் சரி அல்லது மின்னணு வாகனங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களாக இருந்தாலும் சரி, அவை நமக்குச் சொந்தமான தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
நாட்டின் இளைஞர்களின் திறன்களில் எனக்கு நம்பிக்கை இருப்பதால் இதைச் சொல்லத் துணிகிறேன். அவர்கள் நம் நாட்டின் இளைஞர்கள் என்பதால் மட்டும் இந்த நம்பிக்கை இல்லை. கொவிட் காலத்தில் நாம் பல விஷயங்களைச் சார்ந்து இருந்தோம். நம் நாட்டு இளைஞர்களிடம் நமக்குத் தடுப்பூசி தேவை என்று கூறப்பட்டபோது, நாடு அதை நிறைவேற்றிக் காட்டியது. கோ-வின் தளம் நம்முடையதாக இருக்க வேண்டும், அதைச் செய்ததன் மூலம் நாடு அதன் திறனைக் காட்டியது. கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் பணியை நாம் செய்துள்ளோம். அதே மனப்பான்மை, அதே ஆர்வம், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வேண்டும். தன்னம்பிக்கையுடன், நம்மால் முடிந்த சிறந்த முயற்சியைக் கொடுக்க வேண்டும்.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளில், தொழில்முனைவு மிகப்பெரிய பலத்தைப் பெற்றுள்ளது. இன்று, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் புதுமையையும் வலுப்படுத்தி வருகின்றன. அதேபோல், நமது மகள்கள் உட்பட கோடிக்கணக்கான இளைஞர்கள் முத்ரா திட்டத்தின் மூலம் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க கடன் வாங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பது மட்டுமல்லாமல், மற்றவர்களும் அதைச் செய்ய அதிகாரம் அளித்து வருகின்றனர். இதுவும் ஒரு வகையில் ஒவ்வொரு தனிநபரும் சுயசார்புடையவர்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
நண்பர்களே,
முன்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மீது யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அதிசயங்களைச் செய்துள்ளன. இன்று, அவர்களின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் சந்தைகளை அடைகின்றன. நமது மகளிர் சுயஉதவிக் குழுக்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வணிகங்களைச் செய்கின்றன. நான் ஒருமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பொம்மைகளைப் பற்றிப் பேசினேன். வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொம்மைகளை இறக்குமதி செய்தோம். மனதின் குரலில் நான் சாதாரணமாக, “என் இளம் நண்பர்களே, நாம் வெளிநாட்டிலிருந்து பொம்மைகளைக் கொண்டு வருவது சரியா? உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கத் தயாரா?” என்று கேட்டேன். இன்று நாடு பொம்மைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டது என்று பெருமையுடன் கூறுகிறேன். இதன் பொருள், நாடு ஒவ்வொரு சாத்தியமான வாய்ப்பையும் பெற்று, அனைத்து தடைகளிலிருந்தும் விடுபட்டால், அது பெரிய சாதனைகளை எட்ட முடியும். முடிந்ததைச் செய்ய ஊக்கமளிக்க வேண்டும். நம்மால் அதைச் செய்ய முடியும். நான் நாட்டின் இளைஞர்களிடம் கூறுகிறேன்: ‘உங்கள் புதுமையான யோசனைகளை முன்வையுங்கள். என் நண்பர்களே. இன்றைய யோசனை வரவிருக்கும் தலைமுறைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடும். நான் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். இந்தப் பயணத்தில் உங்கள் கூட்டாளியாக இருக்க நான் விரும்புகிறேன். முன்வாருங்கள், தைரியத்தைத் திரட்டுங்கள், முன்முயற்சி எடுங்கள். உற்பத்தி பற்றி சிந்திக்கும் இளைஞர்களே, முன்முயற்சி எடுக்க வாருங்கள். அரசு விதிகளை மாற்ற வேண்டுமா என்று சொல்லுங்கள். 2047 வெகு தொலைவில் இல்லை. ஒவ்வொரு கணமும் விலைமதிப்பற்றது. நண்பர்களே, ஒரு கணம் கூட வீணாக்க நான் விரும்பவில்லை.’
நண்பர்களே,
இது முன்னேற ஒரு வாய்ப்பு, பெரிய கனவு காண ஒரு வாய்ப்பு. நமது தீர்மானங்களுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. அரசு உங்களுடன் இருக்கும்போது, நான் உங்களுடன் இருக்கும்போது, இப்போது நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க முடியும்.
நண்பர்களே,
இப்போது, தேசிய உற்பத்தி இயக்கம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. நமது குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. உலக அளவில் மிகப்பெரிய தயாரிப்புகளை உருவாக்குவதில் நமது நாட்டின் குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து வரும் சில உதிரி பாகங்கள் எப்போதும் இடம் பெற்று இருக்கும். இவை பெருமையுடன் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் நாம் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் பாதையை நோக்கி நகர விரும்புகிறோம். அதனால் நாம் அவற்றின் திறன்களை வலுப்படுத்த வேண்டும். நான் ஒரு முறை செங்கோட்டையிலிருந்து சொன்னேன் – ‘குறைபாடற்ற, தரமான சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பொருட்களை உருவாக்க வேண்டும்’ என்று சொன்னேன். உலக சந்தையில் நமது பலத்தை உலகம் அங்கீகரிக்க வேண்டுமென்றால், நாம் தொடர்ந்து தரத்தில் புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்பதை இன்று நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். உலகம் தரத்தை ஏற்றுக்கொள்கிறது. நமது தரம் சிறந்ததாக இருக்க வேண்டும். மேலும் மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்வதற்கும் நமது உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிவதற்கும் அரசின் முயற்சிகள் தொடரும்.
நண்பர்களே,
உற்பத்தித் துறையில் உள்ள அனைவருக்கும், நமது மந்திரம் “குறைந்த விலை, ஆனால் அதிக மதிப்பு” என்பதாக இருக்க வேண்டும். நமது ஒவ்வொரு பொருளுக்கும் அதிக மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் குறைந்த விலை இருக்க வேண்டும். இந்த உணர்வோடுதான் நாம் முன்னேற வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே,
நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். நான் முன்பே கூறியிருக்கிறேன். அவர்கள் தங்கள் இளமையைக் கொடுத்தார்கள்; தூக்கு மேடைக்குச் சென்றார்கள், ஏன்? சுதந்திர பாரதத்திற்காக. 75 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை, முழு தேசமும் சுதந்திர பாரதத்தின் மந்திரத்துடன் வாழ்ந்த அந்தக் காலத்தை நினைத்துப் பாருங்கள். இன்று, காலத்தின் கோரிக்கை இதுதான். சுதந்திர பாரதத்தின் மந்திரத்தின்படி வாழ்ந்தவர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். இப்போது, 140 கோடி இந்தியர்களுக்கான மந்திரம் ஒரு வளமான பாரதமாக இருக்க வேண்டும். பல லட்சக்கணக்கான மக்களின் தியாகங்கள் நமக்கு சுதந்திரத்தைக் கொண்டு வர முடிந்தது. அதேபோல் இப்போது நமது தீர்மானங்கள், கடின உழைப்பு, தன்னம்பிக்கை, உள்ளூர் மக்களுக்கான குரல், கோடிக் கணக்கான மக்கள் சுதேசி மந்திரத்தை உச்சரிப்பது ஆகியவற்றின் மூலம், நாம் ஒரு வளமான பாரதத்தை உருவாக்க முடியும். அந்த தலைமுறை ஒரு சுதந்திர பாரதத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. இந்த தலைமுறை ஒரு வளமான பாரதத்திற்காக தைரியமான புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதைத்தான் காலம் கோருகிறது. அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தி வருகிறேன். நாட்டின் அனைத்து செல்வாக்கு மிக்கவர்களிடமும் சொல்ல விரும்புகிறேன். இந்த மந்திரத்தைப் பரப்ப உதவுங்கள். அனைத்து அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்: ‘வாருங்கள், இது எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் செயல்திட்டம் அல்ல. பாரதம் நம் அனைவருக்கும் சொந்தமானது. அனைவரும் இணைந்து, “உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்போம்” என்பதை ஒவ்வொருவரது வாழ்க்கையின் மந்திரமாக மாற்றுவோம்.’
