Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லியில் இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

புதுதில்லியில் இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

புதுதில்லியில் இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

புதுதில்லியில் இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை


எனதருமை அமைச்சரவை சகாக்களான திரு. சுரேஷ் பிரபு அவர்களே, திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்களே, திரு. சி. ஆர். சவுத்திரி அவர்களே, தொழில் கொள்கை மற்றும் அபிவிருத்தித் துறையின் செயலாளர் திரு. ரமேஷ் அபிஷேக் அவர்களே, இன்று இங்கு வருகை தந்துள்ள வர்த்தகம் மற்றும் வியாபாரத்துறையோடு தொடர்புடைய சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

நாடு முழுவதும் தற்போது விநாயக சதுர்த்திக் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறது. விநாயகர் ஒவ்வொரு இல்லத்திலும் வந்திறங்கியுள்ளார். ஒவ்வொரு புனிதமான பணியும் வெற்றிகரமாக முடியவும், மேலும் முன்னேறிச் செல்லவும் விநாயகரின் ஆசியை நாம் கோருவோமாக. புதிய இந்தியாவின் மகத்தான, ஒளிமிக்க அடையாளமாக விளங்கவிருக்கும் இந்த முக்கியமான மையத்தின் கட்டுமானத்தை துவங்குவதற்கு இது மிகவும் பொருத்தமான தருணமாகும்.

 ‘இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கலாச்சார செறிவு, இயற்கை குறித்த நமது உணர்வுகள் ஆகியவற்றை நம்மால் நன்றாக உணர முடியும். இந்த சேவையானது 125 கோடி இந்தியர்களின் உணர்வுகளையும் வெளிப்பாடுகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. இன்றுள்ள நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் தோற்றத்திற்கும் இடத்திற்கும் பொருந்துவதாகவும் இது அமைகிறது.

சுமார் ரூ. 26,000 கோடி செலவில் அமையவிருக்கின்ற இந்த மையம் நமது நாட்டின் 80 கோடி இளைஞர்களின் அணுகுமுறை, உற்சாகம் ஆகியவற்றிற்கான மையமாக திகழவிருக்கிறது. உலகத் தரத்திலான கட்டமைப்பு, எளிதாக வர்த்தகம் செய்வதற்கான சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் அரசின் தொலைநோக்கின் ஒரு பகுதியாகவே இது விளங்குகிறது. இந்த மையமானது தனிப்பட்டதொரு நிகழ்வுகளுக்கான மையமோ அல்லது கண்காட்சிகளுக்கான மையமோ மட்டுமல்ல; உள்நாட்டு மற்றும் உலக வர்த்தகத்திற்கான உயிரோட்டமான, துடிப்புமிக்கதொரு மையமாகவும் திகழவிருக்கிறது என்பதை திரைப்படம் மூலமாகவும் முப்பரிமாண முன்மாதிரியின் மூலமாகவும் மிக விரிவாக நமக்கு எடுத்துக் கூறப்பட்டது.

ஒரு வகையில் இது தில்லி நகருக்குள்ளேயே இருக்கும் சிறியதொரு நகரமாகவும் இருக்கும். மாநாட்டு அரங்கம், கண்காட்சிக் கூடம், கூட்டங்களுக்கான அரங்கம், ஓட்டல்கள், சந்தை, அலுவலகம், பொழுதுபோக்கு ஆகிய எண்ணற்ற வசதிகள் ஒரே இடத்தில் உருப்பெறவிருக்கின்றன.

எனவே, நாட்டின் தலைநகரில் சர்வதேச அளவிலான நிகழ்வுகளை நடத்த வேண்டுமா? வேண்டாமா? உலகம் முழுவதிலும் இருந்து மக்களை வரவேற்க வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலிருந்து நாம் வெளிவருகிறோம். இந்த விஷயத்தில் இரண்டு வகையான சிந்தனைக்கே இடமில்லை. ஒரே இடத்தில் 10,000 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் கட்டப்படவுள்ளது. அதன் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், உலகத்தில் முதல் ஐந்து மாநாட்டு அரங்கங்களில் ஒன்றாகவும், ஆசியாவில் முதல் மூன்று மாநாட்டு அரங்கங்களில் ஒன்றாகவும் அது திகழும்.

