Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மெட்ரோ 3 ஆம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மெட்ரோ 3 ஆம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மெட்ரோ 3 ஆம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மெட்ரோ 3 ஆம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை


இன்று இங்கே கூடியிருக்கும் சகோதரர்களே, சகோதரிகளே,

மகாராஷ்டிராவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் இது நான்காவது நிகழ்ச்சி. இன்று நான் தானே நகருக்குச் சென்றிருந்தேன். அங்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டங்களும், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்களும் அவற்றில் அடங்கும். சிறிது நேரம் முன்னதாக, ரூ.8000 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்படும் புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாவது கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மெட்ரோ திட்டமானது, நாட்டில் முக்கியமான தகவல் தொழில்நுட்ப மையங்களாக உள்ள ஹின்ஜேவாடி மற்றும் சிவாஜி நகர் ஆகியவற்றை இணைப்பதாக இருக்கும். மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வந்திருக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்க்கை நிலை இதனால் எளிதாக மாறும்.

 

நண்பர்களே,

புனே மெட்ரோ திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்குகிடைத்தது. இரண்டு வழித்தடங்களில் பணிகள் வேகமாக முன்னேற்றம் கண்டு வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த ஆண்டு இறுதிவாக்கில், புனே நகரில் 12 கிலோ மீட்டர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்போது சிவாஜி நகரில் இருந்து மூன்றாவது கட்டப் பணிகளும் தொடங்கியுள்ளன. எனவே, இந்தப் பணிகளும் நிறைவு பெறும் போது, புனே மற்றும் பிம்ப்ரி – சின்ச்வாட் நகர்களின் நான்கு மூலைகளில் இருந்தும் மக்கள் ஹின்ஜேவாடி தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு எளிதாகவும், சவுகரியமாகவும் வந்து சேர முடியும். இங்கே வந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு குறிப்பாக நான் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். இன்று தொடங்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர அரசின் பரந்த நோக்கம் கொண்ட திட்டங்களின் அங்கமாக இருப்பவை. கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்குவதை மையமாகக் கொண்டவையாக இவை உள்ளன.

கடந்த நான்கு அல்லது நான்கரை ஆண்டு காலமாக அரசின் கவனம் கட்டமைப்புகளை உருவாக்குவதில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்து வந்திருக்கிறீர்கள். போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்துவது மற்றும் விரைவுபடுத்துவது, அதாவது நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், விமானப் போக்குவரத்துகள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது, ஐ-வழித்தடங்களை மேம்படுத்துவது ஆகிய பணிகள் துரித கதியில் நடைபெறுகின்றன.

 

நண்பர்களே,

நீங்கள் கார்கில் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் காம்ரூப் வரை பயணம் செய்தால், எவ்வளவு வேகமாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதைக் காண முடியும். அரசின் உறுதி காரணமாக மட்டும் இவை நடைபெறவில்லை. உள்ளூர் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் துறையினரின் உத்வேகமும் இதற்குக் காரணம்.

வளர்ச்சி கிடைக்காமல் இருந்துவிட வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மக்கள் எவ்வளவு உயர்நிலையில் இருந்தாலும், போக்குவரத்து நெரிசலில் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவது கிடையாது. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் தங்களுடைய பயிர்கள், விளை பொருட்கள், பால் அல்லது தயிர் போன்றவை கெட்டுப் போவதை யாரும் விரும்புவதில்லை. தங்களுடைய பிள்ளைகள் பள்ளிக்குச்  சென்று வருவதற்கான நேரம் குறைந்தால், படிப்பதற்கும், விளையாடுவதற்கும் அதிக நேரம் கிடைக்கும் என்று அவர் விரும்புகிறார். 8 – 9 மணி நேரம் என்ற தங்களுடைய வேலை நேரம், போக்குவரத்து நெரிசல் காரணமாக 12 – 13 மணி நேரம் என நீட்டிக்கப்படுவதை யாரும் விரும்புவில்லை. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். நேரத்தை நல்ல முறையில் கழிக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் அடுத்த தலைமுறைக்கான கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து, இன்றைக்கு அதில் கவனம் செலுத்துகிறோம்.