பாரதத்தில் தயாரிக்கப்பட்ட, இந்திய மக்களின் வியர்வையால் தயாரிக்கப்பட்ட, நமது மண்ணின் நறுமணத்தைக் கொண்ட, சுயசார்புக்கான நமது உறுதியை வலுப்படுத்தும் பொருட்களை மட்டுமே நாம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இது நமது கூட்டு உறுதிமொழியாக இருக்கட்டும். விரைவில் உலகை மாற்றுவோம் நண்பர்களே. இப்போது, ஒவ்வொரு சிறு வணிகர் மற்றும் கடைக்காரரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. எங்கள் குழந்தைப் பருவத்தில், “நெய் கடை” என்று வெறுமனே பெயரிடப்பட்ட கடைகளைப் பார்த்தோம். ஆனால் காலப்போக்கில் மக்கள் “தூய நெய் கடை” என்று எழுதத் தொடங்கினர். அதேபோல், நாடு முழுவதும் உள்ள வணிகர்களும் கடைக்காரர்களும் “சுதேசி பொருட்கள் இங்கே விற்கப்படுகின்றன” என்று எழுதும் பலகைகளை வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சுதேசியைப் பற்றி பெருமை கொள்வோம். கட்டாயத்தால் அல்ல. நமது சொந்த பலத்திற்காக அதைச் செய்வோம். இதுவே நமது வழிகாட்டும் மந்திரமாக இருக்க வேண்டும்.
எனதருமை நாட்டு மக்களே,
மிக நீண்ட காலமாக, அரசு நிர்வாகத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறேன். அரசுகள் எதிர்கொள்ளும் சவால்களையும், நிர்வாக அமைப்புகளின் வரம்புகளையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். இருப்பினும், இவை அனைத்தையும் மீறி, மற்றவர்களின் சாதனைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் நமது சக்தியை வீணாக்காமல் இருப்பது நமது பொறுப்பாகும். எனது பரந்த அனுபவத்திலிருந்து, மற்றவர்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் நமது சக்தியைச் செலவிட வேண்டாம் என்று நான் கூறுகிறேன். அதற்கு பதிலாக, நமது சொந்த திறன்களையும் சாதனைகளையும் மேம்படுத்துவதற்கு நமது முழு சக்தியையும் அர்ப்பணிக்க வேண்டும். நாம் வளர்ந்து சிறந்து விளங்கும்போது, உலகம் நமது மதிப்பை அங்கீகரிக்கும். இன்று, உலகம் முழுவதும் பொருளாதார சுயநலம் வளர்ந்து வரும்போது, நெருக்கடிகளைப் பற்றி புலம்பிக்கொண்டே இருக்கக்கூடாது என்பதே தற்போதைய தேவை. தைரியத்துடன், நமது சொந்த பலத்தையும் நிலைப்பாட்டையும் மேம்படுத்த நாம் பாடுபட வேண்டும். எனது 25 ஆண்டுகால நிர்வாக அனுபவத்திலிருந்து, நான் இதைச் சொல்கிறேன். நாம் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால், எந்த சுயநலத்திலும் நாம் ஒருபோதும் சிக்க மாட்டோம்.
எனதருமை நாட்டு மக்களே,
கடந்த 10 ஆண்டுகள், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் தற்போது நமது முயற்சிகளுக்கு நாம் புதிய ஆற்றலை சேர்க்க வேண்டும். அந்நிய நேரடி முதலீடு, காப்பீட்டுத் துறை, இந்தியாவில் சர்வதேச பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை நிர்மாணிக்க அனுமதிப்பது உள்ளிட்ட ஏராளமான சீர்திருத்தங்களை அண்மை காலங்களில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். சுமார் 40,000 தேவையற்ற இணக்க சுமைகளை நாம் ரத்து செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல், காலாவதியான 1500 சட்டங்களையும் நாம் ரத்து செய்திருக்கிறோம். மக்களின் நலனுக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளித்து, ஏராளமான சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக அவற்றில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தை அணுகியிருக்கிறோம். வருமான வரி சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் பற்றிய செய்தி, இந்த முறையும் மக்களை சென்றடையாமல் இருக்கக்கூடும். சுமார் 280 பிரிவுகளை ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். மேலும் நண்பர்களே, நமது சீர்திருத்தங்கள் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, மூத்த குடிமக்களுக்கு எளிதான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதற்கான சீர்திருத்தங்களையும் நாங்கள் அமல்படுத்தியிருக்கிறோம். சீர்திருத்தங்களின் விளைவால் தான் வருமான வரி திரும்பப்பெறுதல் சரியாக நடக்கிறது. ரொக்கமில்லா மதிப்பீடுகளும் சீர்திருத்தங்களின் பயனாலே நிகழ்ந்தது. ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு என்ற முடிவு தேச கட்டமைப்பில் பங்களிக்க ஆர்வமுடன் இருக்கும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று எவரும் இதற்கு முன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் இன்று நாங்கள் அதை சாத்தியமாக்கி இருக்கிறோம்.
நாட்டின் வலிமை அதிகரிக்கும் போது, அதன் குடிமக்கள் அடையும் பயன்களும் பெருகும். ஆங்கிலேய ஆட்சிக் காலம் முதலே, நாம் தண்டனைச் சட்டத்தின் கீழ் கட்டுப்பட்டிருந்தோம், தண்டனை குறித்த தொடர் அச்சத்துடன் வாழ்ந்து வந்தோம். சுதந்திரத்திற்கு பிறகு 75 ஆண்டுகள் இந்த நிலையே தொடர்ந்தது. தண்டனைச் சட்டத்தை ரத்து செய்து, அதற்கு மாற்றாக இந்திய நியாய சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். இது இந்திய குடிமக்கள் மீது நம்பிக்கையையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்துவதுடன், உணர்திறன் நிறைந்ததாகவும் உள்ளது. சீர்திருத்த பயணத்தைத் துரிதப்படுத்துவதில் நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம், இந்த முயற்சியை வேகமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். எனது செயல்பாடுகள் அனைத்தும் நாட்டிற்கானது, எனக்கானதோ மற்றவருக்கு இன்னல்களை விளைவிப்பதற்காகவோ அல்ல என்பதை நாட்டு மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள், என் போட்டியாளர்கள் மற்றும் இதர தலைவர்கள் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கட்டமைப்பு சீர்திருத்தங்கள், ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், கொள்கை சீர்திருத்தங்கள், நடைமுறை சீர்திருத்தங்கள் அல்லது அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் என அனைத்து வகையான சீர்திருத்தங்களையும் இயக்கமாக மாற்றி இருக்கிறோம்.
மேலும், எனதுருமை நாட்டு மக்களே,
அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்காக, பணிக்குழு ஒன்றை உருவாக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இந்தப் பணிக்குழு தனது செயல்பாட்டை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவேற்றும். தற்போதைய விதிகள், சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் முதலியவை, 21-வது நூற்றாண்டுக்கு தகுந்தவாறும், உலகளாவிய சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்கவும் திருத்தியமைக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இதை அடைவதற்காக பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
தங்களது எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் அனைவருக்கும் இந்த சீர்திருத்தங்கள் துணிச்சலை வழங்கும். நமது புத்தொழில் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் தங்களது இணக்க செலவுகளில் கணிசமான சரிவை எதிர்கொள்வதுடன், இது அவர்களுக்கு புதிய ஆற்றலை அளிக்கும். இறக்குமதித் துறையிலும், சரக்குப் போக்குவரத்து மற்றும் அமைப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவர்களுக்கு பெரும் நன்மையைத் தரும்.
நண்பர்களே,
நம் நாட்டில் சாதாரண விஷயங்களுக்கும் சிறை தண்டனை விதிக்கும் சட்டங்கள் இருப்பது, ஆச்சரியமாகத் தோன்றினாலும் அதை யாரும் கவனிக்கவில்லை. இதுபோன்று இந்திய குடிமக்களுக்கு சிறை தண்டனை வழங்கும் தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். முன்னர், நாடாளுமன்றத்தில் இது குறித்த மசோதாவை நாங்கள் தாக்கல் செய்திருந்தோம்; இந்த முறையும் அதை கவனத்தில் கொண்டு வந்துள்ளோம்.
