Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசியாவின் இதயம் அமைப்பில் ஆப்கானிஸ்தான் குறித்த இஸ்தான்புல் செயல்பாடு பற்றிய அமைச்சர்கள் அளவிலான ஆறாவது மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரை

ஆசியாவின் இதயம் அமைப்பில் ஆப்கானிஸ்தான் குறித்த இஸ்தான்புல் செயல்பாடு பற்றிய அமைச்சர்கள் அளவிலான ஆறாவது மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரை


ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அதிபர் மேதகு டாக்டர் முகமது அஷ்ரப் கனி அவர்களே, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மேதகு சலாவுதீன் ரப்பானி அவர்களே, என் அமைச்சரவை சகா அருண் ஜேட்லி அவர்களே, வெளியுறவு அமைச்சர்கள், தூதுக் குழுக்களின் தலைவர்கள், மரியாதைக்குரியவர்களே,

வணக்கம். சத் ஸ்ரீ அகால்.

ஆசியாவின் இதயம் – ஆப்கானிஸ்தான் குறித்த இஸ்தான்புல் செயல்பாடு பற்றிய அமைச்சர்கள் அளவிலான 6வது மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசுவது எனக்கு கிடைத்த கவுரவம்.

குறிப்பாக, நமது நண்பர் மற்றும் துணைவராக உள்ள, ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்பர் கனியுடன் சேர்ந்து இந்த மாநாட்டை கூட்டாக தொடங்கி வைப்பது மகிழ்ச்சியான விஷயம்.

எனது அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பங்கேற்றமைக்கு மேதகு கனிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமிர்தசரஸ் நகரில் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சி. இது எளிமை, அழகு, ஆன்மிகம் ஆகியவற்றுடன் ஆசிர்வதிக்கப்பட்ட நகரம், சீக்கியர்களின் புனித இடமான பொற்கோயில் அமைந்துள்ள நகரம் ஆகும்.

இங்கே தியானம் செய்த சீக்கிய குருமார்களால் புனிதமாக்கப்பட்ட இடம் இது. அமைதி மற்றும் மனிதத்தன்மையை உள்ளடக்கிய இடம் இது. அனைத்து மக்கள் மற்றும் மதத்தினருக்கும் பொதுவானது இது. இதன் தெருக்களும் பூங்காக்களும், ஏராளமான வீரம் நிறைந்த கதைகளையும், ஆழ்ந்த தியாகங்களையும் சொல்லக் கூடியவை.

இங்கே வாழும் குடிமக்களின் பெருமைக்குரிய தேசபக்தி மற்றும் தாராள குணம் ஆகியவற்றின் இயல்புகளால் இந்த நகரம் உருவாக்கப் பட்டுள்ளது. அவர்களுடைய ஊக்கம், புதிய சிந்தனை மற்றும் கடும் உழைப்பும் இதற்குக் காரணம். ஆப்கானிஸ்தானுடன் பழமையான மற்றும் மாறாத அன்பு என்ற பிணைப்பை அமிர்தசரஸ் வளர்த்துக் கொண்டுள்ளது.

சீக்கியர்களின் முதலாவது குரு பாபா குருநானக் தேவ் ஜியின் ஆரம்பகால சீடர்களில், 15வது நூற்றாண்டில் காபூலில் போதனை பெற்ற ஆப்கானியஸ்தர்களும் உள்ளனர்.

இன்றைக்கும் கூட, ஆப்கானை பூர்விகமாகக் கொண்டதாக பஞ்சாப்பில் உள்ள சுபி துறவி பாபா ஹஸ்ரத் சேக், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட, அனைத்து மதத்தவர்களாலும் மதிக்கப்படுகிறார்.

நமது பிராந்தியத்தில் வர்த்தகம், மக்கள் மற்றும் சிந்தனைகள் பரிமாற்றங்கள் ஆசியாவின் பழமையான மற்றும் நீளமான தரைவழி பாதையான அமிர்தசரஸ் வழியாக அமைந்துள்ளன. இணைப்பை புதுப்பித்தலின் மதிப்பை அமிர்தசரஸ் பெருவழிச் சாலை வலியுறுத்திக் காட்டுகிறது. ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த வளர்ச்சி, நிலைப்புத் தன்மை மற்றும் பொருளாதார வளமைக்கு இது முக்கியமானதாக உள்ளது.

