Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நியூசிலாந்து பிரதமர் இந்தியா வருகையின் போது இந்திய பிரதமர் அளித்த செய்தி அறிக்கை

நியூசிலாந்து பிரதமர் இந்தியா வருகையின் போது இந்திய பிரதமர் அளித்த செய்தி அறிக்கை


மேதகு பிரதமர் ஜான் கே அவர்களே

தூதுக்குழு உறுப்பினர்களே

ஊடகங்களின் உறுப்பினர்களே

 

மேதகு கே­யை இந்தியாவிற்கு வரவேற்பதில் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன்,

மேதகு பிரதமர் அவர்களே, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது இப்போது முறையான ஒரு அம்சமாக ஆகிவிட்டது என்று எனக்கு தெரியவந்துள்ளது.  நீங்கள் இத்தகைய பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளீர்கள். எனவே இந்தியாவின் தீபாவளி பண்டிகை காலத்தின் போது உங்களை வரவேற்பது மேலும் குறிப்பிடத்தக்க அளவு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

நண்பர்களே,

நானும் பிரதமர் கே­யும் பலதரப்பு உச்சிமாநாட்டு சமயங்களில் பலமுறை சந்தித்துள்ளோம். இன்று இந்தியாவுக்கு இருதரப்பு பயணமாக வந்துள்ள மேதகு கே அவர்களை வரவேற்பது நமக்கு கவுரவம் அளிக்கிறது.

இன்னும் சற்று நேரத்தில் நமது இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகள் ராஞ்சியில் நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளன.  கிரிக்கெட் விளையாட்டின் பல வார்த்தைகள் பல்வேறு வழிகளில் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளன.  நமது உறவுகளில் நாம் லாங் ஆஃப் கள நிலையில் இருந்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் புதிய பாதுகாவல் நிற்கும் நிலைக்கு நகர்ந்துள்ளோம், பாதுகாப்பான விளையாட்டு என்பதிலிருந்து அடித்து விளையாடும் நிலைக்கு மாறியுள்ளோம்.

நண்பர்களே,

பிரதமர் கே­யும், நானும் நமது இருதரப்பு உறவுகள்,  பல தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவான பயனுள்ள விவாதங்களை நடத்தியுள்ளோம்.

எங்களது பேச்சு வார்த்தைகளில் வர்த்தகமும், முதலீடும் முக்கிய இடம் பெற்றிருந்தன.  உலகப் பொருளாதாரம் உறுதியற்ற நிலையில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இதற்கு திறம்பட்ட வகையில் பதில் நடவடிக்கை எடுக்க பெரிய அளவு பொருளாதார ஒத்துழைப்பு அவசியம் என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்துள்ளோம்.  இதனையடுத்து, வர்த்தகம் மற்றும் வியாபார உறவுகளை விரிவாக்குவது, தொடர்ந்து நமது நட்புறவின் முன்னுரிமை விஷயமாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உடன்பட்டுள்ளோம். பிரதமர் கே­யுடன் வந்துள்ள மிகப் பெரிய வர்த்தக குழுவினர் இந்தியாவின் வளர்ச்சி நிலைமையில் ஏற்பட்டுள்ள முதலீட்டு வாய்ப்புகளை நேரடியாக காணும் வாய்ப்பு உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தக் குழுவினரின் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக கூட்டு அமைப்புகளை உருவாக்க உதவும். குறிப்பாக, உணவுப் பதனீடு, பால் பண்ணை மற்றும் வேளாண்மை, இவற்றுடன் தொடர்புடைய பொருள் வழங்கும் சங்கிலி அமைப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு திறன்கள் சிறப்பாக உள்ளன என்பதைக் குறிப்பிட விழைகிறேன்.  இந்தத் துறைகளில் நியூசிலாந்தின் வலுவும், திறனும் இந்தியாவின் விரிவான தொழில்நுட்பத்துடன் இணைந்து கூட்டமைப்புகளை உருவாக்கி இரண்டு சமுதாயத்திற்கும் நன்மை பயக்க இயலும்.

இரு அரசுகளின் நடவடிக்கைகளும் பெரிய அளவில் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உடன்பட்டுள்ளோம். தொழில்களில் ஈடுபட்டுள்ள திறன்பெற்றவர்கள் நமது இரு பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் இருந்து வர்த்தக இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகையில் சம நிலை உள்ள பரஸ்பரம் நன்மை பயக்கும் பொதுவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டை விரைவில் இறுதி செய்வதற்கு நெருங்கித் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் நாங்கள் உடன்பட்டுள்ளோம்.

நண்பர்களே,

விரிவான இருதரப்பு பேச்சுக்கள் நடைபெற்று வரும் அதேசமயம் உலக அளவிலும் நமது நெருங்கிய ஒத்துழைப்பு விரிவாக்கப்படுகிறது.  கிழக்காசிய உச்சிமாநாடு நடைமுறை உள்ளிட்ட மண்டல பிரச்சினைகளைப் பொறுத்தவரை ஒத்துழைப்பை அதிகரிக்க உடன்பட்டுள்ளோம். சர்வதேச ஆளுமை நிறுவனங்களின் சீ்ர்திருத்தங்கள் நமது இரு நாடுகளுக்கு இடையிலான முன்னுரிமை அக்கறையுள்ள விஷயமாகும். சீர்திருத்தி அமைக்கப்பட்ட ஐநா பாதுகாப்ப சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா சேருவதற்கு நியூசிலாந்து அளித்துள்ள ஆதரவிற்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  பசிபிக் தீவு நாடுகள் மேம்பாட்டு முயற்சிகளில் நமது பங்களிப்பினை செய்து வரும் அதேசமயம் இந்தியாவும், நியூசிலாந்தும் மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஒருவருக்கொருவர் மேம்படுத்தி முழுமைப்படுத்தவும் நெருங்கிய ஆலோசனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுவோம்.

அணு பொருட்கள் விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராவதற்கு நியூசிலாந்து அளித்துள்ள ஆக்கப்பூர்வ அணுகுமுறைக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக தொடருகிறது. இன்றைய நிலையில் பயங்கரவாத கட்டமைப்புகளின் நிதி, போக்குவரத்து, தகவல் பரிமாற்றம் சார்ந்தவை உலகளாவியதாக காணப்படுகின்றன. பூகோள அடிப்படையிலான எல்லைகள் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பாக அமையவில்லை. இந்த அச்சுறுத்தலை எதிர்த்து சமாளிக்க மனிதாபிமானத்தில் நம்பிக்கையுள்ள நாடுகள் தங்கள் செயல்களையும், கொள்கைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகிறது.

பிரதமர் கே­யும், நானும்  சைபர் பாதுகாப்பு உள்ளி்ட்ட துறைகளில் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு எதிரான நமது பாதுகாப்பு மற்றும் வேவு தகவல் ஒத்துழைப்பை வலுப்படுத்த உடன்பட்டுள்ளோம்.

மேதகு பிரதமர் அவர்களே,

நியூசிலாந்து மக்கள் உங்களது தலைமையில் மீண்டும், மீண்டும் தங்களது நம்பிக்கையை தெரிவித்து வந்துள்ளனர் என்பதை காணமுடிகிறது. அதற்கு காரணம் என்ன என்பதையும் என்னால் உணர முடிகிறது.

நமது இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்லவும், நட்புறவை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் தொடர்புகளை மேம்படுத்தவும் உங்களுக்குள்ள தனிப்பட்ட உறுதிப்பாட்டுக்காக நான் நன்றி கூறுகிறேன்.

உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும் மீண்டும் அன்பான வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்திய பயணம் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு நன்றி,

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.