பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பாதரசம் குறித்த மினாமாட்டா தீர்மானத்தை இறுதிப்படுத்தவும், அந்த இறுதிப்படுத்தலை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த சிறப்பு தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளும் நாடாக இந்தியா மாற வழிவகுப்பது தொடர்பான கருத்துரைக்கு தனது ஒப்புதலை வழங்கியது.
2025ஆம் ஆண்டு வரையில் பாதரச அடிப்படையிலான பொருட்களையும், மற்றும் பாதரசம் அடங்கிய கூட்டுச் செயல்முறைகளையும் தொடர்ந்து பயன்படுத்த வழி செய்யும் பாதரசம் குறித்த மினாமாட்டா சிறப்பு தீர்மானத்தை இறுதிப்படுத்த இந்த அனுமதி வகைசெய்கிறது.
பாதரசம் மற்றும் பாதரசம் அடங்கிய கூட்டுப் பொருட்களிலிருந்து வெளியாகும் நச்சுகளிலிருந்து மனிதர்களின் உடல்நலம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன் நீடித்த வளர்ச்சி என்ற பின்னணியிலேயே பாதரசம் குறித்த இந்த மினாமாட்டா சிறப்பு தீர்மானம் அமலாக்கப்படும்.
பாதரசத்தின் ஊறுவிளைக்கும் தன்மையிலிருந்து மிகவும் நலிந்த பிரிவினரைப் பாதுகாப்பதோடு, வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான களத்தினைப் பாதுகாப்பதாகவும் இந்த சிறப்புத் தீர்மானம் அமையும். எனவே வறிய மற்றும் நலிந்த பிரிவுகளின் நலன்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படும்.
மேலும் பாதரசம் இல்லாத மாற்றுப் பொருட்களை உற்பத்திப் பொருட்களில் பயன்படுத்தவும், உற்பத்திச் செயல்முறைகளில் பாதரசமற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் இந்த மினாமாட்டா சிறப்புத் தீர்மானம் நிறுவனங்களை வலியுறுத்தும். இது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை தூண்டிவிடும் என்பதோடு புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிப்பதாக அமையும்.