Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் ரூ.5,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்றத் திட்டங்களை தொடங்கிவைத்தார்

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் ரூ.5,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்றத் திட்டங்களை தொடங்கிவைத்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் 5,100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சர்வ வல்லமை கொண்ட  டோனி போலோவுக்கு மரியாதை செலுத்தி, அனைவருக்கும் ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்தார்.

ஹெலிகாப்டர் தளத்திலிருந்து சாலை மார்க்கமாக பயணம் செய்த பிரதமர், வழியில் ஆயிரக்கணக்கான மக்கள், தேசியக் கொடியை ஏந்திய குழந்தைகள் மற்றும் இளைஞர்களைத் திரளாகக் கூடி அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சார்பாக அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு பெருமையாக இருந்தது என்று கூறினார். அருணாச்சலப் பிரதேச மாநிலம் சூரியன் உதயமாகும் நிலம் மட்டுமின்றி, தீவிர தேசபக்திக்கான  நிலம் என்றும் அவர் தெரிவித்தார். தேசியக் கொடியின் முதல் நிறம் காவி நிறமாக இருப்பது போல, இம்மாநிலத்தின் ஆன்மாவும் காவி நிறத்தில் தொடங்குகிறது. இம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் வீரம் மற்றும் எளிமையின் சின்னமாக உள்ளனர் என்று திரு. மோடி குறிப்பிட்டார். இம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மக்களுடன் செலவிடும் ஒவ்வொரு தருணமும் மறக்கமுடியாத அனுபவம் என்றும் அவர் கூறினார். மக்களின் அன்பு, பாசம் தனக்கு கிடைத்த பெரிய மரியாதை என்று அவர் தெரிவித்தார். “தவாங் மடாலயம் முதல் நம்சாயில் உள்ள தங்க பகோடா வரை, அருணாச்சலப் பிரதேச மாநிலம் அமைதி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமத்தைக் குறிக்கிறதுஎன்று கூறிய பிரதமர், இந்த புனித பூமிக்கு வணக்கம் செலுத்தி, இது பாரத அன்னையின் பெருமை என்று கூறினார்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு இன்று வருவது மூன்று தனித்துவமான காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்தது என்று கூறிய பிரதமர், முதலில், நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ள மங்களகரமான முதல் நாளில், அழகிய மலைத்தொடர்களைக் காணும் பாக்கியம் தனக்குக் கிடைத்தது என்று கூறினார். இந்த நாளில், பக்தர்கள் இமயமலையின் மகளான மாதா ஷைல்புத்ரியை வணங்குகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இரண்டாவதாக, நாடு முழுவதும் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் இன்று முதல் அமலுக்கு வருவதையும், ஜிஎஸ்டி சேமிப்பு பெருவிழா தொடங்குவதையும் அவர் குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தில் மக்கள் இரட்டை நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்று திரு மோடி குறிப்பிட்டார். மூன்றாவதாக, மின்சாரம், போக்குவரத்துக்கான இணைப்பு, சுற்றுலா மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பது என்றார்.

 

————–

AD/SV/KPG