Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக மாநிலம் துமாகுருவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில், காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரை 4 மார்ச் 2018


பெருமை மிக்க சுவாமி  கவுதமானந்த்ஜி மகாராஜ், சுவாமி ஜிட்காமானந்தா ஜி  மகாராஜ், சுவாமி நிர்பயானந்த் சரஸ்வதிஜி, சுவாமி விரேஷானந்த்ஜி சரஸ்வதி மகாராஜ், சுவாமி பரமானந்த்ஜி மகாராஜ், நாடு முழுவதும் இருந்த துறவிகள் மற்றும் கல்வியாளர்களே மற்றும் இளைய சமுதாயத்தினரே,

கன்னட மொழியில் வாழ்த்துகள்.

இந்த துமாகுரு மைதானம் ஆற்றல் மிக்க சுவாமி விவேகானந்தர் மற்றும் சகோதரி நிவேதிதாக்களால் நிரம்பி வழிகிறது. இந்தக் காவி நிறம் மேலும் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு, சுவாமி விரேஷானந்த்ஜியின் கடிதம் கிடைத்தபோது, ,உண்மையில் அங்கு வந்து நேரடியாக கலந்து கொண்டு இந்த ஆசிகளைப் பெற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், சில சமயங்களில் நேர நெருக்கடியால் இது நடக்காமல் போவதுண்டு. நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதனால், உங்கள் முன்பு நேரடியாக கலந்து கொள்வது இயலாமல் போனது. ஆனால், நவீன தொழில்நுட்பத்தின் பயனாக, உங்களுடன் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

இளைய தலைமுறையுடன் கலந்துரையாடுவது எப்போதுமே சிறப்பாக இருப்பதுண்டு. அதனால், இளைஞர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை மிக அதிகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து அதற்கு ஏற்றாற்போல், அவர்களின் நம்பிக்கைகள், கனவுகள், விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், அவர்களது நலனுக்காக இடையறாது உழைக்க என்னால் முடிகிறது.

பெரும் இளைஞர்கள் மற்றும் சாது பக்தர்களின் மாநாட்டை தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளதை பாக்கியமாக கருதுகிறேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் ஷிவ்குமார் சுவாமிஜியின் ஆசியை நான் வாங்குவதற்கு துமாகுருவுக்கு வந்தபோது, இளைஞர்கள் என் மீது காட்டிய அன்பை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  பகவான் பசவேஸ்வரா , சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆசிகளுடன் தேச நிர்மாணத்தில் மரியாதைக்குரிய ஷிவ்குமார்ஜி சுவாமி உறுதிப்பாட்டுடன் இருக்கிறார். அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நாட்டின் நலனுக்காக தியாகம் செய்தவர். அவர் நீண்ட ஆயுளுடன், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்.

நண்பர்களே,

மூன்று முக்கிய நிகழ்ச்சிகளை ஒன்றாக கொண்டாடுவது மிகவும் அரியதாகும். இது மூன்று ஆன்மிக நிகழ்ச்சிகளின் தொகுப்பாக துமாகுருவில் நடைபெறுகிறது. ராமகிருஷ்ண மிஷன் அமைக்கப்பட்டதன் 25 ஆவது ஆண்டு, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் 125-வது ஆண்டு, சகோதரி நிவேதிதாவின் 150-வது பிறந்த ஆண்டு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த விழா நடைபெறுவதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளதாக  நான் கருதுகிறேன். இந்த மாபெரும் விழாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டிருப்பதே ஒரு சாதனைதான். மரியாதைக்குரிய  சுவாமிஜி, ராமகிருஷ்ண மிஷன், மூத்த குடிமக்கள் மற்றும் கலந்து கொண்டுள்ள அனைவரையும் நான் மீண்டும் வாழ்த்துகிறேன்.

இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய கவனம் விவேகானந்தர் மீதுதான். கர்நாடகத்தின் மீது விவேகானந்தர் வைத்திருந்த அன்பை நாம் அனைவரும் அறிவோம். அமெரிக்காவுக்கும்,கன்யாகுமரிக்கும் செல்வதற்கு முன்பே, கர்நாடகத்தில் சில நாட்களைக் கழித்துள்ளார். சுவாமி விவேகானந்தர் நமது ஆன்மிக சிந்தனைகளை காலத்தின் தேவைக்கு ஏற்ப இணைத்தார். அவர் நமது பெருமைமிகு கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைத்தார். இந்த சாது பக்த் நிகழ்ச்சி மற்றும் இளைஞர் மாநாட்டின் மூலமாக, தற்போதைய தலைமுறையுடன் ஆன்மிக விரிவாக்கத்தை இணைப்பதன் வாயிலாக, எனது நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள என்னால் முடிந்துள்ளது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள் மற்றும் சாதுக்கள் இங்கு கூடியுள்ளனர். ஒரே தளத்தில் புனித யாத்திரை பற்றியும், தொழில்நுட்பம் பற்றியும் விவாதிக்க நம்மால் முடியும். ஒரு பக்கம் நாம் கடவுளைப் பற்றி பேசுவோம். மற்றொரு பக்கம் புதுமை பற்றி பேசுகிறோம். ஆன்மிகத் திருவிழா, இளைஞர் விழா ஆகியவை முன்மாதிரியாக கர்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். பழமையான பாரம்பரியம், புதிய தலைமுறை ஆகியவற்றின் இணைப்பு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.

19,20-ம் நூற்றாண்டுகளில் நடந்த இந்திய விடுதலைப் போராட்ட காலங்களை நாம் பார்த்தோமானால், பல்வேறு மட்டங்களில் ஒரு கூட்டு உறுதிப்பாட்டை நாம் காணலாம். அடிமைத்தளையில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற உறுதியே அனைவரிடமும் காணப்பட்டது. துறவியாக இருந்தாலும், சீடராக இருந்தாலும், நாத்திகவாதியானாலும், ஆத்திகவாதியானாலும், ஆசாரியாரனாலும், மாணவரானாலும், தொழிலாளியானாலும், வல்லுநரானாலும் சமுதாயத்தின் ஒவ்வொருவருக்கும் அந்தப் பொது உறுதிப்பாட்டில் பங்கு இருந்தது.

அப்போது, பல்வேறு சாதிகளாய் பிரிந்து கிடந்த சமுதாயத்தால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போரடமுடியாது என்பதை நமது துறவிகள் அறிந்தே இருந்தார்கள். இந்தப் பலவீனத்தை அகற்றுவதற்காக ,நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான சமூக- மத சீர்திருத்த இயக்கங்களை  அவர்கள் தொடங்கினர். இந்த இயக்கங்களின் உதவியுடன்  நாடு ஒன்றுபட்டது. நாட்டின் உள்பலவீனங்களை அகற்ற இந்த இயக்கங்கள் தொடங்கப்பட்டன. இந்த இயக்கங்களின் தலைவர்கள், மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களை ஒரு சமதளத்திற்கு உயர்த்தி, ஒவ்வொருவருக்கும் சமமான மரியாதையை வழங்கினர். நாட்டுக்கு எது தேவை என்பதைப் புரிந்துகொண்டு ,அவர்களது புனித யாத்திரையை தேசநிர்மாணத்தில் இணைத்தனர். மக்களுக்கு செய்யும் தொண்டு, கடவுளுக்கு செய்யும் தொண்டாக கருதப்பட்டது.

நண்பர்களே,

பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த , மாணவர்கள், நிபுணர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காலம் அது. நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு இந்த நிபுணர்கள் புதிய திசையைக் காட்டினர். விடுதலைக்குப் பின்னர், தேச நிர்மாணத்தின் அடித்தளம் வலுப்படுத்தப்பட்டது.

இந்த முயற்சிகள் ஒன்றாகச் சேர்ந்தபோது, நாடு அறிவுசார்ந்த வகையிலும், சமுதாய ரீதியிலும் கட்டமைக்கப்பட்டது. நாட்டின் ஒன்றுபட்ட மக்கள் ,பிரிட்டிஷ் ஆட்சியை விரட்ட உறுதிபூண்டு ,அதைச் செயலில் செய்து காட்டினர்.

நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகள் ஆனபின்னரும், அதே வலிமை, அதே தீர்மானம்,அதே உறுதிப்பாட்டை நாடு தற்போது  காட்டியுள்ளது. அந்தத் தீர்மானத்தின் சக்தியை, இப்போதும் நாம் சில சமயங்களில் காணலாம். சில நாட்களுக்கு முன்பு ,நாட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று, வடகிழக்கு பகுதியில் ,தேர்தல் முடிவுகள் ,நாட்டில் விழாக்கால உணர்வை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் இந்த விஷயத்தைப் பற்றி நான் இங்கு ஏன் பேசுகிறேன் என நீங்கள் வியப்படையலாம். நான் எனது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். வடகிழக்கில் அடைந்த வெற்றியை நான் அரசியலாக நான் பார்க்கவில்லை. வடகிழக்கு மக்களின் மகிழ்ச்சியை நாடே பகிர்ந்து கொண்டது மிகவும் முக்கியமாகும். வடகிழக்கு பகுதி மக்களின் சாதனையை நாடே சாதனையாக  கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. வடகிழக்கு பகுதி மக்களின் மகிழ்ச்சியை நாட்டு மக்கள் தொலைக்காட்சி பெட்டிகளின் மூலம் தேர்தல் முடிவுகளைப் பார்த்து பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு இந்தியருக்கும் அதே உணர்வுதான்.  

வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த என் சகோதர, சகோதரிகள் அளித்துள்ள தீர்ப்பே ஒரு பெரிய மாற்றம்தான் என்று நான் நம்புகிறேன். ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா மையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் துறவிகள் உள்பட பல்வேறு ஊழியர்கள் வடகிழக்கு பகுதி மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளனர். ஆகையால், அங்கு அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் களநிலவரம் என்ன என்பதை நன்கு அறிவார்கள். வடகிழக்கு மாநில தேர்தல்களுக்கு பின்னர், நாடு முழுவதிலும் உள்ள உணர்வு ,வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது. உணர்வுகளின் பலம், நாட்டின் ஒற்றுமைக்கும் , ஒரே பாரதம், சிறந்த பாரதம் என்னும் உணர்வை ஏற்படுத்தவும் மிகவும் அவசியமாகும்.

நண்பர்களே,

முன்பு இருந்த கொள்கைகளும், திட்டங்களும் வடகிழக்கு மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரிப்பதாகவே அமைந்திருந்தன. முன்னேற்றத்தில் இருந்து தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவே அவர்கள் கருதினர். இந்த உணர்வுதான், மற்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாகும். கடந்த 4 ஆண்டுகளாக, இந்த இடைவெளியை நிரப்பவும், புறக்கணிப்பு உணர்வை அகற்றவும் எங்கள் அரசு முயற்சி மேற்கொண்டது. வடகிழக்கு மக்களுக்கு ஒற்றுமை உணர்வை ஊட்டவேண்டும் என்று நாங்கள் உறுதி எடுத்துக் கொண்டோம் அதை நாங்கள் நிறைவேற்றினோம்..

திரிபுராவின் பழங்குடியினர் பகுதிகளின் தேர்தல் முடிவுகள் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இதுபற்றி விவரித்து கூற விரும்புகிறேன். நண்பர்களே, மிகச்சிறிய மாநிலமான திரிபுராவில், 20 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பழங்குடியினப் பகுதிகள் நக்சல் ஆதிக்கம் மிகுந்தவை என்றும், மாவோயிஸ்ட் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றும் நம் மனதில் ஒரு மாயை உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வதந்திகள் மூலம், பிராந்தியங்களை பிரிக்கும் முயற்சிகள் நடந்தன. அதனால், இந்தப் பகுதிகளே பிரிவினைவாதிகளின் பெருக்கத்துக்கான தளமாக இருந்தது. ஆனால், திரிபுராவின் தேர்தல் முடிவுகள் ஒரு நல்ல உதாரணமாக அமைந்துள்ளன. வடகிழக்கு மாநில மக்கள் வெறுப்பு அரசியலை தோற்கடித்து , பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நண்பர்களே,

தீவிரவாதத்தை ஒருமைப்பாட்டின் மூலமே சமாளிக்க முடியும். எந்த சமுதாயமோ, எந்தப் பிரிவினரோ புறக்கணிக்கப்பட்டதாக கருதமுடியாதவாறு, நடவடிக்கைகள் எங்கள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒற்றுமை உணர்வை வலுப்படுத்த நாடு முழுவதும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும்.