மேதகு நண்பர்களே, மரியாதைக்குரியவர்களே,

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் குறித்த விஷயங்களில் சர்வதேச சமுதாயம் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது.

பெரிய நாடுகள், பிராந்திய நாடுகள் மற்றும் உலகெங்கும் உள்ள அக்கறை மிகுந்த நாடுகள், அரசியல், சமூக, ராணுவ, பொருளாதார மற்றும் வளர்ச்சித் துறைகளில் ஆதரவு அளிக்க பன்முகத் திட்டங்களில் ஒத்துழைப்பை அளித்து வருகின்றன.

இன்றைக்கு நாம் இங்கே கூடியிருப்பது, ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதி மற்றும் நீடித்த அரசியல் நிலைப்புத் தன்மையை உருவாக்குவதில் சர்வதேச சமுதாயத்துக்கு உள்ள உறுதியை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. நமது காலத்தில் முக்கியமானதாக உள்ள, இன்னும் எட்டப்படாத இலக்கை நோக்கி நகர்வதில் நமது வார்த்தைகளும் செயல்பாடுகளும் கவனம் செலுத்துகின்றன.

மேலும், அது ஆப்கானிஸ்தானுக்கு பின்வரும் வகைகளில் உதவும் :

* அதன் சமூக, பொருளாதார மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பை வலுப்படுத்தும்;

* வெளிப்புற ஆபத்துகளில் இருந்து அதன் எல்லைக்கும், குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும்;

* அதன் பொருளாதார மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளை வேகப்படுத்தும்,

* மற்றும் அதன் மக்களுக்கு நிலைத்த மற்றும் வளமையான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்கும்.

சொல்லப்போனால், இதுதான் இந்த மாநாட்டின் நோக்கமும் ஆகும். “சவால்களை சமாளிப்பது; வளமையை அடைவது” என்ற அதன் கோட்பாட்டை சரியாக பின்பற்றியதாக உள்ளது.

சவாலின் அளவு குறித்து நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதை வெற்றி கொள்ள வேண்டும் என்பதில் அதே அளவுக்கு உறுதியாகவும் இருக்கிறோம்.

இதுவரையில் நாம் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளின் பலன்கள், கடினமாக பெறப்பட்டவை, கலப்பாக உள்ளவை. முக்கியமான வெற்றிகள் இருந்துள்ளன. செய்ய வேண்டியவை இன்னும் நிறைய உள்ளன.

நமது நிலையில் உறுதியாக இருந்து, இதே வழியிலான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவையாக உள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் கிடைத்த பயன்களைப் பாதுகாப்பு, கட்டமைப்பு செய்து, முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஏனெனில், வளர்ச்சி, ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவற்றை தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் மட்டும் இதில் இல்லை. ஆனால், அதையும் தாண்டி, ஒட்டுமொத்தமாக இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையும் இதில் அடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்கள் அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தற்சார்பு பெறுவதற்கு, இன்னும் என்னவெல்லாம் செய்யப்பட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை அவசரமாக நாம் பிரதிபலிக்க வேண்டும். பதில்கள் எல்லாம் அங்கே உள்ளன. உறுதிப்பாடும் செயல்பாடும்தான் கேள்வியாக உள்ளன. மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் மக்களை முதன்மையாக நிறுத்த வேண்டும்.

இதற்கு முதலில், ஆப்கானிஸ்தானால் நடத்தப்படும், ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான, ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள செயல்பாடு என்பது முக்கியம். தீர்வுகள் நீடித்திருப்பதை உறுதி செய்யக் கூடிய ஒரே அம்சம் இதுதான். இரண்டாவதாக, ரத்தம் சிந்தும் நிலையை ஏற்படுத்தி, அச்சத்தை பரப்பக் கூடிய தீவிரவாத தொடர்புகளை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்த உறுதியான முயற்சியை நாம் காட்டியாக வேண்டும்.