நண்பர்களே,

இந்த எண்ணத்துடன், தேவேந்திர பட்நாவிஸ் அரசுடன் சேர்ந்து மகாராஷ்டிராவின் புனே நகரின் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ஹின்ஜேவாடி – சிவாஜிநகர் மெட்ரோ பாதை, வேறொரு காரணத்தாலும் முக்கியத்துவம் பெறுகிறது.மெட்ரோ மேம்பாட்டுக்காக அரசு உருவாக்கிய மெட்ரோ கொள்கையின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் முதலாவது திட்டம் இது. இந்தத் திட்டம் PPP, அதாவது அரசு-தனியார் பங்களிப்பு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறது.

கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் கொள்கையானது, நாட்டில் மெட்ரோ திட்டங்களை விரிவாக்கம் செய்யும் உறுதியைக் காட்டுவதாக உள்ளது. விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் இப்போது வெளிப்படையானதாக ஆகிவிட்டதால், இந்தக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு மெட்ரோ உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

இப்போது போக்குவரத்துத் துறையின் வெவ்வேறு ஏஜென்சிகளுக்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஒரே மாதிரியாக்கப் பட்டுள்ளன. மெட்ரோ ரயில் கொள்கை சீர்திருத்தம் சார்ந்ததாக மாற்றப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களுடன், மெட்ரோ ரயில் நிலையங்கள், இணைப்புப் பேருந்து வசதிகள், புதிய நடைபாதைகள் உள்ளிட்டவை இணைந்து உருவாக்கப் படுகின்றன. இப்போது மெட்ரோ பணிகள், ஒன்றுபட்ட நகர்ப்புற போக்குவரத்து ஆணையம் என்ற ஒற்றை அமலாக்க அமைப்பின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கு மட்டுமன்றி, அவற்றைத் தீர்ப்பதற்கும், பிரச்சினைகளை குறைப்பதற்குமான நடவடிக்கைகளை எடுக்கவும் இது உதவிகரமாக இருக்கிறது.

சகோதர சகோதரிகளே,

இப்போது நாட்டில் பல நகரங்களில் உயிர்நாடியாக மெட்ரோ ரயில்கள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், நாட்டில் 12க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இந்தச்  சேவை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. மிக விரைவில் மேலும் பல நகரங்கள் இதன் மூலம் இணைக்கப்பட உள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் 300 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் திறக்கப் பட்டுள்ளன. 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய முன்மொழிவுகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக நாட்டில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 650 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிராவிலும்கூட, மாநில அரசுடன் இணைந்து 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது.

சகோதர சகோதரிகளே,

நாட்டில் உண்மையான உணர்வுடன் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கும் பணிகளுக்கு அடல்ஜியின் அரசாங்கம் தான் உத்வேகம் கொடுத்தது. நகரங்கள் மற்றும் கிராமங்களின் கட்டமைப்பு வசதிகளுக்கு அடல் ஜி உருவாக்கிக் கொடுத்த அடித்தளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், எங்கள் அரசின் 10 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு இப்போது பணிகளின் வேகமும், அளவும் அதிகரித்துள்ளன.

அடல் ஜி அரசுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால், இப்போது மும்பையும், அதன் அருகில் உள்ள பகுதிகளும், மகாராஷ்டிராவின் மற்ற நகரங்களும் மெட்ரோ ரயில்களால் இணைக்கப்பட்டிருக்கும் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.

டெல்லி மெட்ரோவுக்கான பணிகள் அடல் ஜி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. இப்போது டெல்லி நகரம் முழுக்க மெட்ரோ மூலமாக இணைக்கப் பட்டுள்ளது.

நண்பர்களே,

முந்தைய ஆட்சியின் போது, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில், அதற்குரிய அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

நண்பர்களே,

அவர்களுடைய சிந்தனை அவ்வளவு தான். நாட்டின் எல்லா மூலைகளுக்கும் தொடர்பு வசதி இருக்க வேண்டும், சரிசமமான வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏக் பாரத், சிரெஸ்தா பாரத் என்பது எங்களுடைய நோக்கமாக இருக்கிறது.