நண்பர்களே,
எதிர்வரும் தீபாவளி திருநாளை, உங்களுக்கு இரட்டை தீபாவளி பண்டிகையாக நான் மாற்றவிருக்கிறேன். இந்த தீபாவளியின் போது நாட்டு மக்களாகிய உங்களுக்கு மிகப்பெரிய பரிசு ஒன்று காத்திருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரியில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், நாடு முழுவதும் வரிச் சுமையைக் குறைத்திருக்கிறோம், வரி முறையை எளிமைப்படுத்தி இருக்கிறோம். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதை மீண்டும் ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. உயர் அதிகாரம் வாய்ந்த குழுவை அமைத்து ஆய்வை நாங்கள் தொடங்கினோம், மாநிலங்களுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தினோம்.
எனதருமை நாட்டு மக்களே,
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறோம். உங்களுக்கான தீபாவளி பரிசாக இது இருக்கும். சாமானிய மக்களுக்குத் தேவையான வரிகள் கணிசமாகக் குறைக்கப்படுவதுடன், ஏராளமான வசதிகளும் ஏற்படுத்தப்படும். நமது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், சிறிய தொழில்முனைவோர் இதனால் பெரிதும் பயனடைவார்கள். அன்றாட பொருட்களின் விலை வெகுவாகக் குறைவதுடன், இதனால் நமது பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம் கிடைக்கும்.
எனதருமை நாட்டு மக்களே,
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறும் முனைப்புடன் இன்று நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இந்த இலக்கை வெகு விரைவில் நாம் அடைந்து விடுவோம். செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளும் நாள் விரைவில் வரும். இன்று இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து ஒட்டுமொத்த உலகமும் நம்பிக்கை கொண்டுள்ளது. நிலையற்ற தன்மைக்கு மத்தியில், நாட்டின் நிதிக்கான ஆதாரமாக விளங்கும் இந்தியாவின் நிதித்துறை, நம்பிக்கை ஒளியாக தொடர்கிறது. நெருக்கடியின் பிடியில் பொருளாதாரம் சிக்கித் தவிக்கும் வேளையில், தங்களை மீட்டெடுக்கும் ஆற்றல் இந்தியாவிடம் மட்டும்தான் உள்ளது என்ற நம்பிக்கை உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இன்று பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் வலுவாக உள்ளது, நமது நுண் பொருளாதார குறிக்காட்டிகளும் மிகவும் வலிமையாக உள்ளது, இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்து, உலகளாவிய மதிப்பீட்டு முகமைகளும் பாரதத்தைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றன. வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பயன்கள் நாட்டின் ஏழைகள், விவசாயிகள், பெண்கள், நடுத்தர வகுப்பினரைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவும், எனது நாட்டின் வளர்ச்சிக்கான ஆற்றல் சக்தியாக இது மாற வேண்டும் என்பதற்காகவும் நாங்கள் புதிய முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
இன்று நமது இளைஞர்களுக்கு புதிய துறைகளில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு, பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் இளைஞர்களாகிய உங்களுக்கும் இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை நான் கொண்டு வந்துள்ளேன். இன்று ஆகஸ்ட் 15-ம் தேதி. நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் ஒன்றை இன்று நாங்கள் அறிமுகப்படுத்தி அமல்படுத்தவிருக்கிறோம். பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம், ஆகஸ்ட் 15 ஆன இன்று அமல்படுத்தப்படுகிறது. இது உங்களுக்கு மிக நல்ல செய்தி. இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் துறையில் வேலை கிடைக்கும் ஒவ்வொரு மகன் அல்லது மகளுக்கும் அரசு 15 ஆயிரம் ரூபாயை வழங்கும். புதிய வேலைகளை வழங்குவதற்காக வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம், சுமார் 3.5 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இளைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே,
இந்தியாவில் பெண்களின் ஆற்றலை அனைவரும் இன்று அங்கீகரிக்கத் துவங்கி விட்டனர். வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பயனாளிகளாக நமது பெண்கள் இருக்கிறார்கள், அதே வேளையில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் நமது பெண்களும் முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். நமது அன்னை சக்தியும், மகளிர் சக்தியும் பங்களித்திருக்கின்றன. புத்தொழில் நிறுவனங்கள் முதல் விண்வெளி வரை நமது மகள்கள் கோலோச்சுகிறார்கள். விளையாட்டுத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் அவர்கள், ராணுவத்தில் மிளிர்கிறார்கள், தோளோடு தோள் நின்று, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பெருமிதத்துடன் அவர்கள் பங்கேற்கிறார்கள். தேசிய பாதுகாப்பு அகாடமியில் முதல் பெண் வீராங்கனை பயிற்சியை நிறைவு செய்து வெற்றிகரமாக வெளிவந்த போது நாடு பெருமையால் திளைத்தது. ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொண்டதுடன், அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் அவரைப் பின்தொடர்ந்தன. எவ்வளவு பெருமையான தருணம் அது! சுய உதவிக் குழு, 10 கோடி சுய உதவிக் குழுக்களின் சகோதரிகள் ஆச்சரியமூட்டும் செயல்களை செய்கின்றனர். நமோ ட்ரோன் சகோதரி, மகளிர் சக்தியின் புதிய அடையாளமாக மாறியது. கிராமத்தில் நான் ஒரு சகோதரியை சந்தித்தேன், கிராம மக்கள் தன்னை விமானி என்று அழைப்பதாக அவர் கூறினார். தாம் அதிகம் படிக்கவில்லை என்றாலும், சிறந்த நிலையை அடைந்துள்ளதாக மிகவும் பெருமதத்துடன் அவர் கூறினார்.
நண்பர்களே,
3 கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்ற நாங்கள் உறுதி ஏற்றிருந்தோம். அந்த முயற்சியில் மிக வேகமாக நாங்கள் பயணிப்பதை அறிந்து திருப்தி அடைகிறேன். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே 3 கோடி என்ற இலக்கை நாங்கள் அடைந்து விடுவோம். மகளிர் சக்தியின் ஆற்றலைப் பாருங்கள், குறுகிய காலத்தில் 2 கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறிவிட்டார்கள் என்று நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று சில லட்சாதிபதி சகோதரிகள் நம்முன் அமர்ந்திருக்கிறார்கள். இதுதான் எனது வலிமை, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களது பங்களிப்பை இது அதிகரிக்கும்.
எனதருமை நாட்டு மக்களே,
இந்தியாவின் பொருளாதாரத்தில், நாட்டின் விவசாயிகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இந்திய விவசாயிகளின் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைத்து வருகின்றன. கடந்த ஆண்டு தானிய உற்பத்தியில் எனது நாட்டு விவசாயிகள் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தார்கள், இதுதான் எனது நாட்டின் திறன். அதே அளவிலான நிலம் தான். எனினும் அமைப்பு முறைகள் மாறி இருக்கின்றன, தண்ணீர் சென்றடைய துவங்கி விட்டது, தரமான விதைகள் கிடைக்க துவங்கிவிட்டன, விவசாயிகளுக்கு மேம்பட்ட வசதிகள் கிடைக்கின்றன, எனவே அவர்கள் நாட்டிற்காக தங்களது ஆற்றலை அதிகரிக்கிறார்கள். பால், பருப்பு வகைகள் மற்றும் சணல் உற்பத்தியில் இன்று உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளராக நாம் இருக்கிறோம். மீனவர் சகோதர சகோதரிகளின் ஆற்றலைப் பாருங்கள். மீன் உற்பத்தியில் இன்று உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. அரிசி, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியிலும் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நண்பர்களே,
எனது நாட்டு விவசாயிகளின் விளைபொருட்கள் உலக சந்தையை அடைகின்றன என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனது நாட்டின் விவசாயிகள் தங்களது வலிமையை நிரூபித்திருக்கிறார்கள். சிறிய விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள், மீனவர்கள் என அனைவருக்கும் நாட்டின் வளர்ச்சித் திட்டப் பயன்களை வழங்குகிறோம். பிரதமரின் கிசான் சம்மான் நிதி, மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பாசன திட்டங்கள், தரமான விதைகள், உர தேவை என ஒவ்வொரு துறையிலும் பயிர் காப்பீட்டில் இன்று விவசாயிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர். விவசாயி, துணிச்சல் மிக்கவராகிறார், நாடும் அதன் பலன்களைப் பெறுகிறது. முன்னர் இது கற்பனைக்கு உகந்த விஷயமாக இருந்தது, ஆனால் இன்று உண்மையாகிவிட்டது.
