Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பங்களாதேஷ் பிரதமரின் அரசுமுறை பயணத்தின் போது, 05 அக்டோபர் 2019 அன்று பல்வேறு இருதரப்பு திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரை


மாண்புமிகு பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களே,

முக்கிய விருந்தினர்களே,

நண்பர்களே,

நமஸ்காரம்!!

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து, மேலும் மூன்று இருதரப்புத் திட்டங்களை தொடங்கிவைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஓராண்டு காலத்தில், காணொலி காட்சி வாயிலாக 9 திட்டங்களை நாம் தொடங்கியுள்ளோம். இன்று தொடங்கப்படும் மேலும் மூன்று திட்டங்களையும் சேர்த்து, ஓராண்டில் மொத்தம் 12 திட்டங்களை கூட்டாகத் தொடங்கியுள்ளோம். இந்த சாதனைக்காக இருநாட்டு அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று தொடங்கப்பட்ட மூன்று திட்டங்களும், மூன்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவை : சமையல் எரிவாயு இறக்குமதி, தொழில் திறன் பயிற்சி மற்றும் சமுதாய வசதிகள் தொடர்புடையவையாகும். ஆனால், மூன்று திட்டங்களின் நோக்கமும் ஒன்றுதான். அதுவும் நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கானவைதான். இதுவே இந்தியா-பங்களாதேஷ் நட்புறவின் முக்கிய அம்சமாகும். இந்தியா-பங்களாதேஷ் நட்புறவின் அடிப்படை அம்சமே, இருநாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் உறுதி செய்வதுதான்.

பங்களாதேஷிலிருந்து பெருமளவிற்கு சமையல் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது, இருநாடுகளுக்கும் பயனளிக்கும். இது பங்களாதேஷின் ஏற்றுமதிகளை அதிகரித்து, வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். போக்குவரத்து தொலைவில் 1500 கி.மீ. குறைக்கப்பட்டிருப்பது, பொருளாதாரப் பலனை அளிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கும்.

இரண்டாவது திட்டமான பங்களாதேஷ்-இந்தியா தொழில் திறன் மேம்பாட்டு நிறுவனம், பங்களாதேஷின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப திறன்வாய்ந்த மனித வளம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும்.

முக்கிய விருந்தினர்களே,

டாக்காவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில், விவேகானந்தா பவன் அமைக்கும் திட்டம் கடைசியாக இருந்தாலும், சாதாரணமானதல்ல. நமது சமுதாயத்தில் அழிக்கமுடியாத செல்வாக்கைப் பெற்றுள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகிய இரு மாபெரும் மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கிடைத்த உத்வேகமே இது.

வங்காள கலாச்சாரத்தின் கொடைத்தன்மை மற்றும் வெளிப்படையான மனப்பாங்கு போல, இந்த மிஷனும் அனைத்துத் தரப்பினரும் பின்பற்றும் இடமாக உள்ளது. இந்த மிஷன் அனைத்துத் தரப்பினரின் திருவிழாக்களையும், ஒரே சமமான உற்சாகம் மற்றும் வீரியத்துடன் கொண்டாடி வருகிறது. இந்த வளாகம், நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்குவதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது.

முக்கியப் பிரமுகர்களே,

பங்களாதேஷூடனான ஒத்துழைப்புகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியா-பங்களாதேஷ் நட்புறவு, இரண்டு நட்பு ரீதியான அண்டை நாடுகளின் ஒத்துழைப்புக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்பது நமக்கு பெருமிதம் அளிக்கிறது. நமக்கிடையேயான இன்றைய கலந்துரையாடல் நமது நட்புறவுக்கு மேலும் அதிக சக்தியை அளிக்கும்.

ஜெய்ஹிந்த்! ஜெய் பங்களா! ஜெய் பாரத்-பங்களா பந்துத்வா!

நன்றி.

*****