கர்நாடகத்தின் இந்த மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மான சக்தியின் தாக்கத்தை நம்மால் உணரமுடிகிறது. மேடையில் அமர்ந்துள்ள முக்கியஸ்தர்கள் இன்னும் அதிகமாக இதை உரணமுடியும்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிப்படி, தேசநிர்மாணத்துக்கான இந்த உறுதிமொழியை நம்மால் தெரிந்து கொள்ளமுடியும்.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்-

வாழ்வு குறுகியது, ஆனால், ஆன்மா அழிவில்லாதது, நிலையானது, ஆனால், ஒரு விஷயம் நிச்சயமானது, மரணம், ஆகையால், நாம் பெரும் சிந்தனைகளை மேற்கொண்டு ,நம் வாழ்க்கை முழுவதையும் அதற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

வாழ்க்கை மிகக் குறியது,நிலையற்றது. ஆனால், மரணம் நிச்சயமானது. நாம் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு, நாம் அதற்கு வாழக்கையை அர்ப்பணிக்க வேண்டும்.

இன்று, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் முன்பு, உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். இந்தத் தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை எப்போதெல்லாம் இளைஞர்கள் எதிர்கொள்கிறார்களோ, அவர்களால் அதற்கு நேரடியாக பதில் சொல்ல முடிவதில்லை என்பதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். அடிக்கடி அவர்கள் இந்த வாழ்க்கையின் நோக்கம் குறித்து குழம்பி விடுகின்றனர். நண்பர்களே, நம் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று நாம் தெளிவடைந்தால் மட்டுமே, நம்மால் ஏதாவது ஒன்றை சமுதாயத்துக்கு பங்களிக்க முடியும். நமது லட்சியங்களில் தெளிவில்லாத போது, நம்மால் அவற்றை அடைய முடியாமல் போகலாம். ரயில்நிலைய நடைமேடைக்கு வந்த பின்னர், எந்த ரயிலில் ஏறப்போகிறோம் என்பது தெரியாமல் நீங்கள் குழப்பமடைந்தீர்கள் என்றால், உங்களால் போகும் இடத்தை அடைய முடியாமல் போவதுடன், உங்கள் நிகழ்ச்சிகளையும் நீங்கள் முடிவு செய்ய முடியாது.

சுவாமி விவேகானந்தரின் மற்றொரு பொன்மொழி

‘’ ஒரு எண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணத்திலேயே வாழுங்கள். அது பற்றி எண்ணுங்கள், கனவு காணுங்கள், அதை வாழ்க்கையாக கொள்ளுங்கள், உங்கள் மூளை, தசைகள், நரம்புகள் என உடலின் அனைத்து பாகங்களிலும் அந்த எண்ணமே நிறைந்திருக்கட்டும். மற்ற சிந்தனைகள் அனைத்தையும் விலக்கி வையுங்கள். இதுவே வெற்றிக்கு வழியாகும்.’’

இந்த இளைஞர் திருவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக ஆகப்போகிறீர்கள் என்று தெளிவான தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்த விரும்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இன்று இந்தியா உலகிலேயே அதிகம் இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளது. மக்கள் தொகையில் 65 சதவீதம் 35 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்கின்றனர். இந்த இளைஞர்களின் ஆற்றல் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைக்கக் கூடியதாகும். நாடு முழுமைக்கும் இது உந்து சக்தியாக மாற முடியும். 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இளைஞர்களின் சக்தியைக் கருத்தில் கொண்டு, தேச நிர்மாணத்தில் அவர்களது ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பல்வேறு திட்டங்களை தொடங்கினோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, உடனடியாக திறன் மேம்பாட்டுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கினோம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். திறன் மேம்பாடு முன்பும் இருந்தது. ஆனால், 40-50 அமைச்சகங்களில் அது பரவிக் கிடந்தது. அது வேறு விதமானதாகவும் இருந்தது. சில சமயங்களில், அது ஒற்றுக்கொன்று முரண்பாடாக இருந்தது. இன்று ஒரு அமைச்சகம் திறன் மேம்பாட்டை கவனிக்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும், திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் குறுகிய கால,நீண்டகாலத் தொழில்  பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் தங்கள் தொழிலைத் தொடங்கும் வகையில், பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், உத்தரவாதம் இன்றி அரசு கடன்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 11 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஒரு கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்ட  கடன்களுக்கு  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனாக இன்று நாட்டில் சுமார் 3 கோடி புதிய தொழில் முனைவோர் சேர்ந்துள்ளனர். எனது இளைய நண்பனே, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய குறுகிய காலத்தில், 3 கோடி புதிய  தொழில் முனைவோர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.

எங்கள் அரசு திறன் மேம்பாட்டையும், சுய வேலை வாய்ப்பையும் வழங்குவதுடன், இளைஞர்களின் உற்பத்தி பொருட்களுக்கான புதிய சந்தைகளையும் உருவாக்கியுள்ளது.