நல்லது, 2004 முதல் 2018 வரையில், தலைமுறையில் ஒரு மாற்றம் இருந்தது, சிந்தனையில் மாற்றம் இருந்தது, நம்பிக்கைகள் மற்றும் நோக்கங்களில் மாற்றம் இருந்தது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சகோதர சகோதரிகளே,

வாழ்க்கைச் சூழலை எளிதாக்குவதும், தொழில் செய்வதை எளிதாக்குவதும் தான் மத்திய அரசின் முன்னுரிமையான விஷயங்கள். இந்தக் காரணத்தால் தான் நாடு முழுக்க 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப் படுகின்றன.

மகாராஷ்டிராவில், புனே உள்பட 8 நகரங்கள் ஸ்மார்ட் நகரங்களாக உருவாக்கப் படுகின்றன. இந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 5000க்கும் மேற்பட்ட திட்டங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

இந்தத் திட்டங்களுக்கு எதிர்காலத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் செலவிடப்படும். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கெனவே பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. ரூ.53 ஆயிரம் கோடி மதிப்பிலான 1700 திட்டங்களை நிறைவு செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

ஸ்மார்ட் நகரத் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் புனே உள்பட 8 நகரங்களில் சுமார் ரூ.1500 கோடி மதிப்பிலான பணிகள் பூர்த்தி செய்யப் பட்டுள்ளன. சுமார் ரூ.3500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

புனே ஒருங்கிணைந்த கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. இங்கிருந்து, நகரில் அனைத்து சிஸ்டம்களினும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

சொல்லப் போனால், AMRUT தொலைநோக்குத் திட்டத்தின் கீழான பணிகள் 41 நகரங்களில் வேகமாக நடைபெற்று வருகின்றன. சாலைகள், மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படை வசதிகளுக்கான திட்டப் பணிகள் சுமார் ரூ.6000 கோடி செலவில் விரைவில் முடிக்கப்படும்.

இவற்றுடன், நகரை ஒளிமிக்கதாகவும், அழகானதாகவும் ஆக்குவதற்கும், மின்சார செலவை குறைப்பதற்கும் எல்.இ.டி. தெருவிளக்குகள் பொருத்தப் படுகின்றன.

மகாராஷ்டிராவில் பல்வேறு நகரங்களில் சுமார் ஒரு லட்சம் தெருவிளக்குகள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுவிட்டன. இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு மின்சார செலவு மிச்சமாகியுள்ளது.

நண்பர்களே,

சாமானிய மக்களின் சேமிப்பை அதிகரிக்கவும், அரசின் சேவைகள் அவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யவும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைக்கு பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை ஆயிரக்கணக்கான சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடிகிறது.

மின்சார கட்டணம், குடிநீர்க் கட்டணம், மருத்துவமனைகளில் நேரம் கேட்டுப் பெறுதல், வங்கிப் பரிவர்த்தனைகள், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, அட்மிஷன், ரிசர்வேஷன் செய்தல் போன்ற பல சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடிகிறது. இதனால் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லாமல் போவதுடன், லஞ்சம் குறைவதற்கும் வழி ஏற்பட்டுள்ளது.

இப்போது உங்களுடைய அனைத்துச் சான்றிதழ்களையும் பத்திரமாக வைப்பதற்கு டிஜி லாக்கர் வசதி உதவுகிறது. நாடு முழுக்க சுமார் 1.5 கோடி கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன.

சொல்லப் போனால், ஓட்டுநர் உரிமம் போன்ற பல்வேறு ஆவணங்களை இனிமேல் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. கணினி நகலை வைத்துக் கொள்ளலாம் அல்லது செல்போன்களில் டிஜி லாக்கர் மூலம் அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்.

சகோதர சகோதரிகளே,

நமது தொழில் துறையினரின் தேவைகளுக்கு ஏற்பவும், அவர்களுடைய வழக்கமான நடைமுறைகளுக்கு ஏற்பவும், தொழிற்சாலைகளின் புதிய தேவைகளையும், நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலும் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. விதிமுறைகள் எளிமையானவையாக இருப்பதுடன், எளிதில் அமல் செய்யக் கூடியவையாகவும், வெளிப்படைத் தன்மைகொண்டதாகவும் இருக்கின்றன.