நாட்டு மக்களே,
நாட்டின் கால்நடைகளின் பாதுகாப்பு என்று வரும்போது, கோவிட் தடுப்பூசியை இலவசமாகப் பெற்றதை நாம் நினைவில் கொண்டிருப்போம். அதே வேளையில் இதுவரை 125 டோஸ்களை விலங்குகளுக்கு இலவசமாக செலுத்தி இருக்கிறோம். வட இந்தியாவில் ‘குர்பகா’ என்று அழைக்கப்படும் கோமாரி நோயைக் கட்டுப்படுத்துவதற்காக 125 கோடி டோஸ்களை இலவசமாக வழங்கி இருக்கிறோம். விவசாயத்தைப் பொறுத்தவரை ஏதேனும் காரணங்களால் பிறரை விட விவசாயிகள் பின் தங்கியிருக்கும், வேளாண் செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும் அவர்களுக்கு உதவிகளை வழங்கவும் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். நாட்டின் 100 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த திட்டம் சிறு உதவிகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் இதர விவசாயிகளுக்கு போட்டியாக அவர்களாலும் செயல்பட முடியும்.
எனதருமை நாட்டு மக்களே,
இந்தியாவின் விவசாயிகள், இந்தியாவின் கால்நடை பராமரிப்பாளர்கள், இந்தியாவின் மீனவர்கள், இவர்கள்தான் எங்களது மிகப் பெரிய முன்னுரிமைகள். இந்திய விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொள்கைகளுக்கு எதிராக மோடி உறுதியாக நிற்கிறார். தனது விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள் மற்றும் மீனவர்களின் விஷயத்தில் இந்தியா எந்த ஒரு சமரசத்தையும் ஏற்றுக் கொள்ளாது.
அன்பார்ந்த நாட்டு மக்களே,
வறுமை என்றால் என்ன என்று புத்தகம் படித்து நான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அதைப்பற்றி எனக்கு தெரியும். நான் அரசிலும் அங்கம் வகித்திருக்கிறேன், எனவே அரசு என்பது கோப்புகளுடன் மட்டுமே சுருங்கி விடக்கூடாது என்பது எனது கருத்து. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசு இடம்பெற்றிருக்க வேண்டும்.
தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள் அல்லது நலிவடைந்தவர்களாக இருந்தாலும், அரசுகள் அவர்களுக்கு ஆதரவான நேர்மறையான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும், மக்களை மையமாகக் கொண்டு அரசுகள் இயங்க வேண்டும். இந்தப் பாதையில் நாங்கள் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறோம். அரசின் திட்டங்கள் முன்னரே செயல்பட்டன என்று சிலர் கூறுவர். அப்படி அல்ல, அடித்தட்டு அளவில் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அரசு திட்டங்களை அமல்படுத்துகிறோம். அனைவருக்கும் சென்றடைவதை நாங்கள் வலியுறுத்துகிறோம், ஏனென்றால் சமூக நீதியை உண்மையாக நிறைவேற்ற வேண்டுமென்றால், தகுதி வாய்ந்த ஒரு நபர் கூட விடுபட்டு விடக்கூடாது. அதற்கு தகுதி வாய்ந்த நபரின் இல்லத்திற்கே அரசு நேரடியாக சென்று அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அதை நோக்கி நாங்கள் பணியாற்றுகிறோம்.
மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டபோது, அது சாதாரண வங்கிக் கணக்கை திறக்கும் விஷயமாக இருக்கவில்லை- வங்கியின் கதவுகள் எனக்காகவும் திறக்கின்றன, நானும் வங்கியினுள் நுழையலாம், மேஜை மீது கை வைத்து பேச முடியும் என்ற உணர்வுடன் சுயமரியாதையை இது மக்களுக்கு வழங்கியது. இந்த தன்னம்பிக்கையைத் தான் நாங்கள் ஊட்டியிருக்கிறோம். அமைதியாக இருந்து நோயின் அவஸ்தையை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தில் இருந்து மக்களை ஆயுஷ்மான் பாரத் விடுவித்து, சிறந்த சுகாதார சேவையை அவர்கள் பெற உதவியது. தங்களது சுகாதார தேவைகளுக்காக 5 லட்சம் ரூபாய் வரை மூத்த குடிமக்களுக்கு வழங்குவது, அவர்களது நலனில் நாங்கள் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. இன்று பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நான்கு கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன- இதன் பொருள், அவர்களது வாழ்வில் புதிய கனவுகள் வேரூன்றுகின்றன என்பதாகும். நண்பர்களே, வீடு என்பது வெறும் நான்கு சுவர்கள் அல்ல. சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் அதிக வட்டி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தவித்து வந்த வியாபாரிகளுக்கு, இந்தத் திட்டம், சுமூகமாக அவர்கள் வர்த்தகம் மேற்கொள்ள வழிவகை செய்தது. சாலையோர வியாபாரிகள் கூட இன்று யுபிஐ மூலம் கட்டணங்களை ஏற்றுக் கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சமூகத்தின் கடைநிலை நபரின் வாழ்விலும் கூட அரசு இயங்க வேண்டும் என்பதை இந்த மாற்றம் உணர்த்துகிறது. அதனால்தான் இது போன்ற அடித்தட்டு மக்களுக்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுவதுடன், அவை வளர்ச்சிபெறும் போது மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஊடகமாக மாறுகின்றன. ஒரு காலத்தில் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடி சமூகத்தினர், நலிவடைந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தங்களது உரிமைகளை பெறுவதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் அலைந்து திரிந்தனர். இன்று முழுமையான நிலையை அடையும் அணுகுமுறையுடன் அரசு உங்கள் வீட்டு கதவுகளைத் தட்டுகிறது. அரசு திட்டங்களின் பலன்களை இன்று கோடிக்கணக்கான பயனாளிகள் பெறுகிறார்கள். நேரடி பலன் பரிவர்த்தனை என்பது உண்மையிலேயே புரட்சிகரமான நடவடிக்கை.
நண்பர்களே,
வறுமை ஒழிப்பு என்ற முழக்கத்தை செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து கூட பலமுறை நாட்டு மக்கள் கேட்டிருப்பார்கள். மீண்டும் மீண்டும் அதை கேட்டு நாடே சோர்ந்து போய்விட்டது. வறுமையை ஒழிக்க முடியாது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் திட்டங்களை ஏழைகளின் இல்லங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லும்போது, அவர்களது மனங்களில் தன்னம்பிக்கையை விதைக்கும் போது, 25 கோடி ஏழை மக்கள் வறுமையை வென்று புதிய வரலாறு படைக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு “புதிய நடுத்தர வகுப்பு” எனும் பிரிவை உருவாக்கி இருக்கிறார்கள்.
நண்பர்களே,
இந்த புதிய நடுத்தர வர்க்கமும், தற்போதுள்ள நடுத்தர வர்க்கமும், லட்சியங்கள் மற்றும் முயற்சிகள் இரண்டாலும் நிறைந்த ஒரு கூட்டாண்மையை உருவாக்குகின்றன, மேலும் இது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் ஒரு பெரிய பலமாக மாறப்போகிறது.
எனது அன்பான நாட்டு மக்களே,
மிக விரைவில், சிறந்த சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா ஃபூலேவின் 200வது பிறந்தநாளை நாம் கொண்டாடுவோம். இந்த ஆண்டு விழாவிற்கான கொண்டாட்டங்களை நாம் தொடங்க உள்ளோம். மகாத்மா ஜோதிபா ஃபூலேவின் கொள்கைகளும் “பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை” என்று அவர் நமக்கு வழங்கிய மந்திரங்களும் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், மாற்றத்தின் உச்சத்தை அடைய விரும்புகிறோம். இதற்காக நமது அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள விரும்புகிறோம். வெளிப்படையான கொள்கைகள் மூலம், “பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை” என்பதை அடித்தட்டு நிலையில் ஒரு எதார்த்தமாக்க விரும்புகிறோம், அதை ஒவ்வொரு பின்தங்கிய நபரின் வாழ்க்கையிலும் கொண்டு வர விரும்புகிறோம்.
