Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரிஷிகேஷில் நடந்த தேசிய யோகா மாநாட்டின் ஆண்டுவிழாவில் காணொளிக் காட்சி மூலமாக பிரதமர் ஆற்றிய துவக்க உரை.

ரிஷிகேஷில் நடந்த தேசிய யோகா மாநாட்டின் ஆண்டுவிழாவில் காணொளிக் காட்சி மூலமாக பிரதமர் ஆற்றிய துவக்க உரை.


சுவாமி சிதானந்த் சரஸ்வதி அவர்களே,

சங்கராச்சாரியா திவ்யானந்த் தீர்த் அவர்களே,

சுவாமி ஆசங்கானந்த் சரஸ்வதி அவர்களே,

சாத்வி பகவத் சரஸ்வதி அவர்களே,

துறவிகளே, ஆச்சாரியாக்களே, நண்பர்களே,

உங்களோடு காணொளி காட்சி மூலமாக இணைந்தி ருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நான் துவங்கும் முன்னர், சமீபத்தில் நம் விஞ்ஞானிகள் ஆற்றிய குறிப்பிடத்தக்க சாதனைகளை பகிர்ந்து கொள்கிறேன். கடந்த மாதம் நம் விண்வெளி விஞ்ஞானிகள் முக்கியமானதொரு சாதனையை நிகழ்த்தினார்கள். ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை அனுப்பினார்கள். அவற்றில் 101 செயற்கைகோள்கள் அமெரிக்கா, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கஜகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் போன்ற நாடுகளுடையது. நம் பாதுகாப்பு விஞ்ஞானிகளும் இந்தியாவை பெருமை கொள்ள வைத்துள்ளார்கள்.

பிப்ரவரி 11ந் தேதி அதிக உயரம் செல்லக்கூடிய உந்து எறிவிசை ஏவுகணை தடுப்பான்களை வெற்றிகரமாக சோதனையிட்டார்கள். இதன்மூலம் நம் நகரங்களுக்கு ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். நேற்று மற்றொரு சாதனையாக குறைந்த உயரம் பறக்கக் கூடிய இடைமறிக்கக் கூடிய ஏவுகணையையும் வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்தார்கள். இதுவரை நான்கு நாடுகள் மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தி உள்ளன. நமது விண்வெளி மற்றும் பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பார்ந்த நண்பர்களே,

இந்தியாவில் தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆகிவற்றில் பல ஆய்வுகளை மேற்கொள்வதோடு, நம் ஆன்மாவின் ஆழத்தையும், அதாவது யோகாவையும் ஆய்வு செய்கிறோம்.
அதனால் சர்வதேசே யோகா விழாவை நடத்த ரிஷிகேஷை விட சிறந்த இடம் கிடையாது. அமைதியையும், யோகாவின் உண்மைத் தன்மையையும் தேடும் துறவிகள், சந்நியாசிகள், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரை பல நூற்றாண்டுகளாக ஈர்க்கும் இடமாக ரிஷிகேஷ் திகழ்கிறது.

இன்று ரிஷிகேஷ் கங்கைக் கரைக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருக்கும் பலதரப்பட்ட மக்களை பார்க்கும் போது, ஜெர்மானிய ஞானி மேக்ஸ் முல்லரின் சில வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகிறது:

“மனிதர்களின் மனம் அதன் ஆகச்சிறந்த பரிசுகளை எல்லாம் எந்த குடையின் கீழ் அமர்ந்து பெற்றிருக்கிறது என கேட்டால். பெரிய பிரச்சினைகளுக்கெல்லாம் எங்கு தீர்வை கண்டிருக்கிறது எனக் கேட்டால், நான் இந்தியா எனச் சொல்வேன்.” என்றார்.

மேக்ஸ் முல்லரில் இருந்து இன்று ரிஷிகேஷில் கூடியிருக்கும் நீங்கள் வரை, வாழ்க்கையில் வெற்றிபெற்ற பலருக்கும் எப்போதெல்லாம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தமறியும் ஆவல் ஏற்பட்டிருக்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவே அவர்களின் தேர்வாக இருந்துள்ளது.
பல சமயங்களில் அந்த ஆவல் அவர்களை யோகாவுக்கே இட்டுச்சென்றுள்ளது.

மனிதர்களை வாழ்க்கையுடன் இணைக்கும் பாலமாக யோகா விளங்குவதுடன், இயற்கையுடன் இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது. நம்மை மட்டுமே நோக்கும் குறுகிய பார்வையை மீறி, நம் குடும்பத்தை, சமூகத்தை, மனித இனத்தையே ஒன்றாக, நமது விரிவுபடுத்தப்பட்ட வடிவமாக பார்க்க வைக்கிறது. அதனால்தான் சுவாமி விவேகானந்தர், “நீட்சியே வாழ்க்கை, இறுக்கமே மரணம்,” என்றார்.