மிகவும் முக்கியமாக, கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள பெரிய பணிகளை நிறைவேற்றி முடிக்கும் பணிக்கலாச்சாரத்தை இந்த மையத்திற்கான பணிகள் விரிவுபடுத்தப் போகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநாட்டு மற்றும் கண்காட்சி மையமாகவும் இது திகழப் போகிறது.

நண்பர்களே,

இந்த அரசு, மிக நீண்ட சுரங்கப்பாதை, மிக நீண்ட எரிவாயு குழாய்ப்பாதை, மிக நீண்ட கடல் பாலம், மாபெரும் கைபேசி உற்பத்தி நிலையம், அல்லது ஒவ்வொரு கிராமத்திற்கும் அகன்ற அலைவரிசையில் இணையதள வசதி மற்றும் மின்வசதி, நிதிசார் சேவைகளில் இணைப்பதற்கான மாபெரும் இயக்கம், கிராமப்புறங்களில் மாபெரும் வங்கி சேவைக்கான வலைப்பின்னல், இந்திய அஞ்சல்துறையில் வங்கி வசதி, ஜிஎஸ்டி வடிவில் மறைமுகவரி, தூய்மை இந்தியா இயக்கம் என்ற வடிவில் மாபெரும் மக்கள் இயக்கம் போன்ற நாட்டின் வளர்ச்சிக்கான, இதுவரை மேற்கொள்ளப்படாத திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. தற்போது நல்வாழ்வு இந்தியா என்ற உலகின் மாபெரும் சுகாதார திட்டத்தையும் அது மேற்கொண்டுள்ளது.

கட்டமைப்பு ரீதியாகவும், சமூக ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான ஒரு சில உதாரணங்களே இவை. புதியதொரு திசையை வழங்குவதோடு, புதிய இந்தியாவின் வேகம், அளவு, திறன் ஆகியவற்றையும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு அவை வழங்குகின்றன.

நண்பர்களே,

நாட்டின் பல பகுதிகளிலும் உருவாக்கப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுக்கிடையே, இந்தியா சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையமும் இன்று இடம் பெறவிருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த வளாகம், உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாட்டிடமிருந்து எதிர்பார்க்கத்தக்க வகையில், எண்ணற்ற வசதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். நாட்டின் பொருளாதாரம் இப்போது 8 சதவீதம் என்ற விகிதத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. அடுத்த 5-7 ஆண்டுகளில் இதை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருளாதாரமாகவும், அடுத்த 1-15 ஆண்டுகளில் 10 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருளாதாரமாகவும் மாற்ற வேண்டும் என்பதே நமது இலக்காகும்.

நவீன போக்குவரத்து வசதிகளோடு தொடர்புடையதாக இந்த மையம் இருக்கும் என்பதறிந்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிவேக மெட்ரோ சேவையின் மூலம் இது விமானநிலையத்தோடு நேரடியாக இனைக்கப்படும். கூட்டங்கள், வர்த்தக உருவாக்க மையங்கள், நிகழ்ச்சி மேலாண்மை சேவைகள், கேளிக்கைகள், கடைகள் மற்றும் சுற்றுலா தொடர்பான வசதிகள் ஆகிய அனைத்து ஏற்பாடுகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்.

இந்தியாவின் வளர்ச்சியைக் குறிக்கும் ஒவ்வொரு கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் அமைகிறது.

சகோதர, சகோதரிகளே,

நாம் எங்கு சென்றாலும், சின்னஞ்சிறிய நாடுகளும் கூட மிகப்பெரிய மாநாடுகளை நடத்தக்கூடிய திறமை வாய்ந்தவையாக இருப்பதைக் காண்கிறோம். நவீன ஏற்பாடுகளை வளர்த்தெடுப்பதன் மூலம் மாநாடுகளின் மூலமான சுற்றுலா ஏற்பாடுகளுக்கான மையங்களாக பல நாடுகளும் மாறியுள்ளன. எனினும் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தத் திசையில் நாம் எப்போதுமே சிந்தித்ததில்லை. நமது மிகப் பெரிய மாநாடுகள் அல்லது வர்த்தக கண்காட்சிகள் அனைத்துமே ஒரே ஒரு இடத்தில் நடந்து முடிந்துவிடுகின்றன. அதுதான் பிரகதி மைதான். அந்த இடமும்கூட தன் பழைய பெருமையை இழந்து நிற்கிறது. இப்போது அந்தக் கருத்தும் மாறிவிட்டது. அந்த மாற்றத்தின் விளைவுதான் இன்றைய நிகழ்ச்சி.

