Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய பொது நிதி நிலை அறிக்கை 2016-17 குறித்து பிரதமர் அறிக்கை


இந்த நிதி நிலை அறிக்கைக்காக நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி. எங்களது கவனம், கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீதே உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையில் இவர்களின் வாழ்வில் தரமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக பல்வேறு லட்சியவூர்மான திட்டங்கள் உள்ளன.

வறுமை ஒழிப்புக்காக விரிவான, கால வரையறையுள்ள திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிக்கும் நீர் கிடைப்பதற்காக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் சாலை உட்கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்து நாம் அனைவரும் அறிவோம். 2019ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமத்தையும் சாலைகள் மூலமாக இணைக்கும் திட்டம் இந்த நிதி நிலை அறிக்கையில் உள்ளது. ஊரக இந்தியாவை சாலைகள் மூலம் இணைப்பதற்காக பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்துக்காக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து 2018ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமத்துக்கும் மின்சார வசதி அளிக்கவும் திட்டம் உள்ளது.

ஊரக பொருளாதாரத்துக்கு ஊக்கமளித்து ஆரோக்கியமான மாற்றத்தை இது கொண்டு வரும். வறுமையான மனிதனிடம் கேட்டீர்கள் என்றால் அவன் தனது கனவை பகிர்ந்து கொள்வான். ஒரு வீட்டை சொந்தமாக்குவது அவனது மிகப்பெரிய கனவு. நடுத்தர வர்க்கம், புதிய நடுத்தர வர்க்கம் என்று அனைவருக்கும் சொந்த வீடு கனவாக உள்ளது. அவர்களின் கனவை நனவாக்க நாம் எவ்வாறு உதவப் போகிறோம். அரசின் உதவியில்லாமல் அது சாத்தியமில்லை. இதற்காகத்தான் இம்முறை வீட்டு வசதித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அனைவருக்கும் வீடு என்பதை சாத்தியமாக்க முயற்சித்துள்ளோம்.

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கான வருமான வரிச் சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இனி குறைவான வருமான வரி செலுத்துவார்கள்.

ஏழைகள் குறித்து பெருத்த அரசியல் உள்ளது. சாதாரண விறகடுப்பில் சமைக்கும் ஒரு பெண்மணிக்கும் அவர் குழந்தைகளுக்கும் உடல் நலக் கேடு ஏற்படும். விறகடுப்பினால் ஏற்படும் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் கேடு ஒரு நாளைக்கு 400 சிகரெட் புகைப்பதற்கு சமமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க உள்ளோம். விறகடுப்பை பயன்படுத்தும் 5 கோடி குடும்பங்கள் புகையிலிருந்து விடுபடும். ஏழைகளுக்கு ஆரோக்கியம் மேம்படுவதோடு சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

சுகாதாரத் துறையிலும் நமது அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. சில நேரங்களில் ஒரு நோய், ஏழை அல்லது நடுத்தர அல்லது புதிய நடுத்தர குடும்பத்தின் வாழ்வையே அழித்து விடலாம். மூத்த குடிமக்களுக்காகவே திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

நமது நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். நமது மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். நமது படைகளுக்கு சிறந்த உபகரணங்கள் கிடைக்க வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே தரம் ஒரே ஓய்வூதியம் கிடைக்க வேண்டும். இந்த நிதி நிலை அறிக்கையில் ராணுவ தளவாட உற்பத்திக்கும், ராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்புக்கு 2 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். இது எல்லைகளை காக்கும் நமது படைகளுக்கு பலனளிக்கும்.

நமது நாட்டின் இளைஞர்கள் முன்னேறி வருகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக, “அமைப்பு சாரா துறையை அமைப்பாக்குவது” “வேலை வாய்ப்பில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது” என்று இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

தொடங்கிடு இந்தியா மற்றும் நிமிர்ந்து நில் இந்தியா ஆகியவையே எனது மந்திரங்கள். புதிய தொழில்களுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துவதற்காக இந்த நிதி நிலை அறிக்கையில் வரிகள் தொடர்பாக திட்டங்கள் உள்ளன. நமது இளைஞர் வேலை தேடுபவனாக இல்லை. வேலை அளிப்பவனாக மாற வேண்டும். அவனது கனவை நனவாக்குவதற்காக அரசு தொழில் தொடங்குவோர் முனையத்தை உருவாக்க உள்ளது.

உலகம் உருவாக்கும் சவால்களை எதிர்கொண்டு, கல்விக்கான அனைத்து வாய்ப்புகளையும் நமது இளைஞர்கள் பெற வேண்டும். பல்வேறு புராதன சட்டங்கள் மற்றும் விதிகளால் கல்வி ஏராளமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை சீர்படுத்துவதற்காக 10 அரசு நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த வகையில் உருமாற்றம் செய்யப்படும். இந்த நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவியும் அளிக்கப்படும். இது கல்வித்துறையில் ஒரு முக்கியமான திட்டம். கல்வி நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டால் அது எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆரம்பக் கல்வி முக்கியமானது. இது வரை அரசுகள் ஆரம்பக் கல்வியை விரிவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தன. அதுவும் முக்கியமே என்றாலும் இன்றைய சவால்களை சந்திக்கும் வகையில் அதன் தரத்தை உயர்த்துவதும் முக்கியமாகும். நீண்ட தூரத்தில் உள்ள கிராமத்தில் உள்ள குழந்தைகள் கல்வி பெறுவது மட்டுமல்ல. தரமான கல்வி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது போன்ற தரம் குறித்த விஷயங்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கை முக்கியத்துவம் அளிக்கிறது.

நமது அரசு எப்போதும் நமது மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. நமது மக்களை சந்தேகிக்கக் கூடாது. வருமான வரித்துறை அதிகாரிகள் சாதாரண பொதுமக்கள் மீது மதிப்பு வைக்க வேண்டும். ஒரு சாதாரண குடிமகன் அவன் சந்திக்கும் சிக்கலான நடைமுறைகளில் இருந்து விடுபட வேண்டும். சாதாரணமாக வாழ்க்கையை நடத்தி வரும் ஒரு குடிமகன், அவனது ஒட்டுமொத்த வருமானத்துக்கு ஊக வரி செலுத்த வேண்டியதில்லை.

மீண்டும் ஒரு முறை திரு அருண் ஜெய்ட்லி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டின் குடிமக்களுக்கு இது அவர்களது கனவு நிதிநிலை அறிக்கை என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் கனவுகளை நனவாக்கும் நிதிநிலை அறிக்கையை இந்த அரசு வெளியிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.