நண்பர்களே,
சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வநிதி திட்டம், நமது திறமையான கைவினைஞர்களுக்கான விஸ்வகர்மா திட்டம், பழங்குடி சமூகங்களிடையே மிகவும் பின்தங்கியவர்களுக்கான பிரதமரின் ஜன் மன் திட்டம் அல்லது கிழக்கு பாரதத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் சமமாக கொண்டு வந்து தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்குவதற்கான நமது முயற்சிகள் என எதுவாக இருந்தாலும், சமூக ரீதியாக பின்தங்கிய குழுக்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலைப்படவில்லை, பின்தங்கிய பகுதிகளுக்கும் முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம். பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம். பின்தங்கிய தொகுதிகளுக்கும் முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம். முன்னேற விரும்பும் 100 மாவட்டங்கள் மற்றும் முன்னேற விரும்பும் 500 தொகுதிகளுக்கும் நாங்கள் அதே நோக்கத்துடன் பணியாற்றியுள்ளோம். கிழக்கிந்தியாவின் மக்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கத்துடனும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அந்தப் பகுதியை ஒரு தீவிர பங்கேற்பாளராக மாற்றும் நோக்கத்துடனும், அங்கு வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
எனது அன்பான நாட்டு மக்களே,
வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். விளையாட்டுக்கும் வளர்ச்சியில் முக்கிய பங்கு உண்டு. குழந்தைகள் விளையாட்டில் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் வெறுத்த ஒரு காலம் இருந்தது; இன்று, நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. குழந்தைகள், விளையாட்டில் முன்னேறி, அதன் மீது ஆர்வம் காட்டினால், பெற்றோர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இதை ஒரு நல்ல அறிகுறியாக நான் பார்க்கிறேன். என் நாட்டின் குடும்பங்களுக்குள் விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும் சூழலைக் காணும்போது, என் இதயம் பெருமையால் பொங்கி எழுகிறது. நாட்டின் எதிர்காலத்திற்கு இதை மிகவும் நல்ல அறிகுறியாக நான் கருதுகிறேன்.
நண்பர்களே,
விளையாட்டை ஊக்குவிப்பதற்காக, தேசிய விளையாட்டுக் கொள்கையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கான விரிவான முயற்சியாக, பல தசாப்தங்களுக்குப் பிறகு, நாட்டில் ‘கேலோ இந்தியா கொள்கை‘யை அறிமுகப்படுத்தியுள்ளோம். பள்ளி முதல் ஒலிம்பிக் வரை, பயிற்சியில், உடற்பயிற்சி விஷயங்களில், விளையாட்டு மைதானங்களில், விளையாட்டுகளுக்கான வசதிகளில், விளையாட்டுகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதில் அல்லது விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய சிறு தொழில்களுக்கு உதவுவதில் ஒரு முழு சூழலியலையும் உருவாக்க விரும்புகிறோம். அதாவது, இந்த முழு சூழலியலையும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் கூட எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.
ஆனால் நண்பர்களே,
நான் உடற்பயிற்சி பற்றிப் பேசும்போது, விளையாட்டு பற்றிப் பேசும்போது, ஒரு கவலைக்குரிய விஷயத்தையும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் பருமன் நமது நாட்டிற்கு மிகவும் மோசமான நெருக்கடியாக மாறி வருகிறது. வரும் ஆண்டுகளில், மூன்றில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவார் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடல் பருமனிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்கு, பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும் அதே வேளையில், நான் ஒரு சிறிய யோசனையை முன்வைத்தேன். வீட்டிற்குள் சமையல் எண்ணெய் வரும்போது, அது வழக்கத்தை விட 10% குறைவாக இருக்க வேண்டும் என்றும், அதன் பயன்பாடும் 10% குறைவாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பமும் தீர்மானிக்க வேண்டும் என்பது தான் அது. அவ்வாறு செய்வதன் மூலம், உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு நாம் நமது பங்களிப்பைச் செய்வோம்.
என் அன்பான நாட்டு மக்களே,
நமது தேசம் அதிர்ஷ்டமானது – ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தின் வாரிசுகள் நாம், அதிலிருந்து நாம் தொடர்ந்து ஆற்றல், உத்வேகம் மற்றும் தியாகம் மற்றும் தவத்தின் பாதையைப் பெறுகிறோம். நமது கலாச்சாரம் மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்த குரு தேக் பகதூர் அவர்களின் 350வது தியாக ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கிறது. இன்று, நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
நண்பர்களே,
நமது கலாச்சாரத்தின் பலம் நமது பன்முகத்தன்மையில் உள்ளது. பன்முகத்தன்மையைக் கொண்டாடும் பழக்கத்தை வளர்க்க, பன்முகத்தன்மையைக் கொண்டாட விரும்புகிறோம். பாரத மாதா, ஒரு அற்புதமான தோட்டத்தைப் போல, எண்ணற்ற வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதும், ஒவ்வொன்றும் அதன் வளமான பன்முகத்தன்மைக்கு கூடுதல் மெருகூட்டுவதும் நமது பெருமை. இந்த பன்முகத்தன்மை நமது பெரிய மரபு மற்றும் பெரிய பெருமை. பிரயாக்ராஜில் நடந்த ‘மகா கும்பமேளாவில்‘ பாரதத்தின் பன்முகத்தன்மை எவ்வாறு நீடிக்கிறது என்பதை நாம் கண்டோம். கோடிக்கணக்கான மக்கள், ஒரே உணர்ச்சியில், ஒரே மனப்பான்மையில், ஒரே முயற்சியில் ஒன்றுபட்டது, உலகிற்கு உண்மையிலேயே அற்புதமானதாகத் தோன்றியது. ‘மகா கும்பமேளா‘வின் வெற்றி பாரதத்தின் ஒற்றுமை மற்றும் வலிமைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
நண்பர்களே,
நமது நாடு மொழியியல் பன்முகத்தன்மையால் நிறைந்துள்ளது. அதனால்தான் மராத்தி, அசாமி, வங்காளம், பாலி மற்றும் பிராகிருத மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளோம். என்னைப் பொறுத்தவரை, நமது மொழிகள் எவ்வளவு வளர்ச்சியடைகின்றனவோ, எவ்வளவு வளமடைகின்றனவோ, நமது ஒட்டுமொத்த அறிவுசார் அமைப்புமுறையும் அவ்வளவு வலுவடையும். இதுவே நமது பலம். நமது மொழிகளின் சக்தி இதுதான், இன்றைய தரவு யுகத்தில், இது உலகிற்கு ஒரு பெரிய பலமாகவும் மாறக்கூடும். நமது அனைத்து மொழிகளைப் பற்றியும் நாம் பெருமைப்பட வேண்டும், மேலும் அனைவரும் அவற்றின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.
நண்பர்களே,
நமது கையெழுத்துப் பிரதிகள் ஏராளமான அறிவுப் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளன, ஆனால் அவற்றின் மீது அலட்சியம் காட்டப்பட்டுள்ளது. ஞான பாரதம் இயக்கத்தின் கீழ், கையால் எழுதப்பட்ட நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான ஆவணங்களைக் கண்டறியவும், எதிர்கால சந்ததியினருக்காக அவற்றின் அறிவுச் செல்வத்தைப் பாதுகாக்க இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் நாடு முழுவதும் நாங்கள் இப்போது பணியாற்றி வருகிறோம்.