வர்த்தக கலாச்சாரத்தை வலுப்படுத்த இந்திய சர்வதேச மாநாட்டு  மற்றும் கண்காட்சி மையங்கள், நாட்டின் தலைநகரான தில்லியில் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலும் கூட உருவாக்கப்படும். மாநாடுகளை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாவிற்கான சூழலும் நமது நாட்டில் உருவாக்கப்படும்.

சர்வதேச அளவிலான உச்சிமாநாடுகள், பெரும் நிறுவனங்களின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டங்கள், பல்வேறு அரசுத் துறைகளின் நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்வுகளையும், இதுபோன்ற மையங்களில் நடத்த முடியும். ஒருவகையில் இந்த நவீனமான, சிறப்பு மாநாடுகளுக்கான மையம், வாழ்க்கையை சுலபமாக்க உதவி செய்யும். கூடாரங்களை அமைப்பது; தண்ணீர், மின்சார வசதி வழங்குவது அல்லது பருவநிலை அச்சுறுத்தல் போன்ற எந்தப் பிரச்சினையும் இங்கு ஏற்படாது. அதிகபட்ச நபர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தயார்நிலையிலான ஓர் ஏற்பாடு அவர்களுக்குக் கிடைக்கும்.

வர்த்தக நடவடிக்கைகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகளுக்கென மையங்கள் இருக்குமானால்,  அதனால், ஒட்டுமொத்த நகரமுமே அதனால் நன்மை பெறும். இதுபோன்ற மாநாட்டு மையங்கள் இந்த நகரங்களின் அடையாளமாகவே மாறிவிடும்.

நண்பர்களே,

இந்தியா பற்றிய நம்பகமான தகவல்களை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் சிறந்ததொரு ஊடகமாக இந்த மையம் மாறும். இது செயல்படத் தயாரானவுடன், மாநாடுகளின் வழியான சுற்றுலா என்பது, கூட்டத்திற்கு ஊக்கமளிக்கும் மாநாடுகள் மற்றும் கண்காட்சி என்ற வடிவத்தில் இந்தியாவின் அடையாளத்தை மேம்படுத்த உதவும்.

நமது நாட்டின் வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் தங்கள் பொருட்களை உலகச் சந்தையில் காட்சிப்படுத்துவதற்கும் இந்த மையம் உதவி செய்யும். நிதிக் கட்டுப்பாடுகளின் விளைவாக, சிறிய, நடுத்தர தொழில் முனைவோர் பெரும்பாலான நேரங்களில் தங்கள் உற்பத்திப் பொருட்கள் குறித்து விளம்பரம் செய்யவும் சந்தைப்படுத்தவும் இயலாத நிலையில் உள்ளனர். இந்த மையம் அவர்களுக்கு மிகச் சிறப்பான ஒன்றாக அமையும். இதன் மூலம் சர்வதேச அளவில் வாங்குவோர், விற்போர் உடன் அவர்கள் நேரடியாக கலந்துரையாட முடியும். சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்களைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்ளவும், அதற்கேற்ற வகையில் தங்கள் வர்த்தகத்தை நடத்தவும் முடியும்.

அரசின் இந்த முயற்சிகளுக்கு, அதாவது நடுத்தர, சிறுதொழில்களுக்கு அதிகாரமளிப்பது என்ற முயற்சிகளுக்கு இந்த வசதி மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். மேலும் புதிய தொழில் முனைவுகளுக்கான முக்கியமானதொரு வசதியும் வரவிருக்கிறது. ஒரு புதிய தொழில்முனைவரின் முன்பாக உள்ள மிகவும் முக்கியமான சவால் தங்கள் கருத்துக்களை முதலீட்டாளரிடம் கொண்டு சேர்ப்பதாகும். நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் மிகப்பெரியதொரு மேடையாகவும் இது திகழும். கருத்துக்கள், கண்டுபிடிப்புகள், நிதி ஏற்பாடு, தனித்தன்மை கொண்ட பெயரை உருவாக்குவது, சந்தைப்படுத்தல் ஆகியவை தொடர்பான விவாதங்கள் இங்கு நடைபெறும்.

இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் புதிய தொழில் முனைவுத் துறையில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பகுதியாக இந்தியா விளங்குகிறது.

இன்று நம் இளைஞர்கள் 10,000க்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவுகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தகையதொரு சூழலில், இதுபோன்ற நவீன வசதிகள், சமூகத்தின் ஒவ்வொரு வர்க்கத்திற்கு, ஒவ்வொரு மட்டத்திற்கும் பயனுள்ளதாக அமையும். நாட்டில் உள்ள ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை இது வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது இந்தியாவின் பொருளாதார, கலாச்சார வலிமையின் அடையாளமாக இருப்பது மட்டுமின்றி ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு புதியதொரு திசைவழியாகவும் அமைகிறது. நாட்டின் பயிற்சி மையங்களில் இருந்தும், திறமையை வளர்க்கும் மையங்களில் இருந்தும், அல்லது பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தும் வெளிவரும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை மாற்றியமைக்கும் வலிமை கொண்டதாகவும் இது திகழ்கிறது.

சகோதர, சகோதரிகளே,

கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் கட்டமைப்புத் திட்டங்களின் விரிவாக்கமே இந்த மையம் ஆகும். இத்தகைய திட்டங்கள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிதிறந்து விட்டுள்ளன. சேவை, விவசாயம் அல்லது உற்பத்தி துறை போன்ற ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நமக்குக் கிடைத்துள்ள அறிக்கைகளின்படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை உருவாக்கமானது பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.

சில்லரை வியாபாரத் துறையில் இதுவரையில் கண்டிராத அளவிற்கு வாய்ப்புகள் உள்ளன. இணையவழி வர்த்தகத் துறை மட்டுமே 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான வருவாயை உருவாக்கியுள்ளது. இந்தத் துறை எந்த அளவிற்கு பரவலாகிறதோ அந்த அளவிற்கு மேலும் அதிகமான வேலை வாய்ப்புகளை அதனால் வழங்க முடியும்.

நண்பர்களே,

சேவைத் துறையோடு கூடவே உற்பத்தித் துறையும் கூட ‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற இயக்கத்தின் வலிமையை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இன்று கைபேசி தயாரிப்பின் மையமாக இந்தியா மாறி வருகிறது. இதன் விளைவாக கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் 4 முதல் நான்கரை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, கைபேசிகளை நாம் ஏற்றுமதி செய்வது மட்டுமின்றி, 80 சதவீத கைபேசிகளை இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தியும் செய்து வருகிறோம். இது ரூ. 3 லட்சம் கோடி அந்நிய செலாவணியை சேமித்துள்ளது.

நண்பர்களே,

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிப்படையான, தகுதியின் அடிப்படையில் வர்த்தகம் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 5-6 ஆண்டுகளுக்கு முன்பு நிலவி வந்த இருண்ட சூழலில் இருந்து  நாட்டின் தொலைதொடர்புத் துறை வெளிவந்துள்ளது. இன்று இத்துறை நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 5ஜி அலைக்கற்றை சேவைக்கான கட்டமைப்பை நிறுவுவதை நோக்கி நாடு தற்போது நகர்ந்து வருகிறது. வெளிப்படையான டெண்டர் விடும் முறை மற்றும் டிஜிட்டல் இந்தியா இயக்கம் ஆகியவை இதை மேலும் முன்னுக்குத் தள்ளியுள்ளது. இன்று தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணம் என்பது கிட்டத்தட்ட இலவசமானதாக மாறியுள்ளது. 4 ஜி வசதியுள்ள ஒரு ஜிபி அளவுள்ள தகவல்களைப் பெறுவதற்கான கட்டணம் ரூ. 250-300 என்பதில் இருந்து ரூ. 19-20 என்பதாக குறைந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருப்பதோடு,  சாதாரண மக்களும் கூட இணையதள வசதியின் வலிமையை சுவைக்க முடிகிறது. தொலைதொடர்பு துறையோடு கூடவே சுற்றுலாத் துறையும் கூட நீடித்த வளர்ச்சிக்கான புதிய சாதனைகளை உருவாக்கி வருவதோடு நாட்டில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.

