Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அபுதாபியின் பட்டத்து இளவரசருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் வெளியிட்ட அறிக்கை

அபுதாபியின் பட்டத்து இளவரசருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் வெளியிட்ட அறிக்கை

அபுதாபியின் பட்டத்து இளவரசருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் வெளியிட்ட அறிக்கை


அபுதாபியின் பட்டத்து இளவரசரான மதிப்புமிகுந்த ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களே,

ஊடக நண்பர்களே,

அன்பு நண்பரான மதிப்புமிகுந்த ஷேக் முகம்மது பின் ஜயித் அல் நஹ்யான் அவர்களை இந்தியாவுக்கு வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இரண்டாவது முறையாக அவர் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருப்பது உற்சாகமளிக்கிறது. நாளை நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்கு சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொள்ள உள்ளது, அவரது இந்திய பயணத்தின் சிறப்பம்சம். கடந்த ஆகஸ்ட் 2015 மற்றும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதங்களில் நாம் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். நமது பேச்சுவார்த்தைகள், நமது இருதரப்பு நல்லுறவில் ஒட்டுமொத்த விவகாரங்களையும் உள்ளடக்கியது. நமது நல்லுறவில் நமது பிராந்தியத்தின் மீதான உங்களது ஆர்வம் மற்றும் உங்களது உலகப் பார்வை ஆகியவற்றின் மூலம், தனிப்பட்ட முறையில் நான் பயனடைகிறேன். உங்களது தலைமையில், நமது நல்லுறவில் புதிய உத்திகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். நமது ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை பயனுள்ள வகையிலும், பலன் அடிப்படையிலும் இருக்கும் வகையில், நமது உறவில் தெளிவான பாதையை உருவாக்கியுள்ளோம். தற்போது பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், இதனை செயல்படுத்தும் வகையிலேயே இருக்கும்.

நண்பர்களே,

உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் நமது வலுவான கூட்டு நாடாகவும், நெருங்கிய நண்பராகவும் யூ.ஏ.இ. விளங்குகிறது. மதிப்புமிகுந்த பட்டத்து இளவரசருடன் மிகவும் பயனுடைய மற்றும் பலன் அளிக்கக் கூடிய வகையிலான பேச்சுவார்த்தையை தற்போது நிறைவுசெய்தேன். கடந்த இரண்டு முறை நடைபெற்ற சந்திப்புகளில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளை செயல்படுத்துவதில், கவனம் செலுத்தினோம். எரிசக்தி, முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் நமது நல்லுறவை நீடிக்கச் செய்ய நாங்கள் முடிவுசெய்துள்ளோம்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில், முக்கியமான கூட்டாளியாக யூ.ஏ.இ.-யை நாம் பார்க்கிறோம். குறிப்பாக, இந்தியாவின் கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ய யூ.ஏ.இ. ஆர்வம் காட்டுவதை நான் வரவேற்கிறேன். யூ.ஏ.இ.-யில் உள்ள அமைப்புரீதியான முதலீட்டாளர்களை நமது தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியத்துடன் இணைப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். துபாயில் 2020-ம் ஆண்டில் நடைபெற உள்ள உலக கண்காட்சியில் கட்டமைப்புத் திட்டங்களில் இணைந்து செயல்பட இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதை அவருடன் பகிர்ந்துகொண்டேன். உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் நமது வளர்ச்சியுடன் இணைவதன் மூலம், யூ.ஏ.இ. பயனடையும். இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம், மனித மூலதனம் மற்றும் ஸ்மார்ட் நகரமயமாக்கலை நோக்கமாகக் கொண்டு நாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் உள்ள அபரிமிதமான வாய்ப்புகளை நாம் இணைந்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இருதரப்பு வர்த்தகத்தின் அளவையும், தரத்தையும் அதிகரிப்பதற்காக இரு நாடுகளின் வணிகம் மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்று மேற்கொள்ளப்பட்ட வர்த்தக குறைபாடுகளை தீர்ப்பதற்கான ஒப்பந்தம் மூலம், நமது வர்த்தக ஒத்துழைப்பு மேலும் மேம்படும். நமது இணைப்புக்கு முக்கிய பாலமாக எரிசக்தி ஒத்துழைப்பு விளங்கி வருகிறது. இது நமது எரிசக்தி பாதுகாப்புக்கு பங்களிப்பை செய்கிறது. நமது எரிசக்தி உறவை, குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் மூலம், பாதுகாப்பு உறவாக மாற்றுவதற்கான வழிவகைகள் குறித்து நானும், பட்டத்து இளவரசரும் ஆலோசனை நடத்தினோம். இதற்காக மேற்கொள்ளப்படும் எரிசக்தி துறையில் நீண்டகால விநியோக ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டு உடன்படிக்கைகள் மூலம், நமக்கு மிகவும் பயன் ஏற்படும்.