என் அன்பான நாட்டு மக்களே,
இந்த நாடு அரசுகளால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை; அரசு அதிகாரத்தை வைத்திருப்பவர்களால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை; ஆட்சியை நிர்வகிப்பவர்களால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை என்பது எங்கள் தெளிவான நம்பிக்கை. இந்த நாடு கோடிக்கணக்கான மக்களின் உழைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது. முனிவர்கள், துறவிகள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், விவசாயிகள், வீரர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவரின் முயற்சியும் தேசத்தைக் கட்டியெழுப்புவத்தில் பங்களிக்கின்றன. பங்களிப்புகள் தனிநபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் வருகின்றன. இன்று, மிகுந்த பெருமையுடன், அத்தகைய ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நிறுவப்பட்டது. இந்த 100 ஆண்டுகால தேச சேவை ஒரு பெருமைமிக்க மற்றும் பொன்னான அத்தியாயத்தை உருவாக்குகிறது. பாரத அன்னைக்கு சேவை செய்யும் நோக்கத்துடன், குணநலன்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் உறுதியுடன், ஸ்வயம்சேவகர்களே, ஒரு நூற்றாண்டு காலமாக, தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். சேவை, அர்ப்பணிப்பு, அமைப்பு மற்றும் ஒப்பிடமுடியாத ஒழுக்கம் – இவை அதன் அடையாளங்களாகும். ஒரு வகையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனமாகும், இது ஒரு நூற்றாண்டு கால பக்தி வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்று, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, இந்த நூற்றாண்டு கால தேசிய சேவைப் பயணத்திற்கு பங்களித்த அனைத்து ஸ்வயம்சேவகர்களையும் நான் வணங்குகிறேன், மேலும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இந்த மகத்தான மற்றும் அர்ப்பணிப்புள்ள பயணத்தில் தேசம் பெருமை கொள்கிறது, இது தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும்.
என் அன்பான நாட்டு மக்களே,
நாம் செழுமையை நோக்கி நகர்கிறோம், ஆனால் செழிப்புக்கான பாதை பாதுகாப்பின் வழியாகவே செல்கிறது. கடந்த 11 ஆண்டுகளில், தேசிய பாதுகாப்பு, நாட்டைப் பாதுகாத்தல் மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். மாற்றத்தைக் கொண்டு வருவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். நமது நாட்டின் பரந்த பழங்குடிப் பகுதிகள் பல தசாப்தங்களாக நக்சலிசம் மற்றும் மாவோயிசத்தின் பிடியில் ரத்தக்களரியாக நனைந்திருப்பதை நாடு அறிந்திருக்கிறது. எனது பழங்குடி குடும்பங்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்தன – பழங்குடி தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் பிரகாசமான, நம்பிக்கைக்குரிய குழந்தைகளை இழந்தனர்; இளம் மகன்கள் தவறான பாதையில் இழுக்கப்பட்டு, தவறாக வழிநடத்தப்பட்டு, அவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டது. நாங்கள் உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தோம். 125 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சலிசம் வேரூன்றிய ஒரு காலம் இருந்தது. நமது பழங்குடிப் பகுதிகளும் இளைஞர்களும் மாவோயிசத்தின் பிடியில் சிக்கினர். 125க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து இன்று இந்த எண்ணிக்கையை வெறும் 20 மாவட்டங்களாகக் குறைத்துள்ளோம். இது நமது பழங்குடி சமூகங்களுக்கு செய்த மிகப்பெரிய சேவையாகும். பஸ்தார் என்ற பெயரே மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட்டுகளின் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் சத்தங்களை எழுப்பிய ஒரு காலம் இருந்தது. இன்று, மாவோயிசம் மற்றும் நக்சலைட் வாதத்திலிருந்து விடுபட்ட பிறகு, பஸ்தாரின் இளைஞர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள்; ஆயிரக்கணக்கான இளைஞர்கள், “பாரத் மாதாவுக்கு ஜே” என்று கூச்சலிட்டு, விளையாட்டுத் துறையில் நுழைகிறார்கள், முழு சூழ்நிலையும் உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது. இந்த மாற்றத்தை நாடு காண்கிறது. ஒரு காலத்தில் “சிவப்பு வழித்தடம்” என்று அழைக்கப்பட்ட பகுதிகள் இப்போது பசுமை வளர்ச்சியின் வழித்தடங்களாக மாறி வருகின்றன. இது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம். ஒரு காலத்தில் ரத்தத்தால் சிவப்பு நிறத்தில் கறை படிந்த பாரதத்தின் வரைபடத்தில், இப்போது அரசியலமைப்பு, சட்டவிதி மற்றும் வளர்ச்சியின் மூவண்ணக் கொடியை ஏற்றியுள்ளோம்.
எனது அன்பான நாட்டு மக்களே,
இந்த ஆண்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த ஆண்டாகும். இந்தப் பழங்குடியினர் பிராந்தியங்களை நக்சலிசத்தின் பிடியில் இருந்து விடுவித்ததன் மூலமும் என்னுடைய பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்வைக் காப்பாற்றியதன் மூலமும் நாம் அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
எனது அன்பான நாட்டு மக்களே,
இன்று நான் தேசத்திற்கு ஒரு ஆழ்ந்த கவலை மற்றும் சவால் குறித்து எச்சரிக்க விரும்புகின்றேன். திட்டமிட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் மக்கள் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன, புதிய நெருக்கடியின் விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஊடுருவல்காரர்கள் நமது இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பறித்துக் கொள்கின்றனர், இந்த ஊடுறருவல்காரர்கள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களை குறி வைக்கின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த ஊடுருவல்காரர்கள் அப்பாவியான பழங்குடியினர்களை தவறாக வழிநடத்தி அவர்களின் நிலங்களை அபகரிக்கின்றனர். நாடு இதைப் பொறுத்துக் கொள்ளாது. மக்கள்தொகையில் மாற்றம் ஏற்பட்டால், குறிப்பாக எல்லைப்புறப் பகுதிகளில் ஏற்பட்டால், அது தேசியப் பாதுகாப்பிற்கு நெருக்கடியை உருவாக்குவதாக அமையும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கு அது அச்சுறுத்தலாக இருக்கும். இது சமூகப் பதற்றத்தின் விதைகளை விதைக்கிறது. எந்தவொரு நாடும் ஊடுருவல்காரர்களிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்ளாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது – அப்படியென்றால் பாரதம் அவ்வாறு செய்வதற்கு நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும். நமது முன்னோர்கள் தியாகத்தின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றார்கள்; அவர்கள் நமக்கு சுதந்திரமான பாரதத்தை வழங்கினார்கள். நமது நாட்டிற்குள் அத்தகைய செயல்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது என்பது அத்தகைய மேன்மையான மனிதர்களுக்கு நாம் செலுத்தும் கடமையாகும். இதுவே அவர்களுக்கான உண்மையான அஞ்சலி. ஆகவே, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து ஒரு உயர் ஆற்றல் மக்கள்தொகை இயக்கத்தைத் தொடங்க நாங்கள் முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கின்றேன். இந்த இயக்கத்தின் வாயிலாக பாரதத்தின் மீது தற்போது ஏற்பட்டுவரும் கடுமையான நெருக்கடியானது திட்டமிட்ட முறையிலும் குறிப்பிட்ட காலக்கெடுவிலும் தீர்த்து வைக்கப்படும். இந்த திசையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்.
எனது அன்பான நாட்டு மக்களே,
நாளை நாடு முழுவதும் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விழாவாக கொண்டாடப்படுகின்றது.