யோகாவை பயிற்சி செய்வதன்மூலம் ஆன்மா ஒன்றுபடுகிறது- மனமும், உடலும் ஒருபுள்ளியில் இணைகிறது. நம் குடும்பம், சமூகம், சக மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் என எல்லோருடனும் ஒருமித்து வாழ வழி ஏற்படுகிறது… இதுதான் யோகா.
‘நான்’ என்பதில் இருந்து ‘நாம்’ என்ற பயணம் தான் யோகா. இயற்கையின் கொடையாக திகழும் இந்த பயணம், நல்ல மனம், அமைதி, வளம் என பல பயன்களையும் அளிக்கிறது. ஒரு தனிமனிதனை மேம்பட்ட மனிதனாக அவனது செயல்கள், அறிவு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் ஆக்குகிறது யோகா. உடலை நன்றாக பராமரிக்க செய்யப்படும் பயிற்சியாக மட்டும் யோகாவை பார்ப்பது நியாயமில்லை.

உடற்பயிற்சிகளை எல்லாம் விட மேம்பட்ட யோகா. நவீன வாழ்க்கையில் இருந்து அமைதி பெற மக்கள் பெரும்பான்மையாக புகைப்பழக்கம், மது, போதைமருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் யோகா எளிமையான, காலம்கடந்த, ஆரோக்கியமான தேர்வாக இருக்கிறது. யோகா பயிற்சி செய்வதால் மன அழுத்தமும், அது சார்ந்த பிரச்சினைகளும் தீர்வதற்கான ஆதாரம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகம் இன்று பயங்கரவாதம் மற்றும் வானிலை மாற்றம் என்ற இரண்டு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சவால்களுக்கான ஒரு நிரந்தரமான தீர்வை தரும் என உலகமே இந்தியாவையும், யோகாவையும் எதிர்நோக்கியுள்ளது. உலக அமைதி பற்றி பேசும் போது நாடுகளுக்கிடையே அமைதி நிலவுவது முக்கியம். சமூகங்களுக்கு இடையே அமைதி நிலவினால் மட்டுமே அது சாத்தியம். அமைதியான குடும்பங்களினால் மட்டுமே அமைதியான சமூகம் சாத்தியம். அமைதியான தனிமனிதர்களால் மட்டுமே அமைதியான குடும்பங்கள் சாத்தியம். இதை உருவாக்க யோகாவினால் மட்டுமே முடியும். யோகாவின் மூலம் புது யுகத்தை உருவாக்க முடியும். வானிலை மாற்றங்களை எதிர்நோக்குவது குறித்து பேசும்போது, போகங்களை கடைபிடிக்கும் வாழ்க்கைமுறையை விடுத்து யோகத்தை கடைபிடிப்பதே தீர்வாக தெரிகிறது.
ஒழுக்கமும், மேம்பாடும் நிறைந்த வாழ்க்கையை வாழ யோகா ஒரு தூணாக திகழும். தனிப்பட்ட வளர்ச்சியைப் பொறுத்தவரை மற்ற விஷயங்களில் எல்லாம் என்ன பெறலாம் என்பதைச் சொல்லும்போது, யோகாவில் மட்டுமே எதையெல்லாம் ஒருவர் விட்டொழிக்கலாம் என்பது குறித்து இருக்கிறது.

யோகா என்பது ஒருவர் என்ன பெறுகிறார் என்பதைவிட எதையெல்லாம் துறக்கிறார் என்பதில் கவனம் செலுத்துகிறது. எனவே பெறுதல் என்பதைவிட, விடுதலை எனும் முக்திக்கு வழியை யோகா காட்டுகிறது.

சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, பர்மார்த் நிகேதனில் தனது பணிகளின் மூலம் இந்த மேன்மையான வழிமுறைகளை வாழ்ந்து காட்ட வழி செய்துள்ளார். உலகில் உள்ள மக்களிடம் யோகாவை கொண்டு சேர்த்த பர்மார்த் நிகேதனின் பணிகளை நான் பாராட்டுகிறேன். 11 பகுதிகளைக் கொண்ட இந்துமதத்தின் என்ஸைக்ளோபீடியாவை உருவாக்கியதில் சுவாமி அவர்களின் பணிகளை நினைவுகூர்கிறேன். மேலும் சுவாமிஅவர்களேயும் அவரது குழுவினரும் இந்தப் பணிகளை ஒரு கால்நூற்றாண்டுக்கு உள்ளாகவே செய்துள்ளார்கள். அவர்களின் பணியின் ஆழம் வியக்கவைக்கிறது. இந்துமதத்தின் பெரும்பான்மையான அம்சங்கள் அனைத்தையும் 11 பகுதிகளில் அடக்கிவிட்டார்கள்.