அரசு கொள்முதலில் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை  அளிக்கும் வகையில் அரசின் கொள்கையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஜி இ எம் எனப்படும் ஆன்லைன் அரசு மின்னணு சந்தை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள்,பெண்கள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யவோ அரசுக்கு சேவைகளை வழங்கவோ முடியும். இதற்கு எந்த இடைத்தரகரும், ஒப்பந்ததாரர்களும், பெரிய நிறுவனமும் தேவையில்லை. சாதாரண மக்களிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முடியும். தங்கள் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசுகளையும் இதில் இணைத்துள்ளோம். ஏற்கனவே, 20 மாநிலங்கள் இதில் சேர்ந்துள்ளன.

நண்பர்களே,

அரசின் இந்த முயற்சிகள் காரணமாக, இன்று தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப, இளைஞர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை யாருடைய உதவியும் இன்றி தாங்களாகவே விற்கவும், பயிற்சி பெறவும் முடியும். கர்நாடக மாநிலத்தின் இளைஞர்கள் இந்த சூழலின் முக்கியத்துவம் பற்றி நன்றாகவே அறிவார்கள். தொடங்கிடு இந்தியா, எழுந்திடு இந்தியா போன்ற திட்டங்களைத் தொடங்கி உங்களைப் போன்ற கோடிக்கணக்கான இளைஞர்களின் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு சிறகுகளை அளித்துள்ளோம். முதன்முறையாக, எங்கள் அரசு வேலைவாய்ப்பை வரிச்சலுகைகளுடன் இணைத்துள்ளோம். இளைஞர்கள்  பயிற்சி பெற அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு வரி ஊக்குவிப்பை அரசு வழங்கி வருகிறது. இளைஞர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு அரசு பங்களிப்பை செலுத்தி வருகிறது.  ரூ.2 கோடி வரை விற்றுமுதல் உள்ள , கொடுக்கல் வாங்கல்களை டிஜிடல் முறையில் செயல்படுத்தும் நிறுவனங்கள் வரிச்சலுகைகளை பெற்று வருகின்றன.

நம் நாட்டு இளைஞர்கள் இடையே அறிவு இயக்கத்தில் பற்றாக்குறை இல்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள், தங்களது புதிய கண்டுபிடிப்புகளையும், தீர்வுகளையும் களத்தில் வைத்து மேலும் திறமையுடனும், சிக்கனமாகவும் செயல்முறைப்படுத்த விரும்புகின்றனர். எனவே, எங்கள் அரசு அவர்கள் தங்கள் லட்சியங்களை எட்டும் வகையில் ஊக்குவித்து வருகிறது.

நண்பர்களே,

புதுமைகள் எதிர்காலத்துக்கு அடிப்படையானவை ஆகும். நமது கல்வி முறையில் இந்த சிந்தனையை பொருத்தும் வகையில், பள்ளிகளின் கலாச்சாரத்தில் புதுமைகளைப் புகுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம். குழந்தைகளின் சிந்தனைகளை புதுமையாக மாற்றும் வகையில், அடல் புதுமை இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. இதுவரை, 2400-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் சோதனைக்கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உலகத்தரம் வாயந்த நிபுணத்துவம் கொண்ட 20 நிறுவனங்களை தொடங்கும் மற்றொரு முக்கிய திட்டத்தை அரசு வகுத்து வருகிறது. இந்த திட்டதின் கீழ், தேர்வு செய்யப்பட்ட 10 பொதுத்துறை நிறுவனங்களுக்கு கால வரம்புக்குள் ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் நவீன கல்வியில் இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தும்.

இந்த பட்ஜெட்டில் ரைஸ் எனப்படும் புதிய திட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம். அடுத்த 4 ஆண்டுகளில் நாட்டின் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு, இந்த திட்டத்தின் கீழ், அரசு ஒரு லட்சம் கோடி ரூபாயை செலவிட உள்ளது.

 பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டமும் இந்த பட்ஜெட்டில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஆயிரம் தகுதி வாய்ந்த பொறியியல் மாணவர்களுக்கு மாதம் தோறும் தலா ரூ. 70000 முதல் ரூ.80000 வரை , அவர்கள் ஆராய்ச்சிக்காக 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

நமது மனித வள ஆற்றல், எதிர்காலத்தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களின் பயன்கள் கர்நாடக இளைஞர்களுக்கு எளிதில் அணுகக்கூடியவையாக உள்ளன. செயற்கை நுண்ணறிவு, கணினி போன்ற துறைகளில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால், கர்நாடக இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. கர்நாடக இளைஞர்கள் தங்கள் திறமைகளை சிறப்பான முறையில் பயன்படுத்திகொள்ள பொலிவுறு நகரங்கள் இயக்கம் எளிதில் அணுக்கக்கூடியவையாக மாற்றியுள்ளன.

நண்பர்களே ,

சகோதரி நிவேதிதா ஒருமுறை கூறினார், இந்திய மாணவர்கள் மற்ற நாடுகளின் சிந்தனைகளை பார்த்து நடக்காமல் முழுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும்? இந்த அம்சத்தை விரிவாக்கி அவர் கூறுகிறார்.

‘’ உங்கள் கல்வி எழுச்சியுடன் கூடிய இதயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். மூளையுடன் கூடிய எழுச்சி , உங்களுக்கும் உங்கள் கடந்த காலத்துக்கும் இடையிலும்  அதே நேரம் நவீன உலகத்துடனும் தொடர்பு உடையதாக இருக்க வேண்டும்.’’

கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும் என்பதே இதன் பொருளாகும். நமது பாரம்பரியத்துடன் கூடிய இணைப்பே வலுவானதாகும். நமது இளைஞர்களே அத்தகைய வலுவானவர்கள்.

சகோதர, சகோதரிகளே,

நமது பாரம்பரியத்தின் மீதான மரியாதை உணர்வை, மத்திய அரசின் விளையாடு இந்தியா திட்டத்தில் காணலாம். விளையாட்டு வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று நான் கூற விரும்புகிறேன். அதனால், கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.குரு, சிஷ்ய பாரம்பரியத்தை மேம்படுத்த, அரசு தற்போதைய பயிற்சியாளரை மட்டும் பெருமைப் படுத்தாமல், வீரர்களின் விளையாட்டு பயணத்தில் முக்கிய பங்காற்றிய மற்ற பயிற்சியாளர்களையும் கவுரவப்படுத்துகிறது. சர்வதேச வெற்றியில், அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ஏதாவது வகையில் பங்கு இருக்கும்.

உள்நாட்டு விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கபடி, கோக்கோ போன்ற உள்நாட்டு விளையாட்டுகளும்  விளையாடு இந்தியா திட்டத்தில் மேம்படுத்தப்படுகின்றன. நாட்டின் மூலை முடுக்குகளிலும் உள்ள அனைத்து விளையாட்டுக்களையும் சேர்ந்த திறமைமிக்கவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் 1000 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் நிதியுதவி அளித்து  பயிற்சி வழங்கும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

நண்பர்களே,

வித்யார்த்தி தேவோ பவ என்ற முழக்கம் உங்களுக்கானது மட்டுமல்ல, எங்களுக்கான மந்திரம்தான். உங்களது அனுமதியுடன், யுவ தேவோ பவ, யுவசக்தி தேவோ பவ என்று நான் கூற விரும்புகிறேன்.

நான் இளைஞர்களையும் ஆன்மிக சக்தியாக கருதுகிறேன். இளமை என்பது ஒரு சூழல் அல்ல, வயதை வைத்து பார்ப்பதும் அல்ல, அது ஒரு மனவலிமை. இளைய சமுதாயத்தினர் கடந்த காலம் மட்டுமே சிறந்தது என எண்ணுவதில்லை. அவர்கள் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சிறந்தவையாக மாற்றுவதையே நம்புகின்றனர். ஆகவே, அவர்கள் நாட்டையும், உலகையும் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதுடன் அதற்காக உழைக்கின்றனர். நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் விட எதிர்காலம் மிகச் சிறப்புடையதாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

