பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கு முதல் முறையாக வருகைதரும் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மாதம் பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கண்டு களித்தோம். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றியபோது, ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் வீரர் பிராட்மேன், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நினைவுகூர்ந்தேன். இன்று இந்தியாவில் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் ஸ்டீபன் ஸ்மித்தும் இளம் கிரிக்கெட் வீரர்களைச் செதுக்குகிறார்கள். உங்களது இந்திய வருகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித்தின் பேட்டிங் ஆட்டத்தைப் போல ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே!
ஜி-20 மாநாட்டை ஒட்டி நாம் மேற்கொண்ட சந்திப்புகளை நினைவுகூர்கிறேன். அந்த மாநாடுகளின் போதெல்லாம் வலுவான கூட்டமைப்பு உணர்வும், நோக்கமும் பிரதிபலிக்கும். நமது சந்திப்புகளின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்வதில் தாங்கள் காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் நான் பெரிதும் வரவேற்கிறேன். நமது கூட்டுப் பயணம் உறுதியாக அமைந்துள்ளது. உங்களது சீரிய தலைமையில் நமது உறவு புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது. எங்களது ராஜீய கூட்டாண்மைக்கு மெருகேற்ற உங்களுடைய வருகை நல்ல வாய்ப்பை அளிக்கிறது.
மாண்புமிகு பிரதமர் அவர்களே!
நம் இரு நாடுகளின் வரலாற்றுத் தொடர்புகளை இந்தியப் பெருங்கடலின் நீர் நினைவூட்டுகிறது. நமது இணைந்த இலக்கினைச் சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் விழுமியங்கள் கோட்பாடுகள் ஆகியவையும் சட்டமும் நம் இரு நாடுகளுக்கும் பொதவாகவே அமைந்துள்ளன. இந்தியாவின் 125 கோடி மக்களின் பொருளாதார வளத்தை நோக்கிய உறுதியான விருப்பமும் ஆஸ்திரேலியாவின் ஆற்றல், வலிமை ஆகியவையும் நமது நல்லுறவில் பரந்துபட்ட நம்பிக்கையை வகுத்துள்ளது.
நண்பர்களே!
இன்றைய விவாதத்தில் பிரதம மந்திரியும் (மால்கம் டர்ன்புல்) நானும் (நரேந்திர மோடி) இரு தரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வரம்பையும் ஆய்வு செய்தோம். நமது கூட்டாண்மையை வலுப்படுத்துவது, ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பு உடன்பாடு குறித்து இருவரும் விரைவில் அடுத்த கூட்டம் நடத்துவது குறித்த முடிவு உள்ளிட்ட முன்னோக்கிய பார்வையுடன் கூடிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
நகைச்சுவையாகச் சொல்லப் போனால், நமது முடிவுகள் கிரிக்கெட்டில் உள்ளது போல் மூன்றாவது நடுவரின் ஆய்வுக்கு உட்படாதவை என்று குறிப்பிடலாம்.
நண்பர்களே!
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நமது இரு சமுதாயங்களின் வளர்ச்சிக்காக இரு நாடுகளின் கல்வி மற்றும் புதுமை ஆகியவற்றில் பொது மதிப்பீட்டை ஏற்கின்றன. எனவே, கல்வி, ஆய்வு ஆகியவற்றில் இரு தரப்பினருக்கும் இடையில் ஒத்துழைப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுவதில் வியப்பி்ல்லை. பிரதமரும் நானும் நேனோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி குறித்த “தேரி-டேக்கின்” ஆய்வு மையத்தை (TERI-DEAKIN Research Centre on Nano and Bio Technology) தற்போதுதான் தொடங்கிவைத்தோம். இரு நாடுகளிலும் ஏற்படும் அறிவியல் தொழில்நுட்ப நவீன மாற்றத்தில் இரு நாடுகளும் உடனுக்குடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கு இதுவே சரியான உதாரணமாகும். 10 கோடி டாலர் அளவிலான ஆய்வு நிதி ஆஸ்திரேலிய-இந்தியா இடையிலான நானோ டெக்னாலஜி, பொலிவுறு நகரங்கள், கட்டுமானம், வேளாண்மை, நோய்கள் தடுப்பு ஆகியவற்றில் கூட்டாக ஆய்வு நடத்துவதில் கவனம் செலத்தும். வியட்நாம் நாட்டுடன் இந்தியா கொண்ட செறிவூட்டிய வாழை குறித்த திட்டம் களத்தில் சோதனைக்குப் பயன்படுத்தும் நிலையை எட்டியிருக்கிறது. அது போல் சத்தான பருப்பு வகைகளை உருவாக்குவதிலும் நமது விஞ்ஞானிகள் கூட்டு முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். நமது விஞ்ஞானிகளின் திறமையான கூட்டுப் பணி உறுதியான முடிவுகளை எட்டும் என்பதற்கும் விவசாயிகள் உள்பட பலகோடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதற்கு இவை இரு உதாரணங்கள்.
ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்தப் பயணத்தில் இடம்பெற்றுள்ள துணைவேந்தர்கள், பல்வேறு தொழில்பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கொண்ட குழுவையும் மனமார வரவேற்கிறேன். இந்தப் பயணத்தில் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பில் மாணவர்கள் பரிமாற்றமும் மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் 60 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். அதைப் போல் இந்தியாவுக்கு வந்து கல்வி பயிலும் ஆஸ்திரேலிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்திய இளைஞர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவில் உலகத் தரம் வாயந்த கல்விநிறுவனங்களை அமைப்பது எனது அரசின் நோக்கங்களில் ஒன்றாகும். இந்தக் குறிக்கோளை எட்டும் வகையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவுடன் கல்வி இணைப்பை மேற்கொள்வது குறித்தும், இங்கு தனது பங்களிப்பைச் செலுத்துவது குறித்தும் ஆஸ்திரேலிய பிரதமருடன் விவாதித்தேன்.
நண்பர்களே!
ஆஸ்திரேலிய பிரமதரும் நானும் நமது பொருளாதார முன்னேற்றமும், வளமும் மென்மையான அமைய வேண்டும் என முடிவு செய்துள்ளோம். மாற்று எரிசக்தி உள்பட மின்சார உற்பத்தியில் இரு நாடுகளும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்பும் அமைந்திருந்தன என்பது குறித்து இருவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஆஸ்திரேலியாவும் இணையும் முடிவை எடுத்ததற்காக ஆஸ்திரேலிய பிரதமருக்கு மனமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்கிறேன். அத்துடன் இதுகுறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அடுத்து, அந்நாடும் யுரேனியத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயாராகிவிட்டது.
நண்பர்களே!
நம் இரு நாடுகளின் எதிர்காலம் இந்திய – பசிபிக் மண்டலத்தின் அமைதி, நிலைத்தன்மை ஆகிவற்றுடன் பிணைந்திருக்கிறது என்பதை நானும் ஆஸ்திரேலிய பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளோம். எனவே, பாதுகாப்பு, சட்டத்துக்கு உட்பட்ட இந்திய – பசிபிக் எல்லை அமைந்திருக்க வேண்டும் என்பதன் தேவையை ஒப்புக் கொண்டுள்ளோம். அதே சமயம் பயங்கரவாதம், கணினிசார் பாதுகாப்பு (cyber security) ஆகியவை தொடர்பான ஆபத்துகள் எல்லை கடந்து செல்கின்றன என்பதையும் உணர்ந்துள்ளோம். எனவே, உலகளாவிய உத்தியும் தீர்வுகளும் தேவையாகின்றன. மண்டல அளவிலும் உலக அளவிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் டர்ன்புல் கொண்டுள்ள புரிதலும் தீர்க்கப் பார்வையும் இத்தகைய பிரச்சினைகள் குறித்த நமது ஒத்துழைப்புக்குப் புதிய பரிமாணத்தை அளித்துள்ளன. பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான நமது ஒத்துழைப்பு புதிய உயரத்தை எட்டியிருக்கிறது. நமது இரு நாடுகளின் கடற்படைகளின் சேவைகளும் பரிமாற்றங்களும் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளன. பயங்கரவாதத்தையும் நாடுகடந்த குற்றச் செயல்களையும் ஒடுக்குவதில் நமது இரு தரப்பு நடைமுறைகள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. பிரதமரின் இந்தப் பயணத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிந்தது குறித்து நான் திருப்தி அடைந்துள்ளேன். இந்த மண்டலத்தில் அமைதி, வளம், சமச்சீர்நிலை ஆகியவை ஏற்பட வலுவான மண்டல அளவிலான நிறுவனங்கள் தேவை என்ற நிலையில் இருவரும் இசைந்துள்ளோம்.
எனவே, இந்தியக் கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் அரசு, வர்த்தக, கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டமைப்பும் (Indian Ocean Rim countries) மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டு (East Asia Summit) உறுப்பினர்களுடன் நமது பொது நலன்களைக் காப்பதற்காக நாங்கள் இரு தரப்பினரும் நெருக்கமாகவும் உற்சாகமாகவும் செயலாற்றுவோம்.
நண்பர்களே!
நமது கூட்டுறவில் இரு சமூகங்களின் இணைப்பு மிக முக்கியமாக உள்ளது. ஆஸ்திரேலியா சுமார் ஐம்பது லட்சம் இந்திய வம்சாவளியினரின் தாயகமாக இருக்கிறது. அவர்களது வளமான வாழ்க்கை, கம்பீரமான பண்பாடும் நமது கூட்டாண்மைக்கு செறிவூட்டுகிறது. இந்தியாவின் வெற்றிகரமான Confluence எனப்படும் கலசாசாரத் திருவிழா ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் கடந்த ஆண்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஆஸ்திரேலிய அரசு ஆதரவும் உதவியும் அளித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே!
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பு உறவுகளில் பல முக்கிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. அதுபோல, எதிர்காலத்தில் நம்பிக்கையும் வாய்ப்புகளையும் இரு நாடுகளும் காணும். இரு நாடுகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றுக்கு நம் இரு நாடுகளின் வலுவான துடிப்பான ராஜீய உறவுகள் மிகவும் முக்கியமானவை. ஆனால், இந்த மண்டலத்தில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் இவை இன்றியமையாதவை ஆகும்.
இந்தக் கருத்துகளுடன் மாண்புமிகு பிரதமர் அவர்களே, உங்களை மீண்டும் வரவேற்கிறேன். இந்தியாவில் நீங்கள் தங்கியிருக்கும் காலம் மகிழ்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்திருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
நன்றி,
மிகுந்த நன்றி, வணக்கம்!