ஆன்மிகத்தை தேடும் யாவருக்கும், யோகிகளுக்கும், பொதுமக்களுக்கும் கூட இது மிகவும் தேவையானதொரு அம்சமாக திகழ்கிறது. இந்துமத என்சைக்ளோபீடியா பல்வேறு மொழிகளில் கிடைக்கும்போது புரிதல் அதிகரிக்கிறது, நாட்டில் மற்ற பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வு பெருகுகிறது.

மேம்பட்ட இந்த புரிதல் வெறுப்பை குறைக்கிறது, தவறாமல் புரிந்துணர்வுகளை நீக்கி ஒத்துழைப்பை அதிகரிக்கிறது, சமூகங்களிடையே அமைதி நிலவச் செய்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் பர்மத் நிகேதனின் பணிகளை பாராட்டவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.

தனிப்பட்ட சுகாதாரத்தில் இந்திய கலாச்சாரம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. உடலை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், வீடு, பணியிடம், வழிபாட்டுத்தளம் என எல்லா இடங்களிலும் சுத்தத்தை வலியுறுத்துகிறது. இந்த இடங்களின் நான்கு சுவர்களுக்குள் எவ்விதமான அசுத்தங்கள் இருந்தாலும் அதை தூய்மையற்ற இடமாகவே கருதவேண்டியுள்ளது.
நம் பண்டையகால வேதங்களிலும், தனிப்பட்ட சுத்தத்தின் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் வெளியிடங்களில் குப்பையை அப்படியே கொட்டும் பழக்கமும் உள்ளது. ஆனால் மேலை நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் இது வழக்கமில்லை. அங்கு சமூக சுகாதாரமும், பொது சுகாதாரமும் நல்ல முறையில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நீர்நிலைகள், நிலங்கள் மற்றும் காற்று போன்ற பொதுச் சொத்துகள் சுகாதாரமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். எனவே நல்ல ஆரோக்கியம் என்பது தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்தது.

தூய்மை இந்தியா மூலம் சமூக சுகாதாரத்தையும் தனிப்பட்ட ஆரோக்கியத்தையும் இணைக்க முயல்கிறோம்.

நம் சமூகங்களில் கோவில்களின் பங்கு எப்போதும் உண்டு. மிகப்பெரிய நிலங்களில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தள்ளியே அவை கட்டப்பட்டன. ஆனால் கால ஓட்டத்தில் சுற்றிலும் சந்தைகளும், குடியிருப்பு பகுதிகளும் பெருகிவிட்டதால் கோவில்களிலும் சுகாதாரம் கெட்டது.

தூய்மை இந்தியா திட்டம் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள “முக்கியான இடங்களில் சுகாதாரம்” என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

முதல்கட்டமாக காமாக்யா கோவில், பூரி ஜகந்நாத் ஆலயம், மீனாட்சி கோவில், திருப்பதி, தங்ககோவில், வைஷ்ணோதேவி கோவில் ஆகியவற்றையும், அவற்றின் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளது.

எனவே தூய்மை இந்தியா திட்டம்- இந்தியாவை தூய்மையானதாக மாற்றும் திட்டம்- இந்தியாவின் ஆன்மிக நம்பிக்கையுடன் தொடர்புடையது. செப்டம்பர் 2014ல் நான் சர்வதேச யோகா தினத்திற்கான தேவையை ஐ.நா. சபை கூட்டத்தில் தெரிவித்தபோது உலக அளவில் யோகாவின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

ஆனால் இப்படி அபாரமான ஆதரவு கிடைக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உலகின் பல மூலைகளில் இருந்தும் நாடுகள் நம்மோடு கைகோர்த்தன. இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன்21 சூரியகணநிலை நேரத்தின்போது உலகமே யோகாவிற்காக ஒன்றுகூடுகிறது.
சர்வதேச யோகா தினத்தை கொண்டாட இப்படி எல்லா நாடுகளும் முன்வந்துள்ளது, யோகாவின் உண்மையான நோக்கமான ‘ஒன்றுபடுதல்’ என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது.
சகோதரத்துவம், அன்பு, அமைதி நிறைந்த புதுயுகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆற்றம் யோகாவிற்கு உள்ளது.

நண்பர்களே,

இமயமலையின் ஆசீர்வாதங்கள் உங்களோடு இருக்கட்டும்.

பல நூறு ஆண்டுகளாக நம் யோகிகள் தவமிருந்த இந்த ரிஷிகேஷ் கங்கைக்கரையில் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் இந்த யோகா விழாவில் நீங்கள் அடைய வேண்டும்.
ரிஷிகேஷ் நகரில் பரமார்த் நிகேதனின் சூழலில் உங்கள் நேரம் மகிழ்ச்சிகரமானதாக, தெய்வீகமானதாக இருக்கட்டும்.

யோகா அனைவருக்கும் பயன் தரட்டும்.

சர்வதேச யோகா தினம் பெரு வெற்றி அடைய வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.