Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தமது வாரணாசி மக்களவைத் தொகுதியில் சுற்றுப் பயணம்; ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று(16.02.2020), உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்றார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஜங்கம்வாடி மடத்தில் அமைந்துள்ள ஜெகத்குரு விஷ்வாரத்யா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், 19 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஸ்ரீ சித்தாந்த் சிகாமணி கிரந்த்’ நூலை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார். மேலும் ‘ஸ்ரீ சித்தாந்த் சிகாமணி கிரந்த்’ செல்போன் செயலியையும் அவர் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புதிய தசாப்தத்தின் தொடக்கத்தில் இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவது பொருத்தமானது என்றும், இந்த தசாப்தம் 21 ஆம் நூற்றாண்டில் உலக அரங்கில் இந்தியாவின் பங்கை மீண்டும் நிலைநிறுத்தும் என்றும் தெரிவித்தார்.

செல்போன் செயலி மூலம் ஸ்ரீ சித்தாந்த் சிகாமணி கிரந்த் நூலை டிஜிட்டல் மயமாக்குவது, இளைய தலைமுறையினர் உடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், அவர்களது வாழ்க்கையிலும் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்த செல்போன் செயலி மூலம் கிரந்த் தொடர்பான தலைப்புகளில் ஆண்டுதோறும் விநாடிவினா போட்டிகளை நடத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். கிரந்த் நூலை 19 மொழிகளில் மொழிபெயர்த்திருப்பது, இந்த நூல் ஏராளமான மக்களை சென்றடைய உதவும் என்றார்.

“குடிமகன் என்ற முறையில் நமது செயல்பாடுகள் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதோடு, புதிய இந்தியாவிற்கான வழியையும் காட்டும்” என்றும் பிரதமர் தெரிவித்தார். மகான்கள் காட்டிய வழியில் செல்வதன் மூலம் நமது வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை நாம் நிறைவேற்றிக் கொள்வதோடு, தேச வளர்ச்சிக்கும் முழுமையாக ஒத்துழைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தூய்மை இயக்கத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதிலும் பொதுமக்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார். இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். நீர்வள இயக்கத்தை வெற்றியடையச் செய்யவும் அனைவரும் பாடுபடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கங்கை ஆற்றை தூய்மைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்கூடாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், பொதுமக்களின் பங்களிப்பு மூலமே இது சாத்தியமாயிற்று என்றும் கூறியுள்ளார். கங்கை புனரமைப்புத் திட்டத்தின்கீழ், இதுவரை ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருப்பதுடன், ரூ.21,000 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ராமர்கோவில் கட்டுவதற்காக, ‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை துவங்கப்பட்டிருப்பதாக அரசு அண்மையில் அறிவித்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும். 67 ஏக்கர் பரப்பிலான நிலத்தை இந்த அறக்கட்டளைக்கு மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

******