நண்பர்களே,
பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நான் நினைவுகூறும்போது இன்று உலகம் முழுவதும் போர் முறைகள் மாறிக்கொண்டு வருவதை நாம் காண்கின்றோம். எந்தவொரு புதிய போர் முறையையும் கையாள்வதற்கானத் திறன் இந்தியாவிற்கு உள்ளது என்பதை நாம் கண்டிருக்கிறோம். நம்மிடம் உள்ள தொழில்நுட்ப நிபுணத்துவத்தை நாம் ஆபரேஷன் சிந்தூரில் காட்டியுள்ளோம். பாகிஸ்தான் நமது இராணுவ தளங்கள், நமது விமானப்படைத் தளங்கள், நமது உணர்வுப்பூர்வமான இடங்கள், நமது வழிபாட்டுத் தளங்கள், நமது குடிமக்கள் மீது எண்ணற்ற முறை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. நாடு இதை கண்டிருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. அந்த ஆற்றலின் விளைவாக எதிரிகளின் ஒவ்வொரு தாக்குதலும் நமது தைரியமிக்க வீரர்களாலும் நமது தொழில்நுட்பத்தாலும் வைக்கோல் போன்று சிதறடிக்கப்பட்டன. அவர்களால் சிறிதளவு சேதத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை போர்க்களத்தில் தொழில்நுட்ப பயன்பாடு விரிவடைந்து வரும்போது தொழில்நுட்பமே ஆதிக்கம் செலுத்துவதாக மாறிவருகின்றது. ஆகவே நாட்டை பாதுகாப்பதற்காகவும் நாட்டு குடிமக்களின் பாதுகாப்பிற்காகவும் இன்று நாம் பெற்றுள்ள தொழில்துறை நிபுணத்துவத்தை மேலும் நீட்டிக்க வேண்டிய தேவையில் உள்ளோம். இன்று நாம் அடைந்துள்ள வல்லமை தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். எனவே, நண்பர்களே, நான் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன். எனக்கு உங்களின் ஆசிர்வாதங்கள் தேவை. கோடிக்கணக்கான நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள் தேவை. ஏனென்றால் இங்கு எவ்வளவு செழுமை இருந்தாலும் பாதுகாப்பில் அலட்சியம் இருக்குமேயானால் அந்த செழுமையால் எந்தவிதமான பயனும் ஏற்படாது. ஆகவே பாதுகாப்பின் முக்கியத்துவம் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
ஆகவே இன்று நான் செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து கூறுகிறேன், அடுத்துவரும் பத்தாண்டுகளில் அதாவது 2035ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து முக்கியமான இடங்களும் போர் மூலோபாய இடங்கள் மற்றும் மருத்துவமனைகள், ரயில்வேக்கள் எந்தவொரு மதநம்பிக்கை இடம் போன்ற பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் புதிய தொழில்நுட்ப முறைகளின் வாயிலாக முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும். இந்த பாதுகாப்புக் கவசம் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகளும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வேண்டும். நம்மை தாக்குவதற்கு எந்தவொரு தொழில்நுட்பம் முன்வந்தாலும் நமது தொழில்நுட்பம் அதைவிட சிறந்தது என்று நிரூபிக்க வேண்டும். ஆதலால் 2035க்குள் அடுத்துவரும் பத்தாண்டுகளில் இந்த தேசிய பாதுகாப்பு கவசத்தை நீட்டிக்கவும் வலுப்படுத்தவும் நவீனப்படுத்தவும் நான் விரும்புகின்றேன். ஆகவே, பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து உந்துதல் பெற்று நாம் ஸ்ரீகிருஷ்ணரின் சுதர்சன சக்ர பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். மகாபாரதப் போர் நடந்து கொண்டிருக்கும்போது ஸ்ரீகிருஷ்ணர் சூரிய ஒளியை தனது சுதர்சன சக்கரத்தால் தடுத்து பகலை இரவாக்கினார் என்று உங்களில் பலருக்கும் தெரியும். சுதர்சன சக்கரத்தால் சூரியஒளி தடுக்கப்பட்டு ஜெயத்ரதனை கொல்வேன் என்று தான் எடுத்த சபதத்தை அர்ச்சுணன் நிறைவேற்ற முடிந்தது. இதுவே சுதர்சன சக்கரத்தின் வலிமை மற்றும் செயல்உத்தி ஆகும். இப்பொழுது நாடு சுதர்சன சக்கர இயக்கத்தை தொடங்கும். ஆற்றல்மிக்க ஆயுத அமைப்பான இந்த சுதர்சன சக்கர இயக்கம் எதிரியின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதோடு எதிரியை பலமடங்கு அதிகமாகத் திருப்பித் தாக்கும்.
இந்தியாவின் இந்த சுதர்சன சக்கர இயக்கத்திற்கு சில அடிப்படை அம்சங்களை நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடுத்து வரும் பத்தாண்டுகளில் இதை மிகத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புகின்றோம். முதலாவதாக இந்த ஒட்டுமொத்த நவீன அமைப்பு, அதன் ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றம் அதன் உற்பத்தி ஆகியன நமது நாட்டிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதை நம் நாட்டின் இளைஞர்களின் திறமையைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும்; இதை நாம் நாட்டு மக்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக எதிர்கால போர்முறைகளின் வாய்ப்புகளை கணக்கிடுவதற்கான ஒரு அமைப்பு வேண்டும். கூடுதலாக ஒரு போர் உத்தியை வகுக்க வேண்டும். மூன்றாவது விஷயம் எதுவெனில் சுதர்சன சக்கரத்தின் ஆற்றலாகும். இது மிகவும் துல்லியமானது, இது எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று மீண்டும் ஸ்ரீகிருஷ்ணரிடமே வந்து சேர்ந்து விடும். இந்த சுதர்சன சக்கரத்தின் மூலமாக நாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட துல்லிய செயல்பாட்டிற்கான ஒரு அமைப்பை உருவாக்குவதை நோக்கி செயல்பட வேண்டும். ஆகவே, நாட்டின் பாதுகாப்பிற்காகவும் மாரிவரும் போர் முறைகளில் குடிமக்களின் பாதுகாப்பிற்காகவும் மிகுந்த கடப்பாட்டுடன் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வேன் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன்.
எனது அன்பான நாட்டு மக்களே,
நாம் குடியரசு, சுதந்திரமான இந்தியா என்று பேசும்போது நமக்கான களங்கரை விளக்கமாக நமது அரசியலமைப்பு திகழ்கிறது, அதுவே நமது உந்துதல் மையமாக உள்ளது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பின் கழுத்து நெறிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு முதுகில் குத்தப்பட்டது. நாடே ஒரு சிறைச்சாலையாக மாறியது, அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது, நெருக்கடிநிலை திணிக்கப்பட்டது. நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பிறகும்கூட நாட்டின் எந்தவொரு தலைமுறையினரும் அரசியலமைப்பைக் கொலை செய்த குற்றத்தை எப்பொழுதும் மறக்கமாட்டார்கள். அரசியலமைப்பைக் கொன்ற பாவத்தைச் செய்தவர்களை மறக்க கூடாது. இந்திய அரசியலமைப்பை வலுப்படுத்துவதற்கான நமது அர்ப்பணிப்பை நோக்கி நாம் முன்னேற வேண்டும், அதுவே நமது உத்வேகம் ஆகும்.
எனது அன்பான நாட்டு மக்களே,
இந்த செங்கோட்டையில் இருந்து நான் பஞ்சபுராணா குறித்து பேசி உள்ளேன். செங்கோட்டையில் இருந்து எனது நாட்டு மக்களுக்கு அதை மீண்டும் ஒருமுறை இன்று ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் பாதையில் நாம் நின்றுவிடவோ அல்லது தலைகுனியவோ மாட்டோம். நாம் தொடர்ந்து கடினமாக உழைத்துக் கொண்டிருப்போம். 2047-ல் நம் கண் முன்பாகவே வளர்ச்சியடைந்த இந்தியாவை நாம் உருவாக்குவோம்.
எனது அன்பான நாட்டு மக்களே,
நமது இரண்டாவது உறுதிமொழி என்னவெனில் நம் வாழ்வில், நம் அமைப்பகளில் நமது விதிகள், சட்டங்கள் மற்றும் மரபுகளில் அடிமைத்தனத்தின் ஒரு துகள்கூட எஞ்சியிருக்க நாம் அனுமதிக்க கூடாது. அடிமைத்தனத்தின் அனைத்து வடிவங்களில் இருந்தும் நாம் விடுபடுவது வரை நமக்கு ஓய்வில்லை.
எனது அன்பான நாட்டு மக்களே,
நமது பாரம்பரியம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். நமது அடையாளத்தின் மிகப்பெரும் ஆபரணம், மிகப்பெரும் நகை, மிகப்பெரிய மணிமகுடம் என்பது நமது பாரம்பரியம்தான். நமது பாரம்பரியம் குறித்து நாம் பெருமைப்படுவோம்.
எனது அன்பான நாட்டு மக்களே
இவை அனைத்திலும் ஒற்றுமை என்பதே மிகவும் ஆற்றல்மிக்க மந்திரம் ஆகும். ஆகவே ஒற்றுமையின் இழையை எவர் ஒருவரும் உடைத்துவிட முடியாது என்பது நமது கூட்டு லட்சியமாக இருக்கும்.