அரசின் இந்த முயற்சிகளுக்கு டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்கள் உத்வேகம் கொடுத்துள்ளன. மலிவான விலையில் செல்போன்கள் கிடைப்பதாலும், மலிவான கட்டணத்தில் வேகமான இன்டர்நெட் வசதி கிடைப்பதாலும், மிக சாமானிய மக்களும் தொழில்நுட்பத்தின் வசதிகளை இப்போது பெற முடிகிறது.

செல்போன் தயாரிப்பில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளதால், இன்றைக்குக் குறைந்த விலையில் செல்போன்கள் கிடைக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் செல்போன் தயாரிப்பில் 2 நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது 125 செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் இளைஞர்கள் வரை வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது இன்னும் அதிகரிக்கவுள்ளது. செல்போன் தயாரிப்பு உள்பட மின்னணு உற்பத்தியில் முக்கியமான மையமாக இந்தியா மாறப் போகிறது.

நண்பர்களே,

ஹார்டுவேர் மட்டுமின்றி, மலிவான கட்டணத்தில், வேகமான இன்டர்நெட் சேவை நாட்டில் அனைத்து கிராமங்கள், அனைத்து தெருக்களுக்கும் கிடைக்கிறது. நாடு முழுக்க ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

கிராமங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான பொதுச் சேவை மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பணியாற்றி, ஆன்லைன் சேவைகளை அளிக்கின்றனர்.

1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள், ஆன்லைன் வங்கிச் சேவைக்கான இடமாக மாறியுள்ளன. வீட்டு வாசலில் சேவை அளிக்கும் மையங்களாக அவை மாறவுள்ளன.

நாட்டில் சுமார் 700 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி அளிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

2014ல் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை 6 மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுக்க 50 கோடிக்கும் அதிகமான Rupay டெபிட் கார்டுகள் விநியோகிக்கப் பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மட்டும், முன் எப்போதும் இல்லாத அளவில் UPI, BHIM மற்றும் இதர டிஜிட்டல் தளங்கள் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன.

சகோதர சகோதரிகளே,

புனே நகரம் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையமாகவும் உள்ளது. இது அறிவு மற்றும் தொழில்நுட்பத்துக்கான மையமாக உள்ளது. புதிய இந்தியாவின் அறிமுகமாக இது மாறப் போகிறது.

நான்காவது தொழில் புரட்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் தயாராக உள்ளன. இங்குள்ள ஆயிரக்கணக்கான இளம் நண்பர்களைப் போல, புதிய சிந்தனை கொண்ட இளைஞர்கள் பட்டாளம் நம்மிடம் உள்ளது.

ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் அடல் புதுமைச் சிந்தனை தொலைநோக்குத்திட்டத்தின் மூலமாக, முன்னணி தொழில்நுட்பங்களின் முக்கியமான மையமாக இந்தியா மாறப் போகிறது. ஸ்டார் அப்களைப் பொருத்தவரையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சி கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாடு முழுக்க 500 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களுக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.

நமது நாட்டில் புதிய சிந்தனைகளுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இருந்தது கிடையாது. வழிகாட்டுதல்,கை பிடித்து தூக்கி விடுதலுக்கு தான் பற்றாக்குறை இருந்தது. இப்போது ஒவ்வொரு சிந்தனையையும் ஒரு தொழிற்சாலையாக மாற்றுவதற்கு அரசு பணியாற்றுகிறது.

தொழில்நுட்பத்துக்கான மனநிலை மிக இளைய வயதிலேயே உருவாக்கப் படுகிறது. ஸ்டார்ட் அப்-களுக்காக நாடு முழுக்க அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் திறக்கப் படுகின்றன; அடல் இன்குபேசன் மையங்கள் உருவாக்கப் படுகின்றன.

புதிய இந்தியாவின் இந்தப் புதிய மையங்களில், நாட்டின் எதிர்காலம் உருவாக்கப்படும். உலகின் மிகப் பெரிய திறமையாளர் தொகுப்பு இங்கே உருவாக்கப்படும். புதிய இந்தியாவை உருவாக்குவதில், புனேவும், மகாராஷ்டிராவும், நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்றப் போகிறீர்கள்.

இந்த நம்பிக்கையுடன், மீண்டும் ஒருமுறை, மெட்ரோ பணிகள் தொடக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெருமளவில் இங்கு வந்திருந்து, எனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

 ***