Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் பிரதமர்:

வாரணாசியில் பிரதமர்:

வாரணாசியில் பிரதமர்:

வாரணாசியில் பிரதமர்:


பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று (29.12.2018) வாரணாசிக்கு வருகை தந்தார்.

வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலைய வளாகத்தை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிறுவனத்தின் பல்வேறு ஆய்வகங்களையும் அவர் சுற்றிப்பார்த்தார்.

தீன்தயாள் ஹஸ்த்கலா சங்கூல்-லில் ஒரு மாவட்டம், ஒரு பொருள் கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.

விரிவான ஓய்வூதிய மேலாண்மை திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார். வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இன்று தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட அவர், இவை அனைத்தும் ஒரே பொதுவான நோக்கத்தைக் கொண்டவை என்றார்: வாழ்க்கையை எளிதாக்குதல் மற்றும் புதிய தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் ஆகும். உத்தரப்பிரதேச அரசின் “ஒரு மாவட்டம், ஒரு பொருள்” திட்டம் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின் விரிவாக்கம்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை உத்தரப்பிரதேச மாநில பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது என பிரதமர் தெரிவித்தார். அந்த வகையில், பாதோஹியில் உள்ள தரைவிரிப்புத் தொழில், மீரட்டின் விளையாட்டு உபகரணங்கள் தொழில், வாரணாசியில் பட்டு ஜவுளித் தொழில் போன்றவை திகழ்வதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். வாரணாசி மற்றும் பூர்வாஞ்சல் பகுதிகள், கைவினை மற்றும் கலைத் தொழில் மையங்களாக திகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். வாரணாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் 10 பொருட்கள். புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதுபோன்ற, கலை உணர்வுகளை லாபகரமான தொழிலாக மாற்றவும், தரமான இயந்திரங்கள், பயிற்சி மற்றும் சந்தை ஆதரவு கிடைப்பதை, “ஒரு மாவட்டம், ஒரு பொருள்” திட்டம் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட இருப்பதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு முழுமையான தீர்வு கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். தீன்தயாள் ஹஸ்த்கலா சங்கூல், அது உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை தற்போது பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று (29.12.2018) தொடங்கப்பட்ட ஓய்வூதிய மேலாண்மை மற்றும் அதிகார அமைப்பான சம்பான் (SAMPANN), தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த பயனளிப்பதுடன், ஓய்வூதியத்தை குறிப்பிட்ட நேரத்தில் வழங்கவும் உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

வாழ்க்கையை எளிதாக்குவதையும், குடிமக்கள் நலன் சார்ந்த சேவைகளை எளிதாக்குவதை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகவும் பிரதமர் கூறினார். இந்தியா போஸ்ட் பணப்பரிமாற்ற வங்கி, அஞ்சலகங்கள் மூலம் வங்கி சேவையை விரிவுபடுத்த பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடுமுழுவதிலும் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள், ஏராளமான சேவைகளை டிஜிட்டல் முறையில் கிராமப்புற மக்களுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் இணையதள இணைப்பு வைத்திருப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டிலுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள், அகண்ட அலைவரிசை மூலம் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களுக்கு பல்வேறு வசதிகளை அளிப்பதுடன், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் பயன்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். அந்த வகையில் அரசு மின்னணு சந்தை அல்லது GeM பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்தத் தொழில் துறையினருக்கு கடனுதவிகள் எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம், தொழில் தொடங்குவதை எளிதாக்குவது உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

திரவ இயற்கை எரிவாயு மூலம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்தி, தொழில் துறையை உக்குவிப்பதற்கான மாபெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மாபெரும் பயன் என்னவென்றால், தற்போது வாரணாசியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேளாண் துறையை அதிக லாபம் உள்ள தொழிலாக மாற்ற, அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாகவே இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

காசி நகரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதை தற்போது கண்கூடாக காணமுடிகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். இன்று (29.12.2018) தொடங்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், இந்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். கங்கை நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த லட்சியத்தை அடைய மக்கள் ஆதரவு அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வாரணாசியில் நடைபெறவுள்ள வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு வெற்றிகரமாக அமையும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

***

எம்எம் / உமா