எனவே, நான் நாட்டின் இளைஞர் சக்திக்கு தலைவணங்குகிறேன். ஒரு பாரதம், சிறந்த பாரதம் என்ற முழக்கத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நாட்டை ஒருங்கிணைக்க சர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டார். இந்த ஒன்றுபட்ட இந்தியாவை மிகச்சிறந்த நாடாக்குவது நமது பொறுப்பாகும். உங்களில் சிலர் பிரெஞ்சு அல்லது ஸ்பெயின் மொழியை கற்க விரும்பலாம். அது ஒரு நல்ல விஷயமாகும். உலகின் எந்த மொழியையும் கற்க விரும்புவது நல்லதுதான். இருப்பினும், நமது சொந்த நாட்டின் மொழியை கற்பது பற்றி  நாம் எண்ணுகிறோமா? இது 100 மொழிகளைக் கொண்ட 1700 பேச்சு வழக்குகளை உடைய பெரிய நாடு. நம் நாட்டின் மொழிகளில் 5-50 வரிகளை நாம் கற்றுக் கொள்ளலாம். பிற மாநிலங்களின் பாடல்களை நாம் பாடுவதற்கு கற்கலாம். இந்த ஆற்றல் நாட்டை ஒற்றுமைப் படுத்த மிகவும் அவசியமானது என்று நான் நம்புகிறேன். இதை நாம் இயல்பாகவும், யாரும் சொல்லாமல் நாமாகவும் மேம்படுத்தலாம். கன்னட மொழியை சிறிது சிறிதாக கற்க முயற்சிக்கிறேன். ஆனால், நான் எப்போதெல்லாம் அந்த மொழியில் பேசத் தொடங்குகிறேனோ, அப்போதெல்லாம் அது உங்கள் மனதைத் தொடுகிறது. என்னுடைய வார்த்தைகள் சரியானவையா, தவறானவையா, இலக்கணப்படி சரியா, தவறா, எனது வார்த்தைப் பிரயோகம் பொருத்தமானதா, தவறானவையா என்பது பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. நம்முடன் இணைய இவர் முயற்சிக்கிறார் என்று நீங்கள் உணருகிறீர்கள். இதற்கு நாட்டை ஒற்றுமைப் படுத்தும் சக்தி உள்ளது. சங்கல்ப் செ சித்தி என்னும் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் மிகப்பெரிய பொறுப்பும், புதிய இந்தியா கனவை நனவாக்குவதும் நாட்டின் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. நான் மீண்டும் ஒருமுறை நாட்டின் இளைஞர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். மக்களுக்கு செய்யும் தொண்டு, கடவுளுக்கு செய்யும் தொண்டு என்பதை நினைவு கூரவேண்டும். வாழும் உயிரினங்களிடம் சிவபெருமானை நாம் காண வேண்டும். தூய்மை இந்தியா இயக்கம், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டங்களாக இருந்தாலும், மூத்த குடிமக்களுக்கான  திட்டங்களானாலும் சரி, நாட்டை மாற்றியமைப்பதற்கு இந்த சித்தாந்தத்தை பொருத்திப் பார்க்க வேண்டும். இந்த நோக்கமானாலும், பிற நோக்கத்துக்காகவும் நாம் முன்னேறி செல்ல வேண்டும். துமாக்குரு என்னும் இந்தப் புண்ணிய பூமியில் வந்து குழுமியுள்ள கல்வியாளர்கள், மிகப்பெரிய துறவிகள் ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டு இங்குள்ள இளைஞர்கள் முன்னேறிச் செல்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நீங்கள் அனைவரும் நரேந்திர மோடி செயலியுடன் தொடர்பில் இருப்பவர்கள் என நான் நம்புகிறேன். உங்கள் அனைவருடனும் இணைப்பில் இருக்க நான் விரும்புகிறேன். நரேந்திர மோடி செயலி மூலம் என்னை இணையுங்கள். என்னுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை தெரிவியுங்கள். கன்னட மொழி எனக்கு தெரியாததால்தான், அதில் உங்களுடன் பேச முடியவில்லை.அதனால், இந்தியில் பேச வேண்டியதாயிற்று என நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.  ஆனால், எனது இந்தப் பேச்சை கேட்கவோ, படிக்கவோ நீங்கள் விரும்பினால், எனது பேச்சின் முக்கிய பகுதிகளை கன்னட மொழியில் நரேந்திர மோடி செயலி மூலம் பதிவிறக்கம் செய்ய எனது குழுவிடம் தெரிவிக்க முடியும். இதன் மூலம் ,எனது எண்ணங்களையும் கருத்துக்களையும், உங்கள் மொழியில் நன்றாக புரிந்து கொண்டு முன்னேறிச் செல்ல முடியும்.

இன்றைய 10 திரிவேணி சங்கம நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ராமகிருஷ்ணா-விவேகானந்தா ஆசிரமத்துக்கு நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். துறவிகள், சிவகிரி மடத்தை நான் வணங்குகிறேன். அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள் பல!