Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018 நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்; பல்வேறு மையங்களில் உள்ள பங்கேற்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்; ஐ.பி.பி.பி.(IPPP), அதாவது – இன்னோவேட் (Innovate), பேட்டன்ட் (Patent), புரோட்யூஸ் (Produce) மற்றும் பிராஸ்பர் (Prosper) – என்ற மந்திரம் அளித்தார்


ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பிரமாண்டமான  நிறைவு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

பங்கேற்புடன் கூடிய ஆளுமையின் முக்கியத்துவத்தை தனது உரையின் போது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018-ல் பங்கேற்றவர்களிடம் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இளைஞர் மீது தனக்கு அதிகபட்ச நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்த அவர், புதிய இந்தியா என்ற தொலைநோக்கு லட்சியத்தை அடைவதில் இளைஞர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். “வேலைக்குச் செல்லும் இளைஞர்களுடன், இளம் தலைமை செயல் அலுவலர்களுடன் (CEO), இளம் விஞ்ஞானிகளுடன் மற்றும் இளம் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு ஏதாவது கிடைக்கும் போது, அதை ஒருபோதும் நான் தவறவிடுவதில்லை” என்று அவர் கூறினார். “நமது தேசத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் பற்றி சிந்திக்கும் மனம் கொண்ட இளைஞர்களைக் காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்மார்ட் இந்தியாவில் ஸ்மார்ட் சிந்தனையாளர்கள் மத்தியில் இருப்பது பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

எந்த தேசத்திலும் தொழிலாளர் சக்தி மற்றும் விருப்ப சக்தி ஆகியவைதான் மிகப் பெரிய சொத்துகளாக உள்ளன என்று பிரதமர் கூறினார். “மாற்றத்தைக் கொண்டு வருவது என மக்கள் முடிவு செய்துவிட்டால், எல்லாமே சாத்தியம்தான். ஆனால், தங்களால் மட்டும் தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நினைப்பதுதான் அரசாங்கங்களின் மிகப் பெரிய தவறு” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஹேக்கத்தானை விட, இந்த ஆண்டு ஹேக்கத்தானில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பற்றி பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். “முந்தைய ஹேக்கத்தானில் எடுத்துக் கொள்ளப்பட்ட பெரும்பாலான திட்டப் பணிகள் நிறைவடைந்து விட்டதாக எனக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

புதுமை சிந்தனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் ஐ.பி.பி.பி.(IPPP) என்ற மந்திரத்தை முன்வைத்தார். அதாவது புதுமை சிந்தனை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் வளமை (Innovate, Patent, Produce  மற்றும் Prosper )  என்ற மந்திரத்தை முன்வைத்தார். “இந்த நான்கு படிகளும் நமது நாட்டை வேகமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். அதற்கு நாம் புதுமையாக சிந்தித்து, அவற்றை காப்புரிமைகளாக மாற்றி, நமது உற்பத்தியை இலகுவாக்கி, மக்கள் வளம் பெறுவதற்காக அந்தப் பொருட்களை வேகமாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்” என்று அவர் விவரித்தார். “நமது உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியை புதுமையான சிந்தனை அளிக்கிறது. நம்முடைய புதுமை சிந்தனைகள், நமது சக குடிமக்களின் வாழ்வில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நாம் சிந்திக்க வேண்டும்” என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஆராய்ச்சி மற்றும் புதுமை சிந்தனைகளைகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தருவதற்கு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முடிவுகளை பிரதமர் குறிப்பிட்டுக் காட்டினார். அதில் பின்வரும் அம்சங்கள் அடங்கும்:

  • அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (Atal Tinkering Labs ) கல்வி மற்றும் கற்பித்தல் கருத்துரு அடிப்படையில் நவீன உத்திகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.
  • IIT-கள், IISc மற்றும் NIT பென்ற கல்வி நிலையங்களில் B.Tech, MTech மற்றும் MSc கல்வி பயில்வோரில் ஆண்டுதோறும் 1000 சிறந்த மாணவ, மாணவியருக்கு பிரதமரின் ஆராய்ச்சி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த மாணவ, மாணவியருக்கு ஐந்தாண்டு காலத்துக்கு மாதந்தோறும் 70 – 80 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
  • உயர் கல்வி நிலையங்களுக்கு அதிக தன்னாட்சி அதிகாரம் வழங்குவதில் ஒருமுகப்படுத்திய கவனம் செலுத்தப்படுகிறது.
  • உலகத் தரத்தில் தனிச்சிறப்பு மிக்க  கல்வி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

 

மேக் இன் இந்தியா திட்டம் எப்படி ஒரு முகவரியைப் போல மாறிவிட்டது என்றும், இப்போது உலகெங்கும் பிரபலமாகி உள்ளது என்றும் மேற்கோளிட்டுக் காட்டுவதற்கு, தனது உரையின் போது பிரதமர் ஓர் உதாரணத்தைக் கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செல்போன் தயாரிக்கும் இரண்டு மையங்கள் மட்டுமே இருந்தன என்றும், இப்போது நாடு முழுக்க சுமார் 120 தொழிற்சாலைகள் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 2013 – 14 ஆம் ஆண்டு பதிவு விவரங்களுடன் ஒப்பீடு செய்தால், காப்புரிமைப் பதிவு மற்றும் டிரேட் மார்க் பதிவுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சுகாதார – ஹேக்கத்தான், சட்ட – ஹேக்கத்தான், கட்டடக் கலை – ஹேக்கத்தான், வேளாண்மை – ஹேக்கத்தான் மற்றும் கிராமப்பகுதி ஹேக்கத்தான் என பல துறை ஹேக்கத்தான்களுக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்யுமாறு பங்கேற்பாளர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். “இந்த ஹேக்கத்தானுக்கு புதுமை சிந்தனையுள்ள விவசாயிகள், பொறியாளர்கள், கட்டடக் கலை நிபுணர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மேலாளர்கள் நமக்குத் தேவைப்படுகின்றனர்” என்று அவர் கூறினார். பிரகதி (PRAGATI) கூட்டங்கள் மூலமாக, திட்டப் பணிகளின் முன்னேற்றங்களை உடனுக்குடன் கண்காணிப்பு செய்வதில் தனது அனுபவங்களை, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

பிரமாண்டமான இறுதி நிகழ்ச்சியில், பல்வேறு மையங்களில் இருந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

*****