Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுச்சேரியின் ஆரோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

புதுச்சேரியின் ஆரோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை

புதுச்சேரியின் ஆரோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை


ஆரோவிலின் பொன் விழா வாரக் கொண்டாட்டத்தில், பங்கேற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மிகத் தலைமையாக இந்தியா இருக்க வேண்டும் என்ற திரு. அரவிந்தரின் கனவு, இன்றும் கூட நமக்கு உந்துதலாக உள்ளது.

உண்மையில், இந்த கனவின் தோற்றமாகவே ஆரோவில் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, இது சமூக, கலாச்சார, கல்வி, பொருளாதார மற்றும் ஆன்மிக புத்தாக்க மையமாக திகழ்கிறது.

நண்பர்களே,

திரு. அரவிந்தரின் விரிவான எண்ணம் மற்றும் செயலை இன்று நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

செயல்பாட்டாளர், தத்துவஞானி, கவிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் அவர். இவற்றில் ஒவ்வொன்றுமே தேச நலன் மற்றும் மனிதநேயத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளிலிருந்து:

ஓ அரவிந்தரே உங்களுக்கு அடிபணிகிறேன்!

நண்பனே, எனது நாட்டின் நண்பனே, அவதாரக் குரலே, சுதந்திர இந்தியாவின் ஆன்மாவே!

நண்பர்களே,

ஆரோவிலை உலகில் உள்ள அனைவருக்குமான நகராகவே அன்னை அனுசரித்தார். மனித ஒற்றுமையை உணர்வதே, ஆரோவிலின் நோக்கம்.

இந்த யோசனையின் வெளிப்பாடாகவே, இங்கு மிகப்பெரும் அளவில் கூடியுள்ளோம். பன்னெடுங்காலமாகவே, உலகிற்கு ஆன்மிக  உணர்வைத் தூண்டும் மையமாக இந்தியா இருந்து வருகிறது. உலகம் முழுவதையும் சேர்ந்த மாணவர்களுக்கு நாளந்தா, தக்சசீலா போன்ற மாபெரும் பல்கலைக் கழகங்கள் கற்பித்து வருகின்றன. உலகில் உள்ள மாபெரும் மதங்களில் பெரும்பாலானவை இங்குதான் தோன்றியுள்ளன. அவை, வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் உள்ள மக்களை, தங்களது தினசரி நடவடிக்கைகளில் ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுக்க ஊக்குவித்து வருகின்றன.

அண்மையில், இந்தியாவின் மாபெரும் பாரம்பரியமான யோகாவை அங்கீகரித்து, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்கள் மற்றும் வேறுபட்ட அடையாளங்களைக் கொண்டவர்கள் என அனைவரையும் ஆரோவில் ஒருங்கிணைத்துள்ளது.

ஆரோவிலின் சாசனத்தை பிரெஞ்சு மொழியில், புனித அன்னை தனது கையாலேயே எழுதினார் என்பதை நான் அறிந்துகொண்டேன். இந்த சாசனத்தின்படி, ஆரோவிலுக்கு 5 உயர்ந்த கொள்கைகளை அன்னை உருவாக்கினார்.

ஆரோவிலின் முதலாவது உயர் கொள்கை என்பது, இது அனைத்து மனிதசமூகத்துக்கும் உரியது என்பதாகும். இது, நமது பாரம்பரிய கோட்பாடான வசுதைவக் குடும்பகம் – உலகம் ஒரே குடும்பம் என்பதன் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.

1968-ம் ஆண்டில் நடைபெற்ற ஆரோவில் தொடக்க விழாவில், 124 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்று என்னிடம் தெரிவித்தனர். இங்கு 49 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் இருப்பதை இன்று நான் அறிந்துகொண்டேன்.

இது ஆரோவிலின் இரண்டாவது உயர் கொள்கைக்கு நம்மை வழிநடத்துகிறது. அதாவது, இறை உணர்வுக்கு சேவையாற்ற தானாகவே முன்வரும் எந்த நபரும், ஆரோவிலில் வாழ தகுதிபெற்றவர்கள் என்பதே இந்தக் கொள்கை.

