Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முக்கிய உள்கட்டமைப்பு பிரிவுகளான போக்குவரத்து, வீட்டுவசதி துறைகளின் செயல்பாடு குறித்து பிரதமர் ஆய்வு


பிரதமர் திரு. நரேந்திர மோடி வியாழன் அன்று, சாலைகள், பிரதமர் கிராம சாலைகள் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் உள்கட்டமைப்பு தொடர்பான அமைச்சகங்கள், நிதி ஆயோக், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் திரு. அமிதாப் காந்த், சாலை அமைப்பு பணிகள் குறித்த வீடியோ செயல் விளக்கத்தை அளித்தார். சாலை அமைப்பு பணிகள், துரித கதியில் நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது. 2013-14ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நாள் ஒன்றுக்கு 11.67 கி.மீ. தூரமாக இருந்து சாலை அமைப்பு பணி 2017-18-ம் நிதியாண்டில் 26.93 கி.மீட்டராக அதிகரித்துள்ளது.

போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் மயமாக்கத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுவரை வாகனங்களுக்கான 24 லட்சத்துக்கு மேற்பட்ட ரேடியோ அலைவரிசை அடையாளப்பட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 22 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுகாத் யாத்ரா எனும் செயலி சாலையின் நிலைமை, புகார் தெரிவிக்கும் வசதி ஆகியவற்றை வழங்குகிறது. இதில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. மின்னணு கட்டண வசூல் முறையில் துரிதமான முன்னேற்றம் தேவை என பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், அனைத்து தகுதி வாய்ந்த குடியிருப்புகளைக் கொண்ட 88 சதவீத ஊரகச் சாலைகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை 44 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் இணைப்புச் சாலைகளை பெற்றுள்ளன. அதற்கு முந்தைய நான்காண்டுகாலத்துடன் ஒப்பிடுகையில், வெறும் 35 ஆயிரம் கிராமங்கள் மட்டுமே இணைப்புச் சாலைகளை பெற்றிருந்தன. 10 மாநில மொழிகளில் “மேரி சடக்” (எனது சாலை) என்னும் செயலி, தொடங்கப்பட்டு அதில் இதுவரை 9.76 லட்சம் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. சாலைகளை இனம் காணும் புவியியல் தகவல் முறை வரைபடத் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை இருபது மாநிலங்கள் புவிவழி கிராமச் சாலைகள் தகவல் முறையை கடைப்பிடித்து வருகின்றன. பசுமைத் தொழில்நுட்பங்கள், பிளாஸ்டிக், உலர்சாம்பல் உள்ளிட்ட மரபுசாரா பொருட்களைக் கொண்டு கிராமப்புற சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரயில்வே துறையில் கணிசமான அளவில் திறன் மேம்பாடு காணப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் 2018 வரை புதிய ரயில் பாதைகள் அமைத்தல், இரட்டைப்பாதைகள், அகலப்பாதை அமைக்கும் பணிகள் 9,528 கி.மீ அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய நான்காண்டு காலத்துடன் ஒப்பிடுகையில் இது 56 சதவீதம் அதிகமாகும்.

இதே போல் விமானப்போக்குவரத்துத் துறையில், 2014-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான நான்காண்டுகளில், பயணிகளின் எண்ணிக்கை 62 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நான்காண்டுகளில் இது வெறும் 18 சதவீதமாக இருந்தது. உடான் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்ட, மூன்றாம்கட்ட நகரங்களில் 27 விமான நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

துறைமுகங்கள் துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், முக்கிய துறைமுகங்களில், போக்குவரத்து 17 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தில் கடந்த நான்காண்டுகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. முந்தைய நான்காண்டு காலத்தில் சுமார் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. இந்த வீடு கட்டும் திட்டம், வீட்டுவசதித்துறை, மற்றும் அது தொடர்பான கட்டுமானத்தொழில்களில் வேலைவாய்ப்பை ஊக்குவித்துள்ளது. 2015-16-ம் ஆண்டில் 314 நாட்களாக இருந்த சராசரி கட்டுமான நிறைவு காலம், 2017-18-ல் 114 நாட்களாக சரிந்துள்ளது என தனியாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பேரிடர் தடுப்பு, குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான வடிவமைப்பு முறைகளில், கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

நகர்ப்புற வீட்டுவசதித்துறையில் புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் இதுவரை 54 லட்சம் வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.