எனது அன்பான நாட்டு மக்களே
அன்னை பாரதத்துக்கு நமது கடமைகளை நிறைவேற்றுவது என்பது வழிபாட்டைவிட குறைவானதல்ல, தவத்தைவிட குறைவானதல்ல, ஆராதனையைவிட குறைந்ததல்ல. அதே உணர்வுடன் தாய்நாட்டின் நலனுக்காக நமது கடின உழைப்பை செலுத்தும்போது 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய வேண்டுமென்று நாம் நம்மை அர்ப்பணிப்போம். நம்மிடம் உள்ள எந்வொரு திறமையுடனும் நாம் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிட்டு விடாமல் மேலும் நாம் புதிய வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். அவற்றை உருவாக்கியப் பிறகு 140 கோடி நாட்டு மக்களின் வலிமையுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும், தொடர்ந்து முன்னேறிச் செல்வோம், தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்.
எனது அன்பான நாட்டு மக்களே
நாம் நினைவில் கொள்ள வேண்டும், 140 கோடி நாட்டு மக்களும் நினைவில் கொள்ள வேண்டும். கடுமையாக உழைத்த ஒருவர்தான் வரலாற்றை உருவாக்கி உள்ளார். கடுமையாக பணிபுரிந்த ஒருவர்தான் வரலாற்றை உருவாக்கி உள்ளார். எஃகு பாறைகளை உடைத்த ஒருவர்தான் காலத்தை வளைத்தவர் ஆவார். இதுதான் காலத்தை வளைப்பதற்கான நேரம், இதுவே தருணம், ஆகச்சிறந்த தருணமாகும்.
எனது அன்பான நாட்டு மக்களே
மீண்டும் ஒரு முறை இந்த மிகப்பெரும் சுதந்திரத் திருவிழாவில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இணைந்து நீங்கள் இதைக் கூறுவீர்களா,
ஜெய் ஹிந்த்! ஜெய் ஹிந்த்! ஜெய் ஹிந்த்!
பாரதமாதாவிற்கு ஜே! பாரதமாதாவிற்கு ஜே! பாரதமாதாவிற்கு ஜே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
உங்கள் அனிவருக்கும் மிக்க நன்றி.
***
(Release ID: 2156749)
AD/PLM/RB/TS/RJ
Addressing the nation on Independence Day. https://t.co/rsFUG7q6eP
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
Independence Day is about the resolve of 140 crore Indians and the pride of our shared achievements. pic.twitter.com/W6mWdRrzGr
— PMO India (@PMOIndia) August 15, 2025
Operation Sindoor is a powerful testament to the valour and precision of our forces. pic.twitter.com/zz77Vu08GW
— PMO India (@PMOIndia) August 15, 2025
India has resolved that blood and water will not flow together. pic.twitter.com/kTFBFIfhVZ
— PMO India (@PMOIndia) August 15, 2025
The water that rightfully belongs to India is meant only for India and for the farmers of India. pic.twitter.com/HJoHGzmgwD
— PMO India (@PMOIndia) August 15, 2025
The foundation of Viksit Bharat is Aatmanirbhar Bharat. pic.twitter.com/3TsV2ywXkJ
— PMO India (@PMOIndia) August 15, 2025
For decades, our nation faced terrorism, but now we have set a new normal. pic.twitter.com/057JiCLTdY
— PMO India (@PMOIndia) August 15, 2025
Commitment towards clean energy. pic.twitter.com/JMDdtb8i6Y
— PMO India (@PMOIndia) August 15, 2025
To fulfil the vision of Viksit Bharat, India is building a modern ecosystem in every sector, making the nation self-reliant. pic.twitter.com/jpz1C5XADv
— PMO India (@PMOIndia) August 15, 2025
In recent years, entrepreneurship has grown into a major strength, with youth from smaller cities driving the nation's economy. pic.twitter.com/cvmoWKpGW3
— PMO India (@PMOIndia) August 15, 2025
This is an opportunity to progress, to dream bigger and to dedicate ourselves to greater goals. pic.twitter.com/HO9uCWwkND
— PMO India (@PMOIndia) August 15, 2025
The mantra for every product should be - lower cost, greater value! pic.twitter.com/VPcc5HiFZq
— PMO India (@PMOIndia) August 15, 2025
Today, the mantra for 140 crore Indians should be building a prosperous India. pic.twitter.com/o3UBzoLr2Y
— PMO India (@PMOIndia) August 15, 2025
Vocal for Local. pic.twitter.com/23PibOyiPg
— PMO India (@PMOIndia) August 15, 2025
We will embrace Swadeshi with confidence, not out of necessity and use it to set an example for others when needed. pic.twitter.com/bIrndA3h5e
— PMO India (@PMOIndia) August 15, 2025
India will always protect the interests of its farmers, livestock keepers and fishermen. pic.twitter.com/yeDKCYMuFq
— PMO India (@PMOIndia) August 15, 2025
Today, the government uses a saturation approach to reach everyone and ensure people benefit from its schemes. pic.twitter.com/SjBgIuy584
— PMO India (@PMOIndia) August 15, 2025
We should take pride in all our languages and work together for their growth. pic.twitter.com/JTojpmtYLi
— PMO India (@PMOIndia) August 15, 2025
यही समय है, सही समय है। pic.twitter.com/qEVHtmB3do
— PMO India (@PMOIndia) August 15, 2025
From the ramparts of the Red Fort, talked about the success of Operation Sindoor and the feeling of pride it has invoked in the minds of every Indian. pic.twitter.com/1dJYi93g6O
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
Operation Sindoor has shown why being self-reliant in the world of defence and security matters. Likewise, we need to be self-reliant in areas like technology, space and energy. Through our Nuclear Energy Mission, we aim to increase nuclear energy capacities and involve private… pic.twitter.com/bIQRmg2rO4
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
Aatmanirbharta is the need of the times. Self-reliance is the cornerstone of building a Viksit Bharat. pic.twitter.com/InIXUkasBb
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
India is working on futuristic sectors to power growth and self-reliance.
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
We are going to start a National Deepwater Exploration Mission to harness the potential in this sector.
We will also be increasing our efforts in critical minerals. pic.twitter.com/8QoFDZlCsd
Together, 140 crore Indians will make an eco-system that will realise our dream of an Aatmanirbhar Bharat.
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
Here is my appeal to India’s youth, innovators, scientists, engineers, professionals and various government departments…. pic.twitter.com/559dQJZXpQ
The last decade has witnessed several key reforms but we want to do even more! Our focus will be on structural, regulatory, policy, process and procedural reforms. pic.twitter.com/lrCW98QYzn
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
GST has simplified the tax system for the common citizen.
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
We are working on next generation GST reforms which will further empower common citizens, MSMEs and industries. pic.twitter.com/jxNfAvVo5T
पिछले 11 वर्षों में उद्यमशीलता हमारी बहुत बड़ी ताकत बनी है। आज टियर-2 और टियर-3 सिटी के लाखों युवा भी देश की इकोनॉमी को आगे ले जाने में जुटे हैं। pic.twitter.com/ZesZDW1ndb
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
वोकल फॉर लोकल के मंत्र को हम सबको आगे बढ़ाना है। हमारे हर प्रोडक्ट का मंत्र होना चाहिए- दाम कम, दम ज्यादा! pic.twitter.com/S0yMYsODTH
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
हमारे नौजवान साथियों के लिए इस स्वतंत्रता दिवस का उपहार है- प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना। इससे उनके लिए कई सेक्टर्स में रोजगार के नए अवसर बनने वाले हैं। pic.twitter.com/zK4b1Gku5O
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
स्टार्ट-अप और स्पेस सेक्टर से लेकर स्पोर्ट्स तक देश की विकास यात्रा में हमारी बेटियां अहम भागीदारी निभा रही हैं। नारीशक्ति को इससे एक सशक्त पहचान मिली है। pic.twitter.com/2Nk5gz3BeB
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
खेती के मामलों में पिछड़े रह गए देश के 100 जिलों में हमने पीएम धन-धान्य कृषि योजना आरंभ की है, जिससे इन क्षेत्रों के हमारे किसान भाई-बहनों को बहुत लाभ होने वाला है। pic.twitter.com/49eyW7dIUi
— Narendra Modi (@narendramodi) August 15, 2025