மகரிஷி அரவிந்தரின் தன் உணர்வு தத்துவம், மனிதர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே இணைக்கிறது. இது பழங்காலத்தில் ஈசாவாஸ்ய உபநிடதத்தில் கூறியுள்ள கருத்துகளைப் போன்று உள்ளது. இதனை மொழிபெயர்த்து கூறிய மகாத்மா காந்தி, “மிக நுண்ணிய அணுவாக உள்ள அனைத்துமே தெய்வீகம்” (everything down to the tiniest atom is divine) என்று தெரிவித்தார்.

ஆரோவிலின் மூன்றாவது கொள்கை என்பது, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை இணைக்கும் வகையில் இது அமைய வேண்டும் என்பதாகும். ஆரோவில் நிறுவப்பட்ட 1968-ம் ஆண்டில் உலகமும், இந்தியாவும் எங்கு இருந்தது என்று உற்றுநோக்கினால், உலகம் தனித் தனி பாகங்களாக வாழ்ந்ததும், உள்நாட்டுப் போர்களுடன் இருந்ததும் தெரியும். வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தொடர்பு ஆகியவற்றின் மூலம், உலகம் ஒருங்கிணைய வேண்டும் என்பதே ஆரோவில்-லின் நோக்கம்.

ஒட்டுமொத்த மனித சமூகத்தையும், ஒரு சிறிய பகுதியாக அடக்க வேண்டும் என்ற கொள்கையுடன் ஆரோவில் உருவாக்கப்பட்டது. இது எதிர்காலம் என்பது ஒருங்கிணைந்த உலகமாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும். தற்கால உலகின் அடிப்படை அணுகுமுறையையும் (material approaches), ஆன்மிகத்தையும் இணைப்பது என்பது ஆரோவிலின் நான்காவது அடிப்படை கொள்கையாகும்.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம், அடிப்படையாக உலகம் முன்னேற்றம் பெறும்போது, சமூக ஒழுங்கமைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு ஆன்மிக ஈடுபாடு அவசியமானதாகவும், நீடித்தும் இருக்கும்.

ஆரோவிலின் நல்லிணக்கத்தில் அடிப்படை மற்றும் ஆன்மிகம் ஒன்றிணைந்து உள்ளது.

ஆரோவிலின் 5-வது அடிப்படை கொள்கையானது, இடைவிடாமல் கற்றுக் கொள்ளும் இடமாகவும், நிலையான வளர்ச்சிக்கான இடமாகவும் அமைய வேண்டும் என்பதாகும். இதன்மூலம், இது என்றைக்கும் செயலற்ற நிலையை அடையாது.

மனிதசமூகத்தின் முன்னேற்றமானது, தொடர்ந்து சிந்தித்தல் மற்றும் மறுசிந்தனைக்கு அழைப்பு விடுக்கிறது. எனவே, மனித மனம், ஒரே சிந்தனையுடன் தேங்கி நின்றுவிடாது.

இதுபோன்ற அதிக அளவிலான பல்வேறுபட்ட மக்கள் மற்றும் சிந்தனைகளை ஆரோவில் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம், பேச்சுவார்த்தையும், விவாதமும் இயற்கையாக அமைகிறது என்பதே உண்மை.

இந்திய சமூகம், அடிப்படையிலேயே வேற்றுமை கொண்டது. இது பேச்சுவார்த்தை மற்றும் தத்துவ பாரம்பரியத்தை ஊக்குவிக்கிறது. உலக வேற்றுமையை ஒன்றாக கொண்டுவருவதன் மூலம், இந்தியாவின் பழங்கால பாரம்பரியத்தை உலகுக்கு ஆரோவில் வெளிப்படுத்துகிறது.