நண்பர்களே,

ஒரு நாடு என்பது, சில நடைமுறைகள் மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகளால் நடத்தப்படுகிறது. 2-4 மாதங்கள் அல்லது வருடங்களில் ஒரு நாட்டை கட்டமைத்துவிட முடியாது. பல ஆண்டுக்காலம் தொடர்ச்சியான வளர்ச்சியின் விளைவாகவே இது ஏற்படுகிறது. எனவே சரியான நேரத்தில் முடிவெடுப்பது; திட்டங்களை முறையாக அமலாக்குவது ஆகியவையே இதற்கு அத்தியாவசியமாக அமைகின்றன.

உதாரணமாக, சிறுவங்கிகளை ஒன்றிணைப்பது என்ற முடிவையே எடுத்துக் கொள்வோம். பத்துக்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவை எதுவும் இல்லை. இந்த விஷயம் குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இந்த விஷயம் எழுப்பப்பட்டது. எனினும், ஏராளமான விவாதங்களுக்குப் பிறகும் கூட, இந்த திசையில் செயல்படுவதற்கு யாருக்குமே துணிவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியால் அமைக்கப்பட்ட இந்த அரசு, துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கு எப்போதுமே அஞ்சியதில்லை என்பதற்கு கடந்த 50 மாதங்கள் சாட்சியாக உள்ளன. வருடக்கணக்கில் எவ்வித அசைவுமின்றி இருந்து வந்த பல முடிவுகள் இப்போது செயல்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் சிறு வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. தற்போது மேலும் மூன்று வங்கிகள் ஒரு வங்கியுடன் இணைக்கப்பட உள்ளன. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 3-4 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்திருத்தங்கள் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் “வங்கிகளை இணைக்கும் வேலையை மோடியினால் நிறைவேற்ற முடிந்தால், உண்மையிலேயே மோடி சிறப்பான ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் என்று நாங்கள் ஒப்புக் கொள்வோம்” என்று சிலர் சவால் விட்டதுண்டு; எழுதியதும் உண்டு. இப்போது இந்தக் கடமை முடிக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களது பேனாக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன. அவை இப்போது அமைதியாக உள்ளன.

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், பினாமி சொத்துகள், நொடித்துப் போவது, திவால் ஆவது ஆகியவை குறித்த விதிமுறைகள் அல்லது நிதிசார் மோசடிகளை செய்துவிட்டு தலைமறைவானவர்கள், அல்லது சந்தேகத்திற்கிடமான 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கான பதிவுகள் ரத்து செய்யப்பட்டது போன்ற முடிவுகள் அனைத்துமே நேர்மையான, வெளிப்படையான வர்த்தகச் சூழலை உருவாக்குவதை நோக்கிச் செல்வது என்ற அரசின் உறுதிப்பாட்டிற்கு மிகச்சிறப்பான உதாரணங்கள் ஆகும்.

நண்பர்களே,

கடந்த நான்கு ஆண்டுகளில் இருக்கின்ற அதே ஆதாரங்களை வைத்துக் கொண்டு அரசு சிறப்பாக செயல்பட முடிந்துள்ளது; அனைத்து வகையிலும் வளர்ச்சியும் சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் அனைத்திற்கும் மேலாக நாட்டின் நலத்திற்கே அது முன்னுரிமை அளித்திருந்தது. ஏற்பாடுகள் முறையாக நடப்பதை அது உறுதிப்படுத்தியிருந்தது.