நண்பர்களே,

பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு என்பது நமது நல்லுறவில் புதிய கோணத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்புத் துறையில் பயனுள்ள ஒத்துழைப்பை, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நாங்கள் முடிவுசெய்துள்ளோம். பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை சரியான கோணத்துக்கு கொண்டுசெல்லும். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில் வலுப்பட்டுவரும், நமது ஒத்துழைப்பு, நமது சமூகங்களைப் பாதுகாக்க அவசியம் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்.

நண்பர்களே,

நமது நெருங்கிய நட்பு, இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், நமது அனைத்து அண்டை நாடுகளுக்கும் முக்கியமானது என்று பட்டத்து இளவரசரும், நானும் நம்புகிறோம். நமது இணைப்பு, பிராந்திய நிலைத்தன்மையை ஏற்படுத்த உதவும். பிராந்திய மற்றும் சர்வதேச நலனுக்கு ஆதாரமாக நமது பொருளாதார ஒத்துழைப்பு விளங்கும். மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் வளர்ச்சி குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இந்த நாடுகளின் அமைதி மற்றும் நிலைத்தன்மை குறித்து இரு நாடுகளும் ஆர்வம் செலுத்தி வருகிறோம். ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நமது பிராந்தியத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினேன். அதிகரித்துவரும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களிலிருந்து நமது மக்களின் பாதுகாப்பு குறித்த கருத்து பரிமாற்றம் மூலம், நமது ஒத்துழைப்பு இந்த அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

யூ.ஏ.இ.-ல் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பங்களிப்பு, இந்தியாவுக்கும், யூ.ஏ.இ.-க்கும் தீவிரமாக பயனளிக்கிறது. யூ.ஏ.இ.-ல் உள்ள இந்தியர்களின் நலனில் மதிப்புமிகுந்த பட்டத்து இளவரசர் கவனம் செலுத்தி வருவதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். அபுதாபியில் வசிக்கும் இந்திய மக்களுக்கு கோயில் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கிய பட்டத்து இளவரசருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

யூ.ஏ.இ. அதிபர் ஷேக் கலீஃபா பின் ஜயித் அல் நஹ்யான் மற்றும் பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது ஆகியோர் தனிப்பட்ட கவனம் செலுத்தியதன் மூலமே, நமது ஒத்துழைப்பு வெற்றிபெற்றுள்ளது. நமது ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்வது மிகவும் முக்கியமான நடவடிக்கை. உங்களது பயணம், நமது முந்தைய பரிமாற்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வலுவான ஆதாயங்களை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். மேலும், நமது எதிர்கால நடவடிக்கைகள், ஆழமான மற்றும் வேற்றுமையான நமது ஒத்துழைப்பின்படி வடிவமைக்கப்படும். இறுதியாக, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு நான் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக பட்டத்து இளவரசருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கும், அவருடன் வந்த பிரதிநிதிகள் குழுவினர் அனைவருக்கும், இந்தியாவில் தங்கியிருக்கும்போது மகிழ்ச்சி ஏற்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி. மிக்க நன்றி.