பல்வேறுபட்ட மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதையும், அவை பரஸ்பரம் மதிப்பளிப்பதையும் இந்தியா எப்போதுமே அனுமதித்து வந்துள்ளது. பழமையான பாரம்பரியமான குருகுலத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. குருகுலத்தில் கற்றுக் கொள்தல் என்பது வகுப்பறையுடன் அடங்கிவிடாது; வாழ்க்கை என்பது வாழும் ஆய்வகமாக இருக்கும். ஆரோவில்-லும் கூட, முற்றுப்பெறாத மற்றும் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்ளும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பழங்காலத்தில், மிகப்பெரும் செயல்களை தொடங்குவதற்கு யாகங்களை முனிவர்களும், ரிஷிகளும் நடத்துவார்கள். சில நேரங்களில் இந்த வேள்விகள், வரலாற்றை வடிவமைக்கும்.

இதுபோன்ற வேள்வியானது, ஒற்றுமைக்காக சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்டது. உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மண்ணை ஆண்களும், பெண்களும் கொண்டுவந்தனர். இந்த அனைத்து மண் மாதிரிகளும் கலந்ததன் மூலம், அனைத்தும் ஒன்றே என்ற பயணம் தொடங்கியது.

பல ஆண்டுகளில் ஆரோவிலிலிருந்து சாதகமான உணர்வுகளை பல்வேறு வடிவிலும் உலகம் பெற்றது.

இது முற்றுப்பெறாத கல்வி, சுற்றுச்சூழல் மறுஉருவாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை வேளாண்மை, உரிய கட்டுமான தொழில்நுட்பங்கள், நீர் மேலாண்மை அல்லது கழிவு மேலாண்மை ஆகியவற்றில் உள்ளது. இதற்கு முன்னோடியாக ஆரோவில் திகழ்கிறது.

நாட்டில் தரமான கல்வியை ஊக்குவிக்க நீங்கள் ஏராளமான பணிகளை மேற்கொண்டுள்ளீர்கள். ஆரோவிலின் 50 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ள சூழலில், இந்தப் பாதையில் உங்களது முயற்சியை நீங்கள் அதிகரிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கல்வி மூலம் இளம் மனங்களுக்கு சேவையாற்றுவது, திரு. அரவிந்தருக்கும், அன்னைக்கும் செய்யும் மிகப்பெரும் மரியாதையாக இருக்கும்.

கல்விக்கான உங்களது முயற்சிகளை நானும் கூட பின்பற்றுகிறேன். இது உங்களில் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். திரு. அரவிந்தர் மற்றும் அன்னையின் மீது அதிக பற்றுகொண்ட சீடரான திரு. கிரீத் பாய் ஜோஷி, புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார்.  

நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, எனக்கு கல்வி ஆலோசகராக அவரும் இருந்தார். இன்று நம்முடன் அவர் இல்லை. எனினும், இந்தியாவில் கல்வித்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பு  நினைவுகூரத்தக்கது.

நண்பர்களே,

ரிக் வேதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

 “आनो भद्रा: क्रतवो यन्तु विश्वत:”; அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நமக்கு சிறந்த சிந்தனைகள் வந்துசேர அனுமதியுங்கள்.

இந்த நாட்டில் உள்ள சாதாரண குடிமக்களை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளை ஆரோவில் தொடர்ந்து வழங்கட்டும்.

தொலைதூரங்களிலிருந்தும் புதிய சிந்தனைகளுடன் மக்கள் வந்து, சேரட்டும். இந்த யோசனைகளை ஒன்றிணைக்கும் மையமாக ஆரோவில் மாறட்டும்.

உலகுக்கு வழிகாட்டியாக ஆரோவில் சேவையாற்றட்டும்.

மனதின் குறுக்கு சிந்தனைகளை அடித்து நொறுக்கும் வழிகாட்டியாக இது இருக்கட்டும். மனித சமுதாயத்தை ஒன்றாக இருக்கச் செய்வதற்கான வாய்ப்புகளை கொண்டாடுவதற்கு அனைவரையும் வரவேற்கும் இடமாக இது தொடரட்டும்.

ஆரோவிலுக்கு, அதன் நிறுவன கோட்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுவதற்காக, மகரிஷி அரவிந்தர் மற்றும் புனித அன்னையின் சக்தி தொடர்ந்து வழிகாட்டட்டும்.

உங்களுக்கு நன்றி.

***