நண்பர்களே,

மக்கள் நலனுக்காக துணிவான முடிவுகளை எடுக்கும் முறை தொடரும் என்று நான் உங்களுக்கு மீண்டும் உறுதியளிக்க விரும்புகிறேன். நாடு சந்தித்து வரும் சவால்களுக்கு மத்தியிலும் இன்று இந்தியாவின் பொருளாதார அடித்தளம் நாளுக்கு நாள் வலுப்பட்டுக் கொண்டே வருகிறது. அடித்தளம் வலுவாக உள்ளது. ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் உலக வர்த்தகம் என்ற வகையில் மாற்றியமைப்பதற்கான விரிவான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

2025-ம் ஆண்டிற்குள் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு மாற்றுவது என்ற இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உற்பத்தி மற்றும் விவசாயத் துறையில் இருந்து வரவேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் இத்தகைய முயற்சிகளின் விளைவாக, கடந்த நான்கு ஆண்டுகளில் ‘வர்த்தகம் செய்வதற்கு வசதியான சூழல்’ தொடர்பான தரவரிசையில் 42 புள்ளிகள் மேம்பாடு அடைந்துள்ளோம். இப்போது மாநிலங்களும் கூட தங்களின் தரவரிசையை மேம்படுத்திக் கொள்ள, தங்களுக்குள் போட்டியிடுகின்றன. ‘வர்த்தகம் செய்வதற்கு வசதியான சூழல்’ தொடர்பான இந்தப் போட்டி மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்கும் உதவி செய்துள்ளது.

இந்த சீர்திருத்தப் பயணத்தை மாவட்டங்களுக்கும், வட்டங்களுக்கும் கொண்டு செல்லவும் நாங்கள் முயன்று வருகிறோம். இன்று நாங்கள் மாவட்டங்களில் ‘வர்த்தகம் செய்வதற்கு வசதியான சூழல்’ அம்சங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம். இதை அடைய ஒரு சிறப்புச் செயல்பாட்டு திட்டத்தையும் வடிவமைத்து வருகிறோம். எதிர்காலத்தில் மாவட்டங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை 2-3 சதவீதம் அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான வழிகள், முன்முயற்சிகள், முன்னுரிமைகள் ஆகியவற்றை தேடி வருகிறது. நீடித்த சீர்திருத்தங்களின் அடையாளங்கள் களத்தில் இருக்கும் வகையில் விளைவுகளை காண்பிக்க வேண்டும் என்பதே அரசின் கருத்தாக இருந்து வருகிறது.

நண்பர்களே,

பெரும் கனவுகளைக் காண்பதற்கும் அவற்றை நனவாக்கவும் உரிமையுள்ள பெருமளவிலான இளைஞர்கள் நம் நாட்டில் உள்ளனர். இந்தக் கனவுகளுக்கு வடிவம் தரவேண்டிய உரிமையும் அவர்களிடம் உள்ளது. இந்தக் கனவுகளை நனவாக்க அவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமின்றி வர்த்தக உலகத்திற்கும் உண்டு. இது உங்கள் அனைவரின் பொறுப்பும் கூடத்தான்.

புதிய இந்தியாவின் இளைஞர்களின் கனவுகளுக்கு உத்வேகமூட்ட அனைத்து வகையான முயற்சிகளின் மூலம் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றே நான் நம்புகிறேன். ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள், இந்த மையத்தின் முதல் கட்ட வேலைகளை முடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வளாகத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட 2500 தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. எனவே அடிக்கல் நாட்டுவிழாவிற்கு முன்பாகவே இதற்கான வேலைகள் முழுமையான வேகத்தில் நடைபெறத் தொடங்கி விட்டன என்பதுதான் இதன் பொருள்.

எத்தகைய கனவுகளுடன் நாம் தொடங்கினோமோ, அதே வேகத்தில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றே நான் நம்புகிறேன். மாறிக் கொண்டேயிருக்கும் இந்த உலகத்தில், உலகப் பொருளாதாரத்தில், பொருத்தமானதாக மட்டுமின்றி ஒரு தலைவராகவும் கூட தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இந்தியா முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தக் கனவுகளை நோக்கி நாம் விரைந்து முன்னேற வேண்டும். உரிய நேரத்தில், மிகச் சிறந்த வகையில், மிக வேகமாக இந்தக் கடமையை நிறைவேற்றியுள்ள குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் மிக்க நன்றி!