ஆப்கானிஸ்தானின் அமைதி, நிலைப்புத்தன்மை மற்றும் வளமைக்கு, பயங்கரவாதமும், வெளியில் இருந்து தூண்டப்படும் நிலையற்ற தன்மையுமே முக்கிய அச்சுறுத்தலாக உள்ளன. மேலும் பயங்கரவாத வன்முறை அதிகரித்து வருவது ஒட்டுமொத்தமாக நமது பிராந்தியத்துக்கே ஆபத்தானதாக உள்ளது. சொல்லப்போனால், ஆப்கானிஸ்தானில் மட்டும் அமைதிக்கு குரல் எழுப்ப ஆதரவு தருவது போதுமானதல்ல.

உறுதியான செயல்பாடுகளால் அதை காட்ட வேண்டும். பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவளிக்கும், புகலிடம் அளிக்கும், பயிற்சி மற்றும் நிதி வசதி அளிக்கும் அனைவருக்கும் எதிராக செயலாற்ற வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் நமது பிராந்தியத்தில் பயங்கரவாதம் குறித்து அமைதியாக இருப்பது மற்றும் செயல்படாமல் இருப்பது, பயங்கரவாதிகளுக்கும், அவர்களை இயக்குபவர்களுக்கும் தைரியத்தைக் கொடுப்பதாக அமைந்துவிடும். மூன்றாவதாக, ஆப்கானிஸ்தான் மேம்பாட்டுக்கு பொருள்களாக உதவி அளித்தல் மற்றும் மனிதாபிமான தேவைகளை அளிப்பதில் நமது இருதரப்பு மற்றும் பிராந்திய உறுதிப்பாடுகள் தொடர்ந்திடவும், அதிகரித்திடவும் வேண்டும்.

ஆப்கானிஸ்தானுக்காக, ஒத்துழைப்புடன் கூடிய நமது பெருமுயற்சிகள் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நிறுவனத் திறன்களை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான சுய- உத்வேக முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு பங்களிப்பதாகவும் இருக்க வேண்டும்.

நான்காவதாக, ஆப்கானிஸ்தானுக்கும், பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் இடையில் வலுவான ஆக்கபூர்வமான தொடர்பை ஏற்படுத்த நாம் அனைத்து பணிகளையும் செய்திட வேண்டும்.

நமது தொடர்புக்கான பிணைப்புகளில் ஆப்கானிஸ்தான் மையமாக இருக்க வேண்டுமே தவிர, விளிம்பு நிலையில் இருந்திடக் கூடாது. தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தக் கூடிய மையமாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது என்றே எங்கள் பார்வையில் நாங்கள் கருதுகிறோம்.

பிராந்தியப் பகுதியில் வர்த்தகம், முதலீடு மற்றும் மார்க்கெட்களில் ஆப்கானிஸ்தான் எவ்வளவு அதிகம் தொடர்பு வைத்துக் கொள்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதன் பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும் அமையும் என்பதை நாம் மறுக்க முடியாது. இந்தப் பிராந்தியத்தில் நமது துணைவர்களுடன் தொழில் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான முன்னுரிமைகள் குறித்து அதிபர் கனியும் நானும் மையமான கருத்தை உருவாக்கியுள்ளோம்.

மேதகு நண்பர்களே, மரியாதைக்குரியவர்களே,

இந்தியாவின் பங்காக, நமது ஆப்கானிஸ்தானின் தைரியமான சகோதரர் சகோதரிகளுக்கான எங்கள் உறுதிப்பாடுகள் நிச்சயமானவை, ஊசலாட்டம் இல்லாதவை. ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் மக்களின் நலன் எங்களுடைய இதயத்தோடும், மனதோடும் நெருக்கமான விஷயமாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில், சிறிய மற்றும் பெரிய திட்டங்களில் எங்களுடைய கூட்டு முயற்சிகள் வெற்றிகரமாக இருப்பதே, அதை வெளிக்காட்டும். எங்களுடைய ஒத்துழைப்பின் பரிமாணத்தின் முக்கிய அம்சம், அதன் மக்களை மையமாகக் கொண்டதாக உள்ளது.

எங்களுடைய கூட்டு முயற்சிகள் :

* ஆப்கானிஸ்தானின் இளைஞர்களுக்கு கல்வி அளித்து அவர்களின் திறன்களை வளர்ப்பது;

* சுகாதார வசதி அளித்தல் மற்றும் வேளாண்மையை மேம்படுத்துதல்;

* அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்குதல்; மற்றும்

* ஆப்கானிஸ்தானில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் சிறிய தொழில்களை இந்தியாவில் வணிக மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் தீவிரமாக தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள அனுமதித்தல்.

மேலும், அப்படிப்பட்ட முயற்சிகள் மற்றும் பலன்கள் ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கச் செய்தல். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட,, ஹெராட்டின் ஆப்கானிஸ்தான் நட்புணர்வு அணையான , சல்மா அணை என கூறப்படும் அணை திட்டம், அங்குள்ள மக்களின் பொருளாதார செயல்பாடுகளைப் புதுப்பிக்க உதவியாக அமையும்.

காபூலில் உள்ள நாடாளுமன்ற கட்டடம், ஆப்கானிஸ்தானின் ஜனநாயக எதிர்காலத்தில் எங்களுக்கு உள்ள வலுவான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. ஜெரான்ச் – டெலிராம் நெடுஞ்சாலை மற்றும் சாபார் குறித்த இந்தியா – ஆப்கானிஸ்தான் – ஈரானின் ஒத்துழைப்பு ஆகியவை தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சியில் வலுவான மையங்களுடன் ஆப்கானிஸ்தான் தனது பொருளாதாரத்தை இணைப்பதற்கு உதவியாக அமையும்.

விமானப் போக்குவரத்து வசதி மூலமும் ஆப்கானிஸ்தானை இந்தியாவுடன் இணைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

எங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை தீவிரமாக்குவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து அதிபர் கனியும் நானும் கலந்து பேசியுள்ளோம். ஆப்கானிஸ்தானில் கொள்திறன் மற்றும் செயல்திறனை வளர்ப்பதற்கு இந்தியா ஒதுக்கியுள்ள கூடுதல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சித் திட்டங்களில் பயன்படுத்துவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.

நீர் மேலாண்மை, சுகாதாரம், கட்டமைப்பு வசதி, எரிசக்தி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் அது பரவலாக்கப்படும். இந்தியா தனது கூடுதல் உறுதிப்பாடுகளை அமல் செய்யும்போது, ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் ஒருமித்த கருத்துள்ள மற்ற துணைவர்களுடனும் சேர்ந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த நேட்டோவின் வார்சா உச்சிமாநாடு, அக்டோபரில் நடந்த பிரசல்ஸ் மாநாடு ஆகியவற்றில் அளித்த சர்வதேச உறுதிப்பாடுகளையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறோம். ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்வதில் எங்களுடைய நோக்கம் மற்றும் கடமைப்பாட்டை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்வோம்.
இந்த விஷயத்தில், திட்டங்களில் செயலாற்றுவதில் கற்றுக் கொண்ட பாடங்கள், பகிர்ந்து கொண்ட அனுபவங்களால் கிடைத்த சிறந்த நடைமுறை செயல்பாடுகள் பற்றியும் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

மேதகு நண்பர்களே, மரியாதைக்குரியவர்களே

ஆப்கானிஸ்தான் வெற்றிகரமாக அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு நாம் உதவி செய்யக் கூடிய ஒவ்வொரு நாளும், நமது பிராந்தியம் மற்றும் உலகில் அதிக அமைதியை ஏற்படுத்த நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களுடைய கலந்துரையாடல்கள் பின்வரும் விஷயங்கலுக்கான பாதையை வகுக்கும் வகையில் ஆக்கபூர்வமாக அமையும் என்று நம்புகிறேன் :

* மோதல்களை அகற்றி ஒத்துழைப்பை ஊக்குவித்தல்,

* தேவையை அகற்றி மேம்பாட்டை உருவாக்குதல், பயங்கரவாதத்தை அகற்றி பாதுகாப்பை உருவாக்குதல்.

ஆப்கானிஸ்தானை அமைதியான பூகோளப் பகுதியாக ஆக்குவதில் நாம் மீண்டும் உறுதி ஏற்போம். நியாயமும் அமைதியும் வெற்றி பெறக் கூடிய இடம், முன்னேற்றமும் வளமையும் தவழக் கூடியதாகவும் ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் வெற்றி பெறும் இடமாவும் அமையும்.

நன்றி.

***